ரகசிய தீவு
அத்தியாயம் 59
எதிரிக்கு எதிரி
நஞ்சுண்டன் ஆதியை பணயக் கைதியாக பிடித்து கொண்டு போவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள் அனைவரும் .
"அந்த சிறுவனை மீட்க இத்தனை பேர் இருந்தும் நம்மால் முடியவில்லை" என்று தன்னையே நொந்து கொண்டான் பார்த்திபன்.
"நாம் ஏடாகூடமாக எதையாவது செய்ய நினைத்தால் அவனது உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்து சேரும் என்றுதான் அனைவரும் அமைதியாக இருந்தோம். அந்த பாதகன் ஆதியின் கழுத்தில் வாளை வைத்திருந்ததை நீயும் பார்த்தாய் தானே? நாம் ஆதியை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவன் மிகுந்த கெட்டி காரன் எப்படியாவது அந்த கொடியவனை ஏமாற்றி அவனது பிடியில் இருந்து தப்பி வந்து விடுவான். நாம் கவலைப்பட வேண்டியது வேறு ஒரு விசயத்தைப் பற்றித்தான் " என்றான் வில்லவன்.
" எதைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்கிறாய்?" என்றான் ஆதித்தன்.
"ஆயுதங்களை நமக்கு தருவதாக சொன்ன கருணாகரன் அதற்கு பதிலாக நமக்கு விதித்த நிபந்தனை ஓன்று தான். அது நஞ்சுண்டனை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது. அவனிடம் ஒப்படைக்க அந்த நயவஞ்சகன் நம்மிடம் இல்லை. அவனது நிபந்தணையை நாம் நிறைவேற்றாதபோது அவன் எப்படி நமக்கு ஆயுதங்களை கொடுத்து உதவி செய்ய முன் வருவான்" என்றான் வில்லவன்.
"நல்ல கேள்வி தான். ஆனால் அந்தப் பக்கம் நமக்கு உதவி செய்ய நீலன் என்ற ஓருவன் இருப்பதை மறந்து விட்டாய். அவன் என்னுடைய நண்பன் தான். அவன் ஆயுதங்களைப் பெற நமக்கு உதவி செய்வான். கவலைப் படாதே"என்று அவனைத் தேற்றினான் ஆதித்தன்.
"அடுத்தது நாம் என்ன செய்ய போகிறோம்?" என்றான் யவனன்.
"வேறு என்ன செய்வது? கருணாகரனிடமிருந்து ஆயுதங்களை பெற வேண்டியதுதான்." என்றான் ஆதித்தன்.
"அது என்னுடைய வேலை இல்லையே? என்னுடைய எஜமானர் மகேந்திரன் நீலனை கண்காணிக்க வல்லவா என்னை அனுப்பினார்? நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?" என்றான் யவனன்.
" நீ சொல்வதும் சரிதான். எங்களின் உள்நாட்டு விவகாரத்தில் அந்நியனான நீ மூக்கை நுழைப்பது அவ்வளவு நல்லதல்ல" என்றான் பார்த்திபன்.
"அப்படியானால் நம்முடைய யவன நண்பரை இன்று இரவு இரண்டாம் சாமத்தில் நீலனின் கப்பலில் ஏற்றி விட வேண்டியது தான் " என்றான் ஆதித்தன்.
"சரி நாம் பேசியது போதும். இங்கிருந்து கிளம்பலாம்.நாம் துறைமுகத்தை அடைவதற்குள் இரண்டாம் சாமம் துவங்கி விடும். ஊரே அயர்ந்து தூங்கும் அந்த நேரம் தான் நமக்கு ஆயுதங்களை எடுத்து செல்ல சரியான நேரம் " என்றான் பார்த்திபன்
அவர்கள் அங்கிருந்து கிளம்ப தொடங்கினார்கள். வில்லவன் கருணாகரனை சந்திப்பதற்காக குதிரையில் முன்னதாக கிளம்பினான். அவனுடன் யவனனும் இணைந்து கொண்டான். நீலனை கண்காணிக்க அனுப்பப்பட்ட தான் இத்தனை நாட்களாக தன் பணியை மறந்து திரிந்ததற்காக யவனன் தன்னையே நொந்து கொண்டான். நீலன் சிறையிலிருந்து திடிரென்று மாயமாக மறைந்து போனது தான் தன் பணி தடையாக காரணம் என்பதை அவன் உணர்ந்தே இருந்தான். நீலனை தன் கண் பார்வையில் வைத்து கொண்டு மோகினி தீவில் கொண்டு போய் ஒப்படைக்கும் வரை அவனுக்கு நிம்மதியில்லை.
அதே நேரம் ஆதித்தனை இப்படி நாட்டாற்றில் விட்டு விட்டு கிளம்புகிறோமே என்ற சங்கடமும் அவனை பாடாகப் படுத்தியது. எந்த சூழ்நிலையையும் ஆதித்தன் வெற்றிகரமாக சமாளிப்பான் என்பதும் இப்போதைக்கு பார்த்திபனுக்கு அவனுடைய உதவி தேவை என்பதும் அவனுக்கு புரிந்தது. தன்னுடைய உதவி இல்லாவிட்டாலும் கூட ஆதித்தன் சமாளித்து கொள்வான் என்பதில் அவனது மனம் சாந்தியடைந்தது.
மற்றவர்கள் குதிரையிலும் கால்நடையுமாக பயணத்தை தொடர்ந்தனர்.
பாதி வழியிலேயே அவர்களை சந்திக்க வந்து விட்டது சந்திரவதனா தலைமையிலான குழு .
சந்திரவதனாவை பார்த்ததும் பார்த்திபனின் முகம் மலர்ந்தது. அவளை அவன் இங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஒரு பெண்ணை பார்த்து பார்த்திபன் அசட்டு சிரிப்புடன் பேசிக் கொண்டி ருப்பதை பார்த்த ஆதித்தன் அவர்களை நெருங்கினான்.
தங்களை நோக்கி நடந்து வரும் கம்பீரமான ஆண் உருவத்தை ஓரக்கண்ணால் கவனிக்க தவறவில்லை சந்திரவதனா.
"யார் இவர்?" என்றாள் அவள் பார்த்திபனிடம் ஆதித்தனை காட்டி.
" இவர்தான் ஆதித்தன். சற்று முன் தான் எனக்கு நண்பராக மாறினார். கள்வர் புரத்து பிரசித்தி பெற்ற இரட்டை கள்வர்களில் இவரும் ஓருவர் " என்று பார்த்திபன் ஆதித்தனை சந்திரவதனாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான்.
"இந்தப் பெண் ?" என்று கேள்விகுறியோடு நிறுத்தினான் ஆதித்தன்.
"எனக்கு நெருக்கமான உறவு" என்றான் அவன் வெட்கத்தோடு.
"புரிகிறது" என்றான் ஆதித்தன் குறும்பு சிரிப்புடன்.
"நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டதா?" என்றான் பார்த்திபன் படபடப்புடன்.
சந்திரவதனாவிற்கு அருகே இருந்த பார்வதி "அதை ஏன் கேட்கிறாய் பார்த்தி பா? அந்த சண்டாளன் மதிமாறன் நம்முடைய மாளிகையை சுற்றி வளைத்து விட்டான். சந்திரவதனாவை மட்டும் ஒப்படைத்தால் எங்கள் எல்லோரையும் உயிரோடுவிட்டு விடுவதாக பேரம் பேசினான். அவனது ஆசை காட்டலுக்கு நாங்கள் இணங்கவில்லை. சந்திரவதனாவை ஒப்படைக்க மறுத்து விட்டோம். அப்போதுதான் அந்த மோகினி அங்கே வந்து சேர்ந்தாள் "
"மோகினியா? யார் அது?"
"அவள் தான் ரத்னாவதி .மதிமாறனின் ஆசை நாயகி. அவள் வரும் வரை சந்திரவதனாவின் பிறப்பு ரகசியம் தனக்கு மட்டுமே தெரியும் என்று கூறி எங்களுக்கு ஆசை வலை வீசிக் கொண்டிருந்தான் அவன். அந்த மோகினி அவன் காதில் என்ன ஓதினாளோ தெரியவில்லை. திடிரென்று எங்களை வீட்டின் உள்ளே வைத்து உயிருடன் எரிக்க உத்தரவிட்டு விட்டான்"
"அடக்கடவுளே.! ஈவு இரக்கமற்ற அந்த சண்டாளனிடமிருந்து எப்படி தப்பினீர்கள்?"
"கடவுள் அனுப்பி வைத்ததூதனைப் போல் சுரங்க வழியில் வந்து எங்களை காப்பாற்றினான் ஓரு மகராசன். அவன் மட்டும் சரியான நேரத்தில் வந்து எங்களை காப்பாற்றாவிட்டால் நாங்கள் நெருப்பில் கருகி சாம்பலாகி இருப்போம்" என்றாள் பார்வதி பெருமூச்சுடன்.
"உங்களை காப்பாற்றியது யார்?" என்றான் பரபரப்புடன் பார்த்திபன்.
" அவன் ஆதி! நீங்கள் நினைப்பதுபோல் அவன் வாய் பேச முடியாதவன் அல்ல. நன்றாக பேச கூடியவன். சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் உயிரை காப்பாற்றி கொள்ள இத்தனை நாட்களாக ஊமையாக நடித்து கொண்டிருந்திருக்கிறான். சுரங்க வழியில் எங்களை காப்பாற்றி கூட்டி வந்த பின்பு அவனே சொன்ன உண்மை இது "
கூட்டத்தில் நஞ்சுண்டனிடமிருந்து ஆதி தப்பி வந்த விசயம் வெகு வேகமாகப் பரவியது. பயல். கெட்டிகாரன் தான் என்ற பாராட்டு மொழிகள் ஆங்காங்கு எழுந்தன.
" அவன் வாய் பேச இயலாதவன் அல்ல என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம். உங்களை ஆதி காப்பாற்றி இருக்கிறான் என்றால் அவன் நஞ்சுண்டனிடமிருந்து தப்பித்து விட்டான் என்று பொருளாகிறது. அவன் உங்களுடன் வராமல் எங்கே போனான்?"
" அவன் கருணாகரனை தேடிக் கொண்டு போயிருக்கிறான். அவனுக்கும் இவனுக்கும் ஏதோ பழைய கணக்கு இருப்பதாகவும் அதை தீர்க்க வேண்டும் என்று கருவிக் கொண்டிருந்தான்"
"அடக்கடவுளே! யவனனும், வில்லவனும் கருணாகரனை தேடிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆதி நிச்சயமாக கருணாகரனை கொலை செய்யத்தான் கிளம்பி இருப்பான்.கருணாகரன் நம்மிடம் ஆயுதங்களை கையளிக்கும் முன்பாக ஆதி அவனது கதையை முடித்துவிட்டால் நம்முடைய புரட்சி ஆயுதம் இன்றி பிசுபிசுத்து விடுமே?" என்றான் பார்த்திபன்.
"கவலைப்படாதே! ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் வெற்றி பெற வேறு வழிகள் இருக்கிறதா என்று யோசிப்போம்" என்றான் ஆதித்தன் ஆறுதலாக .
" எதிரிகள் நம்மை விட எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள். நம்முடைய எண்ணிக்கை குறைவு . ஆயுதங்கள் குறையும் வீரர்களை சரிகட்டி விடும் என்று நினைத்தேன். ஆதியின் குறுக்கீட்டால் எல்லாமே வீணாகிவிடும் போலிருக்கிறதே?" என்றான் பார்த்திபன்.
"ஆட்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்ட என்னிடம் ஒரு யுக்தி இருக்கிறது. அது போதாது என்றால் எதிரிகளின் கூடாரத்தை கலகலக்க வைக்க வேறு யோசனை உள்ளது"
"நீ சொல்வது எனக்கு புரியவில்லை"
" எதிரிக்கு எதிரி நண்பன். இப்போது வளநாட்டிலிருந்து படை உதவி கிடைத்தால் எப்படி இருக்கும்?"
"நன்றாகத்தான் இருக்கும். ஆனால் நான் அவர்களிடம் உதவி கேட்கவில்லையே? அப்படி எனக்கு உதவினால் ஆதாயம் இல்லாமலா உதவி செய்வார்கள்.?"
"அவர்களே வலிய வந்து உனக்கு உதவினால்?"
" எப்படி எனக்கு உதவுவார்கள்?"
"அப்படி ஒரு பொய் செய்தியை பரப்புவோம். எனக்கு ஒரு ஓலையும் ஒரு தூதுவனும் வேண்டும்"
"உன் திட்டம் எனக்கு புரியவில்லை"
"விளக்கமாகவே சொல்கிறேன்" என்ற ஆதித்தன் தன் திட்டத்தை விவரிக்க தொடங்கினான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக