வெள்ளி, 18 நவம்பர், 2022

ரகசிய தீவு 57

ரகசிய தீவு

அத்தியாயம் 57

சிலந்தி வலையில் சில்வண்டு

தனக்கு தெரிந்த சுரங்க வழியில் சந்திரவதனாவின் குழுவினரை வழிநடத்தி சென்றான் ஆதி.கருணாகரனின் கொலைகாரப் பார்வையிலிருந்து தன்னை காப்பாற்றி உணவு உடை கொடுத்து காப்பாற்றிய வில்லவனின் குடும்பத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்து முடித்திருந்தான் அந்த காட்டு சிறுவன்.

யாராலும் கவனிக்கப்படாமல் கைவிடப்பட்டு காட்டின் நடுவே இருந்த ஒரு கோயிலில் வந்து முடிந்தது அந்த சுரங்க பாதை .தங்கள் உயிரை காப்பாற்றி மீட்டு வந்த ஆதியின் செயலை அனைவரும் பாராட்டி புகழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் பாராட்டுக்களை காதில் போட்டு கொள்ளாமல் சிந்தனை வசப்பட்டிருந்தான் ஆதி.தன் கண் முன்பாகவே தன் தந்தையை கொன்ற கருணாகரனை பழிக்கு பழிவாங்க அவனது இதயம் துடித்துக் கொண்டிருந்தது.

கருணாகரனை பழி தீர்க்கத்தான் ஆதி அவனை தேடிக் கொண்டு கிளம்பினான். அவனது அதிர்ஷ்டம்மதிமாறன் சந்திரவதனா வை பிடிக்க கிளம்பியசேதியை அவன் கேட்டது. அவன் வில்லவனின் வீட்டை மதிமாறனுக்கு முன்பாகவே நெருங்கி விட்டான். ஆனால் அவனது கழுகு கண்கள் அரசாங்க ஒற்றர்களின் நடமாட்டத்தை கண்டுபிடித்து விட்டன. இப்போது வீட்டிற்குள் நுழைவது நல்லதல்ல என்று நினைத்தவன் சுரங்க வழியில் வீட்டின் உள்ளே நுழைந்து அனைவரையும் மீட்டு வந்து விட்டான்.

இறுக்கமான முகத்தோடு இருந்த ஆதி குழப்பமான மனநிலையில் இருந்த சந்திரவதனாவை பார்த்தான்.

"அக்கா. அந்த தீயவன் நம் வீட்டை சுற்றி வளைத்ததும் பயந்து விட்டாயா? கவலைப்படாதே! இனி அவனால் நம்மை கண்டு பிடிக்க முடியாது"

" அவன் ஏன் நம்மை தேடப் போகிறான்? நாம் அனைவரும் நெருப்பில் கருகி இறந்து விட்டதாகவல்லவா அவன் நினைப்பான்?" என்றாள் பார்வதி பெருமூச்சுடன்.

" அவனுக்கு என்னுடைய பிறப்பின் ரகசியம் தெரிந்திருக்கிறது. அவனுக்கு நான் மட்டுமே குறி. என் தந்தை என்னிடம் சொல்லாத ரகசியத்தை அவனிடம் சொல்லியி ருப்பதை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்றாள் சந்திரவதனார்

"எங்களை காப்பாற்றும் கவசமாகத் தான் நீ இருந்தாய். ஆனால் ஆண் உடை தரித்து ரத்னாவதி வந்த பிறகு காட்சி மாறி விட்டது. மதிமாறனின் மனமும் மாறி விட்டது. அதுவரை உன்னை சரணடையும் படி கெஞ்சிக் கொண்டிருந்தவன் அதற்கு பிறகே நீ தேவையில்லை. நீ உயிரோடு இருப்பதே இடைஞ்சல் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டான். அதன் பிறகே அவன் மாளிகைக்கு தீ வைத்து நம்மை கொல்லவும் முயன்றான்" என்றாள் பார்வதி.

"ஆம். அந்த திடீர் மாற்றத்தை நானும் கவனித்தேன். எனக்கு எல்லாமே புதிராக இருக்கிறது. அவனது விசித்திரமான நடத்தைக்கு காரணம் எதுவும் புரியவில்லை." என்றாள் சந்திரவதனா குழப்பத்துடன் .

"அவனைப் பற்றி, அவனது கிறுக்கு தனமான நடவடிக்கைகளைப் பற்றி இப்போது யோசிக்க நேரமில்லை. நாம் எப்படியோ உயிர் பிழைத்து விட்டோம். அதையே என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. கிள்ளிபார்த்து தான் நடந்தது நிஜம் என்று உணர்ந்து கொண்டேன்" என்றான் குழுவில் ஒருவன்.

"இனி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். இதே திசையில் தெற்கு பக்கமாக சில கல் தொலைவு நடந்தால் வில்லவனும், பார்த்திபனும் இருக்கும் காட்டு பகுதியை அடைந்து விடலாம் அனைவரும் கிளம்புங்கள்" என்றான் ஆதி

அனைவரும் பணத்திற்கு தயாராயினர்."பெண்களை கவனமாக அழைத்து செல்லுங்கள். இரவு கவிழ்ந்து விட்டது. காட்டு விலங்குகளின் நடமாட்டம் துவங்கும் முன்பு அண்ணனிடம் இவர்களை ஒப்படைத்து விடுங்கள்" என்ற ஆதி அவர்கள் நடந்த திசையில் இருந்து எதிர் திசையில் நடக்க துவங்கினான்.

"ஆதி .எங்களை விட்டு விட்டு எங்கே செல்கிறாய்?" என்றாள் சந்திரவதனா.

" கருணாகரனுடன் எனக்கு தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஓன்று இருக்கிறது. அதை தீர்த்து விட்டு விரைவிலேயே வந்து சேர்கிறேன்"

"அவசரப்படாதே ஆதி. பொறுமையாக இரு.வீணாக சென்று ஆபத்தில் சிக்கி விடாதே. குழந்தை இல்லாத எனக்கு நீமகன் போன்றவன் .இந்த தாயின் வார்த்தைகளை கேள்" என்றாள் பார்வதி.

" என் அன்னையை போல் அன்பு காட்டிய உங்களை மறக்கவே மாட்டேன் அம்மா. ஆனால் இப்போது உங்கள் பேச்சை கேட்டு நடக்க முடியாததற்கு வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். கருணாகரனை கொல்லும் முயற்சியில் வெற்றி பெற்றால் மீண்டும் வந்து உங்களை சந்திப்பேன். இல்லையென்றால்…"

"அப்படி பேசாதே ஆதி. போன காரியத்தில் வெற்றி பெற்று வீரனாக திரும்பி வா என்று உன்னை பெறாத தாய் வாழ்த்தி அனுப்புகிறேன். வெற்றியுடன் திரும்பி வா! உனக்காக இங்கே ஓருத்தி காத்திருக்கிறாள் என்பதை மறவாதே." என்றாள் பார்வதி..

கண் கலங்கிய ஆதி " போய் வருகிறேன் அம்மா " என்று விடை பெற்று கிளம்பினான்.

மதிமாறனின் இல்லத்தில் தான் கருணாகரன் இருப்பான் என்பதால் அவனது மாளிகையை நோக்கி நடை போட்டான் ஆதி.

அவன் மதி மாறனின் மாளிகையை நோக்கி நடந்து கொண்டிருந்த போது இரண்டு வலியகரங்கள் அவனது வாயை பொத்தின.

அவனுக்கு பின்புறம் வந்த இரண்டு முரட்டு ஆசாமிகளில் ஓருவன் தான் ஆதியின் வாயை பொத்தியிருந்தான்.

"இவன் வில்லவனின் வீட்டில் இருந்த வாய் பேச முடியாத ஊமை தானே?" என்றான் ஒருவன்.

"ஆமாம். அவனே தான். வில்லவனின் மாளிகை தீக்கு இரையாகி விட்டது. வில்லவனும் ஆளைக் காணோம். இவனுக்கு ஆதரவு தந்த குடும்பமும் அழிந்து விட்டது. இவன் யார் ஆதரவும் இல்லாத அனாதை" என்றான் இன்னொருவன்.

"அப்படியானால் இவனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறு"

" இவனை என்ன செய்ய போகிறாய்?"

" இவனை நீலனின் கப்பலில் அடிமையாக விற்க போகிறேன்.வரும் பணத்தை இருவரும் சமபங்காக பிரித்து கொள்ளலாம்.என்ன சொல்கிறாய்?"

"நல்ல திட்டம் தான். கருணாகரனும் நீலனும் சேர்ந்து கொண்டு என்னவோ செய்ய நினைக்கிறார்கள். அவர்கள் என்னவோ செய்து தொலையட்டும். நாம் இவனால் லாபம் சம்பாதிக்க இதையாவது செய்வோம்"

ஆதி இப்படி மாட்டி கொள்வோம் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. உரக்ககத்தி ஆட்களை வரவழைத்து தப்பி விடலாம் என்று நினைத்தவன் கத்த முனைந்தான்.

" பயல் கத்தி ஊரை கூட்டி விடப் போகிறான்.வாளின் பின் பகுதியால் அவனது தலையில் ஒரு போடு போடு" என்றான் ஒருவன்.

வாளின் பின் பக்கத்தால் ஆதியின் தலையில் அடித்தான் மற்றொருவன் .சுயநினைவை இழந்து மயங்கி சரிந்தான் அவன். மயங்கி விழுந்த ஆதியை தோளில் தூக்கி போட்டு கொண்டு நடக்க தொடங்கினார்கள் இருவரும்.

ஆதியை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை எப்படி செலவு செய்யலாம் என்று பேசியபடி நடந்தனர் இருவரும் .

நஞ்சுண்டன் களவாடிய குதிரையோடு மதிமாறனின் மாளிகையை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். அவனது உள்ளம் சந்தோசத்தில் மிதந்து கொண்டிருந்தது. தன்னுடைய திட்டம் நிறைவேறி விட்டால் தான் இழந்த எல்லாவற்றையும் மீண்டும் திரும்ப பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் குதியாட்டம் போட்டது அவனது மனம்.

காவல் ஆட்கள் குறைவாக இருந்த மதிமாறனின் மாளிகைக்குள் அவனுக்கு எளிதில் அனுமதி கிடைத்து விட்டது. தான் யார் என்று விசாரிக்காமலேயே உள்ளே நுழைய அனுமதி தரப்பட்டதை அவன் சந்தேகிக்கவேயில்லை.

"உங்கள் தலைவரை நான் சந்திக்க வேண்டும்" என்றான் எதிர் பட்ட வீரனிடம் நஞ்சுண்டன் .

" மாடியில் தனிமையில் இருக்கிறார் போய் பாருங்கள்" என்றான் அந்த வீரன்.

தடதடவென்று மாடிப்படிகளில் ஏறினான் அவன்.

உபரிகையில் நாற்காலியில் அமர்ந்தபடி இருட்டில் தெரிந்த நிலவை ரசித்து கொண்டிருந்தவனின் பின்புறமாக வந்து நின்ற நஞ்சுண்டன் "தலைவரே ! உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்து விட்டது. உங்கள் தளபதி கருணாகரன் உங்களை மோசம் செய்ய போகிறான். அவனை நம்பாதீர்கள் - அவன் ஓரு துரோகி" என்றான் பரபரப்புடன் நஞ்சுண்டன் .

"உன்னை விட பெரிய துரோகி உலோகத்திலேயே கிடையாதே?" என்றது கரகரத்த குரல்.

இந்த குரல். இது வெகு பரிச்சையமான குரலாயிற்றே என்று குரலை அடையாளம் காண முடியாமல் தவித்தான் அவன்.

"இன்னுமா என்னை அடையாளம் காண முடியவில்லை?" என்று நாற்காலியை திருப்பினான் நீலன்.அவனது உதடுகளில் வெறித்தனமான புன்னகை ஒன்று உட்கார்ந்திருந்தது.

நீலனை அங்கே பார்த்ததும் தலையில் இடி விழுந்தது நஞ்சுண்டனுக்கு .

"சண்டாளா ! இந்த முறை உன்னை விட மாட்டேன்" என்றபடி இடுப்பில் இருந்த குறு வாளை உருவி நீலனின் மேல் எறிய முற்பட்டான் நஞ்சுண்டன் .

திரைசீலைமறைவிலிருந்து மின்னலாக பாய்ந்த மற்றோரு குறுவாள் அவன் கையிலிருந்த கத்தியை வீழ்த்தியது.

நஞ்சுண்டனுக்கு வழி சொன்ன வீரன் புன்னகையுடன் மறைவிலிருந்து வெளிப்பட்டான். "நீ சொன்ன அந்த துரோகி கருணாகரன் நான் தான். நீ வருவதை நாங்கள் உபரிகையிலிருந்து முதலிலேயே பார்த்து விட்டோம். அதனால் தான் உள்ளே வர எளிதில் அனுமதித்தோம் " என்றான் கருணாகரன்.

"இரண்டாவது முறையாக என்னை கொல்ல தவறுகிறாய். ஆனால் நான் முதல் வாய்ப்பிலேயே உன் கதையை முடிக்க தீர்மானித்து விட்டேன்" என்றபடி இடுப்பிலிருந்த வாளை உருவினான் நீலன்.சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியாக தன்னை உணர்ந்தான் நஞ்சுண்டன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக