திங்கள், 7 நவம்பர், 2022

ரகசிய தீவு 50

ரகசிய தீவு

அத்தியாயம் 50

பலமான எதிரி

சில நாட்களாக மதி மாறனை சந்திக்காமல் இருந்தான் கருணாகரன். தினமும் நாட்டு நடப்புகளை மதி மாறனை சந்தித்து கூறி அவனது ஆலோசனைகளை பெறுவது கருணாகரனின் நித்திய கடமைகளில் ஒன்று. அதை சில நாட்களாக அவன் செய்யாமல் இருப்பதால் மதிமாறன் தன்னைப் பற்றி தவறாக எதையாவது நினைத்து கொள்வானோ என்று கருணாகரன் நினைத்தான். தீவிலிருந்து தங்கத்தை கப்பலுக்கு கொண்டு சென்ற பின் மதி மாறனை நிர்கதியாக விட்டு விடத் திட்டமிட்டிருந்தான் கருணாகரன்

ஆயுதங்கள் கிடைக்கப்பெற்ற சிகப்பு முகமூடியை தான் இல்லாத நிலையில் படைகளுக்கு  தலைமை தாங்கி மதிமாறனால் நடத்த முடியாது என்பது அவனுக்கு தெரியும். அவன் நடக்கும் போரில் கட்டாயமாக தோற்க வேண்டும் என்று அவன் விரும்பினான்.

பார்த்திபனின் வலது கையான வில்லவனிடம்  அவன் தங்க புதையலை எடுத்து செல்வதை பற்றி மூச்சு கூட விடவில்லை.மதிமாறனை சந்திக்க கிளம்பினான் கருணாகரன்

அதே நேரம் வில்லவன் தன் குதிரையில் தீ வின் தெற்கு பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். இதுவரை மர்ம யோகியாக நடித்து கொண்டிருந்தவன் கருணாகரன் என்பது தெரிந்தால் பார்த்திபனின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தான் வில்லவன். அதுவும் அவன் வள நாட்டின் உளவாளி என்பது தெரிந்தால் கண்டிப்பாக பார்த்திபன் வியப்படைவான். ஒரு எதிரி நாட்டு ஒற்றன் எப்படி வெகு திறமையாக நாட்டின் தளபதியாகவும், ஆன்மீக யோகியாகவும் இரட்டை வேடம் போட்டு தங்களை ஏமாற்றி விட்டான் என்பதை நினைக்கையிலேயே வில்லவனுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

அதே நேரம் காட்டு பகுதியில் காட்டுவாசியாக வேடம் அணிந்து கொண்டிருந்தவர்கள் குழி தோண்ட துவங்கியிருந்தார்கள். அவர்களுக்கு துணையாக பார்த்திபனின் ஆட்களும் இறங்கினார்கள். ஆதித்தனும், பார்த்திபனும் வேலையை மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர்..

இரண்டடி, மூன்றடி என்று தோண்டப்படும் குழியின் ஆழம் அதிகமாக ஆரம்பித்தது.ஆதி ஒரு ஓரமாக நின்று நடப்பதை கவனித்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகே நின்று கொண்டிருந்த நஞ்சுண்டனின் விழிகளில் பேராசை மின்னியது.இந்த தங்கம் மட்டும் தனக்கு கிடைத்து விட்டால் பிறகு சுகபோக வாழ்வு தான் என்று அவனது மனம் எதிர்கால கனவுகளில் மூழ்கியது.

தோண்டப்படும் குழியின் விஸ்தீரணம் அதிகமாக ஆரம்பித்தது.நான்கிற்கு நான்கு என்ற நீள அகலத்தில் துவங்கிய குழி கடைசியில் ஆறுக்கு ஆறு என்ற கணக்கில் முடிந்தது. ஐந்தடி தூரம் தோண்டியும் எதுவும் கிடைக்காததில் அனைவரும் சோர்ந்து போனார்கள். ஆதித்தன் சற்றே ஐய்யத்துடன் "தம்பி .ஆதி. நன்றாக யோசித்து பார்த்து சொல் ° இந்த இடத்தில் தான் புதையலை புதைத்தார்களா?" என்றான்.

"நான் உறுதியாக சொல்கிறேன். அவர்கள் இங்கே தான் புதைத்தார்கள். அதை நான் என் இரண்டு கண்களில் பார்த்தேன்" என்றான் ஆதி குழப்பத்துடன் .

"அவனை சந்தேகிக்க வேண்டாம். நாங்கள் இங்கே தான் அதை புதைத்தோம் " என்றான் தோண்டி கொண்டிருந்த கடல் கொள்ளையர்களில் ஒருவன்.

" ஆனால் இவ்வளவு ஆழத்தில் நாங்கள் அதை புதைக்க வில்லை" என்றான் மற்றொருவன்

"அப்படியானால் நீங்கள் புதைத்த பொருள் எங்கே தான் போயிற்று? " என்றான் ஆத்திரத்துடன் பார்த்திபன்.

"அதுதான் எங்களுக்கும் தெரியவில்லை" என்றான் இன்னொருவன்.

" இவர்களை விட திறமையான இன்னொருவன் இவர்களிடமிருந்து அதை தூக்கி சென்று விட்டான் போலிருக்கிறதே?" என்றான் நஞ்சுண்டன் .

"அவ்வனவு கனமான பெட்டிகளை தனி ஆளாக தூக்கி சென்றிருக்க முடியாது." என்றான் ஒருவன்.

"உங்களுக்கு யோகி ஏன் உணவு சமைத்து அனுப்ப வேண்டும்?" என்றான் ஆதித்தன்.

"அவர் கருணாகரனின் அனுதாபி என்று கருணாகரன் கூறினான். ஆன்மீகத்தில் ஈடுபடும் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்று கூறி எங்களை சமாதானம் செய்தானே?" என்றான் கடற்கொள்ளையரில் ஒருவன்.

"உங்களுக்கு உணவு கொண்டு வருபவர்கள் வழக்கமாக இங்கேவரும் ஆட்கள்தானே?"

"ஆமாம். ஆனால் ஓரே ஒரு முறை மட்டும் புதிய ஆட்கள் வந்தார்கள். அன்று கருணாகரனின் பிறந்த நாள் என்பதால் அந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. அன்று கருணாகரன் எங்களுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தான். கள், மதுபான வகைகள் என்று போதை வஸ்துகள் பரிமாறப்பட்டன. அன்றும் அதற்கடுத்த நாளும் கூட எங்களால் கண் திறக்க முடியாத அளவுக்கு போதையில் மூழ்கி கிடந்தோம்."

"உங்கள் யாருக்கும் அந்த குறிப்பிட்ட நாளைப் பற்றி எந்த சந்தேகமும் வரவில்லையா?"

"இல்லை. அவன் எப்போதும் தன்னுடைய பிறந்த தினத்தை இப்படி ஆர்பாட்டமாக எங்களுடன் கொண்டாடுவதே வழக்கம். இதில் சந்தேகிக்க எதுவுமில்லை"

"முட்டாள்களே! நீங்கள் குடித்துவிட்டு போதையில் கண் மூடிக்கிடந்த போது கருணாகரன் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு விட்டான். இன்னுமா புரியவில்லை. நீங்கள் கண் திறந்து பார்ப்பதற்குள் அவன் புதையலை இங்கிருந்து கிளப்பிக்கொண்டு போய் விட்டான். அதை எடுத்து செல்லத்தான் புதிய ஆட்களை கூட்டி வந்திருக்கிறான். என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் அந்த புதிய ஆட்கள் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்புகள் குறைவு .உண்மையை வெளியே சொல்லி விடுவார்கள் என்ற பயத்தால் அவன் அவர்களை கொன்றிருப்பான். அவன் சாமர்த்தியமாக உங்களையும் ஏமாற்றி விட்டான்." என்றான் ஆதித்தன். 

"எங்களையும் ஏமாற்றி விட்டான் அந்த சண்டாளன்" என்றான் கொள்ளையரில் ஓருவன்.

அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தான் வில்லவன்.

"வில்லவன் வந்து விட்டான். அவனுக்கு விலகி வழி விடுங்கள்" என்ற து கூட் டம்.

கூட்டத்தை விலக்கி கொண்டு வந்த வில்லவன் வெறும் குழியை மட்டும் பார்த்து விட்டு "என்னாயிற்று?" என்றான் ஏமாற்றத்துடன் .

"இங்கே புதையல் இல்லை நண்பா. அந்த சண்டாளன் கருணாகரன் தன் சகாக்களை ஏமாற்றி அதை கொண்டு சென்று விட்டான்" என்ற பார்த்திபன் நடந்ததை விளக்கி கூறினான்.

"ஆமாம். நீ போன விசயம் என்னாயிற்று?" என்றான் பார்த்திபன்

வில்லவன் நடந்ததை அப்படியே விவரிக்க தொடங்கினான். அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சி தாக்கியது.கருணாகரன், மர்மயோகி ஆகிய இருவரும் ஒரே ஆள் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. இரட்டை வேடம் தரித்து எல்லோரையும் முட்டாளாக்கி விட்டிருந்தான் கருணாகரன்.

எதிராளி சாமான்ய ஆள் அல்லவென்று அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாக புரிந்தது.

சிந்தனை செய்து கொண்டிருந்த ஆதித்தன் எல்லோரையும் ஒரு முறை ஏற இறங்க பார்த்தான்.

" கருணா கரனின் நோக்கம் எனக்கு புரிந்து விட்டது. ஆயுதங்களை இலவசமாக கொடுத்து பார்த்திபனுக்கும் மதிமாறனுக்கும் இடையே ஒரு உள்நாட்டு யுத்தத்தை நடத்த நினைக்கிறான். எல்லாருடைய கவனமும் யுத்தத்தின் மீது இருக்கும் போது புதையலுடன் இங்கிருந்து ஓடி விட நினைக்கிறான். நாம் இங்கே தங்கத்தை தேடாதிருந்தால் போர் முடிந்த பின்பு தேட துவங்கியிருப்போம். அதற்குள் அவன் புதையலுடன் வளநாடு போய் சேர்ந்திருப்பான். இதில் எனக்கு ஒருவன் மீது சந்தேகமாக இருக்கிறது?"

"யார் அது?"

"நீலன்.மலை நாட்டின் ஆயுதங்களை மதி மாறனிடம் ஒப்படைக்க வேண்டியதுதான் அவனது பணி .அதை அவன் மீறி தேசதுரோகியாக விரும்ப மாட்டான். ஆயுதங்கள் மதி மாறனை தவிர வேறு யாரிடமாவது அகப்படும் சூழ்நிலை உருவானால் அவன் அதை கடலில் வீசி எறிவானே தவிர எதிரிகளிடம் ஒப்படைக்க மாட்டான். நீலன் ஆயுதங்களை சிகப்பு முகமூடியிடம் ஒப்படைக்க சம்மதித்திருந்தால் அதில் வில்லங்கமாக ஏதாவது இருக்க வேண்டும்" என்றான் ஆதித்தன்.

தன்னுடைய கப்பலை நீலன் மீட்டு விட்டான் என்பதை கேட்ட நஞ்சுண்டனின் இதயத்தில் இடி இறங்கியது. அவனால் அதை நம்ப முடியவில்லை. கிழட்டு சாத்தான் நினைத்ததை சாதித்து விட்டானே என்று அவன் மனம் குமுறியது. கப்பலும் பறிபோய்விட்டது. ஆயுதங்களையும் இலவசமாக தருவதாக கருணாகரன் சொன்ன பிறகுதான் இங்கு இருப்பது சரியல்ல என்று நினைத்தவன் தன் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து நழுவ ஆரம்பித்தான்.

அவன் நழுவுவதை பார்த்த வில்லவன் " அவன் தப்பி செல்ல முயல்கிறான். அவனை வளைத்து பிடியுங்கள். அவனை நாம் கருணாகரனிடம் ஒப்படைத்தாக வேண்டும்" என்றான்.

தன் இடுப்பில் இருந்த குறுவாளை எடுத்த நஞ்சுண்டன் அதை அருகில் இருந்த ஆதியின் கழுத்தில் வைத்தான்.

" யாராவது என்னை தடுக்க நினைத்தால் இவனுடைய தலை தரையில் உருண்டு விடும்" என்றான் நஞ்சுண்டன் இயலாமை நிறைந்த வெறியுடன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக