புதன், 9 நவம்பர், 2022

ரகசிய தீவு 51

ரகசிய தீவு

எல்லாவற்றையும் இழந்தவன்

கருணாகரன் தான் இத்தனை நாட்களாக யோகியாக நடித்து எல்லோரையும் ஏமாற்றி இருக்கிறான் என்பதை அறிந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தன் கப்பலை கருணாகரனின் உதவியோடு நீலன் திரும்ப கைப்பற்றி விட்டான் என்பதை அறிந்த நஞ்சுண்டன் திகைப்பில் ஆழ்ந்தான். அவன் ஆயுதங்களை இலவசமாகவே பார்த்திபனுக்கு தர முன்வந்ததை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மலைநாட்டு ஆயுதங்களை மதி மாறனிடம் ஒப்படைக்க வேண்டிய நீலன் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது அவனுக்கு வியப்பாக இருந்தது.

தன்னுடைய துரோகத்திற்கு ஆதரவு தந்து உதவிய தன்னுடைய நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுவிட்டதை வில்லவன் மூலமாக தெரிந்து கொண்டான் நஞ்சுண்டன் .

நஞ்சுண்டன்தான் எல்லாவற்றிலும் தோற்று நிர்கதியாக நிற்பதை உணர்ந்தான். நீலனை ஏமாற்றி அவன் கடத்தி கொண்டு வந்த முத்தழகி கப்பல் அவன் கையை விட்டு போய்விட்டது. மார்க்கதரிசியின் தங்க புதையலும் அவன் பெரிதும் நம்பியிருந்த ஆயுதங்களும் கூட அவன் கையை விட்டு போய்விட்டன. போதாதற்கு கருணாகரன் வேறு ஆயுதங்களுக்கு பதிலாக நஞ்சுண்டனை பணயக் கைதியாக கேட்டு அவன் கதையை முற்றிலுமாக முடித்து வைக்க போகிறான்.

எல்லாமே தனக்கு எதிராக நடந்து கொண்டிருந்தாலும் நஞ்சுண்டன் தன் மன தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் இழக்கவில்லை. அவனுக்கு ஒரு விசயம் சாதகமாக இருந்தது. அது மார்க்கதரிசியின் தங்க புதையல் . எல்லோரும் நினைத்து போல் அது காட்டுக்குள் இல்லை என்பது இப்போது உறுதியாகிவிட்டது.

அந்த புதையல் இருக்கும் இடம் கருணாகரனுக்கு தெரியும். அவன் மதி மாறனின் முகத்தில் கரியை பூசிவிட்டு அவனுக்கு தெரியாமல் அதை இங்கிருந்து கொண்டு செல்ல நினைக்கிறான். இது மட்டும் தான் அவனுக்கு சாதகமான அம்சம்.

கருணாகரனின் குள்ள நரிதந்திரத்தை எப்படியாவது மதிமாறனின் காதுகளுக்கு கொண்டு சென்று விட்டால் போதும். கப்பலில் இருக்கும் ஆயுதங்கள் கண்டிப்பாக மதிமாறனின் கவனத்தை கவரும். அவற்றை அவன் கைப்பற்றி விட்டால் அவன் எளிதாக சிகப்பு முகமூடியின் புரட்சியை அடக்கி விடுவான். கருணாகரனிடமிருந்து தங்க புதையலையும் கைப்பற்றி விடுவான்.

தான் செய்த உதவியை மதிமாறன் மறக்க மாட்டான். அதற்கு பதிலுதவி செய்ய நினைப்பவனிடம் முத்தழகி கப்பலை மீண்டும் கேட்டு பெற வேண்டும். அப்படியே கிடைத்த புதையலில் கணிசமான பங்கை கேட்டால் மதிமாறன் அதை மறுக்க போவதில்லை. இவ்வாறு யோசித்த நஞ்சுண்டன் தன்னுடைய அடுத்த திட்டம் நிறைவேற வேண்டுமானால் தான் இங்கிருந்து தப்பியாக வேண்டும் என்ற முகத்தில் அறையும் உண்மையை உணர்ந்தான்.

இங்கே இருக்கும் யாரையாவது பணயக் கைதியாக பிடித்து வைத்து கொண்டு இங்கிருந்து தப்பி சென்று விட வேண்டும் என்று நினைத்தவனின் கண்ணில் தென்பட்டான் ஆதி.

வயதில் சிறியவன். அனைவரின் அனுதாபத்தையும் பெற்றவன். இவனை பணயமாக்கிவிட வேண்டியது தான் என்று நினைத்தவன் சட்டென்று தன் குறுவாளை உருவி அவனது கழுத்தில் வைத்தான்.

" யாராவது என்னை பிடிக்க நினைத்தால் இவனது தலை தரையில் உருளும்" என்று கர்ஜித்தான்.

எதிர்பாராமல் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அனைவரும் திகைத்து நின்றனர். "நஞ்சுண்டா! விபரீதமாக எதையாவது செய்து விடாதே! அவன் உலகம் அறியாத சிறுவன் " என்றான் வில்லவன்.

"நான் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும். எனக்கு ஓரு குதிரையை கொடுங்கள். நான் இங்கிருந்து கிளம்புகிறேன். சிறுவனை கொல்லுமளவிற்கு நான் கொடியவன் அல்ல.. நான் பாதுகாப்பான தூரத்திற்கு சென்றதும் இவனை விடுவித்து விடுவேன். பயப்படாதீர்கள்" என்றான் நஞ்சுண்டன் .

நஞ்சுண்டன் சொல்வதை கேட்டு நடப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து கொண்ட ஆதித்தன் " அவனுக்கு ஒரு குதிரையை கொடுங்கள்" என்று உத்தரவிட்டான்.

நஞ்சுண்டனிடம் குதிரை ஓன்று ஒப்படைக்கப்பட்டது. அதில் ஆதியை ஏற்றிக் கொண்டு அவனது பின்னால் அமர்ந்து கொண்ட நஞ்சுண்டன் அங்கிருந்து கிளம்பினான்.

"யாரும் என்னை பின் தொடர்ந்து வர முயற்சி செய்யாதீர்கள். அப்படி பின் தொடர்ந்தால் நடக்கும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல" என்ற நஞ்சுண்டனின் குரல் காற்றில் கலந்து எதிரொலித்தது.

நண்பர்கள் அனைவரும் செய்வதை யறியாது நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்..

வில்லவனை அனுப்பி வைத்த கருணாகரன் தன்னுடைய உடைகளை மாற்றி கொண்டு குதிரையில் கிளம்பினான்.

அவன் போய் சேர்ந்தது செங்கோடனின் உடல் எரியூட்டப்பட்ட இடுகாடு.

மயான அமைதியாக இருந்த இடுகாட்டின் வெளியே குதிரையை நிறுத்தி இறங்கிய கருணாகரன் வெட்டியானை தேடத் துவங்கினான்.

விரைவிலேயே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பூபதியை கண்டுபிடித்து விட்டான்.

" என்ன இங்கே வந்து உட்கார்ந்து விட்டாய்?" என்றான் கருணாகரன்.

"வேறு என்ன செய்வது? இங்கே இருப்பவர்கள் வெளியே போவதில்லை. வெளியே இருப்பவர்கள் உள்ளே வருவதில்லை. நான் மட்டும் தான் இரண்டையும் செய்கிறேன்" என்றான் சலிப்புடன்.

"உன்னுடைய சலிப்பும், ஆயாசமும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நாளையிலிருந்து உன் தனிமைக்கு விடுதலை" என்றான் கருணாகரன்.

"உண்மையைத்தான் சொல்கிறாயா?" என்றான் பூபதி மகிழ்ச்சியுடன் .

"ஆமாம். நான் சொல்வது உண்மை. என்னை நம்பு. அந்த பனிரெண்டு புதை குழிகளையும் தோண்ட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. மாண்டவர் பூமியான இங்கேதான் புதையல் ஓளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நீயும் நானும் தான் அறிவோம்"

" ஆனாலும் நீ பலே கை காரன் கருணாகரா.காட்டில் மறைந்து வாழும் உன் நண்பர்களை போதையில் வீழ்த்தி விட்டு புது ஆட்களை வைத்து அந்த புதையலை இங்கு கொண்டு வந்து விட்டாய். உனக்கு உதவி செய்த பன்னிரெண்டு பேர்களையும் கொன்று அவர்களின் சவக்குழியிலேயே புதையலையும் சமபாகங்களாக பிரித்து ஓளித்து வைத்து விட்டாய். அதற்கு காவலாக என்னையும் நியமித்து விட்டாய்."

"நான் என் நண்பர்களுக்கு செய்த அதே புதையல் மாற்றத்தை நீ எனக்கு செய்து விடாதே"

"நீ இப்போது வேண்டுமானாலும் குழிகளை தோண்டி பார்த்து என்னுடைய நேர்மையை சோதித்து கொள்ளலாம். ஆனால் நான் உன்னை நம்பவில்லை பனிரெண்டு பேரை எமலோகம் அனுப்பி வைத்த நீ பதிமூன்றாவது ஆளாக என்னையும் எமலோகம் அனுப்ப தயங்க மாட்டாய்" என்றான் பூபதி..

"சேச்சேl நான் உனக்கு துரோகம் செய்வேனா? மனதில் உள்ளதை மறைக்காமல் கேட்டு விடும் உன் பழக்கம் எனக்கு பிடித்திருக்கிறது. இந்த புதையலில் உனக்கும் பங்கு இருக்கிறது"

"அனைத்தையும் வள நாட்டிடம் ஒப்படைக்க நீ முடிவு செய்து விட்டாய். பிறகு எப்படி வரும் எனக்கு பங்கு?"

"முட்டாள் . அத்தனையையும் அப்படியே அள்ளி அரசனிடம் கொடுக்க நான் என்ன முட்டானா? என் வாழ்நாளின் பெரும் பகுதியை இந்த புதையலுக்காக நான் செலவு செய்திருக்கிறேன். இதில் சரிபாதியைக் தான் நான் வளநாட்டில் ஒப்படைக்க போகிறேன். மீதமுள்ள பாதி உனக்கும் எனக்கும் தான். இறந்து போன மார்க்கதரிசிக்கு மட்டும் தான் முழுமையான புதையலின் அளவு தெரியும். அவன் உயிரோடு வந்து சாட்சி சொல்லவா போகிறான்?" என்று சிரித்தான் கருணாகரன்.

" கருணாகரா, உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது. எல்லோரையும் விட நீ புத்திசாலி என்பதை அடிக்கடி நிருபித்து விடுகிறாய்.
உன்னுடைய மதியுகத்திற்கு முன்னால் நான் ஓன்றுமேயில்லை."

"பல முட்டாள்கள் சேர்ந்துதான் ஒரு புத்திசாலியை உருவாக்குகிறார்கள். உலகத்தில் முட்டாள்கள் அதிகம் என்பது தான் உண்மை. இன்று இரவு இரண்டாம் சாமத்தில் கப்பலிலிருந்து ஆயுதங்கள் சிகப்பு முகமூடிக்கு கை மாறும். மூன்றாம் சாமத்தில் இங்கிருக்கும் பொக்கிசங்கள் கப்பலுக்கு இடம் மாறும். நாம் வாழ்க்கையின் இயல்பும் மாறும் " என்றான் கருணாகரன்

"இந்த திட்டத்தில் நாம் இருவர் மட்டும்தானா?"

"இல்லை. மூன்றாவதாக இன்னொருவன் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறான். அவனது பெயர் தர்மபாலன்.வள நாட்டின் அதிகார வர்க்கம் நமக்கு உதவி செய்ய அவனை அனுப்பி வைத்திருக்கிறது."

" அவனுக்கு தெரியாமல் நாம் எப்படி புதையலில் பாதியை அபகரித்து பிரித்து கொள்வது? இல்லையென்றால் அவனையும் கூட்டு சேர்த்து கொண்டு பாதி புதையலை மூன்றாக பிரித்து அவனுக்கும் பங்கு தந்து விடலாமா?"

"நீ ஓரு முட்டாள் என்பதை மீண்டும் நிருபிக்கிறாய். இந்த பொக்கி சத்திற்காக வெவ்வேறு வேடமிட்டு முதலிலிருந்து கஷ்டப்பட்டவர்கள் நாம். நேற்று வந்தவன் அந்த தர்மபாலன்.. அவனுக்கும் அதில் பங்கா? ஆதியில் வந்தவள் வீதியில் நின்றாள். நேற்று வந்தவள் நெய்யும் சோறும் தின்றாள் என்ற பழமொழி போல் இருக்கிறது உன் பேச்சு " என்று வார்த்தைகளில் கனல் கக்கினான் கருணாகரன்.

"என்னை மன்னித்து விடு கருணாகரா. உன் அளவிற்கு நான் புத்திசாலி இல்லை" என்றான் பரிதாபமாக பூபதி.

"அவனை நான் பார்த்து கொள்கிறேன். இன்று இரவு நிறைய வேலை இருக்கிறது. நன்றாக தூங்கி ஓய்வெடு" என்ற கருணாகரன் அங்கிருந்து கிளம்பினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக