ரகசிய தீவு
அத்தியாயம் 49
இரு முகமூடிகள்
யோகியின்ன் பூஜை அறையில் இருந்த ரகசிய வழியாக நுழைந்த வில்லவன் தீவட்டியின் உதவியோடு முன்னேறி கொண்டிருந்தான். பல கிளைகளாக பிரிந்து சென்ற பாதையில் அவன் கவனமாக காலடி தடம் பதிந்திருந்த பாதையை பின்பற்றி சென்றான்.பாதையின் முடிவில் ஏதோ சத்தம் கேட்டதால் தன்னுடைய தீவட்டியை அணைத்து விட்டு இருளில் பதுங்கி கொண்டான்.
வேறு ஒரு வழியாக உள்ளே நுழைந்த அந்த மர்ம ஆசாமி தன்னுடைய உடைகளை களைந்து விட்டு கஷாய உடைகளை அணிந்து கொண்டு பொய்தாடி ஓன்றையும் தன் முகத்தில் பொருத்தி கொண்டான். அது தன்னுடைய முகத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறதா என்று அவன் சுவற்றில் இருந்த கண்ணாடியில் ஒரு முறை பார்த்து சரி செய்து கொண்டான்.
அவனுடைய முகத்தை தீவட்டியின் வெளிச்சத்தில் பார்த்த வில்லவன் அதிர்ச்சியின் உச்சிக்கு சென்றான். தாடி ஒட்டிய அந்த முகத்திற்கு சொந்தக்காரன் சாட்சாத் கருணாகரனே தான். "இவனா அந்த துறவி?" என்று முணுமுணுத்தனவில்லவனின் உதடுகள். இப்படி ஓரு அதிர்ச்சியை அவன் எதிர்பார்க்கவில்லை சுவற்றை ஒட்டியபடி நின்று கொண்டிருந்த வில்லவன் நகர முற்பட்டான். இந்த செய்தியை எப்படியாவது பார்த்திபனிடம் சொல்லி விட வேண்டும் என்று அவனது உள்ளம் துடியாகத் துடித்தது.
அவன் பக்கவாட்டில் நகர முற்பட்ட போது தரையில் கிடந்த பானை துண்டு ஓன்றை இருட்டில் தெரியாமல் மிதித்து விட்டான். " பட் " என்ற சத்தத்துடன் பானையின் ஓடு இரண்டு துண்டானது.
கருணாகரனின் பாம்பு செவிகளில் அந்த சத்தம் துல்லியமாக விழுந்தது. சத்தம் வந்த திசையில் தீ வட்டியை காட்டியவன்" யாரது?" என்றான். வில்லவனுக்கு இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. இங்கேயிருந்து கண்மண் தெரியாமல் ஓடி விடலாம் இல்லையோகியின் உருவத்தில் இருப்பது கருணாகரன் தான் என்பதை வெளிகாட்டி கொள்ளலாம். இரண்டாவதில் அவனுடைய உயிர் பறிபோகும் அபாயம் அதிகமாக இருந்தது.
என்ன நடந்தாலும் சரி. கருணாகரனின் இன்னொரு முகத்தை பார்த்திபனிடம் அம்பலப்படுத்தியே தீர வேண்டும். அதற்கு தான் உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைத்தவன் சட்டென்று தன் இடுப்பில் இருந்த வாளை எடுத்து யோகியின் மார்பில் வைத்துடன் "நகராதே! விபரீதமாக எதையாவது செய்ய நினைத்தால் உன் உயிர் பறவை உடலை விட்டு பறந்து விடும். ஜாக்கிரதை!" என்று அவனை எச்சரிக்கவும் செய்தான்.
தர்மபாலனிடம் விடைபெற்று கிளம்பிய கருணாகரன் ஆயுதங்களை முதலில் பார்த்திபனிடம் ஓப்படைத்து கப்பலை காலி செய்து விட விரும்பினான். அதற்காகவே அவன் தன்னுடைய மாளிகையில் இருந்த சுரங்க வழியில் பயணம் செய்தான். இப்போது இருட்டில் நிற்கும் யாரோ ஒரு ஆசாமி தன்னுடைய மார்பில் கத்தியை வைத்ததும் அவன் முற்றிலுமாக நிலை குலைந்து போனான்.
"யாரப்பா நீ? உன் முகத்தை காட்டு" நடுக்கத்துடனும் அதிர்ச்சியுடனும் வெளிப்பட்டது அவனது குரல் ..
"நான் தான்!" என்றபடி இருளிலிருந்து முன்னேறி வெளிச்சத்திற்கு வந்தான் வில்லவன். முன் எச்சரிக்கையாக யோகி தன்னை அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்பதால் தன் மேலாடையால் முகத்தில் முகமுடி அணிந்து அதை மறைத்திருந்தான் வில்லவன்.
" முகத்தை மூடிக் கொண்டிருக்கும் உன்னை எனக்கு அடையாளம் தெரியவில்லையே?" என்றான் கருணாகரன்
" ஆனால் உன்னை எனக்கு அடையாளம் தெரியும் கருணாகரா.ரகசிய தீவின் தளபதி, ஆன்மீக அடிகளார் இருவரும் ஒருவரே என்பதை நான் இன்று கண்ணால் கண்டு விட்டேன். எதற்கு இந்த கபட நாடகம் கருணாகரா?" என்றான் கோபத்துடன் வில்லவன்.
இதுவரை யாருக்கும் தெரியாமல் தான் கட்டி காத்து வந்த ரகசியத்தை ஒருவன் கண்டுபிடித்து விட்டானே என்ற அதிர்ச்சியில் கல்லாக சமைந்து நின்று விட்டான் கருணாகரன்.
"என்னப்பா நீ? என்னென்னவோ கூறுகிறாய்?" என்ற கருணாகரனின் குரல் நடுங்கியது. வெண்ணெய் திரண்டு வரும் போது பானை உடைந்த கதை போல் எல்லாம் கூடிவரும் நேரத்தில் இடையூறாக ஒருவன் வந்து முளைப்பான் என்று அவன் கனவுகூட காணவில்லை.
"போதும் ! நிறுத்தி கொள் உன் பொய்களை" என்ற கோபத்தோடு சீறிய வில்லவன் அவனது பொய் தாடியை பிடித்து இழுத்தான். பொய்காடி கருணாகரனின் முகத்திலிருந்து விடைபெற்றது.கருணாகரனின் உண்மை முகம் வெளிப்பட்டது.
கருணாகரன் அதிர்ந்து போய் நின்றான். சட்டென்று தன்னை சுதாரித்து கொண்டவன் தன் கையிலிருந்த தீவட்டியால் மார்பில் இருந்த வாளை தட்டி விட்டான். அதே நேரம் அவனது இன்னொரு கை எதிராளி யார் என்று பார்க்க நினைத்து வில்லவனின் முகத்தில் இருந்த முகமூடியை பிடித்து இழுத்தது.
வில்லவனின் உண்மையான முகம் வெளிப்பட்டது." வில்லவா! நீயா?" என்றான் கருணாகரன். அவனுக்கு கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போலிருந்தது. சிகப்பு முகமூடியான பார்த்திபனை தொடர்பு கொள்ள நினைக்கும் தன்னுடைய வேலை எளிதாக முடிந்துவிடும் என்று அவனுக்கு தோன்றியது.
வில்லவன் தன்னுடைய அடையாளம் வெளிப்பட்டு விட்டதே யென்ற அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.
"பயப்படாதே வில்லவா! நான் உன்னுடைய நண்பன் தான் " என்றான் கருணாகரன் சிரித்தபடி.
தன்னை சுதாரித்து கொண்ட வில்லவன் "எங்களை வேட்டை நாயாக துரத்தி வரும் நீ எப்படி எனக்கு நண்பனாக முடியும்?" என்றான்.
" எல்லாமே மதிமாறனுக்கு போக்கு காட்ட நான் நடத்திய நாடகம்."
"நீ இந்த தீவின் தளபதி. நீ எதற்காக இப்படி இரட்டை வேடம் போட்டு கொண்டிருக்கிறாய் என்று எனக்கு தெரியவில்லை"
" எல்லாம் காரணமாகத் தான்."
" சொந்த நாட்டிற்கே துரோகம் செய்யும் துரோகி நீ "
"நான் உங்கள் நாட்டை சார்ந்தவனே இல்லை. நான் வள நாட்டின் ஒற்றன். வள நாட்டிற்கு இந்த தீவின் மீது ஒரு கண்.பார்த்திபன் சம்மதித்தால் வளநாடு உங்களுக்கு உதவி செய்யும் "
"உங்கள் உதவி எங்களுக்கு தேவையில்லை."
"அதை தலைவனான பார்த்திபன் சொல்லட்டும். தயாநிதி மலை நாடு இரண்டிலிருந்தும் விடுதலை உங்களுக்கு .உங்களுக்கு வளநாடு நல்ல நட்பு நாடாக இருக்கும். மலை நாட்டிலிருந்து எந்த இடையூறு வந்தாலும் வளநாடு உங்கள் உதவிக்கு வரும். நீ என்னுடைய உதவியை ஏற்க சம்மதித்தால் கப்பல் நிறைய ஆயுதங்கள் உனக்காக காத்திருக்கின்றன. நான் அவற்றை இலவசமாகத் தருகிறேன்"
"அந்த ஆயுதங்கள் நஞ்சுண்டனுக்கு சொந்தமானவை"
"அவனொரு துரோகி. அந்த கப்பலை என்னுடைய உதவியோடு அதன் பழைய எஜமானன் நீலன் கைப்பற்றி விட்டான். அதன் ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விட்டார்கள். அந்த ஆயுதங்கள் என்னுடையவை. நஞ்சுண்டன் இனி செல்லாக் காசு. அவனை நம்பினால் அம்மஞ் சல்லிக்கு பிரயோஜனமில்லை" என்றான் கருணாகரன்.
" இதைப் பற்றி நான் பார்த்திபனிடம் பேசித்தான் முடிவெடுக்க வேண்டும்"
"இன்று இரவுக்குள் நல்ல முடிவு என்னை நாடி வர வேண்டும். இல்லையென்றால் அந்த ஆயுதங்கள் கடல் நீரில் எறியப்பட்டு ஜல சமாதியாகி விடும்" என்றான் கருணாகரன் மிரட்டல் தொனியில் .
"இன்று இரவுக்குள் உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். ஆமாம் உங்களின் பரகாயப் பிரவேசவழி என்பது இதுதானா?"
"ஆம். இது தான் அந்த வழி. இந்த ரகசிய வழியின் வழியாகத்தான் கரிகாலனை மீட்டு வந்தேன். அந்த கடலோடி நீலனையும் மீட்டு வந்தேன்.கரிகாலனுக்கு ஆயுதங்கள், வரிப்பணம் வரும் வழியை சொல்லி அதை கொள்ளையடிக்க வழிகாட்டியவனும் நான் தான் "
"எதற்காக?"
"சிகப்பு முகமூடியின் தலைமையில் ஒரு புரட்சி வெடிக்க வேண்டும், மனன் நாட்டின் ஆதிக்கம் முடிவு பெற வேண்டும். வள நாட்டின் உதவியோடு ஒரு ஆட்சி இங்கே மலர வேண்டும். அதற்காகத்தான் நான் கரிகாலனுக்கு உதவி செய்தேன். அவன் என் வழி நடத்தலை ஏற்று கொள்ளாமல் தன் இஷ்டத்திற்கு நடந்து மரணத்தை தேடிக் கொண்டான். பைத்தியக்காரன். என் லட்சியத்தை நிறைவேற்ற நல்ல வேளையாக பார்த்திபன் கிடைத்து விட்டான். ஆமாம் பார்த்திபன் எங்கே இருக்கிறான்?" என்று வில்லவன் எதிர்பார்க்காத கேள்வி ஒன்றை வீசினான் கருணாகரன்.
கரிகாலன் யோகியின் பேச்சை கேட்காமல் சென்று மரணத்தை தழுவியது போல் இந்த முறையும் யோகியின் பேச்சை கேட்காமல் பார்த்திபன் செயல்படுவதை சொல்வதா வேண்டாமா என்று யோசித்தபடி நின்றான் வில்லவன்.
"என்ன வில்லவா? தயங்குகிறாய். இந்த முறையும் எனக்கு தெரியாமல் எதையாவது செய்து தொலைக்க போகிறானா பார்த்திபன் ?" என்றான் கருணாகரன்.
"ஆம். அந்த நஞ்சுண்டன் ஆயுதங்களுக்கு ஈடாக மார்க்கதரிசியின் தங்க புதையலை கேட்கிறான். அது எங்கே இருக்கிறது என்று அவனுக்கு தெரியுமாம்.அதை எடுக்கத்தான் பார்த்திபன் போயிருக்கிறான்."
"முட்டாள்தனமான செயலை செய்கிறான் பார்த்திபன். நான் ஆயுதங்களை இலவசமாக தருவதாக சொல்கிறேன். அதை வைத்து முதலில் அதிகாரத்தை கைப்பற்றுங்கள். பிறகு உங்கள் ஆதிக்கம் தான்.புதையலை பொறுமையாக தேடி எடுக்கலாம்" என்றான் கருணாகரன் படபடப்புடன்.
"நீசொல்வதும் சரிதான்!"
"அவனை உடனே திரும்ப வரச் சொல். அந்த நஞ்சுண்டன் - அவனை கைது செய்யுங்கள். அவன் என் நண்பனுக்கு தேவை "
" உடனே கிளம்புகிறேன்"
"அந்த பெண். சந்திரவதனா?"
"அவள் என் வீட்டில் தான் இருக்கிறாள். "
" நல்லது. நீ உடனே கிளம்பி நான் சொன்ன தகவல்களை பார்த்திபனிடம் கூறு" என்றான் கருணாகரன்.
வில்லவன் அங்கிருந்து கிளம்பினான்.
கருணாகரன் உடையை மாற்றிக் கொண்டு மதி மாறனை சந்திக்க கிளம்பினான். அவனிடம் சந்திரவதனா என்ற துருப்பு சீட்டு இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக