ரகசிய தீவு
அத்தியாயம் 53
இரண்டு எத்தர்கள்
திகைப் பூண்டை மிதித்த நஞ்சுண்டன் திசை தெரியாமல் ஓரே இடத்தில் சுற்றி கொண்டிருந்தான்.அவனது குதிரையை கைப்பற்றி கொண்ட ஆதி அங்கிருந்து கிளம்பினான். வெளியே சூரியன் மறைந்து இருள் பரவ தொடங்கியிருந்தது.
தன் திட்டத்தின் அடுத்தடுத்த படி நிலைகளை வெற்றிகரமாக கடந்து கொண்டிருந்த கருணாகரன் அடுத்ததாக மதி மாறனை காண கிளம்பினான். இரண்டொரு நாட்களாக அவன் மதி மாறனின் மாளிகையின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை. ஏராளமான வேலைகள் அவனை நெருக்கி தள்ளி கொண்டிருந்தன.மதிமாறனை எப்படியாவது சிகப்பு முகமூடி யோடு மோதவிட்டு விட்டால் நடக்கும் உள்நாட்டு குழப்பத்தில் புதையலோடு ஓடி விட வேண்டும் என்பது அவனது திட்டம்.
கடைசி நேரத்தில் களத்திலிருந்து காணாமல் போய் மதிமாறனின் கழுத்தை அறுத்து அவனை கட்டாய தோல்விக்கு உள்ளாக்க நினைத்திருந்தான் அவன். அவன் மதி மாறனின் அரண்மனைக்குள் நுழையும் முன்பே அங்கே வந்து சேர்ந்திருந்தான் நீலன்.
தன் கைவசமுள்ள ஆயுதங்கள் கோளாறுகள் நிறைந்தவை என்பதை சொல்லி மதிமாறனை எச்சரிக்கவே அங்கே வந்து சேர்ந்த திருந்தான் நீலன்.மதிமாறனை எச்சரித்து விட்டு கருணாகரனின் துரோகத்தை எடுத்து கூறி அவனை நம்ப வேண்டாம் என்று சொல்லவே நீலன் அங்கே வந்திருந்தான்.மதிமாறனை சந்தித்த பின்பு கருணாகரனின் மாளிகைக்கு செல்லலாம் என்று அவன் திட்டமிட்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே அங்கே வந்து விட்டான் கருணாகரன்.
அவனை அங்கே பார்த்ததும் நீலனின் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.இந்த சண்டாளன் மட்டும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால் காரியம் சுலபமாக முடிந்திருக்கும். எமகாதகன் சரியான நேரத்தில் வந்து தன்னை பிடித்து விட்டானே? இனி இவனுக்கு முன்னால் எந்த உண்மையையும் மதிமாறனிடம் சொல்ல முடியாதே என்று தன்னையே அவன் நொந்து கொண்டான்.
மதிமாறனின் மாளிகையில் நீலனை பார்த்ததும் கருணாகரனின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. மார்க்கதரிசியின் தங்கத்தை பற்றி அவன் ஏதாவது மதிமாறனிடம் சொல்லிவிட்டால் தன்னுடைய கதி அதோ கதிதான் என்று உணர்ந்து கொண்டவன் இவன் வாயை திறக்காமல் பார்த்து கொள்வதே தனக்கு நல்லது என்று எண்ணினான்.
" என்ன நண்பா! இங்கே வந்திருக்கிறாய்? நான் உன்னை என்னுடைய மாளிகைக்கு அல்லவா வரச் சொன்னேன்?" என்றான் நைச் சியமான புன்னகையுடன் .
அவனது கேள்வியில் இருந்த குதர்க்கத்தை புரிந்து கொண்ட நீலன் தன்னை சுதாரித்து கொண்டான். எப்படியாவது இவனை சமாளிக்க வேண்டுமே என்று நினைத்தவன் " விருந்தாளி வீட்டிற்கு வரும் போது வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்புவது போல் கிளம்பலாமா நண்பா! நான் உன்னை தேடி உன் வீட்டிற்கு வந்த போது அவர்கள் நீ இங்கே வந்திருப்பதாக சொன்னார்கள். அதனால் தான் நான் இங்கே வந்தேன்" என்றான் நீலன் சாமர்த்தியமாக.
நல்ல வேளை. இவன் நம்மை பின் தொடர்ந்து வந்து இடுகாட்டு ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் போனானே என்று நினைத்த கருணாகரன் " நான் இல்லாவிட்டால் என்ன நண்பா ? அது உன் வீடல்ல வா? உனக்காக யவன நாட்டு மது வகைகளை ஏராளமாக வாங்கி வைத்திருக்கிறேன். அவற்றை உல்லாசமாக அருந்தி விட்டு நான் வரும் வரை காத்திருக்கலாமே?" என்றான்.
" காத்திருக்கலாம் தான். ஆனால் மதிமாறனை நானும் சந்திக்க வேண்டியிருக்கிறதே?"
"நீ எதற்காக அவனை சந்திக்க போகிறாய்? உன்னைத்தான் அவன் ஏற்கனவே கைது செய்திருக்கிறானே?"
"அப்போது ஆயுதங்களை கொண்டு வருபவன் நான் என்று அவனுக்கு தெரியும். அவனது கோபம் கப்பலை நான் தொலைத்து விட்டதால் தான் அதிகமானது. அதனால் தான் அவன் என்னை சிறையில் அடைக்க உத்தரவிட்டான்"
"இப்போது அவனிடம் என்ன பேச போகிறாய்?"
" தொலைந்து போன என் கப்பலை மீட்டு விட்டதாக சொல்வேன். என் மீது எந்த தவறும் இல்லை என்று நிருபிப்பேன்"
"ஆயுதங்கள் எங்கே என்று கேட்டால்?"
" அவற்றை நஞ்சுண்டன் சிகப்பு முகமூடியிடம் விற்று விட்டான். கப்பலை நான் கைப்பற்றிய போது அது காலியாக இருந்தது என்பதற்கு நீயே சாட்சி" என்று சிரித்தான் நீலன்
"சபாஷ். குயுக்தியான மூளைதான் உனக்கு. நான் முதலில் போய் மதிமாறனை சந்திக்கிறேன். சரியான நேரத்தில் உன்னை உள்ளே அழைக்கிறேன். நீ எதுவும் பேச வேண்டாம். எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன்" என்றான் கருணாகரன்,
கருணாகரன் மதி மாறனை காண கிளம்பினான்.கருணாகரன் தன்னை அழைப்பதற்காக படபடக்கும் இதயத்தோடு காத்திருக்க துவங்கினான் நீலன்.
மாடியில் வானத்து முழு நிலவை வெறித்து கொண்டிருந்த மதிமாறன் அரவம் கேட்டு திரும்பினான்.
அவனுக்கு முன்னால் நின்று முகமன் கூறினார் கருணாகரன்.
" கருணாகரா. என்னாயிற்று உனக்கு?ஏன் சில நாட்களாக என்னை சந்திக்க வராமல் இருக்கிறாய்?" என்றான் படபடப்புடன் மதி மாறன் .
" மன்னிக்க வேண்டும் பிரபு. இங்கே நிறைய வேலைகள். அவற்றை முடிக்க நேரமாகிவிட்டது. கிடைத்த சொற்ப ஓய்வில் உங்களை காண ஓடி வந்திருக்கிறேன். உங்கள் அதிகாரத்திற்கு ஆபத்து நெருங்கி கொண்டிருக்கிறது"
" என்ன சொல்கிறாய் நீ? அதிகாரத்திற்கு ஆபத்தா? நீ சொல்வது எனக்கு புரியவில்லை"
" பிரபு. நமக்காக கப்பலில் ஆயுதங்களை கொண்டு வந்தவன் நீலன்"
" அவன் தான் கப்பலையே தொலைத்து விட்டானே ? அதனால் தானே அவனை சிறையில் அடைத்தேன்"
"தெரியும். அவனிடமிருந்து கப்பலை களவாடியவன் நஞ்சுண்டன் .நீலனின் துணை மாலுமி. அவன் அந்த ஆயுதங்களை சிகப்பு முகமூடியிடம் விற்று விட்டான்"
"அந்த சிகப்பு முகமூடிக்கு எது அவ்வளவு செல்வம்?"
" எல்லாம் வள நாட்டின் உதவி தான். அவர்கள் இந்த தீவை கைப்பற்றி சிகப்பு முகமூடியை பொம்மையாக உட்கார வைத்து தீ வை ஆள நினைக்கிறார்கள். அவர்கள் தான் ஆயுதங்களை வாங்க உதவியிருக்க வேண்டும்"
"நம் கையை வைத்து நம் கண்களையே குத்துகிறார்களா? நம் ஆயுதங்களை வைத்து நம்மையே வீழ்த்த நினைக்கிறார்கள்"
"இன்னொரு விசயமும் இப்போது தெரிய வந்திருக்கிறது. அதை சொன்னால் நீங்கள் நம்ப மாட்டிர்கள்"
"நீ சொல். நான் நம்புகிறேன்"
"தீவின் தெற்கு பகுதியில் உள்ள காட்டில் தான் சிகப்பு முகமூடியின் புரட்சி கும்பலுக்கு ஆயுத பயிற்சியை வளநாட்டு வீரர்கள் வழங்குகின்றனர். சிகப்பு முகமூடியும் அங்கு தான் போய் பதுங்கி கொள்கிறான். அதனால் தான் நம்மால் அவனை பிடிக்க முடியவில்லை."
"ஓ! இதென்ன விபரீத செய்தி. அங்கே நர மாமிசம் சாப்பிடும் காட்டுவாசிகள் இருப்பதாகவல்ல வா கேள்வி "
"அது காட்டுவாசிகள் வேடத்தில் இருக்கும் வளநாட்டு வீரர்களின் சதி. அதை நாம் உண்மை என்று நம்பி விட்டோம்"
"நீ சொல்லும் விசயங்களை கேட்க வே அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு நாட்களாக நாம் அசட்டையாக இருந்து விட்டோம்"
"ஆயுதங்களையும், கப்பலையும் பறிகொடுத்த நீலன் வெளியே நிற்கிறான்"
"அவனை உள்ளே வரச் சொல் "
உள்ளே வந்த நீலன் வணக்கம் சொல்லிவிட்டு கருணாகரனை பார்த்தான்.
பேசு என்று சைகை செய்தான் கருணாகரன்.
"என்னை மன்னித்து விடுங்கள்" என்றான் நீலன்.
"உன் மேல் தவறில்லை. அந்த துரோகி நஞ்சுண்டன் மீது தான் தவறு.அரசாங்க சொத்தை அரசிடம் ஒப்படைப்பதுதான் முறை.ராஜதுரோகம் செய்து விட்டான் அவன். அவனை தண்டிப்பது தான் ஒரே வழி " என்றான் மதிமாறன்.
" அவன் இப்படி துரோகம் செய்வான் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை" என்றான் நீலன்.
" என் காலடியிலேயே குழிபறித்திருக்கிறார்கள் வளநாட்டு உளவாளிகள். அதை தெரிந்து கொள்ளாமல் இத்தனை நாட்களாக இருந்திருக்கிறேன். என்னுடைய முட்டாள் தனம் உன்னுடைய முட்டாள்தனத்தை விட பெரியது "
"ஆயுதங்கள் கிடைத்த பிறகு சிகப்பு முகமூடி சும்மா இருக்க மாட்டான். நம் மீது போர் தொடுக்க தயங்க மாட்டான் . அவனுக்கு வளநாட்டின் படை உதவியும் கிடைத்து விட்டால் நாம் தோற்பது உறுதி "
"வள நாட்டிலிருந்து உதவி வரும் என்கிறாயா?"
"வரலாம் என்கிறேன்"
"நம்மிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை" என்றபடி யோசித்தமதிமாறன் "அந்த பெண் இப்போது எங்கிருக்கிறாள்?" என்றான்.
"எந்த பெண் ?" என்று விழித்தான் கருணாகரன்.
"அந்த கலை கூத்தாடி பெண் பெயர் கூட சந்திரவதனாவோ என்னவோ?"
"அவள் வில்லவனின் வீட்டில் இருக்கிறாள் " என்றான் கருணாகரன்.
போரில் ஜெயிக்கிறோமோ தோற்கிறோமே தெரியாது. சந்திரவதனாவை திருமணம் செய்து விட்டால் தயாநிதிக்கு மருமகனாகி அவனது சொத்துகளை அடைந்து விடலாம் என்று கணக்கு போட்ட மதிமாறன்" எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது. இருவரும் இங்கேயே காத்திருங்கள். இல்லை அவசர வேலை இருந்தால் கிளம்பி செல்லுங்கள். நாம் நாளை சந்திக்கலாம்" என்ற மதிமாறன் பரபரப்புடன் வெளியேறினான்.
வெளியே அவன் ஆட்களை அழைப்பதும் வில்லவனின் வீட்டை முற்றுகையிடுங்கள் என்று உத்தரவிடுவதும் தெளிவாக கேட்டது.
வேறு ஓரு உருவமும் அந்த உத்தரவை கேட்டு கொண்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக