செவ்வாய், 1 நவம்பர், 2022

ரகசிய தீவு

Aரகசிய தீவு

அத்தியாயம் 48

முத்திரை மோதிரம்

வில்லவன் அங்கிருந்து கலை கூத்தாடிகளை அழைத்து கொண்டு கிளம்பினான்.

"நண்பர்களே! அந்த பெண் சந்திரவதனா என்னுடைய வீட்டில் தான் இருக்கிறாள். அவள் தன் தந்தையை இழந்து விட்டு பெரும் வேதனையில் இருக்கிறாள். உங்களை இப்போது பார்க்க நேர்ந்தால் மனம் மகிழ்வாள். வாருங்கள் நாம் போகலாம்" என்றான் வில்லவன்.

தன்னுடைய புரட்சி இயக்கத்தை சேர்ந்தவர்களிடமிருந்து நான்கைந்து குதிரைகளை கடனாக வாங்கி கொண்ட வில்லவன் அதை தன்னுடைய நண்பர்களுக்கு கொடுத்தான். வில்லவனின் சிறு குழு அங்கிருந்து கிளம்பியது.

அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்தன்" காட்டுவாசி போல் வேடமணிந்து நம்மை தாக்கியவர்களில் பிடிபட்டவர்களை இங்கே அழைத்து வாருங்கள்" என்றான்.

"இரண்டு பேர் மட்டும் தான் பேசும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் பலத்த காயமடைந்திருக்கிறார்கள்" என்றான் பார்த்திபன்.

"பரவாயில்லை. அவர்களை இங்கே அழைத்து வாருங்கள். அவர்களுக்குத்தான் மார்க்கதரிசியின் புதையல் எங்கே இருக்கிறது என்று தெரியும். நாம் அவர்களை விசாரிப்போம். நம்மிடம் பிடிபடாமல் தப்பி ஓடிய அவர்களின் நண்பர்கள் இந்நேரம் புதையலை எடுத்து செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்" என்றான் ஆதித்தன்.

"அதற்கு நாம் இவர்களை விசாரிக்க வேண்டியதில்லை.அந்த ரகசியம் தெரிந்த ஒருவன் நம்முடன் இருக்கிறான்."

"யார் அது?"

"ஆதி .மலைவாழ் சிறுவன். மார்க்கதரிசியின் தங்கம் புதைக்கப்பட்டதை நேரில் பார்த்த ஒரே சாட்சி"

ஆதித்தன் தனக்கு முன்பாக வந்து நின்ற ஆதியை பார்த்தான்.

"இந்த சிறுவனா ?"

"ஆம்.இவன்தான்.இவன் இனத்தையே க ருணாகரன் அழித்து விட்டான். அதில் தப்பி பிழைத்தவன் இவன் ஒருவன் தான்.இவன் அந்த ரகசியத்தை நேரில் பார்த்திருக்கிறான்" என்றான் பார்த்திபன்.

"பிறகென்ன தாமதம்? நாம் உடனே கிளம்பலாம்.இந்த சிறுவன் நமக்கு வழிகாட்டட்டும்." என்றான் ஆதித்தன்.

ஆதி காட்டு பகுதியில் நடக்க ஆரம்பித்தான். மற்றவர்கள் அவனைப் பின் தொடர ஆரம்பித்தனர். நஞ்சுண்டனும் அதில் கலந்து கொண்டான். அவன் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடத் தொடங்கியது.

முத்தழகி கப்பல் ரகசிய தீ வை வந்தடைந்தது. சிறு சிறு படகுகளில் கரையை வந்தடைந்தனர் அனைவரும் .முத்தழகிகப் பலில் வேலை செய்த நஞ்சுண்டனின் ஆட்களை கைது செய்ய உத்தரவிட்டான் கருணாகரன்.

காவலர்கள் பிடிபட்டவர்களை சிறைசாலைக்கு அழைத்து சென்றனர்.

"அடுத்தது என்ன செய்ய போகிறாய் கருணாகரா?" என்றான் நீலன்

"எனக்கு என் மாளிகையில் கொஞ்சம் வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு புதையலை மீட்க வேண்டியதுதான். நீயும் என்னுடன் வருகிறாய் தானே?" என்றான் கருணாகரன்

"வர வேண்டும் என்று தான் நானும் நினைக்கிறேன். ஆனால் என்னுடைய கப்பல் அனாதையாக எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நிராதரவாக கடலில் நிற்கிறது. கடல் கொள்ளையர்கள் யாராவது அதை கிளப்பிக்கொண்டு போய் விட்டால் நம் திட்டம் தவிடுபொடியாகி விடும். மேலும் கப்பலுக்கு தேவையான பணியாளர்களை வேறு பணியமர்த்த வேண்டும். அவர்களை கப்பலுக்கு அனுப்பி வைத்துவிட்டு சீக்கிரமாகவே உன்னுடைய மாளிகைக்கு வந்து சேர்கிறேன்"

"அதுவும் சரிதான். ஆட்களை சேர்த்து கொண்டு இங்கிருந்து ஓடி விட மாட்டாயே?" என்றான் கருணாகரன்.

'அப்படி ஓடிவிட்டால் புதையலில் பங்கு கிடைக்குமா என்ன?" என்று சிரித்தான் நீலன்.

"அப்படியானால் உன் வேலையை முடித்து கொண்டு விரைவாக மாளிகைக்கு வந்து சேர்" என்ற கருணாகரன் அங்கிருந்து கிளம்பினான்.

துறைமுகத்தில் இருந்த லாயத்தில் குதிரையை எடுத்து கொள்ள கிளம்பியவன் மீது வந்து மோதினான் ஓருவன்.

"யார் நீ? காட்டெருமை போல் மேலே விழுகிறாய். கண் தெரியவில்லையா?" என்று கோபத்துடன் இரைந்தான் கருணாகரன்.

மேலே மோதியவன்" என்னை மன்னித்து விடுங்கள் ஐயா. பசி மயக்கத்தில் கண்கள் இருண்டு விட்டன. என் பசியாரஇந்த மோதிரத்தை வைத்து கொண்டு ஏதாவது தாருங்கள்" என்றான்.

அவனது நீட்டிய கையில் பளபளத்தது வளநாட்டின் முத்திரை மோதிரம்.கருணாகரன் பரபரப்புடன் அவன் சட்டையை பிடித்தான். "யார் நீ? இந்த முத்திரை மோதிரம் உன்னிடம் எப்படி வந்தது? நீவள நாட்டின் ஒற்றனா?" என்றான் குரலில் மகிழ்ச்சி பொங்க .

அவன் பதில் சொல்லும் முன்பாக அவனது தோளில் ஒரு கை விழுந்தது. "நான் தான் வள நாட்டின் ஒற்றன்.இவன் என்னுடைய பணியாள் " என்றபடி கருணாகரனுக்கு முன்னால் வந்து நின்றான் தர்மபாலன்.

மோதிரத்தை தர்மபாலனிடம் கொடுத்து விட்டு விலகினான் பணியாள்.

"நீ தர்மபாலன்.கடலோடி இல்லையா?" என்றான் கருணாகரன்.

"கடலோடி தான். அதே நேரம் வள நாட்டின் ஒற்றனும் கூட "

"என்னை எப்படி அடையாளம் கண்டுபிடித்தாய்?"

"இந்த மோதிரம் உன்னை கண்டுபிடித்து விட்டது"

"அம்பலவாணர் சொன்ன அந்த திருமூர்த்தி?"

"நானே தான் "

"பலே! திறமைசாலி தான் நீர் எதிரி நாட்டின் தளபதி வளநாட்டின் ஒற்றன். எதிர்பாராத திருப்பம். யாரும் நம்ப முடியாத விந்தை "

"போதும் புகழ்ச்சி .நீலனின் கப்பல் தயாராக இருக்கிறது.இனி மார்க்கதரிசியின் தங்கத்தை எடுப்பது மட்டும் தான் என் வேலை. நீலன் இங்கிருந்து ஓடி விடாமல் பார்த்து கொள். அப்படி அவன் ஓடிவிட்டால் உன் கப்பலில் புதையலை ஏற்றி விடலாம். நீலன் ஓடாவிட்டால் நீ அவனது கப்பலுக்கு வழித்துணையாக வா. நமக்குள் அறிமுகம் உண்டு என்பதை நீ வெளிக்காட்டி கொள்ளாதே." என்றான் கருணாகரன்.

"நீலனின் கப்பலில் யாரும் வேலைக்கு இல்லை போலிருக்கிறதே? அவர்களை கைது செய்து அழைத்து செல்வதைப் பார்த்தேன்"

"ஆமாம். அவனுக்கு பணியாளர்கள் தேவை. அவனுக்கு உதவி செய். இப்படி முத்திரை மோதிரத்தை பொது வெளியில் காட்டுவது ஆபத்தல்லவா?"

அதனால் தான் நான் என் பணியாளனை அனுப்பினேன். யாராவது அதை வாங்க முயற்சித்தால் நான் தலையிட்டு அவன் ஒரு பைத்தியம் என்று கூறி அதை தடுத்து விடுவேன்"

"நல்ல காரியம் செய்தாய். இனி அந்த மோதிரத்தை வெளியே காட்டாதே! இன்று இரவு நமக்கு நிறைய வேலை இருக்கிறது. தயாராக இரு. இப்போது உன்னிடமிருந்து விடைபெறுகிறேன்" என்ற கருணாகரன் அங்கிருந்து கிளம்பினான்.

குதிரையில் விரையும் கருணாகரனை பார்த்தபடி நின்றான் தர்மபாலன்.இவ்வளவு எளிதில் வள நாட்டின் ஒற்றனைதான் அடையாளம் கண்டு பிடிப்போம் என்று அவன் நினைக்கவேயில்லை.

கருணாகரன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான். தனக்கு சரியான நேரத்தில் வள நாட்டிலிருந்து உதவியை அனுப்பி வைத்த அம்பலவாணரை மனதிற்குள் வாழ்த்தினான் அவன்.

ஆதி தன்னுடைய கையில் இருந்த வாளால் செடிகொடிகளை வெட்டி வழி ஏற்படுத்தி கொண்டு காட்டு பாதையில் முன்னேறினான். மற்றவர்கள் அவனை பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

"ஆதி! உனக்கு இந்த இடம் தான் என்று தெளிவாகத் தெரியுமா?" என்றான் பார்த்திபன்.

"என்னால் அதை மறக்கவே முடியாது" என்றான் ஆதி.

பல பேர் நடந்ததால் ஒரு ஓற்றையடி பாதை உருவாக ஆரம்பித்தது.

ஆதி ஒரு புதரை வெட்டி வழி ஏற்படுத்திய போது காட்டு பகுதியில் சிலர் தரையில் குழி தோண்டி கொண்டிருப்பதை பார்த்தனர். கிடைத்த வரை லாபம் என்று புதையலை தோண்டி எடுக்க அவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.கூட்டத்தை பார்த்ததும் தங்கள் முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றவர்கள் விரைவிலேயே பிடிபட்டு விட்டனர்.

" என்ன நண்பர்களே! வேலையை அறைகுறையாக விட்டு சென்றால் எப்படி ?வேலையை முழுதாக செய்து முடியுங்கள்" என்றான் ஆதித்தன் கேலியாக .

"ஆதியின் நினைவாற்றல் அபாரமானது" என்று அவனை பாராட்டினான் பார்த்திபன்.

அவர்கள் மீண்டும் தோண்ட ஆரம்பித்தனர்.

வில்லவன் விருந்தினர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றான். அவர்களை எதிர்பாராத சந்திரவதனா மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். அவர்கள் பழைய கதைகளைப் பேசிக் கொள்ள துவங்கியதும் வில்லவன் அங்கிருந்து கிளம்பினான்.

ஆசிரமத்திற்கு சற்று தொலைவிலேயே குதிரையை நிறுத்தி வைத்தவன் நடந்தே ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

அவன் றுழைந்தது மதிய வேளை. எல்லோரும் உறங்கும் நேரம். ஆசிரமமே மயான அமைதியில் மூழ்கியிருந்தது.

இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த வில்லவன் சத்தமின்றி பூஜை அறைக்குள் நுழைந்தான்.

இங்கேதான் எங்கேயோ சுரங்க வழி இருக்க வேண்டும்.கரிகாலனை மீட்டு வர யோகி இங்கேதான் அடைக்கலமானார். விடிய விடிய வெளியே உட்கார்ந்திருந்தது அவனுக்கு நினைவுக் கு வந்தது.

வில்லவன் வெகு விரைவிலேயே அந்த ரகசிய வழியை கண்டுபிடித்து விட்டான். அதன் வழியே அவன் இறங்க தொடங்கினான்.சுவற்றில் இருந்த தீவட்டியை எடுத்து கொண்டு சுரங்க வழியில் நடக்க ஆரம்பித்தான் அவன்.பாதை முடிந்த இடத்தில் காவி வஸ்திரங்களும், ருத்ராட்ச மாலைகளும் ஒரு பையில் இருப்பதை அவன் பார்த்தான். "வேடதாரி" என்று முணுமுணுத்தன அவன் உதடுகள். யாரோ வருவது போல் சத்தம் கேட்டதும் தீவட்டியை அணைத்து விட்டு இருளில் பதுங்கினான் வில்லவன். சுரங்க வழியில் வந்தவன் தன் உடைகளை களைந்து விட்டு காவி உடைகளை அணிந்து கொண்டான். பிறகு ருத்ராட்ச மாலையை அணிந்தவன் பொய் தாடியை தன் முகத்தில் ஒட்ட வைத்தான். தீவட்டி வெளிச்சத்தில் தாடி நன்றாக ஓட்டி கொண்டதா என்று சுவரில் இருந்த கண்ணாடியை பார்த்து சோதனை செய்தான்.

சொற்ப வெளிச்சத்தில் தாடி இல்லாத அவனது முகத்தை பார்த்து திடுக்கிட்டான் வில்லவன்.

"இவனாயோகி ?" என்று முணுமுணுத்தன அவன் உதடுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக