ரகசிய தீவு
அத்தியாயம் 58
சாத்தானின் இருப்பிடம்
தலையில் இடி இறங்கியது போல் திகைத்து நின்றான் நஞ்சுண்டன் .மதிமாறனை சந்திக்க வந்த இடத்தில் இப்படி நீலனை சந்திப்போம் என்று அவன் கனவுகூட காணவில்லை. இனி தான் தப்பவேறு எந்த வழியும் இல்லை என்பதால் திகைத்து நின்றான் நஞ்சுண்டன் .
"துரோகம் ஒரு நாளும் வாழாது. உண்மை ஒரு போதும் உறங்காது. என் கதையை முடிக்க கடவுள் உனக்கு இரண்டு சந்தர்ப்பங்களை கொடுத்தான். அவற்றை நீ வீணடித்து விட்டாய். காரணம் அதிர்ஷ்ட லட்சுமியின் கடை கண் பார்வை என் மீது இருந்ததால். உன் கொலை முயற்சிகளில் நான் மயிரிழையில் தப்பி பிழைத்து விட்டேன். என்னை காப்பாற்றிய அதே அதிர்ஷ்ட தேவதை இப்போது உன்னை காப்பாற்றுகிறாளா என்று ஒரு முறை சோதித்து பார்ப்போமா?" என்றபடி விசமமாக சிரித்த நீலன் தன்னுடைய வாளை இடுப்பிலிருந்து உருவினான்.
நஞ்சுண்டனின் கண்கள் பயத்தால் விரிந்தன. அவனது உடல் உயிர் பயத்தால் நடுங்க ஆரம்பித்தது.
"நீலா. என்னை மன்னித்து உயிருடன் விட்டுவிடு. நான் செய்தது தவறு தான்" என்று அவனை இறைஞ்ச ஆரம்பித்தான் நஞ்சுண்டன்
"பாம்பிற்கு பல்லில் மட்டும் தான் விசம் .ஆனால் உனக்கு உடல் முழுக்க விசம் .உன் குணம் அறிந்து தான் பிறந்த உடனேயே உனக்கு நஞ்சுண்டன் என்று பெயர் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது" என்றான் நீலன்.
"நஞ்சை உண்டு கழுத்தில் கண்டமாக வைத்திருக்கும் சிவபெருமானின் பெயரைதீயவனான இவனுக்கு வைத்திருப்பது மிகப் பெரிய முரண் இல்லையா?" என்று சிரித்தான் கருணாகரன்.
"எனக்காக நீங்கள் நீலனிடம் பேசக்கூடாதா?" என்று கருணாகரனை கெஞ்ச ஆரம்பித்தான் நஞ்சுண்டன் .
"நீ யார்? நான் எதற்காக உனக்காக நீலனிடம் பேச வேண்டும்?" என்றான் கருணாகரன்.
"அவனொரு விரியன் பாம்பு. அவனை நம்பாதே.! வினயமாக பேசியே தன்னுடைய காரியத்தை சாதித்து கொண்டு விடுவான்" என்று அவனை எச்சரித்தான் நீலன்.
" அவனது குள்ள நரி தந்திரம் என்னிடம் பலிக்காது" என்றான் கருணாகரன்.
கருணாகரனும் தன்னை கைவிட்ட பின்பு நஞ்சுண்டனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன்னுடைய உயிரை காப்பாற்றி கொள்ள கேவலமான மற்றொரு வேலையில் இறங்கினான்.
சட்டென்று நீலனின் காலில் விழுந்தவன்" என்னை மன்னித்து உயிரோடு விட்டு விடு நீலா இனி உன் பாதையில் நான் குறுக்கே வரவே மாட்டேன்" என்று அவன் கால்களை பிடித்துக் கொண்டு கதற ஆரம்பித்தான்.
"நடிக்காதே இழிபிறவியே .! உன் உயிரை காப்பாற்றி கொள்ள நீ எந்த எல்லைக்கும் செல்வாய் என்று எனக்கு தெரியும். உன் நடிப்பை நம்பி ஏமாற நான் பழைய நீலன் அல்ல" என்று அவனை உதைத்து தள்ளினான் அவன்.
"ஓரே வாள் வீச்சில் உன் சிரசை துண்டித்து அதைபந்தாட என்னால் முடியும். அதனால் என்ன பயன்? உன் தவறுகளை உணராமல் நிம்மதியாக உயிரை விட்டு விடுவாய். அப்படி நீ சாவதை நான் விரும்பவில்லை. உனக்காக ஒரு மரண ஏற்பாட்டை செய்திருக்கிறேன். உன் தவறுகளை நினைத்து நீ நொந்து நொந்து சாக வேண்டும். முதலில் உன் வாயை அடைத்து கை கால்களை கட்ட வேண்டும்" என்ற நீலன் கருணாகரனை பார்த்து "உன் ஆட்களை வரச் சொல்லி இவனை சிறைபடுத்த சொல் " என்றான்.
"யார் அங்கே ?" என்று அழைத்தான் கருணாகரன். அவன் குரலுக்கு ஆட்கள் ஓடி வரும் சத்தம் கேட்க வேண்டும். ஆனால் யாரும் வரவில்லை. மீண்டும் ஒருமுறை அழைத்தான் கருணாகரன். இந்த முறையும் யாரும் வரவில்லை.
"ஆட்கள் வேறு வேலையில் இருப்பார்கள் போல தெரிகிறது. நானே போய் இவனை கட்ட கயிற்றையோ திரைச்சீலையையோ எடுத்து வருகிறேன். நான் வரும் வரை இவனை கவனமாக பார்த்து கொள்" என்ற நீலன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அதற்காகவே காத்திருந்தது போல் நஞ்சுண்டன் சத்தம் வராமல் நகைக்க ஆரம்பித்தான். "எதற்காக இப்போது சிரிக்கிறாய்?" என்றான் குழப்பத்துடன் கருணாகரன்
"உன்னை போன்ற முட்டாளை பார்த்து சிரிக்காமல் என்ன செய்வது?" என்றான் விசம சிரிப்புடன் நஞ்சுண்டன் கருணாகரனை வலையில் வீழ்த்த அவன் மனதில் ஒரு திட்டம் உருவாக தொடங்கியிருந்தது.
"நாவை அடக்கி பேசு. என்னையே முட்டாள் என்கிறாயா?" என்றான் கோபத்துடன் கருணாகரன்.
"கையில் வெண்ணெயை வைத்து கொண்டு நெய்யிற்கு அலைந்த கதையாக இருக்கிறது உன்னுடைய நிலைமை"
" என்ன சொல்கிறாய் நீ?"
"நீ வள நாட்டிற்கு மார்க்கதரிசியின் பொக்கிசத்தை கொண்டு செல்ல நினைப்பது எனக்கு தெரியும். அது காட்டில் இல்லை என்பதுவும் எனக்கு தெரியும். அந்த பொக்கிசத்தை கொண்டு செல்லமுத்தழகி தேவை. அதை இயக்க நீலன் என்ற அனுபவம் வாய்ந்த மாலுமி தேவை. அதனால் தான் அவனுடன் கூட்டணி போட்டிருக்கிறாய். சரிதானே?"
"ஆமாம். நீ சொல்வது உண்மைதான்."
"அதே முத்தழகி கப்பலில் துணை மாலுமியாக அனுபவம் வாய்ந்த நான் இருக்கிறேன். நீலனுக்கு பதிலாகஎன்னுடைய உதவியை நீ ஏன் பயன் படுத்தி கொள்ள கூடாது?" என்றான் நஞ்சுண்டன் .இந்த தந்திரம் சரியாக வேலை செய்யும் என்று அவனுக்கு தெரியும்.
நஞ்சுண்டனின் பேச்சை கேட்ட கருணாகரன் விக்கித்து நின்று விட்டான். நஞ்சுண்டனின் பேச்சை காது கொடுத்து கேட்காதே என்ற நீலனின் எச்சரிக்கையை அவன் புறம் தள்ளி விட்டான். நீலனை விட இவனால் ஆதாயம் அதிகம். நீலனின் இடத்தில் இவனை வைத்து கொள்ள வேண்டியது தான் என்று நினைத்தவன் "உன்னை பயன்படுத்தி கொள்ளலாம் தான். பிரதியுபகாரமாக என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய்?" என்றான்.
" என் உயிர். அது மட்டும் போதும். எங்கு போனாலும் நான் பிழைத்து கொள்வேன்"
"நீ புத்திசாலி தான் .உன் உயிருக்கு நீல னால் எந்த ஆபத்தும் நேராது என்று உத்தரவாதம் தருகிறேன். ஆனால் என்னால் இப்போது நீலனை கழட்டி விட முடியாது. அவன் தன் நண்பர்கள் மூலம் பணியாட்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறான். எல்லாமே அவன் கட்டுப்பாட்டில் நடப்பது போல் இருக்கட்டும். சரியான நேரத்தில் அவனது முதுகில் குத்தி விட்டு உன்னை முத்தழகி கப்பலின் மாலுமியாக்குகிறேன். வள நாட்டிற்கு பொக்கிசங்கள் போய் சேர்ந்த பின்பு உன் உயிர் உன்னுடையது. அந்த கப்பலும் உன்னுடையது. என் அன்புபரிசாக அதை வைத்து கொள்" என்றான் கருணாகரன்.
"மிக்க மகிழ்ச்சி" என்ற நஞ்சுண்டனின் முகத்தில் நிம்மதி பரவியது.
கப்பலை இயக்க நீலன் மட்டுமல்லாது கூடுதலாக இன்னொரு நபரும் கிடைத்து விட்டதால் இனி நீலனின் சர்வாதிகாரம் தன்னிடம் செல்லுபடியாகாது என்று நினைத்து ஆசுவாச பெருமூச்சு விட்டான் கருணாகரன்.
நீலனின் காலுக்கடியிலேயே இன்னொரு சதி திட்டம் நடைபெற்று முடிந்திருந்தது. அதைப் பற்றி எதுவும் தெரியாமல் கயிற்றை தேடுவதில் மும்முரமாக இருந்தான் நீலன்.கயிற்றை தேடிக் கொண்டு சென்ற நீலன் அதைக் கண்டு பிடிக்க முடியாமல் திரைச்சீலை ஓன்றை உருவி எடுத்து கொண்டான். அவன் மறுபடியும் மாடிப்படி ஏறி அறைக்குள் நுழைந்த போது நஞ்சுண்டனும் கருணாகரனும் பூடகமாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
அவர்களின் பார்வை ரகசியத்தை அறியாத நீலன் திரைச்சீலையால் நஞ்சுண்டனின் கைகளை பின்புறமாக கட்டினான். பிறகு கிழித்த துணி ஓன்றை அவனது வாயில் திணித்து அவனை மவுனமாக்கினான்.
"இவனிடம் எதையும் பேசாதிருப்பது நமக்கு நல்லது. எப்படியெப்படியோ பேசி நம்மை குழப்பிதான் நினைத்ததை சாதித்து கொண்டு விடுவான். நான் போன பிறகு உன்னிடம் ஏதாவது கதை அளந்திருப்பானே?" என்று சந்தேகத்திற்கிடமான கேள்வி ஓன்றை கருணாகரனை நோக்கி வீசினான் அவன்.
சட்டென்று தன்னை சுதாரித்து கொண்ட கருணாகரன் "இல்லை. அவன் என்னிடம் எதையும் பேசவில்லை. ஆனால் சிந்தனை வசப்பட்டிருந் தான் " என்றான்.
"அது இவன் பேசுவதை விடவும் ஆபத்து. இவன் வாயை திறந்தால் மூளை இரு மடங்கு வேலை செய்யும். வாயை மூடிக் கொண்டிருந்தால் நான்கு மடங்கு வேலை செய்யும். இவனது மூளை சாத்தானின் இருப்பிடம்.இவனை இன்னமும் இங்கே வைத்திருப்பது நமக்கு ஆபத்து. மதிமாறன் வருவதற்குள் நாம் இவனுடன் கிளம்பியா கவேண்டும். இல்லையென்றால் இவன் நம்மை மதிமாறனிடம் சிக்க வைத்து விடுவான்" என்றான் நீலன்.
"ஆமாம். நீ சொல்வது உண்மைதான். நாம் உடனடியாக இங்கிருந்து கிளம்புவது தான் நல்லது " என்றான் கருணாகரன்.
மூவரும் படிகளில் கீழே இறங்க தொடங்கினர்.கருணாகரன் நஞ்சுண்டனை பார்த்து சிநேகமாக சிரித்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக