புதன், 9 நவம்பர், 2022

ரகசிய தீவு 52

தீயவனுக்கு திகைப் பூண்டு.
நீலன் வானத்தை வெறித்து கொண்டிருந்தான். அன்று பெளர்ணமி முழு நிலவு வானத்தை அலங்கரிக்க விண்ணில் உலாவரப் போகிறது. அமாவாசையிலும், பௌர்ணமி நாளிலும் கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் என்பதை நீலன் அனுபவ பூர்வமாக உணர்ந்தவன். இன்று இரவு தூக்கம் இல்லாமல் வேலை நெட்டி முறிக்க போகிறது என்றது அவனது உள்ளுணர்வு .
ஏற்கனவே பலமுறை ரகசிய தீவிற்கு உணவு பொருட்களை கொண்டு வந்த வகையில் இங்கே சில நண்பர்களை அவன் சம்பாதித்து வைத்திருந்தான். அவர்களை நேரில் சென்று சந்தித்தவன் தன்னுடைய கப்பல் தனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது என்ற விசயத்தை சொன்னான். மேலும் இன்று இரவு தன்னுடைய கப்பல் இங்கிருந்து கிளம்ப போகிறது. ஆனால் போதுமான பணியாட்கள் இல்லை என்றும் சொன்னவன் தனக்கு கப்பலில் வேலை செய்த அனுபவம் உள்ள ஆட்கள் அல்லது அனுபவம் இல்லாத ஆட்கள் யார் கிடைத்தாலும் அவர்களை பணிக்கு சேர்த்து கொள்ள தயார் என்றும் அறிவித்தான்.ஆட்களை ேசர்த்து விடுபவர்களுக்கு கணிசமான அன்பளிப்புகளும் உண்டு என்பதையும் அவன் அறிவிக்க தவறவில்லை.
தன்னுடைய அன்பளிப்பு கணிசமான ஆட்களை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை அவன் அறிவான். சற்று நேரத்தில் துறைமுகம் முழுவதும் நீலனின் கப்பலுக்கு ஆட்கள் தேவை என்ற செய்தி காட்டுத் தீ போல பரவத் தொடங்கியது.
நீலனின் ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு தர்மபாலனின் காதுகளையும் வந்தடைந்தது. அவனது குறுக்கு புத்தி மூளை வேறு மாதிரியாக வேலை செய்ய துவங்கியது. தன் ஆட்களில் சிலரை நீலனின் கப்பலுக்குள் ஊடுருவ விட்டால் என்ன? என்று அவன் நினைத்தான். நீலனின் கப்பல் வள நாட்டை அடைந்தால் தன்னுடைய ஆட்களுக்கு எந்த வேலையும் இல்லை.
நீலன் ஏதாவது தில்லு முல்லு செய்து கருணாகரனையும் ஏமாற்றி விட்டு பொக்கிசத்தோடு கம்பி நீட்ட நினைத்தால் தான் தன்னுடைய ஆட்களுக்கு வேலை என்று நினைத்தவன் தன் ஆட்களில் தன் நம்பிக்கைக்குறிய இருவரை அழைத்தான்.
தன் திட்டத்தை அவர்களுக்கு விபரமாக எடுத்து கூறியவன்" ஜாக்கிரதை. அந்த நீலன் உங்களை அடையாளம் கண்டுவிடக் கூடாது. அவனது கப்பல் வள நாட்டிற்கு சென்றால் உங்களுக்கு எந்த வேலையும் இல்லை. அவன் புதையலுடன் கம்பி நீட்ட நினைத்தால் நீங்கள் உங்கள் திறமையை காட்டி விடுங்கள்" என்று கூறி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தான்.
நீலன் துறைமுகத்திலிருந்து கருணாகரனின் மாளிகையை நோக்கி கிளம்பினான். வழியில் தன்னுடைய நண்பர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தவனாக அங்கிருந்து கிளம்பினான்.
மாலை மயங்க தொடங்கியிருந்தது.
நஞ்சுண்டன் ஆதியை குதிரையின் முன்னால் உட்கார வைத்தபடி காட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தான்.
அவனால் நீலன் தன்னுடைய கப்பலை மீட்டு கொண்டுவிட்டதை இன்னமும் நம்ப முடியவில்லை. இப்போதைக்கு எல்லாமே தனக்கு எதிராக இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினான் நஞ்சுண்டன் கடலில் தத்தளிக்கும் கலத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போல அவனுக்கு தெரிந்ததுமணிமாறன் ஓருவன்தான்.
அவனை சந்தித்து கப்பலில் ஆயுதங்கள் இருப்பதை சொல்லி நீலனை துரோகியாக்கி விடலாம். ஆயுதங்களை அவன் சிகப்பு முகமூடியிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதை வைத்தே அவனை தேசதுரோக குற்றம் சாட்டி தூக்கில் போடலாம்.மோகினி தீவில் எப்படியோ உயிர் பிழைத்து தப்பி வந்தவனுக்கு இரண்டாவது முறையாக முடிவுரை எழுதி விடலாம்.
அந்த கருணாகரன் ? அவன் தான் உண்மையில் திறமைசாலி. இரட்டை வேடம் அணிந்து எல்லோரையும் ஏமாற்றி மார்க்கதரிசியின் புதையலை எடுத்து செல்ல நினைப்பவன்.மதிமாறனை சந்தித்து அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான் நஞ்சுண்டன் .
கப்பலும், புதையலில் பாதியும் தனக்கு. ஆயுதங்களும் பாதி புதையலும் மதிமாறனுக்கு .உப சலுகையாக நீலனின் உயிர் உடலை விட்டு பறக்க வேண்டும். இந்த திட்டம் மட்டும் நிறைவேறி விட்டால் தான் இழந்தவைகளையெல்லாம் திரும்ப பெற்று விடலாம் என்று அவன் திட்டம் தீட்டினான்.
மனதிற்குள் இப்படி நஞ்சுண்டன் யோசித்து கொண்டிருந்த போது முன்னால் உட்கார்ந்திருந்த ஆதி இவனிடமிருந்து எப்படி தப்பி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
இவன் முன்பு சொன்னது போல் தன்னை விட்டு விடுவானா இல்லை கொன்று விடுவானா என்ற பயம் அவனை சூழ்ந்தது. இவன் அடுத்ததாக என்ன செய்ய போகிறான் என்பதை ஆதியால் யூகிக்க முடியவில்லை. கிளம்பியதிலிருந்தே மவுனமாக இருந்த நஞ்சுண்டனை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் எதைப் பற்றியோ பலமாக சிந்தித்து கொண்டிருக்கிறான் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.
அவனது மவுனத்தை கலைத்து தப்பியோடும் வழியை கண்டுபிடிக்க நினைத்தான் அவன்.
"குதிரையை நிறுத்து" என்றான் ஆதி.
சிந்தனையில் இருந்த நஞ்சுண்டனை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது அவனுடைய குரல்.
"எதற்காக குதிரையை நிறுத்த சொல்கிறாய்?" என்றான் நஞ்சுண்டன் . தான் பணயக் கைதியாக பிடித்து வந்த இந்த சிறுவனை என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை. தப்பி வரும்போது முக்கியமாக இருந்தவன் இப்போது வீண் சுமையாக மாறி இருந்தான்.
"எனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்" என்றான் ஆதி.
அவனை கீழே இறக்கி விட்ட நஞ்சுண்டன் "அந்த புதருக்கு அருகே போ. என் கண் முன்னாலேயே தான் நீ இருக்க வேண்டும். தப்பி செல்ல முயற்சி செய்தால் நான் மிகவும் பொல்லாதவனாக இருப்பேன்" என்று அவனை எச்சரித்து அனுப்பினான்.
புதரை நோக்கி நடந்து சென்ற ஆதி நின்றபடி தன் கீழாடையை அகற்ற தொடங்கினான். அப்போதுதான் புதரின் ஓரமாக முளைத்து கிடந்த அதைப் பார்த்தான். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் உணர்ந்தான் ஆதி. அவனது முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. இருள் நடுவே எழுந்து கொண்டிருந்த முழு நிலவை பார்த்தான் ஆதி.
"சரியான நேரத்தில் சரியான உதவி கிடைத்து விட்டது" என்று முணுமுணுத்தன அவனது உதடுகள்.
ஆதி புதரின் ஓரத்தில் பார்த்தது முளைத்து கிடந்த திகைப் பூண்டுகளை .
அவை விசேசமான சக்தி கொண்டவை.மற்ற நாட்களில் அவற்றால் எந்த பிரச்சனையும் இல்லை.அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தெரியாமல் அவற்றை வெறும் காலில் மிதித்து விட்டால் மிதித்தவர்களின் ஞாபக சக்தி பறிபோய்விடும் சில நாழிகைகளுக்கு!தான் எங்கே இருக்கிறோம் என்பதே தெரியாமல் ஓரே இடத்தை திரும்ப திரும்ப சுற்றி வருவார்கள். அவர்கள் சுய நினைவுக் குவர சில மணி நேரங்களாகும்.
அத்தகைய சக்தி வாய்ந்த திகைப் பூண்டை பார்த்ததும் ஆதிக்கு சந்தோஷம். அவன் சிறுவனாக இருந்த போது ஒரு முறை அமாவாசை நாளில் அதை மிதித்து விட்டு ஓரே இடத்தில் சுற்றி சுற்றி வந்திருக்கிறான். இப்போது அதை நஞ்சுண்டன் மீது பிரயோகித்து விட்டு அங்கிருந்து தப்பி செல்ல நினைத்தான்.
சிறுநீர் கழிப்பது போல் உட்கார்ந்தவன் திகைப் பூண்டுகளை கையில் பறித்து மறைத்து கொண்டான். சிறுநீர் கழித்து விட்டு எழுந்தவன் தன்னுடைய உடைகளை சரிப்படுத்தி கொண்டான்.
"முடிந்ததா?" என்றான் நஞ்சுண்டன் .
"முடிந்தது. இதோ வருகிறேன்" என்ற ஆதியின் கண்ணில் பட்டது நஞ்சுண்டன் அணிந்திருந்த காலணிகள் .
இவற்றை கழற்றினால் தான் தன்னுடைய திட்டம் ஈடேறும் என்று நினைத்த ஆதிகுதிரையை நோக்கி நடந்தான்.
"ம். முன்னால் ஏறு" என்று உறுமினான் நஞ்சுண்டன் .
நஞ்சுண்டன் எதிர்பார்க்காத நேரத்தில் அவனுடைய ஒருகாலில் இருந்த செருப்பை உருவி இருளில் வீசி எறிந்தான் ஆதி.
"முட்டாள் . என்ன செய்கிறாய் நீ?" என்று பதறினான் நஞ்சுண்டன் .
குதிரையின் கால் இடைவெளி வழியாக நுழைந்து மறுபுறம் வந்த ஆதி அவனின் இன்னொரு செருப்பையும் கழற்றி வீசினான்.
நஞ்சுண்டனுக்கு ஓன்றும் புரியவில்லை. இவனுக்கு பைத்தியம் ஏதாவது பிடித்து விட்டதோ என்று நினைத்தவன் குதிரையிலிருந்து குதித்து இறங்கினான்.
அவன் இறங்குவதற்காகத்தான் ஆதி காத்திருந்தான். அவனது காலடி படும் இடத்தை கண் கொத்தி பாம்பாக கவனித்து கொண்டிருந்தவன் நஞ்சுண்டணன் பாதம் பூமியில் படும் முன்பாக தன் கையிலிருந்த திகைப் பூண்டுகளை அந்த இடத்தில் வீசினான்.
நஞ்சுண்டனின் பாதங்கள் கனகச்சிதமாக திகைப் பூண்டுகளின் மேல் பதிந்தன. அடுத்த நொடியில் என்ன நடந்ததென்று நஞ்சுண்டனுக்கு ஓன்றும் புரியவில்லை. அவன் தன்னுடைய சுயநினைவை இழந்தான். எதுவும் பேசாமல் குதிரையை சுற்றி சுற்றிவரத் தொடங்கினான்.
தன்னுடைய திட்டம் பலித்ததை எண்ணி மகிழ்ந்த ஆதிகுதிரையில் தாவி ஏறி அதை கிளப்பினான். சற்று தொலைவு சென்ற பின் அவன் திரும்பி பார்த்தான். நஞ்சுண்டன் ஓரே இடத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான்.
ஆதி தனக்குள் சிரித்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக