வெள்ளி, 18 நவம்பர், 2022

ரகசிய தீவு 56

ரகசிய தீவு

அத்தியாயம் 56

ஆள் மாறாட்டம்

குதிரையை நிறுத்திவிட்டு குதித்து இறங்கிய முக்காட்டு உருவத்தை பார்த்த மதிமாறன் கோபத்தின் உச்சத்தில் யார் நீ?" என்றான்.. அவனது கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்ற உருவம் தன்னுடைய முக்காட்டை அவிழ்த்து தன்னுடைய முகத்தை வெளிக்காட்டியது.

அதன் முகத்தை பார்த்த மதிமாறன் கண் இமைக்கவும் மறந்தான். அவனது உதடுகள் வெளிறத் தொடங்கின. அவனது உடல் முழுவதும் வேர்வை நதி உற்பத்தியாக ஆரம்பித்தது. "நீயா?" என்ற அவனது குரலில் மெல்லிய நடுக்கம் சேர்ந்து கொண்டது."என்னை இங்கே எதிர்பார்க்கவில்லையா அன்பரே?" என்றாள் ஆண் உடை தரித்து அவன் எதிரே நின்றிருந்த ரத்னா வதி.

தன் ஆசை நாயகியின் திடீர் வரவை எதிர்பார்க்காத மதிமாறன் கதிகலங்கி போனான். சந்திரவதனாவை மீட்டு தான் திருமணம் செய்து கொள்ள நினைப்பது மட்டும் இவளுக்கு தெரிந்து விட்டால் காரியம் அனைத்தும் கைமீறிப் போய் விடும் என்று நினைத்தவன் " ரத்னா! நீ எப்படி இங்கே வந்தாய்? இவர்கள் நம் எதிரிகள். இவர்களால் உனக்கு எந்த தீங்கும் ஏற்பட்டு விடக் கூடாது. உடனே இங்கிருந்து கிளம்பு" என்று அவளை அங்கிருந்து அனுப்புவதில் அவசரம் காட்ட தொடங்கினான்.

"போதும் உங்கள் நடிப்பு. சற்று முன்பு சந்திரவதனாவிற்கு நீங்கள் விடுத்த எச்சரிக்கையை நான் கேட்டு கொண்டு தான் இருந்தேன். இந்த பெண் மீது நீங்கள் ஏன் அதிக அக்கறை காட்டுகிறீர்கள் என்று கருணாகரன் சந்தேகித்தது சரிதான் போலிருக்கிறது. கருணாகரனுக்கு வந்த அதே சந்தேகம் அவன் பேச்சை மறைந்து நின்று கேட்ட எனக்கும் வந்தது நல்லதாக போயிற்று. அத்தான் அப்படிப்பட்டவர் இல்லை என்றஅவநம்பிக்கையோடு தான் நான் உங்களை பின்தொடர்ந்து வந்தேன். இங்கே வந்த பின்புதான் உண்மை புரிந்தது " என்றாள் ரத்னாவதி எரிக்கும் விழிகளோடு.

இதுவரை தன் மீது மையல் கொண்டிருந்த மதிமாறன் இப்போது திடிரென்று இன்னொரு பெண்ணை தேடிக் கொண்டு செல்வதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

தான் சந்திரவதனாவோடு நடத்திய பேச்சுவார்த்தைகளை ரத்னாவதி முழுதாக கேட்டு விட்டாள் என்பதை அறிந்த மதிமாறன் ஆடிப்போய்விட்டான். அந்த சண்டாளன் கருணாகரன் தன் மனதில் இருந்த சந்தேகத்தை உளறி கொட்டி ரத்னாவை சந்தேகம் கொள்ள செய்து விட்டானே என்று அவன் மீது மதிமாறனுக்கு ஆத்திரம் பொங்கியது.

"ரத்னாவதி .அந்த பெண் தயாநிதியின் மகள் . அவளை பிடித்து விட்டால் மலை நாட்டில் நாம் சுகபோகமாக வாழலாம்"

"அதற்கு நீங்கள் அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் இல்லையா?"

"ஆமாம். ஆனால் அவளை திருமணம் செய்து கொண்ட பின்பு நான் உன்னை கைவிட்டு விடுவேனா என்று என்னை சந்தேகிக்காதே! உன் மீதான என் காதல் உண்மையானது. அவளை ஆதாயத்திற்காகத் தான் நான் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன்"

"ஒரு பெண் தன் காதலனை இன்னொருவருடன் பங்கு போட்டு கொள்ள சம்மதிப்பாள் என்று நம்புகிறீர்களா?"

"நீயும் என் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாய். அவளும் எனக்கு கிடைக்க மாட்டாள். என் நிலமை குழப்பமாக இருக்கிறது. இப்போது நான் என்ன தான் செய்வது? தயாநிதியின் குடும்ப ஆபரணத்தை வைத்து கொண்டு வேடிக்கை பார்ப்பதா?" என்றான் கடும் கோபத்துடன் மதி மாறன் .

"அன்பரே. வீண் கோபம் வேண்டாம். நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் போதும் "

" என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?"

"இந்த வில்லவனின் வீட்டை உடனே எரியூட்ட சொல்லுங்கள்.உள்ளே இருக்கும் யாரும் உயிரோடு தப்பி விடக் கூடாது" என்றாள் ரத்னாவதி நிறுத்தி நிதானமாக .

மதிமாறனுக்கு ஒரு நிமிடம் உலகமே சுற்றுவது போல் தோன்றியது. ரத்னா வதிக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என்று கூட அவனுக்கு தோன்றியது.

"ரத்னாவ தி. உனக்கென்ன.."

"பைத்தியமா என்று கேட்கிறீர்கள். ஆம் உங்கள் மீதான பைத்தியம். உங்களை யாருடனும் பங்கு போட விரும்பாத பைத்தியம் "

"அந்த சந்திரவதனா வீட்டின் உள்ளேயே தீயில் கருகி இறந்து விடுவாள்" என்றான் பதட்டத்துடன் .

"இல்லை. அவள் உயிருடன் இருப்பாள்"

" எப்படி ? " என்றான் குழப்பத்துடன் மதி மாறன் .

"உங்கள் முன்னால் நின்று கொண்டிருப்பது தான் சந்திரவதனா " என்றாள் புன்னகையுடன் ரத்னா வதி.

மதிமாறனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. குழப்பத்தில் அவனது புருவங்கள் முடிச்சிட்டன.

"நீ என்ன சொல்ல வருகிறாய்?" என்றான் மதி மாறன் .

"இன்னுமா புரியவில்லை. தயாநிதி தன்னுடைய மகளை இதுவரை நேரில் பார்த்ததில்லை. அவன் மகளை கண்டுபிடிக்க அவனுக்கு இருக்கும் ஓரே துப்பு அந்த ஆபரணம் தான். அந்த ஆபரணத்துடன் எந்த பெண் அவனை தேடி சென்றாலும் அவன் அவளை தன்னுடைய மகளாகவே கருதுவான். அந்த ஆபரணம் இப்போது உங்கள் கைவசம் இருக்கிறது. சந்திரவதனாவிற்கு பதில் நான் இருக்கிறேன். என்னை திருமணம் செய்து கொண்டு அதே ஆபரணத்துடன் தயாநிதிக்கு முன்பாக என்னை நிறுத்துங்கள். தயாநிதி என்னை மகளாக ஏற்று கொள்வான். உங்களை மருமகனாக ஏற்று கொள்வது நிச்சயம் " என்றாள் ரத்னாவதி .

அவளுடைய திட்டத்தை கேட்ட மதிமாறன் அயர்ந்து போய் நின்றான். எவ்வளவோ குறுக்கு வழிகளை யோசிக்கும் தன்னுடைய மூளைக்கு ஏன் இப்படி ஓரு யோசனை தோன்றவில்லை என்று அவன் தன்னையே நொந்து கொண்டான். கையில் வெண்ணெயை வைத்து கொண்டு இத்தனை நாட்களாக நெய்யை தேடி அலைந்து கொண்டிருந்த தன்னுடைய அறியாமையை அவன் நொந்து கொண்டான்.

பெண் புத்தி பின் புத்தி என்று சொன்னவனை மனதார சபித்து கொண்டிருந்தான் அவன். அவள் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தும் போதெல்லாம் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி சமாளித்து வந்தான்மதிமாறன். காலம் அவனை ரத்னாவதியை திருமணம் செய்து கொள்ளும் படி வினோதம் செய்திருந்தது.

தன் திட்டத்தை எண்ணி தன்னையே மெச்சி கொண்டாள் ரத்னாவதி . தன் வாழ்க்கைக்கு போட்டியாக வந்த சந்திர வதனா வைதீக்கு இரையாக்கியா கிவிடலாம்.மதிமாறனையும் திருமணம் செய்து கொண்டு விடலாம். சந்திரவதனா என்ற பெயரில் உயர்குடி பிறப்பு அந்தஸ்தை அடைந்து விடலாம்.

தன் திட்டம் பலித்து தான் மலை நாட்டில் வாழ நேர்ந்தால் சாகும் வரை ரகசிய தீவில் காலடி எடுத்து வைக்க கூடாது என்று நினைத்தாள் ரத்னாவதி . தீவில் அவளது கேவலமான பூர்வாசிரம கதை அனைவருக்கும் தெரியும். அதனால் இங்கு வராமல் சந்திரவதனாவின் பெயரிலேயே தன் வாழ்க்கையை மலைநாட்டில் ஓட்டிவிட வேண்டியதுதான் என்று அவள் நினைத்தாள்.

மதிமாறனுக்கு இந்த ஆள் மாறாட்ட திட்டம் வெகுவாக பிடித்திருந்தது. இனி சந்திரவதனாவை பிடிப்பது வெட்டி வேலை என்று அவனுக்கு தோன்றியது. அவள் உயிரோடு இருந்தால் பின்னாளில் ஏதாவது இடைஞ்சல் வரலாம் என்று நினைத்தான். கலை கூத்தாடிகளோடு சேர்ந்து அவளும் தீயில் பஸ்பமாகட்டும் என்று நினைத்தவன் வீட்டை கொளுத்தும்படி தன்னுடைய ஆட்களுக்கு ஆணையிட்டான்.

அவனது ஆட்களால்எங்கிருந்தோ எண்ணெய்கள் சேகரிக்கப்பட்டன. அவை அனைத்தும் வில்லவனின் வீட்டின் மீது ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டது. கொளுந்து விட்டெரியும் வீட்டை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தனர் ரத்னா வதியும், மதிமாறனும். "நீதான் எனக்கேற்ற வாழ்க்கை துணை" என்று அவளை மெச்சி கொண்டான் மதி மாறன் .

சந்திரவதனா வீட்டின் உள்ளே இருக்கும் வரை விபரீதமாக எதையும் செய்ய மாட்டான் மதிமாறன் என்று நினைத்திருந்தாள் பார்வதி. ஆனால் அவளது எண்ணத்திற்கு மாறாக வீட்டின் மீது எண்ணை ஊற்றப்பட்டு நெருப்பும் பற்ற வைக்கப்பட்டது.

நல்ல நேரத்தில் சுரங்க வழியாக வீட்டிற்குள் வந்த ஆதி அதே வழியில் அனைவரையும் அங்கிருந்து அழைத்து சென்றான். சுரங்க வழியின் கதவை இறுக்கமாக பூட்டினான் ஆதி. பற்றி எரியும் வீட்டின் புகை சுரங்க வழியாக பயணித்து வேறு இடத்தில் வெளிப்பட்டால் ஆபத்து வந்து விடும் என்று நினைத்தவன் கதவை பூட்டி விட்டு பயணமானான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக