புதன், 16 நவம்பர், 2022

ரகசிய தீவு55

Qரகசிய தீவு

அத்தியாயம் 55

தூண்டிலில் மண்புழு

நஞ்சுண்டன் மதி மாறனின் இல்லத்தை நோக்கி பயணமாகி கொண்டிருந்த அதே நேரத்தில் தன்னுடைய மாளிகையிலிருந்து சிறு படையுடன் கிளம்பிக் கொண்டிருந்தான்மதிமாறன்.

அவனது ஒரே நோக்கம் வில்லவனின் வீட்டில் இருக்கும் சந்திரவதனாவை பிடிப்பது தான். அவளை தன் கைவசம் கொண்டு வந்து விட்டால் எல்லாமே சுலபமாக முடிந்துவிடும் என்பது அவனது மன கணக்கு .சந்திரவதனா வை தான் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டு விட்டால் தயாநிதியின் மருமகனாகி விடுவோம்.இந்த தீவே தன்னுடைய அதிகாரத்திலிருந்து நழுவி போனாலும் மலைநாட்டு உதவியோடு தயாநிதி அதை மீட்டு விடுவான். தயாநிதியின் அரசியல் வாரிசாக தான் உருவாகி விடலாம். தயாநிதியின் இடத்தை தான் பிடித்து விட்டால் தாய் நாட்டிலேயே தங்கிவிடலாம். இவ்வளவு தூரம் ஆளுநராக அலைய வேண்டியதில்லை.

தன்னுடைய பிரதிநிதியாக தயாநிதி மதிமாறனை ரகசிய தீவிற்குஅனுப்பியது போல் தானும் வேறு யாரையாவது ரகசிய தீவிற்கு ஆளுநராக நியமித்து விட்டு சொந்த நாட்டிலேயே சுகபோகமாக வாழலாம். இந்த திட்டம் நிறைவேற வேண்டுமானால் அவனுக்கு சந்திரவதனா தேவை.சந்திரவதனா தயாரிதியின் மகள் என்ற உண்மை மதிமாறனுக்கு மட்டுமே தெரியும். அந்த உண்மை தெரிந்த செங்கோடனையும் அவன் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அனுப்பி விட்டான். சந்திரவதனா தயாநிதியின் மகள் என்பதற்கு ஆதாரமாக இருப்பது அந்த ஆபரணம் அது தற்போது தன்வசம் இருக்கிறது என்ற மிதப்பில் இருந்தான் அவன்.

அவன் தன்னுடைய படைகளை வழி நடத்தி கொண்டு வில்லவனின் மாளிகையை நோக்கி சென்றான்.மதிமாறனின் கட்டளைகளை கேட்டு கொண்டிருந்த ஆதி சூழ்நிலையை சட்டென்று புரிந்து கொண்டு விட்டான்.

மதிமாறனால் சந்திரவதனாவிற்கும் அவளுடைய குழுவிற்கும் ஆபத்து என்பதை புரிந்து கொண்டவன் அவர்களை காப்பாற்ற தன் குதிரையை குறுக்குவழிகளில் விரட்டி சென்றான்.மதிமாறன் வில்லவனின் மாளிகையை அடையும் முன்பாக தான் அந்த இடத்தை அடைந்து விட வேண்டும் என்பது அவனது நோக்கம். அவன் மின்னல் வேகத்தில் குதிரையை விரட்டி சென்றான்.

மதிமாறனும், ஆதியும் அங்கிருந்து கிளம்பிய பின்பு முக்காடு அணிந்த உருவம் ஓன்று மதிமாறனின் மாளிகையிலிருந்து வெளியேறியது. இருட்டில் ஒரு உருவம் தீப்பந்தத்துடன் குதிரை லாயத்தை நோக்கி விரைவதை பார்த்த நீலன் அதை கருணாகரனிடம் சுட்டி காட்டினான்.

"யாரோ ஒருவன் மாளிகையிலிருந்து வெளியேறி குதிரை லாயத்தை நோக்கி விரைகிறான். நீ அதை கவனித்தாயா?" என்றான் நீலன் கருணாகரனை பார்த்து.

"கவனித்தேன். இருட்டில் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. யார் அங்கே ? குதிரை லாயத்தில் யாரோ குதிரையை களவாட முயல்கிறார்கள். அவனை உடனே தடுத்து நிறுத்துங்கள்" என்று ஆட்களுக்கு உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். ஆட்கள் அவன் கட்டளையை கவனித்து குதிரை லாயத்தை நோக்கி விரையும் முன் அந்த ஆசாமி துரிதமாகச் செயல்பட்டான். கருணாகரனின் ஆட்கள் விரைவில் தன்னை சுற்றி வளைத்து விடுவார்கள் என்பதை உணர்ந்தவன் மின்னல் வேகத்தில் செயல்பட ஆரம்பித்தான்.

சட்டென்று ஒரு குதிரையில் தாவி ஏறியவன் அதன் பிடரியை ஓங்கி தட்டினான். அதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட புரவி மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பியது.கருணாகரனின் ஆட்கள் நிலைமையை புரிந்து கொண்டு குதிரையை தடுத்து நிறுத்தும் முன்பாக குதிரை காற்றை கிழித்து கொண்டு பறந்தது.

தடுக்க முயன்ற இரண்டு வீரர்களின் முகத்தில் தீப்பந்தம் மோதி அவர்களை விலக வைத்தது. குதிரையில் தப்பி சென்றவனை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தனர் நீலனும், கருணாகரனும்.

"உன் ஆட்களின் முயற்சி பலிக்கவில்லை. அவன் தப்பி சென்று விட்டான். புதிய நபர் தன் மீது ஏறினால் அடம் பிடிப்பது குதிரைகளின் சுபாவம். ஆனால் இந்த குதிரை அவனை கண்டு அப்படி சுணங்கவில்லையே? பழக்கமான ஆசாமி போல் அவனது உத்தரவுக்கு கீழ்படிந்து பறக்கிறதே?" என்று தான் கவனித்ததை கேள்வியாக கேட்டான் நீலன்.

"சரியாக சொன்னாய். அந்த குதிரை அந்த ஆசாமிக்கு பழக்கமானது தான் "

' அப்படியானால் அந்த குதிரை வீரனை உனக்கு தெரியுமா?" என்றான் நீலன்.

"தெரியும் "

"யார் அவன்? அவனது பெயர் என்ன?" என்றான் நீலன் ஆவலுடன் .

கருணாகரன் அந்த பெயரை சொன்னான். அதை கேட்டதும் அயர்ந்து போய் நின்றான் நீலன்.

"என்னால் நம்ப முடியவில்லை" என்று முணுமுணுத்தன அவனது உதடுகள்.

அதே நேரம் வில்லவனின் மாளிகையை சுற்றி வளைத்திருந்தன மதி மாறனின் படைகள் .

உபரிகையிலிருந்தே படைகள் வருவதை கவனித்த பார்வதி தங்களை ஆபத்து சூழ்ந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டாள். கைவசம் இருக்கும் சொற்ப ஆயுதங்கள் . ஆயுதங்களை பிரயோகிக்க தெரியாத கலை கூத்தாடிகள் இவர்களை வைத்து கொண்டு எப்படி மதி மாறனை எதிர்கொண்டு இங்கிருந்து தப்பிப்பது என்று அவளுக்கு புரியவில்லை.

கலை கூத்தாடிகளும் தங்களை ஆபத்து சூழ்ந்திருப்பதை விரைவிலேயே புரிந்து கொண்டனர். இரண்டு பெண்களை காப்பாற்ற தங்களால் முடிந்ததை செய்யலாம் என்று நினைத்தவர்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து கொண்டு எதிரிகளை எதிர்கொள்ளதயாராயினர்.

பார்வதி சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடிகளை பாத்திரத்தில் எடுத்து கொண்டான். வெளியே காத்து கொண்டிருந்த மதி மாறன் தன்னுடைய குதிரையிலிருந்து குதித்து இறங்கினான். சுற்றும் முற்றும் பார்த்தவன் தன் தொண்டையைகனைத்து கொண்டான். தன் பேச்சை கேட்க பொதுமக்கள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டவன் உரத்த குரலில் பேச ஆரம்பித்தான்.

"நண்பர்களே! நீங்கள் ஆயுத பயிற்சியற்றவர்கள் என்பதை நான் அறிவேன். மக்களை மகிழ்விக்க கத்தியை எடுத்து பழகியவர்கள் நீங்கள்.உங்களுக்கு அது பொம்மை கருவி. எனக்கோ அது கொலை கருவி.எனக்கு தேவை உங்களில் ஓரு ஆள். அவனை மட்டும் என்னிடம் ஒப்படைத்து விட்டால் மற்றவர்களை நான் மன்னித்து விட்டு விடுவேன். ஒரு ஆளுக் காக இத்தனை பேர் பலியாக வேண்டுமா? சிந்தித்து பாருங்கள்" என்றான் மதி மாறன்

பார்வதிக்கு அவனது வேண்டுகோள் புதிராக இருந்தது. இப்படி கெஞ்சுகிறான் என்றால் அவன் பிடிக்க விரும்பும் ஆசாமிக்கு உயிரபாயம் ஏற்படக் கூடாது என்று அவன் விரும்புகிறான்.

"யார் அந்த ஆசாமி?" என்றாள் பார்வதி.

"சந்திரவதனா! அவளை மட்டும் என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். எல்லோரையும் உயிரோடு விட்டு விடுகிறேன்"

"காமாந்த காரா! உன் எண்ணம் ஈடேறாது. அவளை உன்னிடம் ஒப்படைக்க முடியாது."

"அவசரப்படாதே பெண்ணே. அவள் செங்கோடனின் வளர்ப்பு மகள். அவளது உண்மையான பெற்றோர் யாரென்று எனக்கு தெரியும். உன் தந்தை சாகும் தருவாயில் இந்த ஆபரணத்தை என் கையில் கொடுத்து உன் பிறப்பின் ரகசியத்தையும் என்னிடம் கூறினார். உன்னுடைய உண்மையான பெற்றோர் யார் என்று தெரிந்து கொள்ள உனக்கு விருப்பமில்லையா?" என்றான் மதிமாறன் நைச்சியமாக. மீனை பிடிக்க வேண்டுமென்றால் தூண்டிலில் மண்புழுவை மாட்ட வேண்டும்.மதிமாறன் சந்திரவதனா என்ற மீனை பிடிக்க குத்திய மண்புழு தான் அவளின் பிறப்பு ரகசியம்.

தான் செங்கோடனின் வளர்ப்பு மகள் என்பது அரசல் புரசலாக சந்திரவதனாவிற்கு தெரியும். ஆனால் அதை செங்கோடன் தன் மகளிடம் நேரடியாக சொன்னதில்லை. சிரித்து மழுப்பி விடுவான். உண்மையான பெற்றோரை தேடி தன் மகள் தன்னை விட்டு போய் விடுவாளோ என்பது தான் அவனது பயம்.

சந்திரவதனாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு தீயவனிடம் தன்னுடைய பிறப்பு ரகசியத்தை சொன்ன தகப்பன் அதை ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்று அவளுக்கு வியப்பாக இருந்தது.

"சந்திரவதனா வேண்டும் என்பதற்காக விதவிதமாக கதை கட்டுகிறாயா?" என்றாள் பார்வதி.

"இல்லை. என்னை நம்பு. அவளுக்கு பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கிறது. அவளை என்னிடம் ஒப்படையுங்கள்" என்றான் மதி மாறன்

"இப்போது நாம் என்ன செய்வது?" என்றாள் பார்வதி.

"எனக்காக யாரும் பலியாக வேண்டாம். நான் சரணடைகிறேன். என் பிறப்பு ரகசியம் தெரிவதற்காகவாவது நான் அவனிடம் போய் தான் தீர வேண்டும்" என்றாள் சந்திரவதனா.

"உளறாதே! அவன் உன்னை பிடிக்க பொய் கூறுகிறான்"

"இல்லை. அவன் உண்மையை கூறுவது போல் தான் தோன்றுகிறது "

" எதை வைத்து கூறுகிறாய்?"

" என் தந்தையிடம் இருந்த அந்த ஆபரணம் இப்போது அவனிடம் இருக்கிறதே?"

"யோசிக்க வேண்டிய விசயம்தான். ஆனால் உன்னை அவனிடம் ஒப்படைக்க மாட்டோம்,

"இங்கிருந்து தப்பிக்க வழியேயில்லை"

"ஏன் இல்லை?" என்றது ஒரு கணீர் குரல். அது ஆதியுடையது.

"ஆதி நீ எப்படி உள்ளே வந்தாய்? காவலர்கள் நம் வீட்டை சூழ்ந்திருக்கும் போது " என்றாள் வியப்புடன் பார்வதி.

"அக்கா. இப்படி ஒரு சூழ்நிலை வரும் போது இங்கிருந்து தப்பி செல்ல சுரங்கம் ஓன்றை அமைத்து வைத்திருக்கிறார் அண்ணன். வாய் பேச முடியாத வன் என்று நினைத்து அந்த வேலையில் அண்ணன் என்னை ஈடுபடுத்தினார். அந்த வழியாக உள்ளே வந்தேன். அதே வழியாக அனைவரும் தப்பி சென்று விடலாம். எல்லோரும் என் பின்னால் வாருங்கள்" என்ற ஆதியை பின்தொடர்ந்தனர் அனைவரும் .

வில்லவனின் மாளிகையை சுற்றி வளைத்திருந்த வீரர்களை பிளந்து கொண்டு முன்னேறியது ஒரு குதிரை. வீரர்களின் சலசலப்பை பார்த்த மதிமாறன் எரிச்சலுடன் "யார் அது?" என்றான்.

மதிமாறனின் மாளிகையிலிருந்து வந்த அந்த முக்காட்டு உருவம் குதிரையிலிருந்து குதித்து இறங்கியது. "யார் நீ?" என்றான் மதி மாறன் சினத்துடன் .

முக்காட்டு உருவம் அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தன் முக்காட்டை நீக்கியது.

அதன் முகத்தை பார்த்த மதிமாறன் திகைத்து நின்றான்.

"நீயா?" என்றன அவனது உதடுகள். அவனது தொண்டை குழி மேலும் கீழும் ஏறி இறங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக