புதன், 16 நவம்பர், 2022

ரகசியதீவு54

ரகசிய தீவு

அத்தியாயம் 54

காத்திருக்கும் எமன்

மதிமாறன் தன்னுடைய ஆட்களை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான். உபரிகையில் நின்றபடி நடப்பவற்றை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் கருணாகரனும், நீலனும்.

இருவருக்குமே அவனது நடவடிக்கை புதிராக இருந்தது. இருவரும் ஓன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

" இவனை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சிகப்பு முகமூடியை எதிர்க்க தேவையான ஆயுதங்கள் பறி போய்விட்டன. அவற்றை பற்றி அவன் சிறிதும் கவலைப்படவில்லை. அவனுடைய கவனம் எங்கிருக்கிறது பார். ஒரு பெண்ணை தேடிக் கொண்டு செல்கிறான்" என்று மதிமாறனின் நடத்தையை பற்றி விமர்சனம் செய்தான் கருணாகரன்.

"நான் நிறைய பெண் பித்தர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி ஓருவனை பார்த்ததில்லை.அதிகாரம் பறிபோகும் அபாயம் இருந்தும் அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஒரு பெண்ணை தேடிக் கொண்டு ஓடுகிறானே? ஒரு வேளை அந்த பெண் பிரமாதமானஅழகி யோ?" என்றான் நீலன் கேள்விக்குறியுடன் .

"அவள் அழகி தான். ஆனால் அந்த அழகை மீறிய ஏதோவொரு விசயம் அவளிடம் ஓளிந்திருக்கிறது. அது என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவள் மீது மதிமாறனுக்கு ஒரு கண் இருக்கிறது என்பது மட்டும் உண்மை" என்றான் கருணாகரன்.

"நல்ல வேளை அந்த மதிமாறனின் கவனம் இந்த பெண் மீது திரும்பியது. இல்லையென்றால் அவன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நானும் நீயும் தலையால் தண்ணீர் குடித்திருப்போம்"

" என்ன சொல்கிறாய் நீ? எனக்கு நீ சொல்வது புரியவில்லை"

"ஓ! உனக்கும் மதி மாறனை போல் மந்த புத்தி தான் போலும். அவன் மட்டும் என்னை பார்த்து சிறையிலிருந்து எப்படி தப்பி சென்றாய் என்று கேட்டிருந்தால் என்னுடைய நிலைமை என்னாவது?" என்றான் நீலன்.

நீலனின் கேள்வியை கருணாகரன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவன் அப்படி ஒரு கோணத்தில் சிந்தித்து கூட பார்க்கவில்லை. எப்போதும் முன்னெச்சரிக்கையாக பதில்களை தயார் செய்து வைத்து கொள்ளும் தான் எப்படி இந்த கேள்விக்கு பதில் தயார் செய்யாமல் கோட்டை விட்டுவிட்டோம் என்று அவன் தன்னையே நொந்து கொண்டான்.

" அவன் அப்படி ஒரு கேள்வியை கேட்டிருந்தால் நீ என்ன பதில் கூறியிருப்பாய்?" என்றான் கருணாகரன்

"நான் எதற்கு அவன் கேள்விக்கு பதில் சொல்ல போகிறேன்? நான் உன்னையல்லவா கைகாட்டி விடுவேன். நீ தான் என்னை சிறையிலிருந்து மீட்டு வந்தாய் என்ற உண்மையை அவனிடம் கூறிவிட வேண்டியதுதான்" என்றான் விசம சிரிப்புடன் நீலன்.

"அடப்பாவி! என்னை சிக்கலில் சிக்க வைக்க பார்க்கிறாயா?"

"இல்லை. சிக்கலில் இருந்து விடுபடும் உன்னுடைய திறமையை பார்க்க விரும்புகிறேன்"

"நம்முடைய அதிர்ஷ்டம் அவன் அந்த கேள்வியை கேட்க மறந்தது?" என்றான் கருணாகரன்

"யாருடனும் மோதி வெற்றி பெறலாம். ஆனால் அதிர்ஷ்டகாரனிடம் மோதி வெற்றி பெற முடியாது"

"அடுத்தது நாம் என்ன செய்ய போகிறோம்?"

"அதைப் பற்றி யோசிப்போம். இரண்டாம் சாமத்திற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது" என்றான் கருணாகரன்.

இரவின் இருளில் பதுங்கியபடி இருவரது உரையாடலையும் கேட்டு கொண்டிருந்த
மர்ம உருவம் சத்தமின்றி அங்கிருந்து நழுவியது. 

அதே நேரம் ஆகி நஞ்சுண்டனின் குதிரையில் விரைந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மார்க்கதரிசி தன்னுடைய தங்க புதையலை புதைத்ததை சிறு வயதில் மறைந்து நின்று பார்த்த ஒரே ஆள் அவன் தான்.

அவனது கண் முன்னால் புதைக்கப்பட்ட பொக்கிசங்கள் இப்போது காணாமல் போயிருக்கின்றன. தன்னுடைய சகாக்களை ஏமாற்றி அவற்றை இடம் மாற்றி வைத்திருக்கிறான் எமகாதகனான கருணாகரன். இவ்வளவு திறமைசாலியான ஓருவனை கொன்று அவன் தன்னுடைய பழியை தீர்த்து கொள்ள வேண்டும். பெரியவர்களையே இப்படி சாமர்த்தியமாக ஏமாற்றும் கருணாகரனை சிறுவனான தன்னால் பழிவாங்க முடியுமா என்ற மெல்லிய சந்தேகமும் அவனது மனதில் எழுந்தது.

அவன் உடனே கருணாகரன் எங்கிருக்கிறான் என்பதை கண்டறிய விரும்பினான். அவன் கருணாகரனின் மாளிகைக்கு சென்ற போது தான் கருணாகரன் அங்கிருந்து மதிமாறனின் மாளிகைக்கு கிளம்பியிருந்தான்.

தனியாக பயணமான கருணாகரனை சரியான தருணத்தில் வீழ்த்தி விடலாம் என்று நினைத்து பின் தொடர்ந்த ஆதிக்கு அதற்கான எந்த சந்தர்ப்பமும் கிடைக்கவேயில்லை.

கருணாகரன் மதி மாறனின் மாளிகைக்குள் சென்ற பிறகு அவன் திரும்ப வரும் வரை இருட்டில் பதுங்கி கிடக்க முடிவு செய்தான் ஆதி.மதிமாறனின் மாளிகைக்கு சற்று தள்ளி இருட்டில் குதிரையை கட்டி வைத்துவிட்டு கால்நடையாக மதிமாறனின் மாளிகை வழியாக நடக்க ஆரம்பித்தான் ஆதி.

கருணாகரன் மதி மாறனின் மாளிகைக்குள் நுழைந்த சற்று நேரத்தில் அந்த மாளிகை பரபரப்பானது. காவல் வீரர்கள் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடுவதும் தங்கள் குதிரைகளை பயணத்திற்கு தயார் செய்வதும் அவனது கண்களில் தட்டுப்பட்டது. விபரீதமாக ஏதோ நடக்க இருப்பதாக யூகித்தவன் இருளில் மறைந்து கொண்டு நடப்பதை கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த மதிமாறன் தன்னுடைய ஆட்களுக்கு உத்தரவிடும் சத்தம் அவனுக்கு கேட்டது.

"வீரர்களே! அனைவரும் தயாராகுங்கள். சிகப்பு முகமூடியும் அவனது ஆட்களும் வில்லவனின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. நாம் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய வேண்டும். உடனே கிளம்புங்கள்"

மதிமாறனின் உரத்த குரல்கட்டளை மறைந்திருந்த ஆதியின் காதுகளில் விழுந்தது.

வில்லவனின் வீட்டில் சந்திரவதனாவும், பார்வதியும் கலை கூத்தாடிகளும் இருப்பதும் அவர்களுக்கும் பார்த்திபனுக்கும் தொடர்பு இருப்பதும் மதிமாறனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. அவனுக்கு இந்த விசயம் தெரிகின்றதென்றால் புரட்சி கூட்டத்தில் மதிமாறனின் கையாட்கள் யாராவது கலந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த விசயம் இவனுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்?

ஆதியின் சின்ன இதயம் கேள்விகளால் நிரம்பியது. சந்திரவதனாவும் பார்த்திபனும் ஓருவரை ஒருவர் விரும்புவது அவனுக்கு தெரியும். சந்திரவதனா மதிமாறனிடம் பிடிபட்டு விட்டால் அவளை மீட்க முனையும் பார்த்திபனும் பிடிபட்டு விடுவான். புரட்சி நடைபெறாமலேயே நசுக்கப்பட்டு விடும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமானால் எப்படியாவது சந்திரவதனாவை காப்பாற்றியாக வேண்டும் என்று நினைத் த ஆதி தன்னுடைய குதிரை இருந்த இடத்திற்கு வந்தான்.

அதை அவிழ்த்து கொண்டு கிளம்பியவன் வில்லவனின் வீட்டை அடைய குறுக்குவழிகளில் விரைந்தான்.

மதிமாறனின் சிறு படை அங்கிருந்து கிளம்பியது.

ஓரே இடத்தில் சுற்றி கொண்டிருந்த நஞ்சுண்டன் தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்ப வெகு நேரமானது.

தனக்கு என்ன நடந்தது என்று அவனுக்கு புரியவில்லை. தன்னுடைய குதிரையையும் ஆதியையும் காணாமல் திகைத்தான். அந்த பொடியன் ஏதோ ஒரு மாயம் செய்து தன்னிலை மறக்க செய்து தன்னை வீழ்த்தி விட்டான் என்று அவனுக்கு சீக்கிரத்திலேயே புரிந்து விட்டது.

அவன் அங்கிருந்து கால்நடையாகவே கிளம்பினான். சொற்ப தூரநடையிலேயே பெருமளவு களைத்து போனான் அவன். நடந்து போய் மதிமாறனின் மாளிகையை அடைவதற்குள் எல்லாமே நடந்து முடிந்திருக்கும் என்று நினைத்தான் நஞ்சுண்டன் .

அவனிடம் இருந்த வாளை ஆதி எடுக்காமல் விட்டு விட்டான். அது போதும் வேண்டிய காரியத்தை சாதிக்கலாம் என்று நினைத்த நஞ்சுண்டன் எதிரே தென்பட்ட ஒரு குதிரை வீரனை வாள்முனையில் நிறுத்தி அவனுடைய குதிரையை பறிமுதல் செய்தான். குதிரை கிடைத்து விட்டது.இனி வேகமாக பயணிக்கலாம் என்று நினைத்தவன் மதி மாறனின் மாளிகையை நோக்கி குதிரையை விரட்டினான்.

அங்கே நீலன் என்ற பெயரில் எமன் அவனுக்காக காத்திருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக