ரகசிய தீவு
அத்தியாயம் 60
ஒன்றை மூன்றாக்கும் மந்திரவாதி
ஆதித்தனை கூர்ந்து பார்த்த பார்த்திபன் "நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை" என்றான்.
"புரியும்படியாகவே சொல்கிறேன். முதலில் நாம் நம்முடைய பலவீனங்களை பட்டியலிடுவோம். அதில் முதலிடம் பிடிப்பது நமக்கு போதுமான வீரர்கள் இல்லை என்பது தான் " என்றான் ஆதித்தன்.
"ஆம்.மதிமாறனிடம் ஆள் பலம் அதிகம். நம்மிடம் குறைவான ஆட்களே இருக்கிறார்கள். கப்பலில் வரும் ஆயுதங்களும் அவனுக்கு கிடைத்து விட்டால் அவனுடைய பலமும் அதிகரித்து விடும்"
"வீரம், வெற்றி என்பதெல்லாம் எண்ணிக்கையை பொறுத்து அமைவதல்ல.களத்தில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தது.விரர்கள் அவனிடம் அதிகமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் மன உறுதியை நாம் தகர்த்து விட்டால் போதும். நெல்லி காய் மூட்டையை அவிழ்த்து கொட்டியது போல் பயத்தில் சிதறி ஓடி விடுவார்கள். இதுவொரு தீவு . முற்றிலும் கடலால் சூழப்பட்டிருக்கிறது. தோற்றவன் தப்பி ஓட வழியே யில்லை. உயிரோடு இருக்க வேண்டுமானால் வென்றவனிடம் சரணடைந்து தான் தீர வேண்டும்"
"நீ சொல்வது நமக்கும் பொருந்தும் அல்லவா? நாம் இந்த புரட்சியில் தோற்றுவிட்டால் ஓடி ஓளியவேறு எந்த இடமும் இல்லை"
"கலகங்கள் வெற்றி பெற்றால் புரட்சி என்றழைக்கப்படும். புரட்சிகள் தோற்றுவிட்டால் கலகம் எனப்படும். இப்படி எதிர்மறையாக யோசிப்பதை விட்டுவிடு. நீ ஒரு தலைவன். உன்னை பின்பற்ற ஏராளமான ஆட்கள் உள்ளனர். அவர்களை வழி நடத்த வேண்டிய நீ நேர்மறையாக பேசி அவர்களுக்கு நம்பிக்கையை தர வேண்டும். நீயே அவநம்பிக்கையோடு இருந்தால் உன்னை எப்படி மற்றவர்கள் நம்பி பின் தொடர்வார்கள்? முழு நம்பிக்கையோடு ஆரம்பிக்கும் எந்த செயலும் தோல்வியை சந்திப்பதில்லை.."
"என்னை மன்னித்து விடு ஆதித்தா! நான் மறந்து போன தலைவனுக்கான தகுதியை நீ மீண்டும் நினைவு படுத்தி விட்டாய். இனி ஒருபோதும் அவநம்பிக்கையாக பேச மாட்டேன். நீ எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கு இந்த நேர்மறை எண்ணம் தான் காரணம் போலும் " என்றான் பார்த்திபன்
" எது நடந்தாலும் நன்மைக்கே என்று வருவதை எதிர்கொள்ள நானும் என் தமையனும் பழகிவிட்டோம். சோர்ந்து உட்காருவதால் எதுவும் நம்மை விட்டு விலகிவிடாது."
"புரிகிறது. நாம் தான் ஜெயிக்கப் போகிறோம். நாம் தோற்று இந்த தீவை விட்டு ஓடப்போவதில்லை. இப்போது மேலே சொல் " என்றான் பார்த்திபன் தெளிவுடன் .
" உன் மனம் செய்யும் காரியத்தில் ஒரு முகப் பட்டு விட்டது. அக்கறையான உன் பேச்சு உன்னுடைய ஆர்வத்தை காட்டுகிறது. இனி நான் சொல்வதை கவனமாக கேள்.மதிமாறனின் ஆட்கள் பலம் அதிகம்.அந்த படையின் மன உறுதியை குலைக்க வேண்டுமென்றால் நமக்கு அதிக வீரர்கள் தேவை. இப்போதைய நிலைமையில் அதிக வீரர்கள் வெளியிலிருந்து வர முடியாது. தீவிற்கு உள்ளே தான் நாம் ஆட்களை தேட வேண்டும்"
"இங்கே யார் நமக்கு உதவ வரப்போகிறார்கள்?" என்றான் பார்த்திபன் குழப்பத்துடன் .
"ஓரு மந்திரவாதி இங்கே இருக்கிறான். ஒரு ஆளை மூன்று ஆட்களாக மாற்றும் சக்தி அவனிடம் உண்டு. அவன் தான் நமக்கு உதவ போகிறான்."
"ஏற்கனவே யோகி என்ற பெயரில் கருணாகரன் என்னை ஏமாற்றி கொண்டிருந்தான். இப்போது புதிதாக ஒரு மந்திரவாதி வந்திருக்கிறான். யார் அவன்? எனக்கு தெரியாமல் அவன் இங்கே எப்படி இருக்க முடியும்?" என்றான் பார்த்திபன்.
"அவனை இந்த தீவில் தான் நான் முதன் முதலில் பார்த்தேன். தன்னுடைய ஆற்றல் தெரியாமல் அதை தெருவில் பயன்படுத்தி கொண்டிருந்தான்."
ஆதித்தனின் பூடகமான பேச்சு புரியாமல் திகைத்து நின்றான் பார்த்திபன்.
"இன்னமும் புரியவில்லையா?" என்று அவனை பார்த்து நகைத்தான் ஆதித்தன்.
"எனக்கு ஓன்றுமே புரியவில்லை" என்றான் குழப்பத்துடன் பார்த்திபன்.
"புரியும்படியாகவே சொல்கிறேன். உன் கலை கூத்தாடி நண்பர்களை இங்கே வரச் சொல். நான் சொல்வதை நீ உன் கண்ணாலேயே காணலாம்" என்றான் சிரிப்புடன் ஆதித்தன்.
சற்று நேரத்தில் அவனுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தது கலை கூத்தாடிகளின் குழு ..ஆதித்தன் எதற்காக தங்களை அழைத்திருக்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை.
தன் முன்பு நின்று கொண்டிருந்தவர்களை கவனமாக ஓரு முறை கூர்ந்து பார்த்தான் ஆதித்தன். ரகசிய தீவின் துறைமுகத்தில் இறங்கிய பிறகு ஆதித்தன் பார்த்தது கலை கூத்தாடிகளின் வித்தையைத் தான். அதற்கு நடுவே தான் மதி மாறனும் கருணாகரனும் உள்ளே நுழைந்து குட்டையை குழப்பி குழுவையே கைது செய்து விட்டார்கள். அந்த சம்பவத்தின் போது வித்தை காட்டி கொண்டிருந்தவனைத்தான் ஆதித்தன் இப்போது தேடிக் கொண்டிருந்தான்.
அவனது கழுகு கண்கள் கூட்டத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்தவனை அடையாளம் கண்டுபிடித்து விட்டன.
ஓரமாக நின்றவனை சுட்டி காட்டியவன் "உன்னைத்தான் நண்பனே இவ்வளவு நேரம் தேடிக் கொண்டிருக்கிறேன். கூட்டத்திலிருந்து விலகி முன்னால் வா!" என்றான் முகமலர்ச்சியுடன் .
அவன் எதுவும் புரியாமல் முன்னால் வந்து நின்றான்.
"நண்பா! உன்னுடைய பெயர் என்ன?"
" என்னுடைய பெயர் சாத்தன். என்னை எதற்காக தேடினீர்கள்?"
"சாத்தன். நல்ல பெயர் .இந்த பெயரை அதிகமாக வணிகர் தலைவர்கள் அல்லவா வைத்து கொள்வார்கள்?"
" வணிகர் தலைவராக வேண்டும் என்று நானும் தான் ஆசைப்பட்டேன். ஆனால் விதி வலியது. அது நடக்கவில்லை" என்றான் அவன் சோகமாக .
"வருந்தாதே! விதி வேறு ஒரு காரியத்திற்கு உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்த கலை குழுவில் உன்னுடைய வேலை?"
" வித்தை காட்டுவது தான். மூன்று மனிதர்கள் என்னும் பொம்மலாட்ட வித்தை"
"எங்களுக்காக அந்த வித்தையை ஒரு முறை செய்து காட்டுவாயா?" என்றான் ஆதித்தன். அவன் செய்வதை கவனிக்கும் படி பார்த்திபனுக்கு சாடை காட்டவும் அவன் தயங்கவில்லை.
சாத்தன் தன் தோளில் இருந்த துணி மூட்டையை கீழே இறக்கினான். அதில் இருந்த மனித உருவ துணிகளுக்குள் பஞ்சை நிரப்ப ஆரம்பித்தான். சற்று நேரத்தில் இரண்டு மனித உ ருவங்கள் அங்கே உருவாகிவிட்டன. தன் முதுகில் சொருகியிருந்த நீளமான மூங்கில் குச்சிகள் இரண்டை எடுத்தவன் அதில் ஒன்றின் நுனியைபொம்மைகளின் கையிலும் மற்றோரு நுனியை இன்னொரு பொம்மையின் கையிலும் கட்டினான். அதே போல் இன்னொரு குச்சியை எடுத்து அதன் நுனியை ஓரு பொம்மையின் காலிலும் மற்றோருமுனையை இன்னொரு பொம்மையின் காலிலும் இறுகக் கட்டினான். இரண்டு பொம்மைகளுக்கும் நடுவே ஒரு ஆள் நு ழையக் கூடிய இடைவெளி இருந்தது.
இரண்டு உருவங்களுக்கும் இடையே இருந்த இடைவெளியில் நுழைந்த சாத்தன் குச்சிகளின் நடுவே தன்னுடைய கைகளையும், கால்களையும் கட்டி ஒரு கயிறு கொண்டு கட்டி கொண்டான்.
இப்போது அங்கே மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள். நடுவில் உண்மையான மனிதனான சாத்தன் இருந்தான். அவனது இரு புறத்திலும் முன் பின்னாக இரண்டு பொம்மைகள் இருந்தன.சாத்தன் நடந்தால் குச்சிகளின் உதவியால் பொம்மைகளும் அவனுடன் நடந்தன. அவன் கைகளை வீசினால் பொம்மைகளும் கையை வீசின. அவன் உட்கார்ந்தால் பொம்மைகளும் உட்கார்ந்தன.
தூரத்தில் இருந்து யார் பார்த்தாலும் அங்கே மூன்று மனிதர்கள் இருப்பதாகத் தான் சொல்வார்கள். மூன்று பேர் ராணுவ பயிற்சியில் ஒன்று போல் ஈடுபடுவது போல் தான் அந்த காட்சி இருந்தது.
நடப்பவற்றை கண் இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான் பார்த்திபன். இந்த கள்வர்புரத்து கள்வன் சாதாரண ஆள் இல்லை. கண்ணில் பார்க்கும், காதில் கேட்கும் எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறான். இவன் ஏன் தன்னுடைய எல்லா காரியங்களிலும் வெற்றி பெறுகிறான் என்பது இப்போது தான் பார்த்திபனுக்கு புரிந்தது.
" எப்படி என்னுடைய மந்திரவாதியின் மந்திர வேலை?" என்று அவன் தோளை தட்டி சிரித்தான் ஆதித்தன்.
"நண்பா. இப்படி ஓரு தந்திர வேலையை நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. இரண்டாயிரம் பேரை இந்த மந்திரவாதி ஆறாயிரம் பேராக மாற்றி காட்டி விடுவான் போலிருக்கிறதே? இப்படி சரிக்கு சரியான படை பலம் இருக்கும் என்று மதிமாறன் கனவுகூட கண்டிருக்க மாட்டான் " என்றான் பார்த்திபன் மகிழ்ச்சியுடன் .
"இந்த போலி படைகளை உள்ளே நிறுத்தி உண்மையான ஆட்களை ஆட்களை வெளியே நிறுத்தி வைத்து மதிமாறனின் கண்களை கட்டி விடலாம்.இதிலேயே பாதி வீரர்கள் தங்கள் தன்னம்பிக்கையை தொலைத்திருப்பார்கள்.. மதிமாறனின் மன உறுதியை குலைக்க இன்னொரு திட்டம் உள்ளது"
"அது என்ன?"
"பொய்யை உண்மையாக்கும் வித்தை. நாம் சொல்ல போகும் பொய் நம்முடைய புரட்சிக்கு உதவியாக வளநாடு படை அனுப்பப் போகிறது என்பது. அந்த பொய்யை நாம் உண்மையாக்கப் போகிறோம். அதுவும் வள நாட்டிற்கு தெரியாமல் "
"அது எப்படி முடியும்?"
" சொல்கிறேன்" என்று புன்னகைத்தான் ஆதித்தன்.
இவனுடைய தலைக்குள் இன்னும் என்னென்ன யோசனைகள் புதைந்து கிடக்கின்றதோ என்ற வியப்பில் சிலையாக நின்றான் பார்த்திபன்.