செவ்வாய், 7 ஜூலை, 2015

தண்டிக்கப்பட்ட கடைசி மன்னன்.!

250 ஆண்டுகளுக்கு மேலாகப் பரந்து விரிந்து இருந்த முகலாயர்களின் சாம்ராஜ்ஜியம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விரைவாக சுருங்கத் தொடங்கியது. 1837ம் ஆண்டு இரண்டாம் பகதூர் ஷா சாஃபர், அவருடைய தந்தையான அகமது ஷா இறந்ததால் பதவிக்கு வந்தார். அப்பொழுது முகலாயர்களின் சாம்ராஜ்ஜியத்தின் விஸ்தீரனம் செங்கோட்டையுடன் அடங்கிவிட்டது.
பகதூர் ஷா பதவி ஏற்கும் சமயத்தில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் உள்ள அநேக இடங்களைக் கைப்பற்றிவிட்டது, அல்லது தங்கள் வசம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது.
பகதூர் ஷா பேருக்குத்தான் அரசர். அவரை ஒரு பொம்மை அரசராகத்தான கிழக்கிந்திய கம்பெனி நடத்தி வந்தது. பகதூர் ஷாவுக்கு கிழக்கிந்திய கம்பெனி ஓய்வூதியம் கொடுத்தது. மேலும் பகதூர் ஷா ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் வரி வசூல் செய்ய அனுமதியும் வழங்கியது. பகதூர் ஷா செங்கோட்டையில் ஒரு சிறிய படையையும் பராமரித்து வந்தார். அவரால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. அவர் சந்தோஷமாக ஆயிரக்கணக்கான கஜல்கள் எழுதினார். மிர்சா காலிப் என்ற பெரும் புகழ் பெற்ற உருது கவிஞர் பகதூர் ஷாவின் அரசவையைச் சேர்ந்தவர்தான்.
கஜலும் கவிதையுமாக இனிமையாக காலம் கழித்து வந்த 82 வயது பகதூர் ஷா அரசரின் வாழ்க்கையில் விதி சுனாமி போல தாக்கியது. கிழக்கிந்திய கம்பெனி தான் இந்தியாவில் கைப்பற்றி ஆட்சி செலுத்தி வந்த பகுதிகளில் பாதுகாப்புக்காக ஒரு ராணுவத்தை உருவாக்கியிருந்தது. அந்த ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலேயர்கள், ஆனால் வீரர்கள் அல்லது சிப்பாய்கள் என்று அழைக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள். இந்த சிப்பாய்களுக்கு ஆங்கிலேயர்கள் போர் பயிற்சி கொடுத்து, தேவையான சமயங்களில் மட்டும் ராணுவத்தைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினார்கள். சிப்பாய்களில் இந்துக்களும் இருந்தனர், முஸ்லிம்களும் இருந்தனர்.
கிழக்கிந்திய கம்பெனி 1853ம் ஆண்டு வாக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட என்ஃபீல்ட் துப்பாக்கியைத் தன்னுடைய இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தியது. அந்தத் துப்பாக்கியில் காகிதத்தால் சுற்றப்பட்ட வெடிமருந்து நிரம்பிய தோட்டா பயன்படுத்தப்பட்டது. துப்பாக்கியில் அந்த தோட்டாவை நிரப்பவேண்டும் என்றால், தோட்டாவைச் சுற்றி இருக்கும் காகிதத்தை வாயால் கடித்து பிய்த்து எடுக்கவேண்டும். இதில் என்ன சங்கடம் என்றால் அந்த காகிதத்தில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பால் உருவாக்கப்பட்ட பசை தடவப்பட்டிருந்தது.
இந்துக்களுக்கு மாடு புனிதமானது. அதனால் மாடுகளைக் கொன்று அதனுடைய கொழுப்பில் தயாரிக்கப்பட்ட தோட்டாக்களை பயன்படுத்த ஆட்சேபம் தெரிவித்தனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை பன்றி என்பது ஹராம். தீண்டக்கூடாத ஒரு மிருகம். அதனால் அவர்களும் பேப்பர் தோட்டாவைப் பயன்படுத்த விரும்பவில்லை. அவர்கள் இப்படிப் புரிந்துகொண்டார்கள். மாடு மற்றும் பன்றியின் கொழுப்பால் உருவாக்கப்பட்ட பேப்பர் தோட்டாக்களை நம்மை பயன்படுத்த வைப்பதன் வாயிலாக நம் சாதி, மத நம்பிக்கைகளை வெள்ளையர்கள் போக்கடிக்க முயல்கிறார்கள். இதை நாம் அனுமதிக்கக்கூடாது. கூடுதலாக, கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவும் இந்த யுக்தி பயன்படுத்தப்படுகிறது என்றொரு புரளியும் பரவியது.
விளைவாக, சிப்பாய் புரட்சி வெடித்தது.
புராட்சிக்கு என்ஃபீல்ட் தோட்டாக்கள் மட்டும் காரணமில்லை. வாரிசில்லாத இந்திய ராஜ்ஜியங்களைக் கிழக்கிந்திய கம்பெனி எடுத்துக்கொண்டது. அதிகமான நில வரி வசூலிக்கப்பட்டது. ராணுவத்தில் பதவி உயர்வில் ஆங்கிலேயர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் மேற்சொன்ன நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த மக்கள் புரட்சியில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். அதனால்தான் 1857ல் ஏற்பட்ட சிப்பாய் புரட்சியை முதல் விடுதலைப் போர் என்று சரித்திர ஆசிரியர்கள் அழைக்கிறார்கள்.
ஆனால் இதற்கும் மன்னர் பகதூர் ஷாவுக்கும் என்ன தொடர்பு? ஒன்றுமில்லைதான். ஆரம்பத்தில், கல்கத்தாவில் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடைய படைப் பிரிவில் உள்ள ஏனைய சிப்பாய்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மங்கள் பாண்டே கொல்லப்பட்டார். அவருடன் பணிபுரிந்த படைப்பிரிவு கலைக்கப்பட்டது. ஆனால் பெரிய வன்முறை எதுவும் நடைபெறவில்லை.
ஆனால், கல்கத்தாவை தொடர்ந்து உத்திரப் பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் பெரிய அமளி துமளியே ஏற்பட்டது. சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தாரையும் கொன்றுவிட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த போர்க்கொடி உயர்த்திய மற்ற சிப்பாய்களையும், ஏனையக் கைதிகளையும் விடுவித்துக் கொண்டு டெல்லியை நோக்கிப் புறப்பட்டனர்.
டெல்லியில் செங்கோட்டையில் பகதூர் ஷாவை சந்தித்து நீங்கள்தான் எங்களுடைய போராட்டத்தை வழி நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பகதூர் ஷா என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். இதற்குள் அவரது அரசவையில் இருந்தவர்கள் இதுதான் சமயம் என்று புரட்சியில் ஈடுபட்ட சிப்பாய்களுடன் சேர்ந்து கொண்டு கண்ணில் பட்ட ஆங்கிலேயர்களை எல்லாம் தாக்க ஆரம்பித்தனர். ஏராளமான ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உறைவிடங்கள் தாக்கப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் போயிற்று. வெகுநாள்களாக கூட்டாமல் இருந்த தன்னுடைய அரசவையை பகதூர் ஷா கூட்டினார். போராட்டத்துக்குத் தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.
புரட்சி, கலவரம், முதல் விடுதலைப் போர் என்று எப்படி அழைத்தாலும் உண்மை இதுதான். போராட்டம் கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு உட்பட்ட சென்னை மற்றும் மும்பை மாகாணப் பகுதிகளில் மட்டும் புரட்சி ஏதுமில்லாமல் அமைதியாக இருந்தது. ஆனால் வட மற்றும் மத்திய இந்தியாவில் நிலைமை வேறு.
ஜான்சியில் ராணி லட்சுமி பாய் போர்கொடி தூக்கினார். கான்பூரில் நானா சாகிப் மற்றும் அவருடைய தளபதி தாத்தியா தோப் எதிர்ப்பு தெரிவித்தனர். கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய மற்ற பகுதிகளிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் ராணுவத்தை வரவழைத்து புரட்சியை ஒடுக்கியது. ராணி லட்சுமி போராட்டத்தில் இறந்து போனார். நானா சாகிப் ஆங்கிலேயர்களிடம் அகப்படாமல் நேபாளத்துக்குத் தப்பித்து ஓடியதாக சொல்லப்படுகிறது. தாத்தியா தோப் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். மற்ற போராட்ட கைதிகளெல்லாம் பீரங்கியின் முனையில் கட்டப்பட்டு, பீரங்கி குண்டுகளால் சிதறடிக்கப்பட்டனர்.
போராட்டத்துக்கு தலைமை தாங்குவதாக சொன்ன கிழ அரசரும் அவரது சகாக்களும் எங்கே என்று ஆங்கிலேய ராணுவம் தேடியது.
பகதூர் ஷா சாஃபரும் அவருடைய மகன்களான மிர்ஸா மொகல், மிர்ஸா கிஸிர் மற்றும் பகதூர் ஷாவின் பேரன் மிர்ஸா அபு பக்கர் ஆகியோரும் ஹுமாயூனின் கல்லறையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே கம்பெனி ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஹட்ஸன், ஹுமாயூனின் கல்லறையை தன்னுடைய வீரர்களுடன் சுற்றி வளைத்தார். பகதூர் ஷாவை கைது செய்தார். பிடிபட்ட பகதூர் ஷாவின் மகன்களும் பேரனும் கொல்லப்பட்டனர். (இதில் பகதூர் ஷாவின் பீபியான ஜீனத் மகாலுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சிதான். காரணம் அவளுடைய புதல்வன் மிர்ஸா ஜவான் பகத் தான் இப்பொழுது அரசரின் அடுத்த வாரிசு).
பகதூர் ஷா செங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மீது, சிப்பாய்களுக்கு துணை போனது; 49 பேரைக் கொலை செய்தது; ஆங்கிலேயர்களுக்கு எதிராக தேச துரோகம் செய்தது என பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 40 நாள்கள் விசாரணை நடைபெற்றது. நாடாளும் ஒரு அரசரின் மீது தேச துரோகம் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தியது சரித்திரத்தில் இதுதான் முதல்முறை. இறுதிமுறையும்கூட.

1 கருத்து:

  1. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மன்னர் பகதூர்ஷா பர்மாவின் ரங்கூனில் சிறையில் அடைக்கப்பட்டு மரணமடைந்தார்.இறுதிவரை அவருடனிருந்தது டெல்லியிலிருந்து எடுத்துச்சென்ற கையளவு மண்.கடைசிவரை டெல்லி மண்ணை மிதிக்கமுடியாத மன்னரின் ஏக்கத்தை அவரது உடல்மீது புதைகுழியில் தூவப்பட்ட மண் தணித்தது.!

    பதிலளிநீக்கு