ஒரு ஆக்ஸன் படத்தின் ஹீரோவை எப்படி சித்தரிப்பது என்று நம் தமிழ்பட இயக்குநர்கள் பல படிமங்களை உருவாக்கி அதை உடைத்தும் இருக்கிறார்கள்.நல்லவன் என்கிற எம்.ஜி.ஆரின் பிம்பத்தை உடைத்து ரஜினி என்கிற லாகிரி வஸ்துகளை துணையாக கொண்ட ஆனால் மனதளவில் நல்லவனாக இருக்கும் சூப்பர்ஸ்டாரை உருவாக்கும் சூழ்நிலைகளும்,அதை ஏற்றுக்கொள்ளும் சமுதாய நிர்பந்தங்களும் ஏற்பட்டு விட்டன.கதாநாயகனுக்கான தனித்த குணங்கள் இன்று காணாமல் போய் பொறுக்கிகளும்,ரவுடிகளும்,மாபியா டான்களும் கதாநாயக அந்தஸ்தை எட்டி விட்டார்கள்.கஜினியின் மெமரிலாஸ்,நான் சிகப்பு மனிதனில் விஷாலின் விநோத வியாதிபோன்ற அரிதான வியாதி தாக்கிய கதாநாயகர்களை உருவாக்கி உலாவ விட்ட கதாசிரியர்கள் இன்னமும் கதையை தேடாமல் மருத்துவ புத்தகங்களில் வினோத வியாதிகளை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள்.வியாதியை கண்டறிந்த பின் கதையை கண்டறிந்து விடலாம் என்பது இப்போதைய தியரியாகி விட்டது.!
தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்துவரும் பொதுவெளியில் அதிகம் கவனம் பெறாத தசாவதானி,சதாவதானி என்ற வித்தைகளை ஒரு ஆக்ஸன் ஹீரோவுக்கு ஏற்றிப்பார்த்தால் எப்படி இருக்கும்.?
ஒரே நேரத்தில் எட்டு செயல்களை கவனிக்கும் திறமை பெற்றவன் எண்கவனகர் என்றும்,பத்து செயல்களை கவனிப்பவன் தசாவதானி என்றும்,நூறு செயல்களை கவனிப்பவன் சதாவதானி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.தியானம்,யோகா,மனக்கட்டுப்பாட்டின் மூலமும் தீவிர பயிற்சியின் மூலமும் இந்த ஆற்றல்களை பெற்று விட முடியும்.இதற்கான பயிற்சி முறைகள் மிகக் கடுமையானவை.தன் சதாவதானி தாத்தாவிடமிருந்து எண்கவனகர் வித்தையை கற்றுக்கொள்ளும் ஹீரோ ராணுவத்தில் பணி புரிகிறான்.எதிரிகளின் காலடி ஒசை,புல்லட் மேகசீனில் காலியாகும் எண்ணிக்கை,டைம் பாம் வெடிக்கும் கால அளவு,என்று பல கவனிப்புகளின் வழியாக வியூகம் வகுத்து செயல்பட்டு அசாதாரணமான போர் வீரனாக இருக்கிறான்.அவனது வித்தை அவனையும்,அவன் டீமின் உயிரையும் காப்பாற்றுகிறது.
ஒரு தீவிரவாத கும்பலின் தலைவனை சுற்றி வளைத்து தன் வித்தையை பயன்படுத்தி கைது செய்கிறான்.பின்பு விடுமுறையில் தன் சொந்த ஊருக்கு வருகிறான்.தன் காதலியை பார்க்க ஒரு மாலிற்கு வருகிறான்.அவள் மாலில் ஒரு பொக்கே ஷாப் வைத்திருக்கிறாள்.தங்கள் தலைவனை மீட்க விரும்பும் தீவிரவாத கும்பல் அந்த மாலை தங்கள் கஸ்டடிக்குள் கொண்டு வருகிறது.அவர்களிடமிருந்து பணயக்கைதிகளை மீட்க ஹீரோ தனியாகப் போராடுகிறான்.பணயக்கைதி போல் நடிக்கும் வில்லன் இவனது வித்தையை தெரிந்து கொள்கிறான்.தன் ஆட்கள் பத்து பேருடன் ஹீரோ பணயக்கைதிகள் இருவரை மீட்டு வரும்போது சுற்றி வளைக்கிறான்.வில்லனுக்கு நன்றாகத்தெரியும்.எட்டுக்கு மேற்பட்ட விசயங்களை ஹீரோவால் கவனிக்க முடியாது என்று.முதலில் வில்லனின் சூழ்ச்சியில் விழும் ஹீரோ,பின்பு சுதாரிக்கிறான்.எட்டு விசயங்களை தான் கவனித்துக்கொண்டு அதிகப்படியான இரண்டு விசயங்களை பணயக்கைதிகளுக்கு பகிர்ந்தளிக்கிறான்.இந்தமுறை சூழ்ச்சிவலையில் விழும் வில்லன் தன் கும்பலுடன் பலியாகிறான்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக