ஞாயிறு, 5 ஜூலை, 2015

பெண் எனும் தூண்டில் புழு !

ஆதி மனிதன் குழவாகவே வேட்டையாடத் தொடங்கினான். அதிக சலசலப்பை ஏற்படுத்தியதால் அவனது இரை உஷாரானதால் அவன் தன் குழவில் திறமையான வேட்டைக்காரர்களை வைத்துக் கொண்டு பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைக்க விரும்பியே குகை வாழ்வை தேர்ந்தெடுத்தான்.குகை வாழ்வை தேர்ந்தெடுக்க மற்றொரு காரணமும் இருந்தது.

பெண்களின் மாதவிலக்கு காலங்களில் வன விலங்குகள் அதிகமாக தாக்குவதை அனுபவரீதியாக கண்டு கொண்டது தான் அந்த காரணம். விலங்குகளை உசுப்பும் ரத்த வாடையை தவிர்க்க இந்த குகை வாசம் உதவியது.

வேட்டை விலங்குகளுக்காக நெடுந்தூரம் அலைந்து திரிய விரும்பாத ஒரு புத்திசாலி விலங்குகள் தங்களை தேடி வந்தால் வேட்டையாடுவது சுலபம் என்று யோசித்து பெண்களை தூண்டில் புழுவாக உபயோகிக்க முயற்சி செய்கிறான். குகைக்கு வெளியே ஒரு குடிசையைப் போட்டு அதில் மாதவிலக்கான பெண்ணை கையில் தற்காத்துக் கொள்ளும் ஆயுதங்களுடன் தங்க வைக்கிறான். அவளை வேட்டையாட வரும் விலங்குகளை மறைந்திருக்கும் மற்றவர்கள் கொன்று குழவாக பசியாறுவார்கள். அந்த பழக்கம் வீடு கட்டி வாழும் போது மாத விலக்கான பெண்ணை தனியாக அரிவாள், உலக்கை போன்றவற்றுடன் படுக்க வைக்கும் பழக்கமாக மாறியிருக்க வேண்டும்.

வயது வந்த பெண்களுக்கு சடங்கு செய்யும்போது தாய்மாமன் குடிசை கட்டும் போது அதன் மேல் வில், அம்பு வைக்கும் வழக்கம் தொன்மரபின் மறக்கப்பட்ட எச்சமாகும். இந்த சிந்தனை ஒரு சடங்கின் போது தோன்றியது. அன்று விலங்குகளை கவரும் இரையாக இருந்த பெண் இன்றைய நுகர்வோர் உலகின் விளம்பரங்களிலும் அதே பாத்திரத்தை வகிப்பது காலம் மாறினாலும் பெண்களின் நிலை மாறவில்லை என்பதையே காட்டுகிறது. தான் ஒரு இரை, கவர்ச்சி பொருளாகத்தான் பயன்படுத்தப்படுகிறோம் என்று பெண் உணராதவரை அவர்களுக்கு விமோசனமோ, விடுதலையோ கிடையாது. கிடைக்காது. வேட்டி, பனியன் விளம்பரத்தில் பெண் நடிக்க வேண்டிய தேவை எங்கிருந்து, யாரால் உருவாக்கப்படுகிறது என்பதைப் பற்றி நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக