திங்கள், 4 ஜூலை, 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 10

தர்க்க சாஸ்திரி

ஏதோ ஒரு கடல் கொள்ளையனால் புதைத்து வைக்கப்பட்ட ஒரு தங்க புதையல் இரண்டு நாடுகளுக்கு இடையிலான சதுரங்க போட்டியில் முக்கியமான இடத்தை பிடித்திருந்தது.

ஏதோ யோசனையில் இருந்த ஆதித்தன்" யார் இந்த சிகப்பு முகமூடி ? ரகசிய தீவின் ஆளுநரான மதி மாறனை அவன் எதற்காக எதிர்க்க வேண்டும்?" என்றான்.

நீலன் தன் தொண்டையை ஓரு முறை கனைத்து கொண்டான். ஆதித்தனின் கேள்விக்கு முழுதாக விடை தெரியாவிட்டாலும் தனக்கு தெரிந்த விசயங்களை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் அப்படியே தன் நண்பனிடம் சொல்லி விட முடிவு செய்தான்.

"ஆதித்தா! நீ கேட்ட கேள்விக்கு எனக்கு முழுமையாக பதில் தெரியாது. ரகசிய தீவில் நான் சரக்குகளை ஏற்றி இறக்கும்போது அவனை பற்றி மக்கள் பேசுவதை பலமுறை கேட்டிருக்கிறேன். அவன் ஒரு ஏழை பங்காளன். இருப்பவர்களிடம் எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுப்பவன்"

"அப்படியானால் அவன் என் ஜாதி என்று சொல்" என்றான் ஆதித்தன். தன்னுடைய கொள்கைகளை அப்படியே பின்பற்றும் அந்த சிகப்பு முகமூடி மனிதனை நினைத்து ஆதித்தன் மகிழ்ச்சியடைந்தான்.

"ஆமாம். அவன் உன்னுடைய ஜாதிதான். வறியவர்களின் துயரை துடைப்பதில் முதலில் நீளும் கைகள் அவனுடையவை. அவன் அந்த தீவிலேயே பிறந்து வளர்ந்தவன் என்பது மட்டும் உண்மை. ஆனால் அவனது ஊர், பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவன் எங்கே தங்கியிருக்கிறான், அவனுடைய கூட்டாளிகள் யார்? என்று எந்த தகவலும் யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு விசயம் நிச்சயம். அவனது எதிரி ரகசிய தீவின் ராஜ பிரதிநிதியான மதி மாறன் தான். அவனது எதிரிகள் அனைவரும் சிகப்பு முகமூடிக்கு உதவி செய்வதாக தகவல் .இன்னொரு விசயத்தை மக்கள் ரொம்பவும் தீர்க்கமாக நம்புகிறார்கள். அது சிகப்பு முகமூடிக்கு மரணம் இல்லை என்பது "

" மனிதனாக பிறப்பவன் இறப்பது இயற்கைதானே? இவன் மட்டும் எப்படி விதிவிலக்காக மாறினான்" என்றான் யவனன்.

"அதுதான் எனக்கும் தெரியவில்லை.மதிமாறன் ஒரு முறை பொறி வைத்து சிகப்பு முகமூடியை கையும் களவுமாக பிடித்து அவனை கொன்று எரித்து விட்டதாக கேள்வி. சில மாதங்களுக்கு பிறகு அந்த மாயாவி மீண்டும் உயிரோடு வந்து விட்டான். முன்பை விட அதிகமாக இப்போது மதிமாறனுக்கு இடைஞ்சல் தந்து கொண்டிருக்கிறான்"

" அவன் ஏன் குறிப்பாக மதி மாறனை எதிர்த்து புரட்சி செய்கிறான்?"

"தீவின் விடுதலை தான் அவனது லட்சியம். ஆனால் எனக்கென்னவோ இருவருக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. சிகப்பு முகமூடி தேடும் அதே தங்க புதையலை மதிமாறனும் தேடிக் கொண்டிருக்கிறான். அவனது வலது கையான ஒருவன் அதற்காக முழு மூச்சாக அலைந்து கொண்டிருக்கிறான்"

"மார்க்கதரிசியின் தங்க புதையலை அடைய ஏகப்பட்ட பேர் கிளம்பியிருப்பார்கள் போலத் தெரிகிறதே?"

"எனக்கு தெரிந்து இப்போதைக்கு இவர்கள் இருவரும் தான் போட்டியில் உள்ளனர்"

"கடவுளின் முழு ஆசீர்வாதமும் உனக்கு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது நீலா!" என்றான் ஆதித்தன்.

" எதை வைத்து என்னை கடவுளின் ஆசிர்வாதம் பெற்றவன் என்று குறிப்பிடுகிறாய்? நானோ தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்றில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறேன். நீயோ என்னை பகடி செய்கிறாய்"

"இல்லை. பல கெட்டதுகள் நடக்கும் போது அவற்றின் நடுவே ஓன்றிரண்டு நல்ல விசயங்களும் நடந்து விடும். அந்த முகமூடியை பற்றி நீ சொன்ன விசயங்களை நன்றாக அலசி ஆராய்ந்ததில் நஞ்சுண்டனுக்கு பாதகமாகவும் உனக்கு சாதகமாகவும் ஒரு விசயம் இருக்கிறது." என்றான் ஆதித்தன்.

நீலனின்புருவங்கள் முடிச்சிட்டன. யவனன் ஆதித்தன் பேசுவதை கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.

"நஞ்சுண்டன் நமக்கு முன்பாக ரகசிய தீவை அடைந்திருப்பான் இல்லையா?" என்றான் ஆதித்தன் பூடகமாக .

" அவன் நாம் ரகசிய தீவை அடையும் முன்பாக அவன் தீவை அடைந்திருப்பான். அவன் கையில் முழுதாக இரண்டு நாட்கள் இருக்கின்றன. கப்பலின் பெயரையும், வடிவமைப்பையும் மாற்றி விட்டதால் அந்த கப்பல் தான் முத்தழகி என்று யாருக்கும் தெரியாது. ஆயுதம் வந்த கப்பல் இது தான் என்று மதிமாறனுக்கும் தெரியாது. அவன் வழக்கமாக வரும் முத்தழகியில்தான் ஆயுதம் வரும் என்று நினைத்து கொண்டு அசட்டையாக இருப்பான் "

"மதிமாறனிடம் ஆயுதங்களை ஓப்படைப்பதால் நஞ்சுண்டனுக்கு பலன் எதுவுமில்லை"

"ஆமாம். ஆயுதங்களை நஞ்சுண்டன் சிகப்பு முகமூடியிடம் தான் விற்க முனைவான். இவ்வளவு நேரம் அவன் வாளாவிருக்க மாட்டான். அவன் சிகப்பு முகமூடியிடம் பேரம் பேச துவங்கியிருப்பான்."

"அதற்கு வாய்ப்பே இல்லை நீலா.சிகப்பு முகமூடியார் எங்கிருக்கிறான் என்று யாருக்கும் தெரியாது என்று சொல்கிறாய். அவன் எங்கே இருக்கிறான் என்பது தெரிந்தால் தானே நஞ்சுண்டன் அவனை சந்தித்து பேரம் பேச முடியும்?"

"ஆகா! என்ன ஒரு யூகம் ? இதற்குத்தான் ஆதித்தன் வேண்டும் என்பது !" என்ற நீலனின் முகத்தில் நிம்மதி பரவியது.

ஆதித்தனின் மதியுகத்தை கண்ட யவனன் வாயடைத்து போயிருந்தான். ஆதித்தனை சாதாரணமாக எடை போட்டதன் முட்டாள்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் அவன்.

"சிகப்பு முகமூடியை நஞ்சுண்டனால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதது நமக்கு சாதகமான முதல் விசயம். இரண்டாவது விசயம் நஞ்சுண்டன் சிகப்பு முகமூடியை பார்த்து பேசிய சில நாட்களிலேயே ஆயுதங்களை விற்று விட்டு கிடைத்த பணத்துடன் ரகசிய தீவிலிருந்து கிளம்பி விடுவான்"

" எதை வைத்து இப்படி கூறுகிறாய்?" என்றான் குழப்பத்துடன் யவனன்.

"அதற்கு பலமான காரணம் இருக்கிறது. முத்தழகி ரகசிய தீவிற்கு வர வேண்டிய நேரத்தில் வரவில்லை. ஆனால் அதே நேரம் வேறோரு கப்பல் ரகசிய தீவிற்கு வந்து சேருகிறது. அதன் பணியாளர்கள் முத்தழகியில் வேலை செய்த அதே பணியாளர்கள். மேலும் நஞ்சுண்டன் ரகசிய தீவில் இறக்க வேண்டிய சரக்குகளை இறக்கிவிட்டு அதற்கான பணத்தை பெற்று கொள்வான். பணியாளர்கள், முத்தழகியின் அதே சரக்கு இரண்டும் சேர்ந்து உருமாறிபெயர் மாறி வந்திருப்பது முத்தழகி தான் என்று வணிகர்களுக்கு தெரிந்துவிடும். அதே விசயம்மதிமாறனுக்கு தெரிந்தால் ஆயுதங்களை தேடி நஞ்சுண்டனை தேடிப் பிடிப்பான். ஆயுதங்களை சிகப்பு முகமூடியிடம் விற்று விட்ட நஞ்சுண்டன் அவனிடம் பிடிபட்டு சாக விரும்ப மாட்டான். அதனால் கிடைத்த விலைக்கு ஆயுதங்களை விற்று விட்டு தப்பியோட வே முனைவான். அவன் சிகப்பு முகமூடியை கண்டுபிடிக்க தாமதமாகும் நாட்கள் தான் நமக்கான அவகாசம் .அதற்குள் நாம் விரைந்து செயல்பட்டாக வேண்டும்" என்றான் ஆதித்தன்.

"ஆதித்தா! நீ சொல்வது தர்க்கபூர்வமாக சரியாகத் தான் இருக்கிறது. நஞ்சுண்டன் தாமதிக்கும் ஓவ்வொரு நாளும் நமக்கு வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. எப்படியாவது முத்தழகியை மீட்டு விடுவேன்" என்றான் நீலன்.

"நாம் மூவர் தான் இருக்கிறோம். நம்மால் எப்படி ? " என்று இழுத்தான் யவனன்.

"அவநம்பிக்கை வேண்டாம் இப்பாலஸ்.ஆதித்தன் திட்டமிடுவதை மட்டும் நாம் செய்தால் போதும். வெற்றி நிச்சயம் " என்று சிரித்தான் நீலன்.

அதன் பிறகு நீலன் எதுவும் பேசவில்லை. அவனது மனம் அமைதியில் ஆழ்ந்தது. கள்வர் புரத்து கள்வனின் உதவியால் தன்னுடைய முத்தழகியை எப்படியும் மீட்டு விடலாம் என்பதால் அவன் தன்னுடைய முழு கவனத்தையும் கப்பலை செலுத்துவதில் காட்டினான்.

இரண்டு நாட்கள் பயணத்திற்கு பின் கழுகு ரகசிய தீவின் துறைமுகத்தை அடைந்தது. கப்பலை நங்கூரமிட்டு நிறுத்திய நீலன் கப்பலின் மேல் தளத்திற்கு அவசர அவசரமாக ஓடினான். ஆதித்தன் கொடுத்த கண் மருந்தை இரண்டு நாட்களாக பயன்படுத்தியிருந்ததில் அவனுடைய கண் பார்வை பாதி குணமாகியிருந்தது. தன் கண்களுக்கு நேராக கையை வைத்தவன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நின்றிருந்த கப்பல்களை குத்துமதிப்பாக பார்க்க ஆரம்பித்தான்.

அவன் தன்னுடைய உருமாறியமுத்தழகி கப்பலைத் தான் அவ்வளவு ஆர்வமாக தேடுகிறான் என்பதை உணர்ந்து கொண்ட ஆதித்தன் தனக்குள் புன்னகைத்து கொண்டான்.

" என்ன நீலா.? உன்னுடைய மனைவியை இனம் கண்டு கொண்டு விட்டாயா?" என்றான் குறுநகையுடன் ஆதித்தன்.

"ஓராயிரம் பார்வையில் அவள் பார்வையை நான் அறிவேன். ஆயிரம் கப்பல்களுக்கு நடுவிலும் என்னுடைய முத்தழகியை என்னால் இனம் கண்டுகொள்ள முடியும். இந்த பார்வை வேறு சதி செய்கிறது "

"மருந்து போட்டும் மனைவியை இனம் காண முடியவில்லையா? மருந்து போடாவிட்டால் வேறு கப்பலை என்னுடைய கப்பல் என்று சொல்வாய் போலிருக்கிறதே?" என்று சிரித்தான் யவனன்.

இருவரின் சிரிப்பையும் கண்டுகொள்ளாத நீலன் கப்பலிலிருந்து தரையில் கால் பதித்தான்.

"முத்தழகியின்மீகாமனை இங்கே இருக்கும் யாராவது அடையாளம் கண்டு கொண்டு விட்டால் என்னாவது?" என்றான் ஆதித்தன்.

"இதற்காக நான் மாறுவேடம் போட முடியுமா? என்னை எப்போதும் தலைபாகையோடு தான் எல்லோரும் பார்த்து பழகியிருக்கிறார்கள். அந்த தலைபாகை என்னுடைய அடையாளமாகவே மாறிவிட்டது. நஞ்சுண்டன் அதை பிடுங்கி சென்று விட்டதால் தலை பாகை அணியாத என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. இயல்பான தோற்றத்தில் இருப்பது தான் என்னுடைய மாறுவேடம் " என்று சிரித்தான் நீலன்.

அவன் சொல்வது உண்மை தான் என்பது அவனை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாததில் தெரிந்தது.

மூவரும் துறைமுகத்தில் நடக்க தொடங்கிய போது அந்த விசித்திர சத்தம் கேட்டது. அது ஒரு வாத்தியத்தின் ஓசை. கூட்டமாக இருந்த அந்த திசையில் மூவரும் நடந்தனர். அங்கே ஒரு கலை கூத்தாடி குழுவினர் வித்தை காட்டி கொண்டிருந்தனர். ஒருவன் தன் உயரத்திற்கு இரண்டு மனித உருவ பொம்மைகளை முன்னும் பின்னுமாக மூங்கில் கழியில் கட்டி அதை தன்னுடைய கையில் வைத்திருந்தான். அவன் நடந்தால் அவையும் நடந்தன. மூன்று பேர் வரிசையாக நடப்பதை போல் அந்த காட்சி இருந்தது.

ஒரு பெண் கயிற்றில் நடந்து கொண்டிருந்தாள்.

கடோத்கஜன் ஒருவன் இரும்பு கம்பியை பலத்த கரகோசங்களுக்கு நடுவே தன் கழுத்தின் பின்புறமாக வைத்து முன்புறமாக வில்லாக வளைத்தான்.

அதை பார்த்த நீலன்" இதுவெல்லாம் ஒரு வித்தையா? கொல்லன் பட்டறையில் சொற்ப காசை கொடுத்தால் வளைத்து தரப் போகிறான்" என்றான்.

கூட்டம் கொல்லென்று சிரித்தது.

கடோத்கஜன் நீலனை திரும்பி பார்த்தான். அவன் கண்களில் இருந்த கோபத்தை பார்த்த நீலனின் முதுகெலும்பு ஜில்லிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக