புதன், 20 ஜூலை, 2022

ரகசிய தீவு

தேடாமல் கிடைத்தது,
தனக்கு பின்னால் நின்ற நிழலுருவை பார்க்காமலேயே " நீ வருவாய் என்று எனக்கு தெரியும் " என்றான் மதி மாறன் .
"நான் தான் வந்திருக்கிறேன் என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?" என்றது ஓரு இனிமையான குரல். அதற்கு பிறகு மதிமாறனின் பின்புறமிருந்து இரண்டு வளை கரங்கள் அவனது தோளில் விழுந்து அவனை அணைத்து கொண்டன.
மதிமாறன் அந்த கரங்களை ஆதுரத்துடன் பற்றி கொண்டான். "இந்த இரவு நேரத்தில் என்னை பார்க்க உன்னையன்றி யார் வருவார்கள் ரத்னாவதி? உன் கூந்தலில் உள்ள மல்லிகைப் பூவாசமும், உன் உடலில் எழும் சுகந்த மணமும் நீ வரும் முன்பே என் நாசியை வந்தடைந்து விடுகின்றன. அதன் பிறகு ஆளை கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமாக இருப்பதில்லை" என்றான் மதி மாறன் .
" குறும்புகாரர்தான் நீங்கள் " என்ற ரத்னாவதியின் கைகளை பிடித்து ஒரு சுழற்று சுழற்றி விட்டான் அவன்.
அவள் அழகாக ஓரு சுற்று சுற்றி அவனது மடியில் வந்து விழுந்தாள்.
" ரத்னா" என்றான் மோகப் பெருமூச்சுடன் மதிமாறன்.
"சொல்லுங்கள்" என்றாள் ரத்னாவதி அவன் முகத்தை ஆசையுடன் பார்த்தபடி.
" சொல்வதற்கு எதுவுமேயில்லை ரத்னா. நீ என் வாழ்வில் வந்தது நான் செய்த அதிர்ஷ்டம்"
"இல்லை. நான் தான் அதிர்ஷ்டம் செய்தவள். இழி தொழில் செய்து வந்த என்னை உங்களுக்கு மட்டுமே உரிமையாக்கி கொண்டு விட்ட உத்தமர் நீங்கள். யாருக்கு வரும் இந்த பெருந்தன்மை " என்றாள் ரத்னாவதிநெக்குருகலுடன்.
போடி பைத்தியகாரி . என் உடல் தேவைக்காகத் தான் நான் உன்னை பயன்படுத்தி கொண்டிருக்கிறேன். உன் மீதான மோகம் எப்போது குறைகிறதோ அப்போது உன்னுடைய பழைய தொழிலுக்கே நீ திரும்ப சென்று விடுவாய்.அதுவரை என்னுடைய தயவால் இந்த அரச போகங்களை அனுபவித்து கொள் என்று மனதில் நினைத்து கொண்ட மதிமாறன் " உன் பழைய வாழ்க்கையை பற்றி இப்போது ஏன் பேசுகிறாய் ரத்னா ? அதை எல்லாம் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடு நாம் நம்முடைய புதிய வாழ்க்கையை பற்றி சிந்திப்போம்" என்றான்.
"நீங்கள் இருக்கும் வரை என்னுடைய வாழ்க்கைக்கு என்ன குறை? ஆமாம். இன்று துறைமுகத்தில் அந்த முகமூடி மீண்டும் தோன்றியதாக கேள்விப்பட்டேன்"
"அதற்குள் விசயம் உன் வரை வந்துவிட்டதா? பரவாயில்லை. நாட்டு நடப்பை விரல் நுனியில் வைத்திருக்கிறாய். அந்த முகமூடி இன்றும் என் வழியில் குறுக்கிட்டான். கொஞ்சம் ஏமாந்திருந்தால் என் உயிரையும் எடுத்திருப்பான். நல்ல வேளையாக விபரீதம் எதுவும் நடக்கவில்லை."
" அவன் யார் என்று யாருக்கும் தெரியவில்லையே?"
"அவனைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவனைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவன் பெயர் கரிகாலன் அவனுக்கும் எனக்கும் தீர்க்கப்பட வேண்டிய கணக்கு ஓன்று மீதமிருக்கிறது. அந்த கணக்கை அவன் உயிரைக் கொண்டு தான் தீர்க்க வேண்டும். ஏற்கனவே ஒரு முறை அந்த கணக்கை நான் தீர்க்க முயற்சி செய்தேன். அது எப்படியோ தப்பிதமாக முடிந்து விட்டது. பயல் உயிர் பெற்று மீண்டும் வந்து விட்டான்."
"நாம் வரியாக வசூலிக்கும் பணம், ஆயுதங்கள் முதலியவற்றை அவன் தேடித் தேடி கொள்ளையடிக்கிறான். அந்த ரகசியங்கள் எப்படி அவனுக்கு தெரிகின்றன என்பது தான் புதிராக இருக்கிறது."
"எனக்கும் அதே சந்தேகம் இருக்கிறது. நம் நிர்வாகத்தில் இருக்கும் முக்கியமான யாரோ ஓரு நபர் அவனுக்கு தேவையான விசயங்களை கொடுத்து உதவி செய்கிறார்கள். அவனை கண்டுபிடித்து விட்டால் முகமூடியின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கி விடும்" என்றான் மதி மாறன் .
"இந்த முகமூடி விசயத்தில் கவனம் செலுத்தாமல் கருணாகரன் என்ன தான் செய்கிறார்?"
"அவனும் முடிந்த வரை முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறான். இறுதியாக இப்போது ஒரு யோசனை சொல்லியிருக்கிறான். சிகப்பு முகமூடியை பிடிக்க பெரும் தொகை ஓன்றை அறிவிக்கும் படி சொல்லியிருக்கிறான். பணத்திற்கு ஆசைப்பட்டு யாராவது துரோகிகள் அவனை காட்டி கொடுப்பார்கள் என்று நம்புகிறான். அதையும் செய்து பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன்"
"உங்கள் நிம்மதியை குலைக்கும் அந்த முகமூடியை நினைத்தால் எனக்கு கோபம் கோபமாக வருகிறது" என்றாள் ரத்னாவதி .
"கோபப்படும் போது கூட நீ அழகாகத் தான் இருக்கிறாய் ரத்னா. நான் ராஜ்ஜிய விவகாரங்களில் நொந்து போய் தான் ஆறுதலுக்காக இங்கு வருகிறேன். எனக்கு இதமாக மனோகரமான வார்த்தைகளை பேசி என் மனதிற்கு ஆறுதல் தருவதை விட்டு விட்டு நீயும் அரசியல் பேசுகிறாய் ரத்னா. அது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை" என்றான் மதிமாறன் முகச் சுழிப்புடன்.
"என்னை மன்னித்து விடுங்கள்.உங்கள் மனதிற்கு ஆறுதலை நான் தருகிறேன். வாருங்கள் நந்தவனத்தில் சற்று நேரம் உலாவி வரலாம்"
"இப்போது சொன்னாயே இது தான் சரி" என்று சிரித்தான்மதிமாறன்.
அதே நேரம் வில்லவன் சந்திரவதனாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
"பெண்ணே! நாம் படுக்கைக்கு செல்லும் நேரம் நெருங்கி விட்டது. நீ எதையும் சாப்பிட மறுக்கிறாய். வெறும் வயிற்றோடு படுக்கைக்கு செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல "
"ஆமாம். சந்திரவதனா! உன் கவலைகளை ஓரம் கட்டி வைத்துவிடு. கொஞ்சமாவது சாப்பிடு.பார்த்திபன் எல்லா வற்றையும் பார்த்து கொள்வான்." என்றாள் அவனது மனைவி .
" என் தந்தை நாளை என்னை தேடிக் கொண்டு வருவார். அந்த கயவன்மதிமாறன் என் மீது ஒரு கண் வைத்திருக்கிறான். அவரை பணயமாக பிடித்து வைத்து கொண்டு என்னை அடைய முயற்சி செய்வானோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது." என்றாள் குழப்பத்து சந்திரவதனா
"கவலைப்படாதே பெண்ணே! நாளை காலையில் பார்த்திபனின் ஆட்கள் துறைமுகத்தில் காத்திருப்பார்கள். உன் தந்தையை கண்டுபிடித்து கூட்டி வருவதே அவர்களின் தலையாய பணி. நாளை உன் தந்தை உன் அருகில் இருப்பார். இப்போது கொஞ்சமாவது சாப்பிடு"
இருவரின் ஆறுதலால் சமாதானம் அடைந்த சந்திரவதனா சாப்பிட இசைந்தாள்.
நதிகளும் வரலாறும் எப்போதும் நேராக செல்வதில்லை. அதே போல் நாம் நினைத்ததும் நடப்பதில்லை. இந்த உரையாடல் நடந்து கொண்டிருந்த அதே நேரம் செங்கோடன் ரகசிய தீவில் கால் பதித்திருந்தான்.
செங்கோடன் சங்கிலியை அடமானம் வைத்திருந்த நபர் வெகு விரைவிலேயே ஊருக்கு திரும்பி வந்து சேர்ந்து விட்டார். அவரிடமிருந்து நகையை மீட்டு கொண்டவன் அவசர அவசரமாக துறைமுகத்திற்கு விரைந்தான். அவனுடைய அதிர்ஷ்டம் ரகசிய தீவிற்கு செல்லும் ஒரு வணிக கப்பலில் அவனுக்கு இடம் கிடைத்ததுதான். கப்பலின் சுமைகள் இறக்கப்பட்டு விட்டதால் எடை குறைந்த அந்த வணிக கப்பல் கடலில் வெகு விரைவாகவே பயணித்தது. வேகமாக வீசிய  கடல் காற்றும் அதன் வேகமான பயணத்திற்கு துணை புரிந்தது.
இரண்டின் ஓத்தாசையால் அவன் பயணித்த கப்பல் குறித்த நேரத்திற்கு முன்பாகவே ரகசிய தீ வை வந்தடைந்து விட்டது. இருள் கவியும் நேரத்தில் ரகசிய தீவில் இறங்கிய செங்கோடன் தன்னுடைய ஆட்களை தேட ஆரம்பித்தான்.
வழக்கமாக அவனது ஆட்கள் அரசாங்க சத்திரங்களில் தான் தங்குவார்கள். அதனால் அவனது முதல் தேடல் அரசாங்க சத்திரமாகவே இருந்தது. அங்கே கிடைத்த பதில் அவனுக்கு ஏமாற்றத்தை தந்தது.
இங்கே வராவிட்டால் வேறு எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்த செங்கோடன் எதிர் பட்டவர்களிடம் தன்னுடைய குழுவை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். சொற்ப நேரமே அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்து விட்டதால் அதைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
சிகப்பு முகமூடியை பற்றி நஞ்சுண்டன் விசாரிப்பதை பார்த்த பார்த்திபனின் ஆட்களிடமே கூட அவன் தன் குழுவினரை பற்றி விசாரித்தான். காலையில் வரும் நபருக்காக காத்திருந்த அவர்களும் கலை கூத்தாடி குழுவைப் பற்றி விசாரிக்கும் அவனை அசட்டையாக நினைத்து கடந்தனர்.
தன் குழுவை தேடி களைத்து போன அவன் கடைசியாக ஒரு காவலனை அணுகினான்.
"ஐயா' எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?"
"சொல் .! என்ன வேண்டும் உனக்கு?" என்றான் அதிகார தோரணையுடன் அவன்.
"நான் கலை கூத்தாடிகள் குழுவை சார்ந்தவன். எனக்கு முன்பாக இங்கே வந்த என் குழுவினரை காணவில்லை. அவர்களை நீங்கள் எங்காவது பார்த்தீர்களா?"
"அவர்களை பார்க்க வேண்டுமென்றால் நீ சிறைசாலைக்குத் தான் போக வேண்டும்"
"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றான் அதிர்ச்சியுடன் செங்கோடன்.
காவலன் நடந்தவற்றை விளக்கி கூறினான்.
" இப்படி ஒரு சம்பவத்தை நான் எதிர்பார்க்கவேயில்லை." என்றான் உடைந்த குரலில் செங்கோடன்.
"உன்னை பார்த்தால் நல்லவனை போல் தெரிகிறது. நீயும் அவர்களில் ஒருவன் என்று ஊருக்குள் உளறிக் கொண்டு திரியாதே! உன்னையும் கைது செய்து விடுவார்கள். நானே உன்னை கைது செய்வேன். ஆனால் உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது என்பதால் விட்டு செல்கிறேன்"
"அவர்களை காப்பாற்ற வேறு ஏதாவது வழிகள் இருக்கிறதா?"
"ஓரே வழிதான் இருக்கிறது. நீ மதி மாறனை சந்தித்து அவனது மனம் மகிழம் படி எதாவது பரிசை கொடுத்தால் அவன் மனம் இளகி உன் ஆட்களை விடுவிக்க உத்தரவிடலாம். எதற்கும் முயற்சி செய்து பார்"
" நல்லது. அப்படியே செய்கிறேன்" என்ற செங்கோடன் அவனிடமே வழியை விசாரித்து கொண்டு மதிமாறனின் மாளிகையை நோக்கி நடந்தான்.
வாசலில் யாரோ காவலர்களுடன் மல்லுகட்டுவதை கேட்ட மதிமாறன் "அங்கே என்ன சத்தம்?" என்றான்.
"அந்த கலை கூத்தாடிகளின் சார்பாக ஒருவன் வந்திருக்கிறான். உங்களை பார்த்தே தீர வேண்டும் என்கிறான்"
"அவனை உள்ளே அனுப்பு"
உள்ளே வந்த செங்கோடன் வினயமாக வணங்கி விட்டு " வணக்கம் ஐயா" என்றான்.
"யார் நீ?"
" காலையில் நீங்கள் கைது செய்த கலை குழவின் தலைவன் நான். என் பெயர் செங்கோடன் "
" இருக்கட்டும். இங்கே எதற்காகவந்தாய்?"
" என் குழுவை மீட்டு ேபாக "
"அது அவ்வளவு எளிதல்ல "
"உங்களுக்காக நான் ஒரு அன்பளிப்பை கொண்டு வந்திருக்கிறேன்"
"என்ன அது?"
செங்கோடன் அந்த தங்க சங்கிலியை எடுத்து நீட்டினான்.
அதை பார்த்ததும் மதிமாறனின் முகம் மாறியது.
மதிமாறனை ரகசிய தீவின் ராஜ பிரதிநிதியாக தயாநிதி எதற்காக நியமித்து வைத்தானோ எதை இருபது வருடங்களாக அவன் வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறானோ அந்த தங்க சங்கிலி ஒரு சாதாரண கலை கூத்தாடியின் கையில் இருப்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவன் எதை தேடி கொண்டிருந்தானோ அது தேடாமலேயே இப்போது கிடைத்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக