புதன், 20 ஜூலை, 2022

ரகசிய தீவு

ஓரு கல்லில் மூன்று மாங்காய்கள்
ெசங்கோடன் தன் குழுவை மீட்க லஞ்சமாக கொடுக்க முன் வந்த அந்த தங்க சங்கிலியை பார்த்த மதிமாறன் அதிர்ச்சியில் கல்லாக உறைந்து நின்றான். மலைநாட்டு அரசவையில் தனித்த செல்வாக்கு கொண்ட தயாநிதி எதை தேடி அலைந்து கொண்டிருக்கிறானோ எதை தேட தன்னை ஆளுநராக நியமித்தானோ அந்த பொருள் இப்போது தேடாமலேயே அவன் கண் முன்னால் இருந்தது.
அவனது விக்கித்து திகைத்து போன பார்வையை பார்த்த செங்கோடன் " ஐயா! இந்த ஏழையிடம் இருக்கும் கடைசி சொத்து இதுதான். இதுவரை நான் இந்த நகையை பிரிந்து இருந்ததில்லை. இப்போது என் குழுவினர் முக்கியம் என்று நினைப்பதால் வேறு வழியின்றி இதை உங்களுக்கு பரிசாக தருகிறேன். இதை வாங்கி கொண்டு என் குழுவினரை நீங்கள் விடுவிக்க வேண்டும்" என்றான் குரலில் பணிவை காட்டி.
கற்சிலை போல் எந்த உணர்வும் இல்லாமல் நின்று கொண்டிருந்த மதிமாறன் அவனுடைய பேச்சை கேட்டு சுய நினைவுக்கு வந்தான்.
"உன்னுடைய பெண் .. அவள் பெயர் கூட?" என்று பெயர் நினைவுக் கு வராமல் குரலை இழுத்தான்மதிமாறன்
"சந்திரவதனா" என்று அவன் மறந்து போன பெயரை எடுத்து கொடுத்தான் செங்கோடன்
"ஆம். அதுதான் அவளது பெயர் .இப் போது நினைவுக் கு வந்துவிட்டது. அவள்... அந்த சந்திரவதனா உன்னுடைய வளர்ப்பு மகள் தானே?" என்றான் மதி மாறன் துடிக்கும் இதயத்தை கட்டுப்படுத்தியபடி.
இந்த முறை செங்கோடனின் முகத்தில் இருள் படிந்தது. யாருக்கும் தெரியாமல் இத்தனை நாட்களாக தான் பொத்தி வைத்திருந்த ரகசியம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்ற அதிர்ச்சி அவனை தாக்கியது.
"அது எப்படி உங்களுக்கு தெரியும்?"
"எதிர் கேள்வி கேட்காதே! அவள் உன்னுடைய வளர்ப்பு மகள்தானே?"
"ஆமாம்.வ ளர்ப்பு மகள் தான்."
"அவள் உனக்கு எப்படி கிடைத்தாள்?"
"அது வந்து "
"எனக்கு தேவை உண்மை மட்டும் தான். பொய் சொல்லி மாட்டி கொள்ளாதே" என்றான் மதி மாறன் மிரட்டும் தொனியில் .
"இல்லை. நான் உண்மையை சொல்லிவிடுகிறேன். அவள் என்னுடைய வளர்ப்பு மகள் தான். ரத்னபுரியில் நாங்கள் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது என் மனைவி பூரண கர்ப்பிணி . கடற்கரை நகரம் ஒன்றில் தான் எங்களுடைய நிகழ்ச்சி நடந்தது. ஒரு நாள் இரவு என் குழுவினர் மது போதையில் மயங்கி கிடந்தனர். என் மனைவிக்கு உள்ளூர் மருத்துவச்சி உதவியுடன் பிரசவம் பார்த்தேன். அந்த பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. குழந்தை இறந்து பிறந்ததை எப்படி என் மனைவியிடம் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ரோஜாப்பூ போல் இருந்த குழந்தையின் உடலை எடுத்து கொண்டு அதை புதைக்க கடற்கரைக்கு போனேன். அங்கே என் குழந்தையின் உடலை புதைத்து விட்டு கடவுளை சபித்து விட்டு நான் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தேன்.
அப்போதுதான் கடவுள் என் மீது மனம் இறங்கினார். திடிரென்று அந்த இருளில் ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்டேன். ஒரு வேளை மயங்கி கிடந்த என் குழந்தையைத் தான் நான் இறந்து விட்டதாக நினைத்து புதைத்து விட்டேனோ என்று பதறி போனேன். குழந்தையை புதைத்த இடத்தில் ஈர மண் அப்படியே இருந்தது. அங்கேயிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. இருள் கவிழ்ந்த கடலில் அந்த அழுகை ஓசை கேட்பதை பிறகுதான் உணர்ந்தேன். நிலவின் வெளிச்சத்தில் ஒரு சிறு படகில் ஒரு குழந்தை இருப்பதை கண்டேன். அதை நான் எடுத்து வளர்க்க ஆரம்பித்தேன். எல்லோரும் அதை என்னுடைய சொந்த குழந்தையாகவே நினைத்தனர். நிலவின் வெளிச்சத்தில் அந்த குழந்தை கிடைத்ததால் அதற்கு சந்திரவதனா என்று பெயர் வைத்தேன். அந்த குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒரே ஆபரணம் இதுதான். அதை நான் எடுத்து வைத்து கொண்டு என் ஏழ்மை நிலையின் போது பயன்படுத்தி கொண்டு விட்டேன்" என்றான் செங்கோடன்.
"நல்ல காரியம் செய்தாய்செங்கோடா! நீ வளர்த்தது ஒரு பெண்ணையல்ல. என் எதிர்காலத்தின் அதிர்ஷ்டத்தை" என்று சிரித்தான்மதிமாறன்.
"எனக்கு ஓன்றும் புரியவில்லை பிரபு" என்றான் செங்கோடன் குழப்பத்துடன் .
"உனக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் நான் என்னுடைய கதையை கூற வேண்டும். அப்போதுதான் கதையின் முக்கிய திருப்பம் நீ என்பது உனக்கு புரியும். " என்ற மதிமாறன் தன்னுடைய கதையை கூற தொடங்கினான்.
மலை நாட்டின் செல்வ வளம் மிகுந்த குடும்பம் ஒன்றில் பிறந்தவன் தான் மதி மாறன் . பிறந்ததிலிருந்தே செல்வ செழிப்பில் வளர்ந்ததால் யாரையும் மதிக்காமல் தான் தோன்றித்தனமாக நடந்து வந்தான். வாலிப வயதில் மது, மங்கை, சூது போன்ற கெட்ட பழக்கங்களும் அவனுக்கு பழக்கமாகி விட்டன. தொடக்கத்தில் இவற்றையெல்லாம் தன் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் சாமர்த்தியமாக மறைத்து வந்தான்.
ஆனால் பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டி கொள்வது தானே வாடிக்கை.செல்வமும், அந்தஸ்தும் நிறைந்த தன்னுடைய குடும்பத்தில் இப்படி ஓரு தறுதலை பிறந்திருப்பதை எண்ணி மதிமாறனின் தந்தை கலங்கித்தான் போனார். அரசின் சின்னஞ் சிறு பதவியில் எப்படியோ ஒட்டிக் கொண்டு விட்ட மதிமாறன் தன்னுடைய தீய பழக்கங்களை மாற்றி கொள்ள கொஞ்சமும்முனையவில்லை. இப்படி சொந்த ஊரில் எந்த உலக அனுபவமும் இல்லாமல் மதிமாறன் இருப்பதையும் தன்னுடைய தீய பழக்கத்தால் பெயரை கெடுத்து கொள்வதையும் பார்த்து இவனுக்கு யார் பெண் தருவார்கள் என்று கவலையடைந்த அவனது தந்தைக்கு அப்போதுதான் தன்னுடைய பால்ய கால நண்பனான தயாநிதியின் ஞாபகம் வந்தது.
இருவரும் நண்பர்கள் மட்டுமல்லாமல் ஒரு வகையில் உறவினர்களும் கூட. ரகசிய தீவின் ஆளுகை முழுவதும் அவனிடம் இருப்பதை அறிந்து வைத்திருந்த அவனது தந்தை ஒரு நாள் அவனை தயாநிதியிடம் அழைத்து சென்றான். அங்கே மதிமாறன் மிகுந்த அடக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டான். தயாநிதியும் மதிமாறனும் பால்ய கால நினைவுகளை பேசி முடித்த பின் தன்னுடைய மகனை அறிமுகம் செய்து வைத்தான் அவன்.
தயாநிதி ரகசிய தீவின் ஆளுநராக நியமித்திருந்த குணசேகரன் வயது மூப்பானதால் தனது கடைசி காலத்தை தாய் நாட்டில் கழிக்க விரும்பி தன்னை பதவியிலிருந்து விடுவிக்கும் படி கேட்டுக் கொண்டிருந்தான்.மதிமாறனின் நடத்தையை பார்த்த தயாநிதி இவனையே ரகசிய தீவின் ஆளுநராக நியமித்தால் என்ன என்று யோசித்தான். தனது யோசனையை வாய் விட்டு அப்பாவிடமும் மகனிடமும் கேட்டு வைத்தான்.
மதிமாறன் தனக்கு வாய்த்த அதிர்ஷ்டத்தை நினைத்து கல்லாக சமைந்தான். பொறுப்பை ஏற்க சம்மதிப்பதாக வாக்குறுதியளித்தான்.
"இங்கே பார்மதி மாறா !உன்னை ரகசிய தீவின் ஆளுநராக நியமிக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றன். ஓன்று மார்க்கதரிசி என்ற கடல் கொள்ளையனின் புதையல் நம்முடைய தீவில் எங்கோ புதைக்கப்பட்டு இருக்கிறது. அது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அதை கண்டுபிடித்து நீமீட்க வேண்டும். இன்னொன்று என்னுடைய அந்தரங்கமான விசயம்." என்ற தயாநிதி தன்னுடைய கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை காட்டினான்.
"இது என்னுடைய பரம்பரை ஆபரணம். இதன் இன்னொரு ஜோடி என் மனைவியிடம் இருக்கிறது. அவள் இப்போது உயிரோடு இல்லை. அவளும் என் மகளும் பயணித்த கப்பலை கடல் கொள்ளையர்கள் தாக்கி நிர்மூலமாக்கி விட்டார்கள். அதில் என் மனைவி இறந்து விட்டாள். ஆனால் என்னுடைய ஒரே மகள் மட்டும் எப்படியோ தப்பி விட்டாள். ஆனால் அவள் எங்கிருக்கிறாள் என்பது மட்டும் இன்று வரை தெரியவில்லை. நானும் அவளை இருபது ஆண்டுகளாக தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். அந்த தங்க ஆபரணம் தான் அவள் இருக்கும் இடத்தை காட்டும் ஒரே வழி. அந்த இரண்டையும் கண்டுபிடித்து மீட்க வேண்டியதுதான் உன்னுடைய வேலை" என்றான் தயாநிதி .
"கவலைப்படாதீர்கள். விரைவிலேயே அந்த மார்க்க தரிசியின் தங்க புதையலையும், உங்கள் மகளையும் கண்டுபிடித்து நான் மீட்கிறேன்." என்றான் மதி மாறன் துடிப்புடன்
" நல்லது. நாளை இங்கே வா. உனக்கான நியமன கடிதம் தயாராக இருக்கும். அதை வாங்கி கொண்டு விரைவிலேயே ரகசிய தீவிற்கு பயணமாகு" என்றான் தயாரிதி.
இருவரும் விடை பெற்று வெளியே வந்தனர். வழியெங்கும் தொணதொணத்தபடி அறிவுரை கூறிய தந்தையின் பேச்சை வேறு வழியின்றி கேட்டு கொண்டிகுந்தான்மதிமாறன்.
தன்னுடைய கதையை கூறி முடித்தான்மதிமாறன்
உன் மகள் அரச பிரமுகர் ஒருவரின் மகள் .அதற்கான அத்தாட்சி தான் இந்த சங்கிலி" என்றான் மதி மாறன் .
செங்கோடன்மதிமாறன் சொன்னதை கேட்டு நம்ப முடியாமல் திகைத்து போய் நின்றான்.
" என் மகளுக்கு இப்படி ஒரு பூர்வாசிரம கதை இருக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதுவரை அவள் ஏழ்மையில் வளர்ந்து விட்டாள். இனியாவது அவளுடைய வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் "
"நன்றாகத்தான் இருப்பாள். நீ மட்டும் மனது வைத்தால் ?"
" என்ன சொல்கிறீர்கள்?"
"உன் மகளை அந்த சிகப்பு முகமூடி கடத்தி சென்று விட்டான். அவனை நான் பிடித்தாக வேண்டும். உன் மகளையும் நான் மீட்டாக வேண்டும். அதற்கு தூண்டில் புழு நீ தான் "
"தூண்டில் புழுவா?"
"ஆமாம். தூண்டில் புழுதான். உன்னை நான் சிறையில் அடைக்கப் போகிறேன். உ ன்னை மீட்க கண்டிப்பாக அந்த சிகப்பு முகமூடி வருவான். அவனை முதலில் பிடிப்பேன். பிறகு அவன் மூலம் உன் மகளை "
"என்னை என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள். என் மகளை மீட்டு அவளின் உண்மையான தந்தையிடம் சேர்ப்பித்து விடுங்கள்"
"சேர்த்து விடுகிறேன். அதற்கு முன் நான் அவளை மணந்து கொள்ள போகிறேன். அவனை மணப்பதன் மூலம் இந்த தீவின் நிரந்தர ஆளுநராக நானே இருந்து கொள்வேன். திருமண பரிசாக மார்க்க தரிகியின் தங்க புதையலையும் நானே வைத்து கொள்வேன். தயாநிதியின் மறைவுக்கு பிறகு அவனது பதவி எனக்கு வந்து சேரும் - எப்படி ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்."
"அட மோசக்காரா. நீ என் மகளை மணக்க நான் சம்மதிக்கவே மாட்டேன்"
"தயாநிதியின் மகள் தான் உன்னுடைய மகள் என்ற உண்மை உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். உன்னை வெளியே விட நானும் சம்மதிக்க மாட்டேன். யார் அங்கே ? இவனை சிறையில் அடையுங்கள்." என்று தன் கைகளை தட்டி ஆட்களை அழைத்தான்மதிமாறன்.
செங்கோடன் கைது செய்யப்பட்டான்.
"அவனை சிறைக்கு கொண்டு செல்லும் முன் கவனது நாவை துண்டித்து விடுங்கள். அவன் யாரிடமும் பேசக் கூடாது" என்ற மதிமாறனின் முகத்தில் கொடூரம் மின்னியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக