ரகசிய தீவு
அத்தியாயம் 17
இரண்டில் ஒன்று
செங்கோடனை வீரர்கள் இழுத்து சென்ற பின்னர் மதிமாறன் யோசனையில் ஆழ்ந்தான். நீண்ட வருடங்களுக்கு பிறகு அதிர்ஷ்டம் அவனை தேடி வந்திருக்கிறது. செங்கோடனுக்கும் தனக்கும் மட்டுமே தெரிந்த ஒரு உண்மையை வேறு யாரும் தெரிந்து கொள்ள கூடாது என்பது தான் மதி மாறனின் எண்ணம். சிறையில் அடைக்கப்படும் செங்கோடன் தன்னுடைய அறையில் இருக்கும் சக கைதிகளுடன் சந்திரவதனா தான் தயாநிதியின் உண்மையான மகள் என்ற உண்மையை பகிர்ந்து கொண்டு விட்டால் மதிமாறனின் அத்துணை திட்டங்களும் பாழாகி விடும். இருவருக்கு மட்டுமே தெரிந்த இந்த உண்மை தயாநிதியின் காதுகளை சென்றடைந்து விட்டால் மதிமாறனின் நிலை பரிதாபகரமாகி விடும்.
சந்திர வதனா வை மகள் என்று ஏற்றுக் கொள்ளும் தயாநிதி கண்டிப்பாக அவளை தனக்கு மணம் செய்து தர மாட்டான் என்று மதிமாறன் நினைத்தான். தயாநிதியின் மகளான சந்திர பிரபாவை மணந்து எவன் அவருக்கு மருமகனாகிறானோ அவனுக்கே ரகசிய தீவும், மார்க்கதரிசியின் புதையலும் சொந்தமாகிவிடும். தானும் ரகசிய தீவின் ஆளுநர் பதவியிலிருந்து துரத்தப்படுவோம் என்பதை அவன் தெளிவாக தெரிந்து வைத்திருந்தான். அதனால் தான் செங்கோடன் உண்மையை யாரிடமும் சொல்லாதிருக்க அவனது நாவை அறுக்க உத்தரவிட்டான். ஆனாலும் அவனுக்கு தன்னுடைய திட்டத்தில் ஏதோ ஒரு குறை இருப்பது போல் தோன்றிக் கொண்டே இருந்தது.
சிகப்பு முகமூடி கடத்தி சென்ற சந்திரவதனா வை அவன் எப்படியாவது மீட்டாக வேண்டும். அதன் பிறகு ரத்னாவதிக்கு தெரியாமல் அவன் ரகசியமாக சந்திர வதனா வை திருமணம் செய்ய வேண்டும். தன்னை தவிர மதிமாறன் வேறு எந்த பெண்ணையும் மதிமாறன் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான் என்று நம்பிக் கொண்டிருக்கும் ரத்னாவதி மதிமாறன் சந்திரவதனாவை திருமணம் செய்து கொள்ள போகிறான் என்ற செய்தியை அறிந்தால் கண்டிப்பாக அதற்கு இடையூறு ஏற்படுத்தவே முயற்சி செய்வாள். அதனால் அவளது காதுக்கு இந்த விவகாரம் தெரிய வே கூடாது என்று மதிமாறன் முடிவு செய்தான். சந்திரவதனாவை திருமணம் செய்த பிறகு தங்க ஆபரணம் கிடைத்ததாக கூறினால் தயாநிதிக்கு அந்த திருமணத்தை ஏற்பதை தவிர வேறு வழியில்லை. சந்திரவதனாவை கடத்தி சென்ற முகமூடியை இதை சாக்காக வைத்து எப்படியாவது பிடித்து ஓழித்து விட வேண்டும் என்று அவன் நினைத்தான்.
அவனுக்கு திடிரென்று ஒரு யோசனை தோன்றியது. சிகப்பு முகமூடி தன்னுடைய மறைவிடத்திலிருந்து வெளியே வரும் வரை அவன் காத்திருக்க விரும்பவில்லை. அவன் உடனடியாக வெளியே வந்தா க வேண்டும் என்று நினைத்த மதிமாறனின் மனதில் அந்த கொடுர எண்ணம் உதித்தது. "ம்!அது தான் சரி" என்று முணுமுணுத்தவன் அந்த நள்ளிரவு வேலையையும் பொருட்படுத்தாமல் இருளில் கிளம்பினான்.
தனி சிறையில் இருந்த நீலனோ பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தான். சிறையில் ஆடுவதும், பாடுவதும் சுவற்றில் மோதுவதுமாக அமளி செய்து கொண்டிருந்தான். அவனது கலாட்டாவினால் காவலர்கள் யாரும் தூங்க முடியவில்லை. தினமும் மது அருந்தி பழகிய நீல னால் தன்னுடைய மதுப் பழக்கத்தை திடிரென்று நிறுத்த முடியவில்லை. தன்னுடைய மது பழக்கத்தால் தான் இப்படி ஓரு இக்கட்டில் சிக்கியிருக்கிறோம் என்று அவன் மூளைக்கு தெரிந்தாலும் மனமும் உடலும் அவன் சொல்வதை கேட்க மறுத்தன. மது அருந்தாத விரக்தியை அவன் ஆர்ப்பாட்டம் செய்து தீர்த்து கொண்டிருந்தான்.
அவனது அமளி தாளாத காவலன் ஓருவன் ஆதித்தனிடம் முறையிட்டான்.
"இங்கே பார்தம்பி. உன்னுடைய கிழட்டு நண்பன் மிகவும் ஆர்ப்பாட்டம் செய்கிறான். இன்று இரவு எங்களில் யாரையும் தூங்க விட மாட்டான் போல் தெரிகிறது"
"அய்யா. அவன் ஒரு மது அடிமை.திடிரென்று தன்னுடைய மது பழக்கத்தை அவன் நிறுத்த முயற்சி செய்ததால் விளைந்த விபரீதம் இது."
"இப்போது என்ன செய்வது?"
" அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மது பழக்கத்தை கைவிட முயற்சி செய்திருக்க வேண்டும். ஒரேயடியாக நிறுத்த முயற்சி செய்து தான் இப்படி அல்ல ல்படுகிறான். படுத்துகிறான். அவனுக்கு ஒரு புட்டி நிறைய மதுவை கொடுங்கள். அதை குடித்துவிட்டு அமைதியாகி விடுவான்."
"அதை குடித்துவிட்டு இன்னும் அதிகமாக ஆர்ப்பாட்டம் செய்தால் என்ன செய்வது?"
"நியாயமான கேள்வி தான். அப்படி எதுவும் செய்ய மாட்டான் என்று தான் நினைக்கிறேன். அப்படி செய்தால் அவனை பாதாள சிறையில் அடையுங்கள். அவனது சத்தம் வெளிகேட்காது." என்றான் ஆதித்தன்.
"இந்த சிறை கொட்டடியில் பாதாள சிறை எங்கேயப்பா இருக்கிறது.? வேண்டுமானால் கடலை ஒட்டிய சிறை அறையில் அவனை அடைக்க வேண்டியதுதான். அலைகளின் ஆர்ப்பாட்ட சத்தத்தில் இவனது சத்தம் அடங்கி விடும்" என்றான் காவலன்.
அவன் அங்கிருந்து கிளம்பியதும் யவனன்" நீ அவனது நண்பனா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அவனை பாதாள சிறையில் அடைக்க ஆலோசனை கூறுகிறாயே?" என்றான் சினத்தோடு.
"அப்படி சொன்னதால் தான் இந்த சிறையில் பாதாள அறைகளே இல்லை என்ற உண்மை நமக்கு தெரிய வந்தது. நாளை காலை சூரிய உதயத்தின் போது நாம் இங்கே இருக்கப்போவதில்லை" என்றான் ஆதித்தன்.
"அப்படியானால் எங்கள் நிலைமை?" என்றான் கடோத்கஜன்.
"எங்களை சிறையிலிருந்து விடுவிக்க போவதே நீ தானே ? " என்று புன்னகைத்தான் ஆதித்தன்.
ஆதித்தன் சொல்வதை புரியாமல் கேட்டு கொண்டிருந்தான் கடோத்கஜன்.
"நீ சொல்வது எனக்கு புரியவில்லை" என்றான் கடோத்கஜன்.
"நண்பா! நான் சொல்வதை கவனமாக கேள். தானியங்களை தின்று தீர்த்து சேதாரத்தை உருவாக்குவது எலிகளின் வேலை. அதன் பற்கள் விரைவிலேயே வளர்ந்துவிடும் இயல்பு கொண்டது. அதை தடுக்க எதையாவது கொறித்து கொண்டிருப்பது எலிகளின் இயல்பு. இப்படி கொறித்து தன்னுடைய பல்லில் தேய்மானத்தை உண்டாக்கும் எலி கூண்டில் மாட்டி கொண்டால் தன்னுடைய கொறிக்கும் திறமையை மறந்து விட்டு இந்த கூண்டில் இருந்து தப்பிக்க முடியாதோ என்று பயந்து நிலை கொள்ளாமல் அலைய ஆரம்பித்து விடும். கூண்டை கொறித்து தன்னால் தப்பி செல்ல முடியும் என்பதையே எலி மறந்து விடும். அந்த எலியின் நிலைமையில் தான் நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். உங்கள் திறமையை பயன்படுத்தித் தான் நாம் இங்கிருந்து தப்பிக்க போகிறோம்" என்று சிரித்தான் ஆதித்தன்.
அனைவருக்கும் ஏதோ புரிவது போல் இருந்தது.
"நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்கு புரிந்து விட்டது" என்று ஆதித்தனை கட்டி கொண்டான் யவனன்.
அதே நேரம் நீலன் தன் முன்னால் வைக்கப்பட்ட மதுபுட்டியை பரிதாபமாக பார்த்து கொண்டிருந்தான்.
"ஓ! என் பழைய நண்பா! உன்னை பார்க்காமல் நான் தவியாக தவித்து போய் விட்டேன். உன்னை விரும்புகிறது மனம். உன்னை வெறுக்கிறது என்னுடைய அறிவு. இரண்டுக்கும் இடையில் தடுமாறுகிறான் இந்த நீலன் "
"போதும் உன் உளறல்களை நிறுத்தி கொள். அதை அருந்தி விட்டு காலி புட்டியை வெளியே வை. உனக்கு மதுபானம் தரப்பட்டது தெரிந்தால் தளபதி எங்களை கடுமையாக தண்டிப்பார் " என்றான் காவலர்களில் ஓருவன்.
"உன்னை வேறு சிறைக்கு மாற்ற போகிறோம். விரைவாக அதை அருந்தி விட்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடு"
"இதோ இப்போதே இவனை முடித்து விடுகிறேன்" என்ற நீலன் புட்டியை திறந்து அதிலிருந்த திரவத்தை அப்படியே வாயில் ஊற்றி கொண்டான்.
"மொடக்குடியன் போலிருக்கிறது"
"இதோ காலி புட்டி. என்னுடைய புதிய அறையை காட்டுங்கள்" என்றான் நீலன்.
புதிய அறை ஒன்றினுள் தள்ளி பூட்டப்பட்டான் நீலன்.
அலைகளின் ஓசை அவனது காதை நிறைத்தது.
"அடக்கடவுளே! இங்கே கத்தி கதறினாலும் இந்த அலை ஓசையை தாண்டி ஓரு சத்தமும் வெளியே போகாதே?" என்று புலம்பி கொண்டிருந்த நீலன் மதுபோதையில் அப்படியே உறங்கி போனான்.
அவன் நன்றாக உறங்கிய பிறகு அந்த சிறைகூடத்திற்கு வந்து சேர்ந்தான் புதிய விருந்தினன் ஒருவன். அவன் செங்கோடன்.
மதிமாறனின் உத்தரவுப்படி அவனது நாக்கு துண்டிக்கப்பட்டிருந்தது. வாயில் ரத்தம் வழிய அலறிக் கொண்டிருந்தான் அவன்.
"இப்போது தான் ஒருவனது கூச்சல் ஓய்ந்தது. இதோ கத்தி கூப்பாடு போட்டு நம் உறக்கத்தை கெடுக்க இன்னொருவன் வந்து விட்டான். இன்று இரவு சிவராத்திரி தான் நமக்கு "சிறை காவலர்களில் ஒருவன் அலுத்து கொண்டான்.
"நாவை அறுக்கும் அளவிற்கு என்ன குற்றம் செய்தானோ இவன்?"
"நம் ஆளுநரை எதிர்த்து எதையாவது பேசி தொலைந்திருப்பான். அதனால் தான் இப்படி ஓரு தண்டணை கிடைத்திருக்கிறது"
" சரி. இவனை அந்த குடிகார கிழவன் இருக்கும் அறையில் அடையுங்கள்" என்றான் சிறையின் தலைமை அதிகாரி.
சற்று நேரத்தில் நீலன் இருந்த சிறை அறைக்குள் தள்ளப்பட்டான்செங்கோடன். அவன் தன்னுடைய நாக்கு அறுக்கப்பட்டதற்காக கூட வருந்தவில்லை. இது நாள் வரை வறுமையில் வாடிய தன்னுடைய செல்ல மகள் ஒரு அரச பிரமுகரின் மகள் என்பதை அவன் எப்படியாவது தயாநிதியிடம் தெரிவித்து விட விரும்பினான். தன் மகள் இனியாவது சுகபோகமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று அந்த நாடோடியின் மனம் விரும்பியது. தன் மகள் நன்றாக வாழ்வதை விட ஒரு தகப்பனுக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருந்து விட போகிறது?
தான் தவறான நேரத்தில் தவறான நபரிடம் சிக்கி கொண்டுவிட்டதையறிந்து செங்கோடன் கலங்கி நின்றான். அறையில் எழுந்த குறட்டை ஓலி இன்னொரு நபர் அங்கே இருப்பதை அறிவித்தது. அறையின் ஒரு மூலையில் உருண்டு கொண்டிருந்தான் நீலன்.
அவனது இடுப்பில் இருந்த மதுபுட்டி உருண்டு ெசங்கோடனின் காலடியில் நின்றது.
செங்கோடன் அதை கையில் எடுத்து கொண்டு சுவற்றின் ஓரம் தளர்ந்து உட்கார்ந்தான்.
மூன்றாம் சாமம்.
சிறை ஆழ்ந்த அமைதியில் உறக்கத்தில் இருந்தது..
தனது அறைக்கு வெளியே ஏதோ ஒரு உருவம் நடமாடுவதை உணர்ந்த செங்கோடன் அது யார் என்று பார்க்க சிறை கதவின் அருகே வந்தான். அவன் கம்பிக்கு அருகே வந்ததும் மின்னல் வேகத்தில் ஒரு சுருக்கு கயிறு அவன் கழுத்தில் விழுந்து இறுக ஆரம்பித்தது.
நாக்கு அறுப்பட்ட வேதனையில் இருந்த செங்கோடனால் குரல் எழுப்பி வலுவாக கத்த முடியவில்லை. யார் அந்த உருவம் என்று பார்க்க பெரும் முயற்சி செய்தான் அவன். அந்த உருவம் தன்னுடைய முகத்தை காட்டியது. அது மதிமாறன்.
"நீ உயிரோடு இருப்பது என்றைக்கிருந்தாலும் எனக்கு ஆபத்து. செத்து ஓழி. இந்த உலகில் சந்திரவதனாவை பற்றிய உண்மை தெரிந்த ஒரே ஆள் நான் தான். நாளை உன் பிணத்தை பார்க்க உன் மகள் வந்து தானேயாக வேண்டும்?" என்று கொடூரமாக சிரித்தான்மதிமாறன்.
செங்கோடன் உயிரற்ற உடலாக சரிந்தான்.மதிமாறன் கயிற்றை உருவிக்கொண்டு ரகசிய வழியாக வெளியேறினான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக