வியாழன், 14 ஜூலை, 2022

ரகசிய தீவு

அனுகூல சத்ரு


விரைந்து ஓடும் சாரட் வண்டியில் சந்திரவதனா கவலையுடன் அமர்ந்திருந்தாள். முன் பின் அறியாத இந்த தீவில் காலடி வைத்த சில மணி நேரங்களிலேயே அரசாங்கத்தின் முக்கிய புள்ளி தன் மீது ஆசைப்படுவான் என்றோ அவனது பகைமைக்கு தன்னுடைய குழுவினர் ஆளாவார்கள் என்பதையோ அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.


யாரோ ஓரு முகம் தெரியாத மனிதன் சொன்னதை நம்பி இப்படி வண்டியில் பயனமாவதை எண்ணி அவள் தன்னையே நொந்து கொண்டாள். அந்த கலை கூத்தாடி குழுவின் தலைவனும் சந்திரவதனாவின் தகப்பனுமான செங்கோடன் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது என்று அவள் நினைத்தாள். இதற்கு முன்பாக செங்கோடன் நிகழ்ச்சி நடத்திய இடத்தில் போதுமான வருமானம் இல்லாமல் குழு சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டது.


இந்த வறுமையும், ஏழ்மையும் அவர்களுக்கு புதியது அல்ல. வருமானம் அதிகமாக இருக்கும் போது தாராளமாக செலவு செய்வதும், வருமானம் குறைவாக இருக்கும் போது பசி, பட்டினி என்று வாழ்வதும் அந்த குழுவிற்கு சகஜமான விசயம்தான். அப்படி வறுமையான காலகட்டங்களில் அவனுக்கு கைகொடுப்பது சந்திரவதனாவின் கழுத்து சங்கிலி தான் .அதை அவன் அணிந்திருந்த நாட்களை விட செங்கோடனிடம் இருந்த நாட்களே அதிகம். அவள் அணிந்திருந்த சொற்ப நாட்களிலும் அதில் இருந்த வினோதமான பதக்கத்தை பார்த்து பல முறை வியந்திருக்கிறாள். யானையின் பாதி முகத்தை கொண்ட அந்த சங்கிலியின் மறுபாதி வேறு யாரிடமோ இருப்பதாக அவளுக்கு தோன்றும்.


விவரம் தெரிந்த வயதிலிருந்து வறுமையையும் ஏழ்மையையும் பார்த்து பழகிய சந்திரவதனாவிற்கு இந்த விலை உயர்ந்த பொருள் தன்னுடைய தகப்பனுடையதாக இருக்காது என்று பல முறை தோன்றும். அந்த தங்க சங்கிலி எங்கே கிடைத்தது என்ற அவளுடைய கேள்விக்கு செங்கோடன் இதுவரை சரியான பதிலை சொன்னதில்லை. பேச்சைதிசை மாற்றி வேறு எதையோ பேசி அவளை சமாதானப்படுத்தி விடுவான். அதை எப்போதும் தன்னுடைய மடியில் பத்திரமாக வைத்திருக்கும் அவன் அதை ஒரு போதும் விற்க முனைந்ததில்லை.


தன்னுடைய மனைவி மரண படுக்கையில் இருந்த போது பணம் இல்லாமல் தவித்த போது கூட அவன் அந்த தங்க சங்கிலியை விற்க முயலவில்லை. அதை அடமானம் வைத்து தன் குழுவின் பசியை போக்குவதும் பணம் வந்த பிறகு எப்பாடுபட்டாவது அந்த நகையை மீட்டு விடுவதையும் அவன் வழக்கமாக வைத்திருந்தான். கடைசியாக நிகழ்ச்சி நடத்திய இடத்தில் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. தன் குழுவினரை பட்டினி போட விரும்பாத செங்கோடன் வழக்கம் போல தன்னுடைய நகையை அடமானம் வைத்து விட்டான்.


ரகசிய தீவிற்கு பயணமாகும் முன்பாக தன்னுடைய நகையை மீட்க சென்ற செங்கோடனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நகையை அடமானம் பெற்றவர் பக்கத்து ஊருக்கு போயிருந்தார். அவர் வரும் வரை செங்கோடன் காத்திருக்க வேண்டியதிருந்தது.

எள் காயலாம். எலி புழுக்கை ஏன் காய வேண்டும் என்று நினைத்தவன் தன் குழுவை ரகசிய தீவிற்கு போகும் கப்பலில் ஏற்றி முன்னால் அனுப்பி விட்டான். மறுநாள் நகையை வாங்கியவர் வந்ததும் அவருக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு நகையை மீட்டு கொண்டு ரகசிய தீவிற்கு வந்து தன் குழுவுடன் சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு .


அந்த ஏற்பாடு இப்போது சின்னாபின்னமாகி அவனது குழுவினர் சிறைக்குள் அடைக்கப்பட்டு விட்டனர். அவனது ஒரே மகளும் சிகப்பு முகமூடியால் கடத்தப்பட்டு விட்டாள். இதையெல்லாம் கேள்விப்பட்டால் செங்கோடனின் நிலைமை என்னாவது என்று அவளது உள்ளம் துடியாக துடித்தது.


அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.


" வண்டியை நிறுத்துங்கள்" என்றாள் சந்திரவதனா


" மன்னித்து விடுபெண்ணே.! உன்னை பத்திரமான இடத்தில் மறைத்து வைக்கும் படி பார்த்திபனின் உத்தரவு .அதை நான் நிறைவேற்றியாக வேண்டும்" என்றான் வண்டியின் சாரதி.


"பார்த்திபனா? யார் அது?" என்றாள் சந்திரவதனா குழப்பத்துடன் .


"ஓ! நீ ஊருக்கு புதிய வள் என்பதை நான் மறந்து விட்டேன். உன்னை ஆபத்திலிருந்து மீட்ட சிகப்பு முகமூடி அணிந்த ஆசாமியின் பெயர் தான் பார்த்திபன் " என்று பதில் சொன்னான் சாரதி


"இந்த தீவில் அவர் தான் பெரிய புரட்சி காரரோ ? " என்றாள் சந்திரவதனா.


"ஆம்.மதிமாறனை எதிர்க்க இங்கே அவனை விட்டால் வேறு ஆட்கள் இல்லை"


"என்னை எங்கே கொண்டு செல்வதாக உத்தேசம் "


"எனக்கு தெரியாது பெண்ணே. குறிப்பிட்ட இலக்குவரை தான் இந்த பயணம் .பிறகு வண்டி மாறி விடும். பயணியும், பயணமும் மாறாது. இதோ அந்த இலக்கு நெருங்கி விட்டது. உனக்காக இன்னொரு வண்டியும், சாரதியும் காத்திருக்கிறார்கள் உன்னுடைய மீதி பயணம் அந்த வண்டியில் தொடரும் "


" ஆட்சியாளர்களிடம் அகப்படாதிருக்க அட்டகாசமாகத் தான் திட்டமிடுகிறீர்கள்."


"உன் பாராட்டிற்கு நன்றி. இறங்க தயாராக இரு" என்றான் வண்டியோட்டி.


வண்டி நின்றது.


சந்திரவதனா வேறு ஒரு வண்டியில் ஏற்றப்பட்டாள். பழைய வண்டி வேறு திசையில் விரைந்தது.


வண்டி மெதுவாக வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது. சந்திரவதனாவின் கேள்விகளுக்கு வண்டியொட்டி ஆழ்ந்த மவுனத்தையே பதிலாக தந்தான்.


சாரதி எதையும் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்த சந்திரவதனா " நீ ஏன் எதையும் பேச மறுக்கிறாய்? நீ என்ன ஊமையா? " என்றாள் கோபத்துடன் .


" அழகான பெண்களை பார்த்தால் நான் வாயடைத்து போய்விடுவேன் பெண்ணே" என்றான் வண்டியோட்டி.


" துடுக்காக பேசுகிறாய். முறை தவறி பேசுகிறாய்.இது பார்த்திபனுக்கு தெரிந்தால் ?"


" மன்னித்து கொள் பெண்ணே .! பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளிடம் முறை தவறி நடந்தால் தலைவருக்கு கெட்ட கோபம் வந்துவிடும். கடும் தண்டனைகள் கொடுத்து தண்டிப்பார். என்னை பற்றி அவரிடம் எந்த புகாரும் சொல்லி விடாதே பெண்ணே. நான் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும்" என்று கெஞ்ச ஆரம்பித்தான் சாரதி .


"அந்த பயம் இருக்கட்டும் " என்றாள் சந்திரவதனா .


"பெண்ணே என்று தான் உங்களை நான் அழைக்க வேண்டியதிருக்கிறது. உங்களுக்கு இன்னும் பெயர் வைக்க வில்லையா?" என்றான் அவன் மறைப்புக்கு முன்னால் இருந்தபடி.


"சந்திரவதனா "


"நல்ல பெயர் .நிலவை போன்ற முகம் கொண்ட பெண் .உனக்கு பெயர் வைத்தவர் ரசனை மிகுந்தவர் தான். ஆனால் நிலவில் இருக்கும் குளுமை உன் பேச்சில் இல்லை. ஒரே உருட்டலும் மிரட்டலுமாக இருக்கிறது"


"வாய் பேச்சு வீரரே! நாம் போக வேண்டிய இடம் வெகு தொலைவோ? இன்னும் நான் எவ்வளவு நேரம் உமது உளறலை கேட்டு கொண்டிருப்பது "


"அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம் அம்மணி. இதோ நீ வந்து சேர வேண்டிய இடம் வந்து விட்டது"


வண்டி மெதுவாக நின்றது.


வண்டியின் கதவுகள் மெல்ல திறந்தன.


"இறங்கு பெண்ணே" என்றது அவனது குரல் .


அவள் வண்டியிலிருந்து இறங்கினாள். அவளுக்கு எதிரே வினயமாக கைகளை கட்டியபடி நின்று கொண்டிருந்தான் சிகப்பு முகமூடி அணிந்த மனிதன்.


" வண்டியை ஓட்டி வந்தது?" என்றாள் சந்திரவதனா கேள்விகுறியோடு.


"பார்த்திபனாகிய நானே தான் " என்று சிரித்தான் அவன். தன்னுடைய முகமூடியை கழற்றி தன்னுடைய முகத்தை காட்டினான் அந்த வாலிப வீரன்.


வசீகரமான ேதாற்றத்துடனும், புன்னகையுடனும் நின்றவனை பார்த்து திக் பிரமை பிடித்து நின்றாள் சந்திரவதனா.


" என்ன பெண்ணே! இப்போது நீ ஊமையாகிவிட்டாயா?" என்றான் அவன் மீண்டும் சிரித்தபடி.


"என்னால் இதை நம்ப முடியவில்லை" என்றாள் சந்திரவதனா.


"நம்பு. சிகப்பு முகமூடியும் நானே தான் பார்த்திபனும் நானே தான்."


" இந்த வீடு ?"


" என் நண்பர்களுடையது. அவர்களின் மனைவிகள் உன்னை பத்திரமாக பார்த்து கொள்வார்கள். எந்த பயமும் இன்றி நீ இங்கே இருக்கலாம்"


"என் குழுவினரை நான் சந்தித்தாக வேண்டும்"


"அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். விரைவில் அவர்களை நான் மீட்கிறேன்." என்றான் பார்த்திபன்.


" நாளை என்னுடைய தந்தையும் இங்கே வருவார்"


"கவலைப்படாதே. அவரையும் இங்கே கொண்டு வந்து விடலாம்" என்ற பார்த்திபன் பூட்டியிருந்த வீட்டின் கதவை மூன்று முறை விட்டு விட்டு தட்டினான்.


சமிக்ஞை சரியாக இருந்ததால் கதவு திறக்கப்பட்டது. தீப்பந்தம் ஒன்றை ஏந்தியபடி வெளியே வந்தவன்" பார்த்திபா! என்ன இந்த நேரத்தில் வந்திருக்கிறாய்?" என்றான்.


"வில்லவா ! வழக்கம் போல் உன்னிடம் ஒரு உதவி கேட்டு வந்திருக்கிறேன்" என்றான் பார்த்திபன்.


" என்ன செய்ய வேண்டுமென்று சொல். உனக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்"


"இந்த பெண்ணை வெகு கவனமாக இங்கே மறைத்து வைக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் இவள் மதிமாறன், கருணாகரன் இருவரின் கண்களிலும் பட்டு விட கூடாது" என்றான் பார்த்திபன்

" யார் இந்த பெண் ? இவளை காப்பாற்ற நீ ஏன் துடிக்கிறாய்?" என்றான் வில்லவன்.


துறைமுகத்தில் நடந்த சம்பவத்தை விளக்கமாக எடுத்துரைத்தான் பார்த்திபன்.


"பயப்படாதே பெண்ணே.. இங்கே நீ பத்திரமாக இருக்கலாம்" என்ற வில்லவன்" பார்வதி ! இந்த பெண்ணை உள்ளே அழைத்து செல்" என்றான். வெளியே வந்த அவனது மனைவி சந்திரவதனா வை உள்ளே அழைத்து சென்றாள்.பயப்படாதே! என்று கண்களால் தைரியமூட்டி உள்ளே அனுப்பி வைத்தான் பார்த்திபன்.


"சரி! நான் கிளம்புகிறேன்" என்றான் பார்த்திபன்.


"பொறு பார்த்திபா! உன்னிடம் முக்கியமான ஓரு விசயத்தை சொல்ல வேண்டும்"


"என்ன அது?"


"துறைமுகத்தில் இன்று காலையிலிருந்து ஒருவன் உன்னைப் பற்றி விசாரித்து கொண்டிருந்தான். அவனை நம் ஆட்கள் சந்தேகப்பட்டு பிடித்து வைத்திருக்கிறார்கள்"


"யார் அவன்? அவனுடைய பெயர் என்ன?" என்றவனின் புருவங்கள் முடிச்சிட்டன.


" அவன் பெயர் நஞ்சுண்டன் .தன்னை ஒரு மீகாமன் என்று சொல்கிறான்"


"அப்படி யாரையும் எனக்கு தெரியாது. அவன் மதி மாறனுக்காக வேலை செய்யும் உளவாளியாக இருக்கலாம். நம்முடைய பாணியில் அவனை விசாரியுங்கள். நாளை காலை நான் அவனை சந்திக்கிறேன்" என்றான் பார்த்திபன்.


"இப்போது எங்கே கிளம்பி விட்டாய்.? பேசாமல் இங்கேயே தங்கிவிட்டு காலையில் போகலாமே?" என்றான் வில்லவன்.


"முதல் சாமம் தொடங்கி விட்டது. நான் அப்பாவியை சந்தித்தாக வேண்டும்"


"இதே போல் தான் உன் அண்ணன் கரிகாலனும் அவனை தனிமையில் சந்தித்து வந்தான். அவன் இப்போது உயிரோடு இல்லை. இப்போது நீயும் அவனது ஆட்டத்தில் பொம்மையாகிவிட்டாய்" என்று பெருமூச்சு விட்டான் வில்லவன்.


" அவன் யார் என்று கண்டுபிடிக்கவாவது அவன் பேச்சை நான் கேட்டாக வேண்டும். அவன் நமக்கு அனுகூல சத்ருவாக இருப்பானோ என்ற சந்தேகமும் எனக்கு இருக்கிறது. எனக்கு வேறு வழியில்லை" என்ற பார்த்திபன் அங்கிருந்து வண்டியில் கிளம்பினான்.


வில்லவன் பெருமூச்சு விட்டான்.


"கண்ணுக்கு தெரியாத அந்த மாயாவியிடமிருந்து பார்த்திபனை காப்பாற்று கடவுளே " என்று முணுமுணுத்தன அவன் உதடுகள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக