செவ்வாய், 28 ஜூன், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 9

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் வித்தை

தான் கல்லறைதீவிலிருந்து தப்பி வந்து மகேந்திரனிடம் அகப்பட்ட கதையை கூறி முடித்துவிட்டு பெருமூச்சு விட்டான் நீலன்.

" ஓஹோ.!இதுதான் உன்னுடைய முன்கதை சுருக்கமா?" என்றான் ஆதித்தன் சிரித்தபடி.

"ஆமாம்.மகேந்திரனின் ஆணைக்கு இணங்க இந்த யவனன் என்னை பிடிக்க முயற்சி செய்த போது தான் என்னை காப்பாற்ற கடவுள் உன்னை அனுப்பி வைத்தார்." என்றான் நீலன்.

"கடவுளுக்கு வேறு வேலையே கிடையாது பார். உன்னை காப்பாற்ற ஆளை அனுப்பி வைப்பது தான் அவரது தலையாய வேலை. ஆமாம் அந்த தீவிலிருந்து நீ எடுத்து வந்த அந்த இரண்டு தங்க பற்கள் எங்கே? என் எஜமானனிடம் நீ வாங்கி ஏமாற்றிய ஐயாயிரம் பொய் காசுகளுக்கான முதல் தவணை தொகையாக நான் அதை உன்னிடமிருந்து பறிமுதல் செய்ய விரும்புகிறேன்" என்றான் யவனன்.

"அது என்னிடம் இருந்தால் தானே நீ பறிமுதல் செய்ய முடியும்? அதைத்தான் என்னை மறைத்து வைத்த மதுபான விடுதி உரிமையாளனிடம் லஞ்சமாக கொடுத்து விட்டேனே? அந்த தங்கத்திற்காகத் தானே அவன் என்னை காப்பாற்ற முயன்றான். அந்த பற்கள் இல்லாவிட்டால் அவனே என்னை மகேந்திரனிடம் கொண்டு போய் நிறுத்தியிருப்பான் " என்றான் நீலன்.

" கடவுள் மகேந்திரன் போன்ற நல்லவர்களை கைவிட்டு விடுகிறான். உன் போன்ற எத்தர்களுக்கு அவன் உதவி செய்கிறான். தனிமையில் கிடந்து சாக வேண்டிய தீவில் உனக்கு தங்கப்புதையலை வைத்து வழியனுப்பி வைக்கிறான் அந்த மடையன்" என்று கொதித்தான் யவனன்.

ஓற்றை பைசாவை கூட கிழவனிடமிருந்து கைப்பற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனது குரலில் நிரம்பியிருந்தது.

"உயிர் தப்பும் ஆசையில் உன்னுடைய தலைப்பாகை துணியை மறந்து விட்டாய் போலிருக்கிறதே? அதில் ஏதோ முக்கியமான ரகசியம் ஒளிந்திருப்பதாக நஞ்சுண்டன் நினைத்து கொண்டிருக்கிறான். அதில் உண்மையாகவே ஏதேனும் ரகசியம் ஓளிந்திருக்கிறதா?" என்றான் ஆதித்தன்.

"நான்,மலை நாட்டு மன்னன் அபராஜிதன், அமைச்சர் தயாநிதி மூவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம் இருக்கிறது. ஆனால் அது நஞ்சுண்டனும் நீயும் நினைப்பதுபோல் அந்த தலைப்பாகை துணியில் இல்லை. அது கவனத்தை திசை திருப்ப செய்த ஒரு நாடகம் "

"அப்படி என்னப்பா ரகசியம்?" என்றான் ஆதித்தன்.

" என் மண்டைக்குள் இருக்கும் அந்த ரகசியத்தை நேரம் வரும் போது நானே சொல்கிறேன்" என்ற நீலன் கண்களால் யவனன் இருப்பதை சுட்டிக் காட்டினான். யவனனுக்கு இந்த ரகசியம் தெரியக்கூடாது என்று நீலன் நினைப்பதை ஆதித்தன் புரிந்து கொண்டான்.

இருவரும் பேசுவதை சுவராஸ்யம் இன்றி கவனித்து கொண்டிருந்த யவனன் திடிரென்று நினைவு வந்தவனாக "ஆமாம். நீங்கள் இருவரும் நெடுநாள் நண்பர்களா? உங்கள் நடத்தையை பார்த்தால் உங்கள் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருப்பது போல் தெரிகிறதே?" என்றான்.

"உன்னுடைய கணிப்பு சரிதான். நாங்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான். இந்த ஆதித்தன் இரண்டாவது முறையாக காப்பாற்றி இருக்கிறான். முதல் முறை காப்பாற்றிய போது இவனது அண்ணன் அ அருகில் இருந்தான்"

"அ ஒரு எழுத்தில் ஒரு ஆசாமிக்கு பெயரா? வித்தியாசமாக இருக்கிறது" என்றான் யவனன்.

"இல்லை. நீதவறாகப் புரிந்து கொண்டு விட்டாய். இவனுடைய சகோதரனின் பெயர் அரிஞ்சயன் .இவனுடைய பெயர் ஆதித்தன். இவர்கள் பெயரின் முதல் எழுத்தை சுருக்கி அ ஆ என்று அழைப்பது நெருங்கிய நண்பர்களின் வழக்கம் " என்றான் நீலன்.

"அந்த ஆசாமியும் ஆதித்தனைப் போல் கள்வன் தானா?" என்றான் யவனன் இகழ்ச்சியுடன் .

"ஆமாம். கள்வன்தான். இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் சமதர்மவாதிகளுக்கு உலகமும் சமூகமும் வைத்த பெயர் கள்வர்கள். இவர்கள் மனித மனதை கொள்ளையடிக்கும் கள்வர்கள்!" என்றான் நீலன் பெருமிதத்துடன்.

நீலனின் பெருமித உணர்வை பார்த்த யவனன் எதுவும் பேசாமல் அமைதியானான்.

"சரி. இரவு நெடுநேரமாகிவிட்டது. நாம் தூங்க  போகலாம். அதற்கு முன்னால் பைராகி கொடுத்த கண் மருந்தை கொடுத்தால் பரவாயில்லை.இன்று இரவு அதை பயன்படுத்தி பார்க்கலாம் என்று நினைக்கிறேன்" என்றான் நீலன்.

"அதற்கென்ன? உடனே எடுத்து வருகிறேன். தூங்கும் முன்பாக உன் கண்ணில் அந்த மருந்தை மூன்று சொட்டுகள் விட்டு பார்" என்ற ஆதித்தன் கப்பலின் கிழ் தளத்திற்கு சென்று அங்கிருந்த மருந்து புட்டிகளில் ஓன்றை எடுத்து வந்து கொடுத்தான்.

சற்று நேரத்தில் மூவரும் படுக்கையில் விழுந்து உறங்க தொடங்கினர்.

இரண்டாம் சாமம் தொடங்கிய போது நீலனின் ஆழ்ந்த உறக்கத்தில் எழுந்த குறட்டை ஒலி யவ னனை தட்டி எழுப்பியது.

வினோதமாக எழுந்த நீலனின் குறட்டை ஓ லியால் யவனன் தூங்க முடியாமல் தவித்தான். அந்த குறட்டை சத்தத்தை கேட்காதிருக்க அவனும் என்னென்னவோ செய்து பார்த்தான்.

அருகே படுத்திருந்த ஆதித்தன் எந்த சலனமும் இன்றி நிம்மதியாக தூங்குவதை பார்த்த யவனன் இவனுக்கு தூங்கும் போது காது செவிடாகி விடுமோ என்ற சந்தேகத்தில் தவித்தான். அவனது முதுகை ஒரு கை தட்டியது. திடுக்கிட்டு திரும்பினான் யவனன். அவனுக்கு பின்புறமாக எழுந்து உட்கார்ந்திருந்த ஆதித்தன் அவன் கையில் கொஞ்சம் பஞ்சை திணித் தான். ஆதித்தனின் காதுகளில் பஞ்சு இருப்பதை பார்த்த யவனனுக்கு அவன் எப்படி நிம்மதியாக தூங்கினான் என்ற ரகசியம் இப்போது விளங்கியது.

ஆதித்தனின் செயல் முறையை பின்பற்றிய யவனன் சத்தம் இல்லாத உலகத்தில் நிம்மதியாக உறங்க தொடங்கினான்.

விடியற்காலை .

சூரியன் பூமி காதலியை காண வானத்தின் வழியாக காத்திருந்தான். துயில் எழுந்த மூவரும் காலை கடன்களை முடித்துவிட்டு தங்களின் சிறிய படகான கழுகை எடுக்க ஆயத்தமானார்கள்.

ஏதோ யோசனையில் இருந்த ஆதித்தன் கப்பலின் மேல் தளத்தில் இருந்த பைராகியின் தாவர சேமிப்புகளை பார்த்தான். "இப்பாலஸ்! இவை எல்லாம் என் நண்பன் பைராகியின் அபூர்வமான சேமிப்புகள் . இவற்றின் மீது பைராகி உயிரையே வைத்திருக்கிறான். இவற்றின் முழுமையானம் பயன்பாட்டை அறிந்த வன் அவன் ஓருவன்தான். நாம் ரகசிய தீவை சென்றடையும் போது இவற்றை கவனிக்க நமக்கு நேரம் இருக்காது. காடு மலை என்று அலைந்து திரிந்து இவற்றை சேகரித்த என் நண்பனின் பல கால உழைப்பு வீணாகி விடக் கூடாது. அதனால் நாம் இவற்றை கப்பலிலிருந்து இறக்கி வைத்து விடலாம்.என் நண்பனின் மனம் புண்படுவதை நான் விரும்பவில்லை" என்றான்.

"ஆதித்தன் சொல்வது சரிதான்.பைராகியின் பல நாள் உழைப்பு வீணாகி விட நாம் காரணமாக இருந்து விடக் கூடாது " என்றான் நீலன்

இப்பாலஸ் இருவர் சொல்வதையும் கேட்டான். பிறகு கரையில் இருந்த தன்னுடைய ஆட்களை கைகளை தட்டி அழைத்தான்.பைராகியின் சேமிப்பு முழுவதும் கரையில் இறக்கப்பட்டது.

பைராகியின் சேமிப்பு கரையில் இறக்கி வைக்கப்பட்ட தகவலை பைராகியிடம் தெரிவிக்குமாறு ஒரு ஆளை ஏவி விட்டயவனன்" இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியா? நாம் பயணமாக லாமா?" என்றான்.

"தாராளமாக .ஆனால் ஒரே ஒரு நிபந்தனை கப்பலின் சுக்கானை நான் தான் பிடிப்பேன். கப்பலின் மீகாமன் நான் என்பதால் நான் சொல்வதைத்தான் நீங்கள் இருவரும் கேட்டு நடக்க வேண்டும். கடல் என்னுடைய ராஜ்ஜியம்" என்ற நீலனின் முகத்தில் மகிழ்ச்சி கொப்பளித்தது.

"எங்கள் இருவருக்கும் கப்பலை இயக்க தெரியாது என்பதை பயன்படுத்தி கொண்டு பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதிப்பதை போல் நடந்து கொள்ளாதே கிழவா " என்றான் நீலன் எரிச்சலுடன் .நீலன் கப்பலை திசை மாற்றி செலுத்தி ஏதாவது தந்திரம் செய்து விடுவானோ என்ற பயம் அவனது குரலில் எதிரொளித்தது.

"கவலைப்படாதே இப்பாலஸ்! நம்மை மீறி நீல னால் எதுவும் செய்து விட முடியாது. அவனுக்கு அவனது முத்தழகி தேவை. அதை மீட்க அவன் ரகசிய தீவிற்கு போய்த்தான் தீர வேண்டும்" என்று அவனை தைரியப்படுத்தினான் ஆதித்தன்.

மோகினி தீவின் துறைமுகத்தில் இருந்து மூவரையும் சுமந்து கொண்டுகழுகு கிளம்பியது.

" உன் நண்பன் அந்த ஆயுதங்களை இந்நேரம் சிகப்பு முகமூடியிடம் விற்றிருப்பானா?" என்றான் ஆதித்தன்.

" என்னுடைய நண்பனா? யார் அந்த நஞ்சுண்டனா? அவன் துரோகி ஆதித்தா. ஏமாந்த நேரத்தில் ஈரத் துணியை கழுத்தில் போட்டு கழுத்தை அறுத்து விடுவதில் மன்னன் .அந்த சிகப்பு முகமூடி நஞ்சுண்டனை சந்தேகிக்காமல் நம்ப வேண்டும். இரண்டாவது அவனிடம் ஆயுதங்களை வாங்குமளவிற்கு பணம் இருக்க வேண்டும்"

"போதுமான பணம் இல்லாமலா அவன் மதி மாறனை எதிர்த்து புரட்சி செய்து கொண்டிருக்கிறான்?"

"அவனை பற்றி முழுதாக நமக்கு தெரியாது. ஏன் மதி மாறனுக்கே தெரியாது. அவனிடம் ஆயுதம் வாங்குமளவிற்கு பணம் இல்லாதிருந்தால் நல்லது. அதற்காக நான் ஆண்டவனை பிராத்திக்கிறேன்"

"விடிய விடிய ஆண்டவரிடம் நீ முறையிட்டதை நான் கேட்கவேயில்லை" என்றான் யவனன் நீலனின் குறட்டையை ஞாபகப்படுத்தியபடி.

"நானும் தான். கடவுளும் நீயும் பேசிக் கொள்வதை கேட்க நான் விரும்பவில்லை" என்றான் ஆதித்தன் சிரித்தபடி.

"ரகசிய தீவு! பெயரே வித்தியாசமாக இருக்கிறதே? அப்படி என்ன ரகசியம் புதைந்து கிடக்கிறது அந்த தீவில் ? " என்றான் ஆதித்தன்.

"அந்த தீவிற்கு இப்போது வந்த பெயர் தான் ரகசிய தீவு. முன்பு அந்த தீவின் பெயர் கபாலத்தீவு. நீ நினைப்பது சரிதான். அந்த தீவில் ஒரு ரகசியம் புதைந்துதான் கிடக்கிறது. அதை தேடி சென்றவர்கள் உயிரோடு திரும்பியதில்லை."

"கல்லறைதீவிற்கு சொல்லப்படும் அதே வாக்கியம்" என்றான் ஆதித்தன்.

"கல்லறைதீவின் கதை வேறு. ரகசிய தீவின் கதை வேறு. ரகசிய தீவின் ஏதோ ஒரு மூலையில் ஒரு தங்கப்புதையல் ஓளித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை ஓளித்து வைத்தவன் ஒரு கடல் கொள்ளையன் .அவன் இப்போது உயிரோடு இல்லை. அவன் பெயர் மார்க்கதரிசி "

"மார்க்கதரிசியின் தங்க பு தையலைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த புதையல் தீ வில் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறாய்.?" என்றான் யவனன்.

"அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஒன்று. அந்த புதையலை சிகப்பு முகமூடியும் தேடி கொண்டிருக்கிறான். அது மட்டும் அவனுக்கு கிடைத்து விட்டால்?"

"நஞ்சுண்டனிடம் இருக்கும் ஆயுதம் சிகப்பு முகமூடியிடம் கைமாறிவிடும்.புரட்சி வெற்றி பெற்று மதிமாறன் கொல்லப்படுவான். மலை நாட்டின் ஆதிக்கத்திலிருந்து வளநாடு விடுதலை பெற்று விடும். அது வளநாட்டின் ஆதிக்கத்திற்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது"

எங்கோ மண்ணில் புதைந்து கிடக்கும் செல்வம் இரு நாட்டின் தலை எழுத்தையே மாற்ற போவதை எண்ணி ஆதித்தனும் யவனனும் திகைத்து நின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக