திங்கள், 20 ஜூன், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 5

# விசித்திர வழிகாட்டி.

மகேந்திரன் பைராகியை பணயக் கைதியாக பிடித்து வைத்ததே நண்பர்களுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சி விலகும் முன்பாகவே இப்பாலஸ்வழித்துணையாக வருவான் என்று கூறி அடுத்த இடியை இறக்கினான் மகேந்திரன்.

" இப்பாலஸ்! இவர்களுக்கு வழித்துணையாக செல்வதில் உனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையே?" என்று யவனின் கருத்தையும் கேட்க முற்பட்டான் மகேந்திரன்.

"இல்லை. கப்பலை துறைமுகத்தை விட்டு வெளியே அனுப்பியது என்னுடைய தவறுதான்.அதற்கு பரிகாரமாக நான் இதை செய்து தான் தீர வேண்டும்" என்றான் யவனன் தன் இடையில் இருந்த சவுக்கை தடவியபடி.

" நல்லது. அப்படியானால் இன்று இரவிலிருந்து அவர்கள் உன் பொறுப்பு. அவர்களை உன் கண் பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும்" என்றான் மகேந்திரன்.

"இப்போதாவது நாங்கள் புறப்படலாமா?" என்றான் ஆதித்தன்.

"கிளம்பும் முன்பாக நான் பைராகியிடம் தனியாக பேச வேண்டும்" என்றான் நீலன்.

" எதுவாக இருந்தாலும் இங்கே என் முன்பாகவே பேசு" என்று உடனடியாக வாய் வார்த்தைகளிலேயே முட்டு கட்டை போட்டான் இப்பாலஸ்.

"சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மறுப்பது போல் இருக்கிறது என்னுடைய நிலைமை" என்று முனகினான் நீலன்.

"அவர்கள் சந்தேகிக்கும்படி நீ ஏன் நடந்து கொள்ள வேண்டும்.? பைராகியிடம் கேட்க விரும்புவதை நீ இங்கேயே அனைவரின் முன்பாக கேட்கலாம்" என்றான் ஆதித்தன்.

"அது வேறு ஒன்றுமில்லை. என் கண் பார்வை மங்கலாகி கொண்டே போகிறது. அதை குணப்படுத்த மருந்து ஏதாவது பைராகியிடம் இருக்கிறதா என்று கேட்க விரும்பினேன். மற்றபடி ரகசியம் எதையும் நான் தனியாக பேச விரும்பியதில்லை"

" இவ்வளவுதானா விசயம்? வைத்திய விசயத்தில் பைராகியின் உதவியாளாக செயல்படுகிறவன் நான். உன் கண் கோளாறை குணப்படுத்த நான் மருந்து தருகிறேன்" என்றான் ஆதித்தன்.

"சபாஷ். உன்னுடைய வைத்திய அறிவை சோதிக்க வகையாக ஒரு ஆசாமி அகப்பட்டு கொண்டான். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று நம் முன்னோர்கள் அறியாமல் சொல்லவில்லை." என்று சிரித்தான் பைராகி .

"ஆயிரம் பேரை அல்ல நண்பா. ஆயிரம் வேரை . நீ பழமொழிக்கு தவறாக அர்த்தம் கண்டு கொண்டு விட்டாய்" என்றான் ஆதித்தன்.

" இருக்கட்டும். ஆயிரத்து ஓன்றாவது ஆசாமி உன்னிடம் அகப்பட்டு விட்டான். அவனை வைத்து கண் சம்மந்தமான வியாதிகளுக்கான அத்தனை மருந்துகளையும் பிரயோகித்து மருத்துவ தொழிலை கற்று கொள்" என்றான் பைராகி,

இக்கட்டான சூழ்நிலை நிலவும் போதும் அதைப் பற்றி கவலைப்படாமல் வாயாடி கொண்டிருக்கும் நண்பர்கள் மூவரையும் வினோதமாக பார்த்து கொண்டிருந்தனர் மகேந்திரனும் யவனனும்.

"சரியான நெஞ்சழுத்தக்காரர்கள் " என்று முணுமுணுத்தான் மகேந்திரன்.

அவர்களின் உரையாடலை துண்டிக்கும் விதமாக ஓலித்தது யவனனின் குரல்

"போதும் வீண் அரட்டை .நாம் கிளம்பலாம்"

பைராகியை கட்டியணைத்து பிரியாவிடை பெற்று கிளம்பினர் நண்பர்கள் இருவரும் .

வெளியே வந்த யவனன் தன் ஆட்களை பார்த்து சைகை செய்தான். அடுத்த நிமிடம் குதிரைகள் பூட்டிய வண்டி ஓன்று மாளிகையின் எதிரே புழுதிபறக்க வந்து நின்றது.

" ஏறுங்கள் இருவரும் " என்ற யவனன் இருவரும் வாகனத்தில் ஏற வழிவிட்டு நின்றான். கடைசியாக வாகனத்தில் ஏற முயன்றவன் சீழ்க்கை ஓலியை எழுப்பினான். ஆட்களில் ஒருவன் ஹேர்குலஸ் என்ற ராட்சச கழுகு அடைபட்டிருந்த கூண்டின் கதவை திறந்து விட்டான். இருளை கிழித்தபடி பறந்த அந்த பறவை வண்டியின் முகப்பில் உட்கார்ந்து கொண்டது.

"இப்பாலஸ்! அது உன்னுடைய பறவையா?" என்றான் ஆதித்தன்.

"ஆமாம். என்னுடைய வளர்ப்பு பறவை. அதை கண் திறக்காத குஞ்சிலிருந்து எடுத்து வளர்க்கிறேன். அதன் பெயர் ஹேர்குலஸ்.கண் இமைக்கும் நேரத்தில் ஓரு ஆட்டு குட்டியை தூக்கி வந்து விடும் அளவிற்கு வலுவுள்ளது"

" அதன் கூரான நகங்கள் கைகளை காயப்படுத்தி விடுமே?" என்றான் ஆதித்தன்.

பறவைகளை பற்றிய பரிச்சயம் ஆதித்தனுக்கு இருப்பதை அவனது கேள்வியின் மூலம் புரிந்து கொண்டான்யவனன்.

யவனன் தன் வலது கையின் மணிக்கட்டில் இருந்த தழும்புகளை ஒரு முறை தடவி பார்த்து கொண்டான்.

"ஆமாம். காயப்படுத்தி விடும். என்னையும் பல முறை காயப்படுத்தி இருக்கிறது.அதற்கென நான் பிரத்யேக தோலால் செய்யப்பட்ட கையுறையை வைத்திருக்கிறேன். அந்த கையுறையை நான் அணியாதிருந்தால் அது எனக்கு அருகாமையில் இருக்கும் மரத்தின் மீதோ வீட்டின் மீதோ அமர்ந்து என்னையே கவனித்து கொண்டிருக்கும் . என்னுடைய சீழ்க்கை ஒலி கேட்டால் எங்கிருந்தாலும் என்னிடம் வந்து சேர்ந்து விடும்" என்றான் யவனன் பெருமையுடன் .

வண்டி துறைமுகத்தை அடைந்ததும் மூவரும் கீழே இறங்கி கொண்டு வண்டியை திருப்பி அனுப்பினர்.

கழுகை கண்டுபிடித்து அதில் ஏறிய யவனன் திகைத்து போனான். கப்பலின் மேல் தளம் முழுவதும் விதவிதமான செடிகளும், மரங்களும் சிறு சிறு தொட்டிகளில் வளர்க்கப்பட்டு தளம் முழுவதும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது.

"இவையெல்லாம் என்ன?" என்றான் யவனன் வியப்புடன்.

"நீ ஹேர்குல ஸைவார்ப்பது போல் என் நண்பன் பைராகி இவற்றை வளர்த்து கொண்டிருக்கிறான்." என்றான் ஆதித்தன்.

அதே நேரம் பைராகி வளர்த்து வைத்திருந்த மரம் ஒன்றிலிருந்து விசித்திர சப்தம் எழுந்தது. இப்பாலசின் வளர்ப்பு பறவையான ஹேர்குலஸ் மரத்தில் ஊர்ந்து கொண்டிருந்த ஏதோ ஒரு விலங்கை தன் கால்களால் பிடித்திருந்தது.

அதை பார்த்ததும் நீலன் பதறினான்.

"கெட்டது காரியம். இப்பாலஸ் உன் கழுகை விலக சொல். உன் பறவை அந்த விலங்கை கொன்று விடப்போகிறது " என்று அலறினான் நீலன்.

இப்பாலஸ்தன்னுடைய கழுகிற்கு அந்த விலங்கை விட்டுவிடுமாறு அவனது மொழியில் கட்டளையிட்டான்.

ஹேர்குலஸ் அவனது கட்டளைக்கு பணிந்து பிடித்த விலங்கை கீழே போட்டுவிட்டு வேறு மரத்தில் அமர்ந்தது.

ஹேர்குல சின் கால்களிலிருந்து தப்பி கீழே விழுந்து நடு நடுங்கி கொண்டிருந்தது ஒரு தேவாங்கு .

ஆதித்தன் அதை தன் கையில் எடுத்தான். "கூண்டிலிருந்து எப்படியோ தப்பி வந்துவிட்டது போலிருக்கிறது" என்றவன் அருகிலிருந்த கூண்டில் அதை அடைத்தான்.

அதன் அவலட்சணமான முகத்தை பார்த்த யவனனின் முகம் அருவறுப்பால் சுருங்கியது.

"இது என்ன விலங்கு?" அவன் இந்த மாதிரியான ஒரு விலங்கை இதற்கு முன் பார்த்ததில்லை.

" இதன் பெயர் தேவாங்கு " என்றான் ஆதித்தன்.

" இதை எதற்காக கப்பலில் வைத்து வளர்க்கிறீர்கள்?" என்றான் யவனன் குழப்பத்தோடு.

"இது கடலின் பதகன். (வழிகாட்டி) இதை வெளியே விட்டால் எப்போதும் வட திசை நோக்கியே அமரும்.அதை வைத்து மாலுமிகள் திசையை கண்டுபிடித்து கொள்வார்கள்."

"அதற்குத்தான் சீனர்களின் காந்த ஊசி இருக்கிறதே?"

" இருக்கிறதுதான். ஆனால் இந்த விலங்கை கடலில் திசையறிய பயன்படுத்துவது பண்டைய தமிழர் வழக்கம். நாங்கள் காந்த ஊசியை விட இந்த உயிருள்ள விலங்கையே அதிகம் நம்புகிறோம்" என்றான் ஆதித்தன்.

" இப்படி ஒரு திசையறியும் முறையை உலகத்தில் எங்குமே கண்டதில்லை" என்றான் யவனன் வியப்புடன்.

"இன்னமும் நிறைய புதுமையான விசயங்கள் இருப்பதை நீ பார்க்கத்தானே போகிறாய்? ஆமாம். இதற்கு முன் நீ கடல் பயணம் செய்திருக்கிறாயா?" என்றான் நீலன்.

"நான் இந்த தீவிற்கு வந்ததே கப்பலில் தானே ? அதற்கு பிறகு இது இரண்டாவது பயணம்" என்றான் யவனன்.

"சரிவா! நாம் கீழே போகலாம்" என்று அவனை கப்பலின் கீழ் தளத்திற்கு அழைத்து சென்றான் ஆதித்தன். அங்கே இருந்த கட்டில், நாற்காலி போன்றவற்றை தனித்தனியாக பிரித்து மடக்கி பயன்படுத்தும்படி பைராகி வடிவமைத்திருப்பதை பார்த்த யவனன் வாயடைத்து போனான்.

" இப்படியான விந்தை பொருட்களை நான் எங்குமே பார்த்ததில்லை. உன்னுடைய நண்பன் மிகுந்த புத்திசாலி போல் தெரிகிறது. இதற்கு கூடுதலான மூளை உழைப்பு தேவை "

"ஆமாம்.என் நண்பன் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் புத்திசாலி தான் " என்றான் ஆதித்தன்.

" ஆனால் உதவாக்கரைகளுடன் நட்பு வைத்திருக்கிறான். அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது" என்றான் யவனன் நீலனை கண்களால் சுட்டி காட்டியபடி.

நீலன் வேறு ஏதோ யோசனையில் இருந்ததால் யவனனின் பகடியை கவனிக்கவில்லை.

நீலனின் அருமையையவனன் தானாகவே தெரிந்து கொள்ளட்டும் என்று அமைதியாகிவிட்டான் ஆதித்தன்.

அன்று இரவு உணவு முடிந்த பின்பு மீண்டும் சம்பாசணையை துவக்கினான்ய வனன்.

"ஆதித்தா! நான் உன்னை கூடநம்புவேன். ஆனால் இந்த கிழவனை நம்ப மாட்டேன்" என்றான் இப்பாலஸ் வம்பிழுக்கும் நோக்கில் .

"ஏன் அப்படி சொல்கிறாய்?" என்றான் ஆதித்தன்.

"இவன் ஒரு பொய்யன். சரியான எத்தன். கடைசி வரை இவனது கப்பலை யார் கடத்தியது என்பதை இவன் சொல்லவேயில்லை. அந்த கப்பல் இப்போது எங்கிருக்கிறது என்று இவனுக்கு தெரியும். அங்கே தான் இவன் நம்மை ஏமாற்றி அழைத்து செல்கிறான் என்று நினைக்கிறேன்"

யவனனின் பேச்சை கேட்ட நீலனின் முகம் மாறியது. சண்டாளன். உண்மையை சரியாக யூகித்து விட்டானே ? ஒரு வேளை இவனது யவன சோதிடம் உண்மையாக இருக்குமோ என்று நினைக்க தொடங்கினான் நீலன்

" தான் ஏமாந்த கதையை எல்லோர் நடுவிலும் சொல்ல நீலன் விரும்பாமல் இருந்திருக்கலாம். உனக்கு எழுந்த அதே சந்தேகம் எனக்கும் இருக்கின்றது. என்னுடைய சந்தேகமும் உன்னுடைய சந்தேகமும் களைய நீலன்வாய் திறக்க வேண்டும்" என்றான் ஆதித்தன்.

"அதில் உண்மை வருமா என்பது தான் கேள்வி " என்றான் இப்பாலஸ்.

நீலன் தன் இருக்கையிலிருந்து எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்க தொடங்கினான்.

"நான் உண்மையை பேச வேண்டிய நேரம் வந்து விட்டது.இனியும் தாமதம் செய்தால் உங்கள் நம்பிக்கையை நான் இழந்து விடுவேன்" என்ற நீலன் தன் நடையை நிறுத்தினான். வானத்தில் தெரிந்த நிலவை பார்த்து பெருமூச்சு விட்டவன்" என்னுடைய கப்பலை கடத்தி சென்றவன் என்னுடைய துணை மீகாமன் நஞ்சுண்டன் . கல்லறை தீவில் என்னை கொல்ல முயன்றவனும் அவன் தான் " என்றான்.

யவனன் திகைத்து போனான். அவன் இரண்டொரு முறை நஞ்சுண்டனை சந்தித்திருக்கிறான். பணிவான நடத்தையும் இனிக்க இனிக்க பேசும் இயல்பும் கொண்ட அவனா நீலனின் கப்பலை கடத்தியது.?

"என்னால் இதை நம்ப முடியவில்லை" என்றான் யவனன்.

"நடந்தவற்றை அப்படியே சொல்கிறேன் பிறகு அதை நம்புவதும் நம்பாததும் உன் இஷ்டம்" என்ற நீலன் தன் கதையை கூற தொடங்கினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக