# ரகசிய தீவு
அத்தியாயம் 2.
ஓடுபவனுக்கு பல வழி!
நீலன் தங்கியிருந்த மேல் மாடிக்கான படிகளில் ஏறத் துவங்கிய இப்பாலஸ்திடிரென்று ஏதோ நினைவு வந்தவனாக திரும்பி மதுக்கடை உரிமையாளனை பார்த்து "தன் நீண்ட நாள் வாடிக்கையாளரை காப்பாற்ற நம்முடைய நண்பர் ஏதாவது முயற்சி செய்ய நினைக்கலாம். அப்படி அவர் ஏதாவது முயற்சி செய்தால்?" என்ற யவனன் தன் வலது கையை கிடைமட்டமாக திரும்பி கழுத்தில் குறுக்காக வைத்து காட்டினான்.
அவனது சமிக்ஞையை புரிந்து கொண்ட அவனது சகாக்களில் ஒருவன் உருவியவாளுடன் மதுக்கடை உரிமையாளனை நெருங்கி அவனது கழுத்தில் வாளை வைத்தான்.
" நல்லது." என்று புன்னகைத்த யவனன் மாடிப்படிகளில் மீதமுள்ள ஆட்களுடன் ஏற துவங்கினான்.
" உன் வாடிக்கையாளனை காப்பாற்ற ஏதாவது செய்வாயா என்ன?" என்றான் கழுத்தில் கத்தியை வைத்தவன்.
"நான் சொல்வதை யாருமே நம்ப மாட்டார்கள். இந்த விடுதிக்குள் காலடி வைத்ததிலிருந்து இதுவரை நீலன் ஒரு மிடறு மதுவை கூட விழுங்கவில்லை. இது இறந்து போன என் மாமியார் மீது சத்தியம் "
"உலகத்தின் ஒன்பதாவது அதிசயம் நீ சொல்வது தான். பொய் சொல்லாதே.! வாயை மூடு" என்றான் கத்தி காரன்.
அதே நேரம் படிகளில் ஏறிக் கொண்டிருந்த யவனனிடம்
"அந்த பயலைப் பிடிக்க நாம் ஆயுதங்களை தயாராக வைத்து கொள்ளலாமா?" என்றான் சகாக்களில் ஒருவன்.
"அந்த கிழவனை பிடிக்க ஆயுதமா? அவன் எப்போதும் முமு போதையில் எங்காவது விழுந்து கிடப்பான். அவனை தூக்கி நிறுத்த ஆட்கள் தான் தேவை. ஆயுதம் தேவையில்லை" என்று புன்னகைத்தான் யவனன்.
சற்று நேரத்திற்கு முன்பு கீழே நடந்த உரையாடலை கேட்டிருந்தால் இப்பாலஸ் இவ்வளவு அலட்சியமாக இருந்திருக்க மாட்டான்.எதிரியை எப்போதும் குறைவாக மதிப்பிடுபவன் தோல்வியை தழுவுவது தான் உலக நியதி.
மாடிப்படிகள் முடிந்து இரண்டு அறைகள் திறந்து காணப்பட்டன. ஓரு அறையில் மதுபான கூடத்தில் ஏற்படும் அடிதடிகளால் உடைந்து போகும் நாற்காலி மேசைகள் கன்னாபின்னாவென்று குவிந்து கிடந்தன.
"அடுத்த அறையில் தான் அவன் இருக்க வேண்டும் " என்று கண்களால் தன் சகாக்களுக்கு கட்டளையிட்ட யவனன் சத்தம் எழுப்பாமல் நடந்து அந்த அறைக்குள் நுழைந்தான். அவனை பின் தொடர்ந்து உள்ளே நுழைந்த அவனது சகாக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அறையின் சுவரை ஒட்டி ஒரு மரகட்டில் இருந்தது. அதன் விரிப்பு தரை வரை தொங்கி கொண்டிருந்தது. மற்றொரு மூலையில் ஒரு மேசையும் தண்ணீர் குடம் ஓன்றும் இருந்தது.
"அங்கே பார்" என்றான் ஆட்களில் ஒருவன்.
அறையின் மூலையில் இருந்த சன்னலின்கம்பி ஓன்று வளைக்கப்பட்டிருந்தது. போர்வை ஓன்று கயிறாக திரிக்கப்பட்டு சன்னலிலிருந்து கட்டப்பட்டு தரையை நோக்கி தொங்கி கொண்டிருந்தது.
இப்பாலஸின் மூளை சிந்திக்க மறந்தது. "அவன் நாம் வருவதை இந்த சன்னல் வழியாக பார்த்து விட்டு தப்பித்து சென்று விட்டான். அவன் வெகுதூரம் தப்பித்து சென்றிருக்க முடியாது. உடனடியாக அவனை தேடிப் பிடியுங்கள்"
அவனது உத்தரவை கேட்ட வர்கள் தடதடவென்று படிகளில் இறங்கி விடுதியை விட்டு வெளியேறி நாற்புறமும் நீலனை தேட ஆரம்பித்தனர்.
அறையை விட்டு வெளியே வந்த இப் பாலஸ்ஏதோ ஓரு விசயம் தவறாக இருப்பதை உணர்ந்தான். ஆனால் அது என்னவென்று அவனால் உணர முடியவில்லை. வெளியேயிருந்து சன்னல் கம்பியை பார்த்தவனின் மூளை சட்டென்று விழித்து கொண்டது.
சன்னலின் ஓரே ஓரு கம்பியை வளைத்து வைத்து விட்டு அந்த இடைவெளியில் தன் பருத்த உடலை வைத்து கொண்டு நீலன் எப்படி வெளியேறியிருக்க முடியும்? இந்த கேள்வி அவனது மனதில் எழுந்தது மே யவனன் உஷாரானான். அப்படியானால் நீலன் தப்பி சென்றதாக தன்னை நம்ப வைத்து விட்டு அறைக்குள் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்று நினைத்தவன் தன் இடையிலிருந்த வாளை உருவிக்கொண்டு மீண்டும் அறைக்குள் பிரவேசித்தான்.
அவன் கட்டிலுக்கு கீழே தொங்கிய படுக்கை விரிப்பை வாளால் அகற்றிய போது கட்டிலுக்கு கீழே பதுங்கி இருந்த நீலன் துரிதமாக செயல்பட்டான். கட்டிலை ஒரு முனையை பிடித்து அலேக்காக தூக்கியவன் அதை இப்பாலசின் மீது அப்படியே கவிழ்த்தினான். எதிர்பாராத இந்த தாக்குதலால் யவனன் நிலை குலைந்தான். கட்டிலின் மீது ஏறி மிதித்த நீலன் அறையை விட்டு வெளியேறி படிகளில் இறங்கி ஓடினான்.
அவன் மதுபான கூடத்திற்குள் நுழைந்த போது தான் கடை உரிமையாளனின் கழுத்தில் கத்தியை வைத்தபடி ஒருவன் நிற்பதை பார்த்தான்.
இப்பாலசின் அலறலை கேட்ட கத்தி ஆசாமி உரிமையாளனை விட்டு விட்டு நீலனை தடுத்து நிறுத்த ஓடி வந்தான். வெளியேறும் வெறியில் ஓடி வந்து கொண்டிருந்த நீலன் மேசை மீதிருந்த ஒரு மதுபான புட்டியை கையில் எடுத்து கொண்டான்.
அதை குறி பார்த்து அவன் மீது எறியலாம் என்று நினைத்த போது தான் அவனுக்கு தன்னுடைய பலவீனம் நினைவுக் கு வந்தது.
அதிகமான வாழ்நாளை கடலிலேயே கழித்து கொண்டிருந்ததால் நீலனின் கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்தது. கண்ணாடி பாளமாக தகதகக்கும் கடலின் மேற்பாகம் சூரிய வெளிச்சத்தை அதிகமாக எதிரொளிப்பு செய்யும். அந்த வெளிச்சத்தை அதிகமாக பார்த்து பார்த்து நீலனுக்கு தூரப் பார்வை வந்து விட்டிருந்தது. அவனுக்கு தூரத்தில் இருக்கும் பொருட்கள் நிழலாக தெரியுமே தவிர தெளிவாக தெரியாது. ஆனால் இந்த குறைபாட்டை அவன் யாரிடமும் சொன்னதில்லை.
இப்போது கையிலிருக்கும் ஒரே ஒரு மது புட்டியை அவனை நோக்கி எறிந்து அது அவன் மீது படாமல் விலகி சென்று விட்டால் தன் கதி அதோ கதிதான் என்று நினைத்தவன் ஓடி கொண்டே அடுத்தடுத்த மேசைகளில் இருந்த மதுப் புட்டிகளையும் தன் இரு கைகளால் சேகரித்து கொண்டான்.
இப்போது அவன் கையில் ஐந்து மதுப் புட்டிகள் இருந்தன. தன்னை நோக்கி மங்கலாக ஓடிவருபவனை பார்த்து குத்துமதிப்பாக ஐந்து புட்டிகளையும் ஒரே நேரத்தில் வீசினான் நீலன்.
ஐந்து புட்டிகளில் இரண்டாவது அவனை தாக்கி வீழ்த்தி விடும் என்பது நீலனின் கணக்கு . அவனது யுக்தி பலித்து விட்டது. இரண்டு புட்டிகள் ஓரே நேரத்தில் உடலின்வெவ்வேறு இடங்களில் தாக்கியதில் அலறிக் கொண்டு வீழ்ந்தான் அவன்.
இனி தடுக்க யாரும் இல்லை என்ற நிலையில் தன் பருத்த வயிறை தூக்கி கொண்டு ஓடினான் நீலன்.
நடுத்தெருவில் தலை தெறிக்க ஓடும் தன்னை மற்றவர்கள் சந்தேகிக்க கூடும் என்பதால் சிறிது நேரத்திலேயே மென் நடைக்கு மாறினான் நீலன்.
யவனன் படிகளில் இறங்கி கூடத்தில் வீழ்ந்து கிடந்தவனை எழுப்பிக் கொண்டு நீலனை தேட ஆரம்பித்தான்.
நீலன் மேற்கே மறைய துவங்கியிருந்த சூரியனை பார்த்தான். இன்னும் கொஞ்ச நேரம் இவர்களுக்கு போக்கு காட்டி தப்பித்து விட்டால் பிறகு இருள்தான். எப்படியாவது தப்பித்து விடலாம். அவன் உடனடியாக துறைமுகத்திற்கு போக விரும்பினான். ஓடுபவனுக்கு பல வழி! துரத்துபவனுக்கு பல வழி என்ற தமிழ் பழமொழிக்கு அர்த்தம் தெரிந்து கொண்டான்ய வனன் அன்று.
ஒன்றிரண்டு முறை அவன் யவனனின் ஆட்களின் கண்களில் பட்டு துரத்தப்பட்டு கொண்டிருந்தான். ஆள் அரவமற்ற ஒரு நாற்சந்தி க்கு வந்து சேர்ந்த நீலன் அங்கே பராக் கு பார்த்தபடி நின்று கொண்டிருந்தவனின் முதுகில் தட்டி "ஐயா! எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். துறைமுகத்திற்கு போகும் வழி எதுவென்று கூற முடியுமா?" என்றான்.
"நானே அங்கு அழைத்து போகிறேன்" என்றபடி திரும்பினான் இப்பாலஸ்.
அவன் முகத்தை அருகில் பார்த்த நீலன் அதிர்ந்து போனான்.
"நீயா ?உன்னிடமா நான் வழிகேட்டேன்"
"ஆமாம். விரியனே! நீயாக வந்து என்னிடம் அகப்பட்டு கொண்டு விட்டாய். உன் தோலை உரிக்கிறேன் பார்" என்றான் இப்பாலஸ்கோபத்துடன் .அதற்குள் யவனனின் ஆட்கள் அங்கே வந்து சேர்ந்து விட்டார்கள். இனி தப்பிச் செல்ல எந்த வழியுமில்லை என்று நீலனுக்கு தெளிவாக புரிந்து விட்டது.
"உனக்கும் எனக்கும் தாக்கல் எதுவுமில்லையே? எனக்கும் மகேந்திரனுக்கும் தான் பிரச்சனை. என்னை உன் எஜமானனிடம் அழைத்து செல்" என்றான் நீலன் அதிகாரமிடுக்கை செயற்கையாக வரவழைத்தபடி.
"அது பிறகு. முதலில் என்னையும் என் ஆட்களையும் தாக்கியதற்கு நீ பதில் சொல்ல வேண்டாமா?" என்றான் இப்பாலஸ்வி சம சிரிப்புடன்.
"நீங்கள் மட்டும் அருசுவை உணவு படைக்கவா என்னை தேடி கொண்டிருந்தீர்கள்? நீ என்னை என்ன செய்ய நினைத்தாயோ அதை நான் முந்தி கொண்டு உனக்கு செய்து விட்டேன். அவ்வளவுதான் விசயம் "
"வாய்ஜாலக்காரனாயிற்றே நீ? பேச சொல்லியா கொடுக்க வேண்டும். இதேபோல் இடக்காகத் தான் என் எஜமானனிடமும் நீ பேச போகிறாய். நீ ஒழுங்காக பேச என்னிடம் ஓரு வைத்தியம் இருக்கிறது. அந்த வைத்தியத்தை செயல்படுத்தினால் உன் வாய் துடுக்கு அடங்குவதுடன் உண்மையை மட்டுமே பேசவும் கற்று கொள்வாய் "
நீலனின் முகம் பீதியில் வெளுத்தது. யவனின் விதவிதமான வித்தியாச வைத்திய முறைகளை அவன் பலமுறை நேரிலேயே கண்டிருக்கிறான். அது இப்போது தனக்கே நேரும் என்று அவன் கனவுகூட காணவில்லை.
"அவனை பிடித்து அருகில் இருக்கும் மரத்தில் கட்டுங்கள்.வைத்தியத்தை ஆரம்பிக்கலாம்!" என்றான் யவனன் தன் இடையிலிருந்த சவுக்கை எடுத்த படி.
நீலன் இப்பாலசின் ஆட்களால் அருகிலிருந்த மரத்தில் கட்டப்பட்டான்.
"வேண்டாம். என்னை விட்டு விடு" என்றான் நீலன்.
"என்னை மன்னித்து விடு நண்பா! ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். உன்னை சிறு வயதிலேயே இப்படியான வைத்திய முறைகளுக்கு பழக்கப்படுத்தியிருந்தால் நீ திருந்தியிருப்பாய். உன் பெற்றோர் செய்ய வேண்டியதை இப்போது நான் செய்கிறேன். இனியாவது உன்னுடைய வாய் உண்மையை பேச கற்க வேண்டும்" என்ற யவனன் தன் சவுக்கை உதறி ஒரு முறை சொடுக்கெடுத்தான்.
நீலன் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
இப்பாலஸ்தன் சவுக்கை வேகமாக சுழற்றினான். அது அவன் பேச்சை கேட்க மறுத்தது. சவுக்கின் நுனி வேறு எதிலாவது மாட்டி கொண்டு விட்டதோ என்று நினைத்த யவனன் திரும்பி பார்த்தான். சவுக்கின் நுனியை இறுகப் பிடித்தபடி ஓருவாலிப வீரன் நின்று கொண்டிருந்தான்.
"நடை பயிற்சி செய்யும் ஒரு வயதான முதியவரை இப்படி கட்டி வைத்து துன்புறுத்துவது நியாயமா நண்பா ? " என்றான் கணீர் குரலில் அந்த வாலிபன்.
"யார் நீ?" என்றான் யவனன் எதிர்பாராத இடைஞ்சலால் சினத்தின் உச்சிக்கு சென்றவனாக!
"உன்னைப்போல் நானும் ஒரு அந்நியன் தான் " என்ற அந்த வீரன் சவுக்கின் நுனியை கீழே விட்டான்.
கண்களை மூடிக் கொண்டு கசையடியை எதிர்பார்த்து காத்திருந்த நீலனின் காதில் அந்த புதிய குரல் கணீரென்று விழுந்தது. அது புதிய குரல் அல்ல. பல்லாண்டுகளுக்கு முன்பாக அவனிடம் பேசி பழகிய பழைய குரல். ஆனால் அந்த குரல் இங்கே இவ்வளவு தொலைவில் கேட்க சாத்தியமேயில்லை. ஆனாலும் கேட்கிறது.நீலன் தன் கண்களை திறந்தான்.மங்கலாக தெரிந்த புதிய உருவத்தின் உடல் மொழியை கவனித்தவன் தன் கணிப்பை உறுதி செய்து கொண்டான்.
"யாரது? கள்வர் புரத்து கள்வன் ஆதித்தனா அது?" என்றான் நீலன்.
புதிய தீவில் தன்னையும் ஓருவன் அடையாளம் கண்டுபிடித்து விட்டானேயென்ற ஆச்சரியத்தில் "ஆமாம். நான் ஆதித்தன் தான் " என்றான் ஆதித்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக