ரகசிய தீவு
அத்தியாயம் 8
வீழ்ச்சியும் மீட்சியும் ஒருவனால்
நீலன் தனக்கெதிராக மணலில் புதைந்தபடி நின்று கொண்டிருந்த மதுபுட்டியை பார்த்தான். அவனது வீழ்ச்சிக்கும் இன்றைய தாழ்வான நிலைக்கும் காரணமான அந்த பொன் நிற திரவம் அதில் ததும்பி கொண்டிருந்தது. அதை மீண்டும் தீண்டவே கூடாது என்று தான் நீலன் நினைத்து கொண்டிருந்தான். ஆனால் நஞ்சுண்டனின் ஆட்கள் அடித்த அடியில் அவனது உடல் வலியால் கதறிக் கொண்டிருந்தது. அதை எடுத்து குடித்தால் மட்டுமே அவனது வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று நீலனுக்கு தெரியும்.
இதற்கு முன்பாக தனி தீவில் மாட்டிய நரன் எப்படியோ இன்னொருவனை கொன்று தின்று உயிரோடு தப்பி வந்து விட்டான். அதிர்ஷ்டம் ஒருமுறை தான் ஒரு மனிதனை காப்பாற்றும். அடிக்கடி காப்பாற்றாது என்று அவனது மூத்த கடலோடிகள் சொல்வது அவனது நினைவுக் கு வந்தது. நீலன் இந்த தீவில் இருந்து தப்பி செல்ல வேறு ஏதாவது வழிகள் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தான்.
இதற்கு முன் இந்த தீவில் இறக்கி விடப்பட்டு பசியால் இறந்து போனவர்களின் சிதிலமடைந்த எலும்புக்கூடுகளை தவிர அந்த தீவில் வேறு எதுவுமில்லை. தென்னை மரங்களிலிருந்து உதிர்ந்து கிடந்த சில இளநீர்களை உடைத்து தின்றால் இரவு நேர பசியைப் பொறுத்துக் கொள்ளலாம். அதற்கு பிறகு மரத்தில் ஏறித் தான் இளநீர்களை பறித்தாக வேண்டும். இந்த தீவில் ஒன்று இரண்டு நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். அதற்கு பிறகு பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் என்ற நிதர்சனமான உண்மை நீலனின் முகத்தில் அறைந்தது .
எப்படியாவது இங்கிருந்து தப்பி விட வேண்டும் என்று யோசித்த நீலனின் மனம் தப்பித்த பின் எங்கே செல்வது என்று எதிர் கேள்வி கேட்டது. அவனால் கப்பலைத் தொலைத்த மோகினித் தீவிற்கு திரும்ப செல்ல முடியாது. உணவுப் பொருட்களை இறக்காமல் ப்ணத்தை வாங்கி கொண்டு கப்பலோடு தான் தப்பி சென்று விட்டதாகத் தான் மகேந்திரன் நினைப்பான் என்று அவனுக்கு தெரியும். அவன் இங்கிருந்து தப்பித்து மோகினி தீவிற்கு சென்றால் மகேந்திரனிடம் விரைவிலேயே அகப்பட்டு விடுவான். பிறகுயவனனிடம் விதவிதமான வைத்திய முறைகளுக்கு நீலன் ஆளாக வேண்டியதிருக்கும். அதை விட்டு விட்டு ரகசிய தீவிற்கு செல்லலாம் என்றால் அது இரண்டு நாள் பயண தொலைவில் இருந்தது.
நீலன் அங்கே போய் சேரும் முன்பாக நஞ்சுண்டன் தன்னுடைய ஆயுத குவியலை சிகப்பு முகமூடியிடம் விற்று விட்டு பெரும் பணத்தோடு அங்கிருந்து கிளம்பியிருப்பான். ஆயுதம் இல்லாமல் கப்பலையும் பறிகொடுத்து விட்டு வெறும் கையோடு மதி மாறனை சந்தித்தால் அவன் தன்னை கொன்றே விடுவான் என்று நினைத்த நீலன் யோசிக்க ஆரம்பித்தான்.
அவனது மூளை வேறு விதமாக யோசிக்க ஆரம்பித்தது. முதலில் இங்கிருந்து எப்படியாவது தப்பித்து மோகினி தீவிற்கு செல்வோம். அங்கிருந்து யாராவது ஒரு மீகாமன் துணையோடு ரகசிய தீவிற்கு பயணமாவோம். பிறகு நடப்பது இறைவன் விட்ட வழி என்று நினைத்தவன் கீழே கிடந்த இளநீர்களை உடைத்து பசியாறினான். கீழ் வானத்தில் சூரியன் மறைவதை ஏகாந்தமாக பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் நீலன். உலகமும் வாழ்க்கையும் எவ்வளவு அமைதியாக இருக்கின்றன. இந்த மனித வாழ்வு மட்டும் ஏன் தான் இவ்வளவு சிக்கலாக இருக்கிறதோ என்று தத்துவ விசாரணையில் ஈடுபட்டவன் இரவு தூங்குவதற்காக ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து தன்னுடைய படுக்கையை தயார் செய்தான்.
தலைக்கு வைக்க தலையணை போன்ற பொருளை தேடியவன் கண்களில் அந்த மண்டையோடு பட்டது. மறையும் சூரியனின் கதிர் ஒளி பட்டு அதன் வாய் பிரகாசிக்க துவங்கியது. இது என்ன ஆச்சரியம் என்று நினைத்த நீலன் அந்த மண்டையோட்டை எடுத்து பார்த்தான். அந்த மண்டையோட்டில் இரண்டு தங்க பற்கள் இருப்பதையும் அவை தான் சூரிய வெளிச்சத்தில் பிரகாசித்தன என்பதையும் அவன் கண்டுகொண்டான். " பயல்! சாகும் போதும் பணக்காரனாகத்தான் செத்திருக்கிறான்" என்று முணுமுணுத்த நீலன் கடும் முயற்சிக்கு பின்னால் அந்த பற்களை பிடுங்கி எடுத்து கொண்டான்.
கடலோடிகளை தாக்கும் வியாதி ஸ்கர் வி .இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாலுமிகளும் மற்றவர்களும் எலும்பு பலவீனமாகிதங்கள் பற்களை விரைவிலேயே இழந்து விடுவார்கள். கடல் கொள்ளையர்களை அடையாளம் காண்பதே அவர்களின் மொக்கை வாயை வைத்து தான். பற்களை இழந்தவர்கள் செயற்கை பற்களை கட்டி கொள்வதும், வசதி படைத்தவர்கள் தங்கத்தால் பற்களை கட்டி கொள்வதும் வாடிக்கை. அப்படி பாதிக்கப்பட்டு தங்கப் பல் கட்டிய ஒருவனின் மண்டையோட்டைத்தான் நீலன் கையில் வைத்திருந்தான். எலும்பை பலவீனப்படுத்தும் ஸ்கர்வியிலிருந்து தப்ப கடலோடிகள் ஏராளமான ஆரஞ்சு, எலும் மிச்சை பழங்களை பழரசமாக அருந்துவது வழக்கம். அந்த பழங்களில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் ஸ்கர்விநோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது.நீலனும் தன்னுடைய பற்களில் நான்கை இழந்து விட்டு தங்க பற்கள் கட்டியிருந்தான்.
"இந்த தங்க பற்கள் என்னுடைய செலவுக்கு உதவும்.பார் நீலா. கடவுள் உனக்கு உதவ தீர்மானித்து விட்டார். இல்லையென்றால் இந்த தீவில் உனக்கு தங்கத்தை அள்ளி கொடுத்திருப்பாரா?" எதிர்பாராத இந்த அதிர்ஷ்டத்தால் நீலனின் உற்சாகம் அதிகரித்தது.
தீவு இருளில் மூழ்கியது. அலைகளின் ஓசை மட்டுமே கேட்டு கொண்டிருந்தது. வானத்தில் நிலவும் , நட்சத்திரங்களும் ஒளி வீசி கொண்டிருந்தன. இதமான காற்று வீசியதால் நீலன் விரைவிலேயே ஆழ்ந்த தூக்கத்திற்கு போனான். அவனது கனவில் ஏராளமான எலும்பு கூடுகள் நடனமாட துவங்கின. "வா. வந்துவிடு!" என்ற ஓலம் அவன் காதுகளை பிளந்தது. ஆடிக்கொண்டிருந்த ஒரு எலும்பு கூட்டின் வாயில் இரண்டு பற்கள் இல்லை." என் பற்களை திருடியவனே! அதை திரும்ப கொடு" என்றபடி அந்த எலும்பு கூடுநீலனின் கழுத்தை நெறிக்க தொடங்கிய போது நீலன் பயத்தோடு எழுந்து விட்டான். அவனது ஆடைகள் வேர்வையில் நனைந்திருந்தன. தீச்சொப்பனங்களால் நீலன்கதிகலங்கி போயிருந்தான். அவன் கை தன்னிச்சையாக இடுப்பிலிருந்த மதுபுட்டிக்கு போனது.
அதை கையில் எடுத்தவன்" என்னுடைய வைராக்கியமே! என்னை மன்னித்து விடு. இப்போதைக்கு என்னுடைய பயத்தை போக்கும் ஒரே மருந்து இது தான் " என்றபடி மதுவை குடிக்க தொடங்கினான்.அமிர்தம் என்பதை நீலன் மதுவாக அன்று இரவு உணர்ந்தான். புட்டியில் கால் வாசியை குடித்தவன் அதை இறுக மூடிவிட்டு அப்படியே போதையில் சரிந்தான். இப்போது வந்த கனவில் நீலன் எலும்பு கூடுகளோடு ஆடிப்பாடி அவற்றோடு சண்டை போட துவங்கியிருந்தான்.
சுள்ளென்று வெய்யில் முகத்திலடிப்பதை உணர்ந்த நீலன் கண் விழித்தான். சூரியன் சுத்த சுயம்பிரகாசமாக வானில் ஒளி வீசி கொண்டிருப்பதை பார்த்த நீலன் தான் ரொம்ப நேரமாக தூங்கி கொண்டிருப்பதை உணர்ந்தான்.
நீலன் சுற்றும் முற்றும் பார்த்தான். நின்று கொண்டிருந்த தென்னை மரங்களை பார்த்தவன் இவற்றை கீழே வீழ்த்தி விட்டால் அதை வைத்து கட்டுமரம் ஓன்றை தயார் செய்து விடலாம். ஆனால் அவற்றை எப்படி வீழ்த்துவது? அவனிடம் வாளும் இல்லை. நஞ்சுண்டன் அதைப-றித்து சென்று விட்டான்.
நீலன் யோசித்தபடி மதுபுட்டியை எடுத்தான். அதை கையில் வைத்தபடி யோசித்து கொண்டிருந்தவன் மூளையில் பளிச்சிட்டது ஒரு யோசனை. ஆங்காங்கே கிடைத்த குப்பை கூளங்களை சேகரித்து கீழே வைத்தவன் அவற்றின் மேல் இரண்டு கற்களை வைத்தான். அந்த கற்களுக்கு இடையே மது புட்டியை கிடைமட்டமாக வைத்தான். அவன் ஏற்கனவே கால்வாசி புட்டியை காலி செய்து விட்டதால் அதில் ஒரு காற்று குமிழ் உருவாகியிருந்தது. சூரிய வெளிச்சம் அந்த இடைவெளிகளில் ஊடுருவும் போது அந்த இடைவெளி ஒரு குவி ஆடியை போல செயல்பட்டு சூரிய வெளிச்சத்தை ஒருமுகமாக்க தொடங்கியிருந்தது. சூரிய ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாறத் தொடங்கியிருந்தது.
நீலன் மிச்சம் மீதி இருந்த தேங்காய்களை தின்று முடித்த போது மதுபுட்டிக்கு கீழே நெருப்பு உருவாகியிருந்தது. ஒடிப்போய் மதுபுட்டியை எடுத்து கொண்ட நீலன்" என் வீழ்ச்சிக்கு காரணமான நீயே என் மீட்சிக்குக்கும் காரணமாக போகிறாய். என் வாழ்க்கையில் உன்னை மறக்கவே மாட்டேன்" என்று ஆனந்த கூத்தாடினான் நீலன்.
உருவாகியிருந்த நெருப்பை பெரும் நெருப்பாக உருமாற்றிய நீலன் அவற்றை தென்னை மரங்களின் அடிப்பாகத்தில் கொட்டி அவற்றிலும் தீயை வைத்தான். நான்கு மரங்களின் அடிப்பாக மும் தீப்பிடித்து எரிந்து பெரும் புகையை வெளியே விட்டன. அந்த புகையை பார்த்து ஏதாவது கப்பல்கள் தீவு பக்கம் வரலாம் என்று அவன் எதிர்பார்த்தான். அப்படி வெளியிலிருந்து உதவி வராவிட்டாலும் அவன் தன்னுடைய முயற்சியை கைவிடவில்லை.
விரைவிலேயே மரங்கள் பெரும் சத்தத்தோடு தரையில் விழுந்தன. அவற்றில் எரிந்த நெருப்பை அணைத்த நீலன் மது பானத்தை முழுமையாக குடித்து அதை காலி செய்தான். குடித்து முடித்தவுடன் நீலன் மதம் கொண்ட யானையாக மாறினான். உச்சசகட்ட போதையும், உயிர் தப்பும் வெறியும் அவனை பேய் போல் செயல்பட வைத்தது.ஓற்றை ஆளாக மரங்களை தீவின் கரைக்கு உருட்டி கொண்டு வந்து சேர்த்தவன் காட்டு கொடிகளையும், தேங்காய் நார்களையும் வைத்து வலுவான கயிறுகளை தயார் செய்தான். விரைவிலேயே அவனால் தென்னை மரத்தண்டுகளை கொண்டு ஒரு கட்டு மரத்தை உருவாக்கி விட முடிந்தது.
மாலை கவிழ்ந்து கொண்டிருந்தது. பகலில் பயணம் செய்தால் யார் கண்ணிலாவது பட்டு விடுவோம் என்பதால் இரவில் பயணத்தை மேற்கொள்ள நீலன் தீர்மானித்திருந்தான். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. இரவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களை வைத்து எளிதாக திசையை அனுமானிக்க முடியும். நீலன் கட்டுமரத்தை கடலில் இறக்கி அதன் மீது தாவி ஏறினான். அவன் கையில் நீளமான காட்டு கொம்பு துடுப்பாக உருமாறி இருந்தது. "போய் வருகிறேன் கல்லறை தீவே ! விரைவிலேயே என் நண்பனை நான் இங்கே கொண்டு வந்து சேர்ப்பேன்"
நீலன் கல்லறைதீவிலிருந்து கிளம்பினான்.
தன்னிடமிருந்து முதலும், கடைசியுமாக ஒருவன் தப்பி செல்வதை கல்லறைதீவு மவுனமாக பார்த்து கொண்டிருந்தது.
அலைகடல் நடுவே தன்னுடைய கலத்தை பெரும் பிரயாசையோடு மோகினி தீ வை நோக்கி நகர்த்தி சென்றான் நீலன்.
அங்கே கரையிலேயே தன்னை ஒற்றன் ஒருவன் பார்ப்பான் என்பதையோ தன்னை பிடிக்க மகேந்திரன் இப்பால சை அனுப்பி வைப்பான் என்பதையோ அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக