ரகசிய தீவு
அத்தியாயம் 6
வஞ்சகர் உலகம்
மலைநாடு கடல் வணிகத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது. உலகத்தின் அத்தனை நாடுகளிலும் மலைநாட்டு மாலுமிகள் கால் பதித்திருந்தார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து மிக குறைவான விலைக்கு பொருட்களை வாங்கி மற்ற நாடுகளில் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து வந்தார்கள். அதனால் மலைநாடு கடல் பலத்திலும் செல்வ வளத்திலும் மிகச் சிறப்பான இடத்தை பெற்றிருந்தது.மலை நாட்டிற்கு போட்டியாக கடல் வணிகத்தில் கடும் போட்டியை கொடுத்து வந்தது வளநாடு. தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த இரண்டு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு தங்களுக்குள் திரைமறைவு யுத்தத்தை நடத்தி வந்தன.
மலை நாட்டின் மிகச் சிறந்த மாலுமிகளை விரல் விட்டு எண்ணினால் அதில் முதல் மூன்று இடங்களில் நீலனின் பெயர் இடம் பெற்று விடும். நீலனின் காலடிபடாத தீவுகளோநாடுகளோ உலகத்தில் இல்லை. அவனது படகான முத்தழகி மிதந்து செல்லாத கடல் பரப்பே இல்லை என்று கூட சொல்லி விடலாம். மலைநாட்டு மன்னன் கடல் வணிகம் சம்மந்தமான எந்த முடிவை எடுத்தாலும் நீலனை கலந்து பேசாமல் முடிவுகளை எடுக்க மாட்டான். மலைநாட்டு மன்னனை எந்த நேரத்திலும் சந்தித்து பேசும் உரிமையையும் நீலன் பெற்றிருந்தான்.
இவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்த நீலனின் ஓரே பலவீனம் குடி. கண் மண் தெரியாமல் குடித்துவிட்டு இடம் தெரியாமல் விழுந்து கிடப்பது அவனது பழக்கம். அவனது கடலோடும் திறமைக்காக அவனது குடிப்பழக்கத்தை அனைவரும் சகித்து கொண்டிருந்தனர். உலகில் தயாரிக்கப்படும் அத்தனை விதமான மதுபானங்களையும் குடித்து பார்ப்பதற்கென்றே பிறவி எடுத்தது போலத்தான் நீலன் நடந்து கொண்டிருந்தான்.
அவன் தன்னுடைய கடல் பயணம் ஒன்றில் தான் நடுக்கடலில் ஓரு கட்டையை பிடித்தபடி மிதந்து கொண்டிருந்த ஒரு மனிதனை காப்பாற்றினான். அவன் தான் நஞ்சுண்டன் .தன்னை மீட்ட நீலனிடம் தானும் ஒரு கடலோடி என்றும் தான் பணிபுரிந்த கப்பல் புயல் காற்றில் கடலில் மூழ்கி விட்டதாகவும் தான் மட்டும் தப்பித்து ஒரு கட்டையை பிடித்து கொண்டு இரண்டு நாட்களாக சோறு தண்ணியில்லாமல் மிதந்து கொண்டிருப்பதாகவும் கூறினான்.
அவனை காப்பாற்றிய நீலன் அவனுக்கு வேறு போக்கிடம் இல்லாததால் தன்னுடைய முத்தழகியிலேயே வேலை செய்யும்படி கூறி விட்டான். இதேபோல் கப்பல் உடைந்து கடலில் மிதந்த அனுபவம் நீலனுக்கும் உண்டு. அவனும் இன்னும் இருவரும் எப்படியோ உயிர் தப்பி ஒரு தீவில் கரையேறி விட்டனர். அங்கேயிருந்து தப்பி செல்லவும் வழியில்லாமல் உணவு பொருட்களும் கிடைக்காமல் மூவரும் கொலை பசியோடு அலைந்து திரிந்தனர். பதினைந்து நாட்களுக்கு பிறகு தற்செயலாக அந்த பக்கம் வந்த ஒரு கப்பல்தீவில் இருந்த இருவரை மீட்டது. மூன்றாவது ஆசாமியை பசி பொறுக்க முடியாமல் நீலனும் அவனது நண்பனும் கொன்று தின்று விட்டனர். தான் உயிரோடு இருக்க நீலன் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தான். அவனை பற்றி நன்றாக தெரிந்தவர்கள் அவனை நரன் என்ற பெயரில் அழைத்தனர்.
முத்தழகியில் வேலை செய்த நஞ்சுண்டன் எல்லோரிடமும் சினேகமாக பழகி சுறுசுறுப்பாக செயல்பட்டு எல்லோருக்கும் பிடித்தமானவனாக மாறி விட்டான். அவன் சாதாரண பணியாள் வேலை செய்ய பிறந்தவன் இல்லை என்று கண்டு கொண்ட நீலன் அவனை கப்பலின் துணை தலைவனாக மீகாமனாக நியமித்தான். புதிதாக பணிக்கு வந்து சேர்ந்த ஒருவன் சீக்கிரமாகவே தங்களுக்கு தலைவனாக மாறியதை பழைய ஆட்கள் யாருமே எதிர்க்கவில்லை என்னும் அளவிற்கு நஞ்சுண்டன் மாயம் செய்து ஆட்களை தன் வசம் கொண்டு வந்திருந்தான். ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கும் சிறந்த மது வகைகளை நீலனுக்கு கொடுத்து எந்த நேரத்திலும் போதையிலேயே நீலன் இருக்கும் படி பார்த்து கொண்டான் நஞ்சுண்டன் .
சிறிது நாட்களிலேயே கப்பலின் எல்லா பொறுப்புகளும், அதிகாரங்களும் நஞ்சுண்டணிடம் வந்து சேர்ந்தன. ஆட்கள் அடுத்தது என்ன செய்ய வேண்டுமென்று அவனை கேட்டே காரியம் செய்தனர். நீலனுக்கு பெயரளவிற்கு மரியாதை இருந்ததே தவிர மற்ற முக்கிய முடிவுகள் அனைத்தையும் நஞ்சுண்டனே எடுத்தான். நஞ்சுண்டனின் அதிகாரம் விரிவடைந்து கொண்டே போவது நீலனுக்கு தெரிந்தாலும் அவன் அதை கண்டு கொள்ளவில்லை.
கடைசியாக அவன் மலைநாட்டு மன்னனை அவரது அழைப்பின் பேரில் சந்திக்க சென்றான். அங்கே நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பி வந்தவன் என்றும் இல்லாத வழக்கமாக தலைப்பாகை அணிந்து கொண்டிருந்தான். அதை தூங்கும் போது கூட அவன் கழற்றுவதில்லை. மலைநாட்டு மன்னர் தன்னுடைய கடல் சேவையை பாராட்டி தனக்களித்த பரிசு அந்த தலைப்பாகை என்று நீலன் சொன்னதை கப்பலில் இருந்த அனைவரும் நம்பினார்கள். ஆனால் நஞ்சுண்டன் நம்பவில்லை. ஏதோ ஒரு விபரீதமான அரசியல் சதி ஒன்றில் நீலன் ஈடுபட்டிருப்பதாக அவன் நம்பினான். அது என்னவென்று தெரிய அவனும் பல வழிகளில் முயன்று பார்த்து விட்டான். ஆனால் பலனில்லை. ஊற்றி கொடுத்து உண்மையை வெளியே கொண்டு வர முயற்சிக்கும் போதெல்லாம் நீலன்" இது நல்ல திட்டம்!இதை செயல்படுத்தினால் வள நாட்டை ஒழித்து விடலாம்." என்று உளறி விட்டு படுத்து குறட்டை விட ஆரம்பித்து விடுவான். சரியான நெஞ்சழுத்தக்காரன். கடும் போதையிலும் உண்மையை சொல்ல மறுக்கிறான் என்று மனதிற்குள் குமுறிக் கொண்டிருந்தான் நஞ்சுண்டன் .
இதற்கு நடுவே தான் மோகினி தீவின் மகேந்திரன் உணவு பொருள் கொண்டு வரும் வேலையை நீலனிடம் ஒப்படைத்தான். நீலன் எப்போதும் போதையில் இருந்ததால் பொருட்கள் ஏற்றுவது இறக்குவது என்று எல்லா வேலைகளையும் நஞ்சுண்டனே செய்ததால் யவன னான இப்பாலசுடன் அவனுக்கு நட்பு ஏற்பட்டது. சீக்கிரத்திலேயே யவனனுக்கு தமிழ் பேச மட்டுமே தெரியும். எழுத படிக்க தெரியாது என்பதை நஞ்சுண்டன் தெரிந்து கொண்டான்.
மகேந்திரனின் கிட்டங்கியில் பொருளை இறக்கிவிட்டு அதற்காக தரப்படும் ஒப்புகை சீட்டை பலமுறை பார்த்திருந்த நஞ்சுண்டன் அதில் ஒரு அனுமதி சீட்டை யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்திருந்தான். தன் திட்டத்தை நிறைவேற்றும் முன்பாக கப்பலில் உள்ளவர்களின் மனதை மாற்றி தன் கூட்டாளிகளாக்கி கொண்டான். அன்று இரவு பழைய அனுமதி சீட்டை நீலனிடம் கொடுத்தான் நஞ்சுண்டன். அதற்கு முன்பாகவே யவனனை தனியாக சந்தித்த நஞ்சுண்டன் தன்னுடைய அன்பு பரிசு என்று வெளிநாட்டு மதுபுட்டி ஓன்றை அவனுக்கு பரிசாக கொடுத்ததுடன் தன்னுடன் குடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அவனை குடிக்க வைத்திருந்தான்.
இரவு நேரத்தில் முழு போதையில் இருந்த நீலனும், அரைகுறை போதையில் இருந்த இப்பாலசும் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரவின் மங்கிய வெளிச்சத்தில் நீலன் காட்டிய அனுமதி சீட்டை பார்த்த யவனன்கிட்டங்கிக் கு பொருட்கள் வந்து சேர்ந்து விட்டதாக நினைத்து கப்பல் கிளம்ப அனுமதித்து விட்டான். அவன் மட்டும் தான் ஆட்களில் ஒருவனை அனுப்பி கிட்டங்கி பொறுப்பாளனை விசாரித்திருந்தால் கதை வேறு மாதிரியாக போயிருக்கும். நீலனின் நீண்ட நாள் பழக்கமும், குடிபோதையும் யவனின் மூளையை மழுங்க செய்திருந்தன.
இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த நஞ்சுண்டன் நீலனை ஏற்றி கொண்டு கப்பலை கிளப்பி விட்டான். அவன் மனதில் வேறொரு திட்டம் உருவாகியிருந்தது.
காலையில் நீலன் கண் விழித்தபோது தான் கப்பலில் இல்லை என்பதையும் ஒரு தீவில் இருப்பதையும் உணர்ந்தான்.
சற்று தூரத்தில் தன் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த நஞ்சுண்டன் "தலைவர் எழுந்து விட்டார்" என்றான்.
"நஞ்சுண்டா.! எங்கே என் முத்தழகி? இது என்ன இடம்? நாம் ஏன் இங்கே இருக்கிறோம்?" என்றான் நீலன் கோபத்துடன் .
"கத்தாதே நீலா! இப்போது முத்தழகி என்னுடையவள். நான் தான் இனிமேல் அதன் தலைவன்." என்று சிரித்தான் நஞ்சுண்டன் .கரையோரத்தில் சிறு படகு ஓன்று நின்றிருந்தது. அதில் தான் அவர்கள் நீலனை இந்த தீவிற்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று அவனுக்கு புரிந்தது.
"துரோகிகளே! நான் உன்னை முழுதாக நம்பினேன். நீ எனக்கு துரோகம் செய்து விட்டாய்" என்று குமுறினான் நீலன்.
"துரோகம் செய்த தால் தான் எனக்கு இவ்வளவு பெரிய கப்பல் கிடைத்தது "
"இது என்ன இடம்? என்னை எதற்காக இங்கே கொண்டு வந்திருக்கிறாய்?" என்றான் நீலன்.
"இது கல்லறைதீவு. இங்கே வந்தவர்கள் தப்பி பிழைத்ததாக சரித்திரம் கிடையாது"
நீலன் சுற்றும் முற்றும் பார்த்தான். நான்கைந்து தென்னை மரங்களை தவிர தீவில் வேறு எதுவுமில்லை. ஆங்காங்கே சில எலும்பு கூடுகள் மண்ணில் மக்கி கொண்டிருந்தன.
"உன்னை கொல்லத்தான் நினைத்தேன். ஏனோ மனம் கேட்கவில்லை. உன்னை கொன்ற பாவம் எனக்கு வேண்டாம் என்று தான் இங்கே விட்டு போகிறேன். தனிமையில் கிடந்து பசியோடு மரணத்தை எதிர்கொள். இல்லையென்றால் தென்னை மரத்தின் இளநீர்கள் தீரும் வரை அவற்றை பறித்து தின்று விட்டு உயிர் வாழ முயற்சி செய்" என்றான் நஞ்சுண்டன் .
கல்லறைதீவில் கப்பல்கள் ஒதுங்காத காரணத்தால் கப்பற் கொள்ளையர்களும் கடல் மாலுமிகளும் தங்களின் தனிப்பட்ட விரோதத்தை தீர்த்து கொள்ளும் இடமாக அதை பயன்படுத்தி வந்தனர். தனியாக அந்த தீவில் இறக்கி விடப்படுகிறவர்கள் வாழ முயற்சி செய்து விட்டு சொற்ப நாட்களிலேயே பசியால் மரணமடைவதே வாடிக்கை.
நீலன் அமைதியாக யோசித்தான்.
"நஞ்சுண்டா! இத்தனை நாட்களாக நன்றாகத்தானே இருந்தாய். இப்போது திடிரென்று துரோகம் செய்கிறாயே? ஏன்? எதற்காக இப்படி நிறம் மாறி நடந்து கொள்கிறாய்?" என்றான் பரிதவிப்புடன் நீலன்.
"நல்ல கேள்வி. திடிரென்று நான் துரோகியாக மாற காரணம் இந்த வாள். உணவு பொருள் பொதிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட இந்த வாள் தான் உன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் " என்ற நஞ்சுண்டன் தன் இடுப்பில் இருந்த வாளை நீலனிடம் தூக்கி எறிந்தான்.
அதை பார்த்ததும் நீலனின் முகம் மாறியது. அவனது உடல் நடுங்க ஆரம்பித்தது.
" இதை கண்டுபிடித்து விட்டாயா?இவை மலை நாட்டின் ஆயுதங்கள் . ரகசிய தீவில் ராஜ பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவை. இதை வைத்து என்ன செய்ய போகிறாய்?"பதட்டத்துடன் ஓலித்தது நீலனின் குரல்.
"நீ கப்பலில் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை ரகசிய தீவில் ராஜ பிரதிநிதியை எதிர்த்து புரட்சி செய்யும் சிகப்பு முகமூடியிடம் விற்க போகிறேன்."
"அடப்பாவி.அப்படி செய்து விடாதே! அங்கே சிகப்பு முகமூடி வென்று ஆட்சியை பிடித்து விட்டால் அதை பார்த்து கொண்டு மலைநாடு சும்மா இருக்காது.மலைநாடும், வள நாடும் போரில் குதித்து இந்த பிராந்தியம் சுடுகாடாகி விடும்" என்று அலறினான் நீலன்.
" உன்னிடம் இன்னொரு ரகசியம் ஓளிந்திருப்பதையும் நான் அறிவேன்" என்றான் நஞ்சுண்டன் .
நீலனின் முகம் இருண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக