செவ்வாய், 14 ஜூன், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம்1

தாயம். ஆட்டம் ஆரம்பம்

" என்ன இப்பாலஸ்! இன்னமும் தாயம் போடாமல் தவித்து கொண்டிருக்கிறாயே? ஆட்டத்தை துவங்க ஆசை இல்லையா?" என்றவனை நிமிர்ந்து பார்த்தான் யவன னான இப்பாலஸ்.தாயம் விழா த ஏமாற்றம் அவனது நீல நிற விழிகளில் எதிரொளித்தது. அவனுக்கு எதிரே விரிக்கப்பட்டிருந்த தோலில் வரையப்பட்ட தாய கட்டங்களில் மற்றவர்கள் ஆட்டத்தை துவங்கி விட்டதற்கு அடையாளமாக காய்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி கிடந்தன.

இரண்டு ஆட்டங்களில் தொடர்ந்து வென்று விட்ட இப்பாலஸ் மூன்றாவது முறையாகவும் ஆட்டத்தை வென்று விட நினைத்திருந்தான். ஆனால் அவனது இஷ்ட தெய்வமான அப்போல்லோவின் அருள் கிடைக்காதததால் அவனுக்கு ஆட்டத்தை துவக்கும் ஆரம்ப புள்ளியானதாயம் இன்னும் விழுந்தபாடில்லை.

"ஏனோ என்னுடைய கடவுள் என் மீது கருணை காட்ட மறுக்கிறார். நான் தாயம் போட்டு ஆட்டத்தை துவக்கும் முன்பாக நீங்கள் மூவரும் ஓருவரை ஒருவர் வெட்டி கொண்டு ஆட்டத்தை முடித்து விடுவீர்கள் போலிருக்கிறதே?" என்றான் இப்பாலஸ்.

விருத்தங்களை எண்ணி காய்களை நகர்த்தியவன் "மனதை தளரவிடாதே இப்பாலஸ்!இ தோ இப்போது காய்களை உருட்ட வேண்டியது உன்னுடைய முறை. உன் இஷ்ட தெய்வத்தை வணங்கி கொண்டு காயை உருட்டு " என்றான் மற்றோருவன்.

இப்பாலஸ்அப் போல் லோவை மனதில் நினைத்து கொண்டு காய்களை உருட்டினான். கடகடவென்று உருண்டகாய்கள் நிலை பெற்ற போது அவனது கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. அவன் வேண்டியது வீண் போகவில்லை. அவனது வேண்டுதலுக்கு கடவுள் செவிசாய்த் திருந்தார். அவன் இவ்வளவு நேரம் எதை வேண்டி மன்றாடிக் கொண்டிருந்தானோ அந்த காயம் என்ற ஒற்றை படை எண் விழுந்திருந்தது.

"சபாஷ். இனி ஆட்டம் சூடு பிடிக்கப் போகிறது. இப்பாலஸ்களத்தில் இறங்கி விட்டான்" என்றான் மற்றொருவன்.

இப்பாலஸ்தாயத்திற்கு பிறகு விழுந்த விருத்தத்திற்கு காயை நகர்த்தியபோது தான் அந்த குதிரை வெகு வேகமாக வந்து நின்றது. அதன் வாயில் தள்ளி கொண்டிருந்த நுரையும் குளம்பில் ஒட்டியிருந்த செம்மணலும் அதன் வேகத்தை சொல்லாமல் சொல்லின!

அந்த குதிரையிலிருந்து குதித்து இறங்கியவன்" இப்பாலஸ்! உன்னை எங்கேயெல்லாம் தேடுவது ? ஏஜமானர் உடனே உன்னை பார்க்க வேண்டுமென்கிறார். உடனே கிளம்பி வா" என்றான்.

"நீ முன்னால் போ. நான் பின்னால் வருகிறேன்." என்ற இப் பாலஸ் தாயக் கட்டம் வரையப்பட்ட தோல் சுருளை சுற்றி எடுத்து குதிரை சேணத்தில் வைத்தான். காய்களை சிறு துணியில் முடிந்து இடுப்பில் சொருகியவன்"ஓய்வு நேரம் முடிந்துவிட்டது நண்பர்களே! நமக்காக புது வேலை எதையாவது எஜமானர் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். வாருங்கள் போகலாம்" என்றான்.

"ஆட்டம் பாதியில் நின்று விட்டதை நினைத்து வருத்தமாக இருக்கிறது."

"அதற்காக சந்தோஷப்படு. ஆட்டத்தை இப்பாலஸ்துவங்கியிருந்தால் அவன் தான் ஜெயித்திருப்பான்.வழக்கம் போல் நாம் தான் தோற்றிருப்போம்."

அவர்கள் அங்கிருந்து குதிரையில் கிளம்பினார்கள். அவர்கள் கிளம்புவதை இரண்டு கண்கள் கவனித்து கொண்டிருந்தன.

"இப்பாலஸ்! எங்கே உன் ப்ரியநண்பனை காணவில்லை?" என்றான் சகாக்களில் ஒருவன்.

"நான் அழைக்கும் வரை அவன் வர மாட்டான் " என்ற இப்பாலஸ் விசித்திரமான சீழ்க்கை ஒலி ஓன்றை எழுப்பினான்.

அதுவரை மரம் ஓன்றில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ராட்சஸ கழுகு சீழ்க்கை ஒலி கேட்ட மறுகணம் தன் பெரிய இறக்கைகளை விரித்து கொண்டு விண்ணில் ஏற துவங்கியது.

இப்பாலஸ் தனக்குள் புன்னகைத்து கொண்டான்.

கிரேக்க நாட்டை சேர்ந்தஇப்பாலஸ் மோகினி தீவிற்கு வந்து சேர்ந்து ஐந்து வருடங்களாகி விட்டன. வாள் வீச்சிலும் சவுக்கை வீசுவதிலும் தீவில் அவனுக்கு நிகராக யாருமில்லை. செடிக்கு வலிக்காமல் அதன் பூவை தன் சவுக்கால் பறிப்பது அவனது பொழுதுபோக்கு. அந்த தீவின் தலைவன் மகேந்திரன் இவனை தன்னுடைய தலைமை பாதுகாப்புஅதிகாரியாக நியமித்த பின்பு தீவில் குற்றங்கள் குறைய தொடங்கி விட்டன. சிவந்த தலை முடியும், நீல நிற கண்களையும் கொண்ட அழகான தோற்றமுடைய அந்த யவனன் அங்கிருந்த தீயவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தான். தமிழ் பேச தெரிந்த அந்த யவனனுக்கு தமிழை எழுதவோ படிக்கவோ தெரியாது. அந்த பலவீனம் தான் ஒரு விபரீதத்திற்கு அடி போட்டு வைத்திருந்தது.

அவனது கண் பார்வையில் படாமல் மோகினி தீவில் இருந்து எந்த கப்பலும் வெளியேறி விட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த இப் பாலஸ்சின் ஆணவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அடி விழுந்திருந்தது. காரியம் கை மிஞ்சி போய் விட்டதால் அவனால் எதையும் செய்ய முடியவில்லை. அந்த சம்பவத்தால் மகேந்திரனுக்கு இப்பாலஸ் மீது சற்று மன வருத்தம் தான்.

மகேந்திரனின் மாளிகைக்கு முன்னால் குதிரையை நிறுத்தி இறங்கிய இப்பாலஸ்தன் சகாக்களை அங்கேயே காத்திருக்கும் படி சைகை செய்து விட்டு மாளிகையினுள் நுழைந்தான்.

அவனது வரவுக்காக காத்திருந்த மகேந்திரன்" இப்பாலஸ்.! உள்ளே வா ! உனக்காகத் தான் காத்திருக்கிறேன்"

எப்போதும் அமைதியாக இருக்கும் மகேந்திரன் அன்று ஏனோ பரபரப்பாக இருந்தது யவனனுக்கு வியப்பை தந்தது.மகேந்திரனின் முகத்தை பார்க்கவே சங்கடப்பட்டு கொண்டிருந்த யவனன் அதை இப்போது கைவிட்டான்.

மகேந்திரன் இருந்த அறைக்குள் யவனன் நுழைந்ததும் கதவை தாழிட்டவன் "அவன் திரும்ப வந்து விட்டான்" என்றான் பரபரப்புடன்.

யவனனுக்கு அவன் யாரைப் பற்றி சொல்கிறான் என்று சற்றும் புரியவில்லை. தன் தடுமாற்றத்தை வெளியே காட்டி கொள்ளாதவன்" யார்?" என்றான் ஓற்றை சொல்லாய்.

"உன்னை ஏமாற்றி நம் சரக்குகளை தீவில் இறக்காமல் தன் கப்பலோடு தலைமறைவாகி போன நீலன் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் தீவிற்கு வந்து விட்டான்"

யவனனின் முகம் கன்றி சிவந்தது. தன் எஜமானனிடம் தனக்கு கெட்ட பெயரை வாங்கி கொடுத்த அந்த குடிகார எத்தன் திரும்பவும் தீவிற்குள் தலை காட்டி விட்டதை தன் ஆளுகைக்கு விடப்பட்ட சவாலாக நினைத்தான்.

"இந்த விசயம் உங்களுக்கு எப்படி தெரியும்?"

"நேற்று நள்ளிரவு நம் ஒற்று ஆட்களில் ஒருவன் அவனை துறைமுகத்தில் அடையாளம் கண்டிருக்கிறான். அவன் நம் ஆளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எங்கோ தலைமறைவாகி விட்டான். அவன் இந்த தீவை தவிர வேறு எங்கும் போயிருக்க முடியாது"

" அவனது முத்தழகி கப்பல் ?"

"அதை காணவில்லை. பயல் கட்டுமரம் ஓன்றில் பயணமாகி இங்கே வந்திருக்கிறான்."

" அவன் இந்த தீவில் எங்கே பதுங்கி கிடந்தாலும் அவனை கண்டுபிடித்து உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன்"

" அவன் தன் கப்பலை ஒரு நிமிடம் கூட பிரியமாட்டான். தன்னுடைய முதல் மனைவி என்றே அதை வர்ணிப்பான். இப்போது மனைவியில்லாமல் தனியாக வந்திருக்கிறான். அதுதான் எனக்கு குழப்பமாக இருக்கிறது"

"ஆசாமியை நேரில் கொண்டு வருகிறேன். உங்கள் குழப்பத்தை விசாரித்து தீர்த்து கொள்ளலாம். அவன் முதலில் எங்கே இருப்பான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்."

"கவனம் .உன் முரட்டுத்தனத்தை அளவோடு பிரயோகப்படுத்து. நீலன் எனக்கு உயிரோடு வேண்டும்"

யவனன் தலையசைத்து விட்டு தன் ஆட்களோடு கிளம்பினான். குதிரையின் சேணத்தின் மீது அமர்ந்திருந்த கழுகை பிடித்து கூண்டில் அடைத்தவன் " காத்திரு ஹேர்குலஸ் ! சீக்கிரமாக திரும்பி வருகிறேன்" என்றான்.

நீலன் தன் கப்பல் முத்தழகியை பிரிந்து இருப்பதில்லை. அதே போல் மதுவைப் பிரிந்தும் அவனால் இருக்க முடியாது என்று யவனனுக்கு தெரியும். அவன் அடிக்கடி தென்படும் மதுபான விடுதியை நோக்கி குதிரைகள் விரைந்தன.இடைப்பட்ட நேரத்தில் யவனன் தனக் கிடப்பட்ட பணியை தன் சகாக்களிடம் எடுத்து கூறினான். அவர்கள் நீலனை பிடிக்க தயாரானார்கள்.

குதிரைகளை மதுபான விடுதிக்கு வெளியே நிறுத்திய இப்பாலஸ்தன் சகாக்களை வெளியே நிறுத்திவிட்டு அவன் மட்டும் உள்ளே நுழைந்தான்.

மதுபான விடுதி உரிமையாளனின் முகம் இவனை பார்த்ததும் மாறியது.

" வாருங்கள் இப்பாலஸ்! சுவையான யவன தேசத்து மது நேற்று தான் கப்பலில் வந்தது. குடித்து பாருங்கள். சுவையில் சொக்கிப் போவீர்கள்"

"நான் மதுவருந்த வரவில்லை நண்பா. உன் வாடிக்கையாளர் ஒருவரின் வருகையை பற்றி அறிந்து கொள்ள வந்திருக்கிறேன்"

"இங்கே நிறைய பேர் என் வாடிக்கையாளர் தான். நீங்கள் உட்பட . நீங்கள் யாரை கேட்கிறீர்கள்?"

"நீலன்.முத்தழகியின் தாலிகட்டாத கணவன்"

"ஓ! அந்த குடிகார கிழவனா? அவன் இந்த தீவை விட்டு போய் இரண்டு நாட்களாகி விட்டனவே? திரும்ப வந்து விட்டானா என்ன?"

யவனன் அவனை ஒரு முறை உற்று பார்த்தான்.

"ஏன் என்னை அப்படி பார்க்கிறீர்கள்?"

"நீ உண்மையை சொல்கிறாயா? இல்லை பொய் சொல்கிறாயா என்று யோசிக்கிறேன்"

"நான் உண்மையைத்தான் சொல்கிறேன்"

"அதையும் சோதித்து பார்த்து விடுவோம். எங்கள் நாட்டில் கத்தி சோதிடம் என்ற ஒரு சோதிடம் இருக்கிறது. அதை பரீட்சித்து பார்த்தால் நீ சொல்வது உண்மையா இல்லை பொய்யா என்று தெரிந்துவிடும்" என்றான் இப்பாலஸ் விசமபுன்னகையுடன் .

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"முதலில் கையை நீட்டு அப்பனே! அப்போது தானே சோதிடம் பார்க்க முடியும்" என்ற யவனன் மெல்லிய குரலில் சீழ்க்கையடித்தான். உள்ளே நுழைந்த அவனது ஆட்களில் இருவர் மதுபான விடுதி உரிமையாளனை பின்புறமாக வளைத்து பிடித்தனர். இன்னொருவன் அவனது வலது கையை மேஜையில் வைத்து மணிக்கட்டோடு அழுத்தி பிடித்து கொண்டான்

யவனன் தன் இடையிலிருந்த குறு வாளை எடுத்தான் .விரிக்கப்பட்ட விரல்களின் இடைவெளிகளில் மெதுவாக கத்தியால் வரிசையாக குத்த தொடங்கினான். படிப்படியாக வேகத்தை அதிகரிக்க தொடங்கியவன் ஒரு கட்டத்தில் இடைவெளிகளில் கத்தியை பாய்ச்சுவதை நிறுத்தினான்.

"இனி தான் உண்மையான சோதிட பலன் பார்க்கும் முறை, நான் கண்களை திறந்து கொண்டு செய்ததை இப்போது கண்களை மூடிக் கொண்டு செய்ய போகிறேன். அதுவும் கூடுதல் வேகத்துடன் .உன் கையில் காயம் ஏற்பட்டாலோ, விரல் துண்டானாலோ நீ பொய் சொல்கிறாய் என்று அர்த்தம். உன் கைக்கு எந்த சேதாரமும் ஏற்படா விட்டால் நீ உண்மை பேசுவதாக அர்த்தம். ஆரம்பிக்கலாமா?" என்றான் இப்பாலஸ் விகாரசிரிப்புடன்.

"இல்லை. வேண்டாம். நான் உண்மையை சொல்லிவிடுகிறேன். அவன் மேல் மாடியில் தான் இருக்கிறான்"

"யவன சோதிடம் உடனடியாக வேலை செய்கிறது. சக்தி மிக்க சோதிடம் தான். " என்ற இப் பாலஸ் மாடிப்படிகளை நோக்கி நடந்தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக