ரகசிய தீவு
அத்தியாயம் 7
தனித் தீவில் நரன்
தனக்கு துரோகம் செய்து தன்னுடைய கப்பலான முத்தழகியையும் பறித்து கொண்ட நஞ்சுண்டன் இப்போது ஆள் இல்லாத தனி தீவில் தன்னை தனியனாக தவிக்க வைத்து சாகடிக்க நினைப்பதை எண்ணி குமுறிய நீல னால் தன்னிடம் இன்னொரு ரகசியம் இருப்பதாக நஞ்சுண்டன் கூறியதை கேட்டு ஒன்றும் புரியாமல் விழித்தான்.
"ஏற்கனவே நீ போட்டு வைத்திருக்கும் திட்டத்தால் மலைநாடும், வள நாடும் கடலில் மோதிக் கொள்ள போகின்றன.ரத்தம் குடிக்கும் ஓநாயே.! உனக்கு இது போதவில்லையா?" என்றான் நீலன்.
"பார் நீலா.! ரகசிய தீவு மலை நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டது. அதை நிர்வகிக்க தயாநிதி என்ற ஒரு அமைச்சரையே மலைநாட்டு வேந்தன் நியமித்திருக்கிறான். மலை நாட்டின் சார்பாக அந்த தீவை ஆளுமை செய்ய ஆளுநர்களை நியமிக்கும் உரிமை தயாநிதிக்கு மட்டுமே உண்டு. அதில் மன்னர் கூட தலையிடுவதில்லை. அப்படி தயாநிதியால் ரகசிய தீவிற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவன் தான் மதி மாறன் . அவனது ஆட்சியை எதிர்த்து மக்களை திரட்டி புரட்சி செய்து கொண்டிருப்பவன் சிகப்பு முகமுடி .அவன் சிகப்பு நிறமுகமூடியை அணிந்திருப்பதால் அந்த பெயர் அவனுக்கும் பெயராக மாறிவிட்டது. அவனது உண்மையான பெயர், இருப்பிடம் யாருக்கும் தெரியாது. மாயாவியை போல் திடிர் திடிரென்று தாக்குதல் நடத்தி விட்டு மாயமாக மறைந்து விடுகிறான். அவன் மதி மாறனுக்கு பெரும் சவாலாக இருந்து கொண்டிருக்கிறான். அவனது ஒரேபலவீனம் அவனிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை. அவனை அடக்குவதற்காக மலைநாட்டு அரசனும் தயாநிதியும் அனுப்பி வைத்த ஆயுத குவியலைத்தான் நீ கப்பலில் தானியமூட்டைகளின் நடுவே ஓளித்து வைத்திருந் தாய் "
நீலனின் முகம் வெளுத்தது. தனக்கும் மலைநாட்டு அரசனுக்கும், தயாநிதிக்கும் மட்டுமே தெரிந்த ஒரு அரசியல் ரகசியம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.
"இந்த உண்மை உனக்கு எப்படி தெரிந்தது?" என்றான் நீலன் உலர்ந்து போன உதடுகளுடன் .
அவனது அதிர்ச்சியை ரசித்து கொண்டிருந்த நஞ்சுண்டன் "மலை நாட்டு துறைமுகத்தில் கப்பலை நிறுத்திவிட்டு நீ மன்னரையும், தயாநிதியையும் சந்திக்க சென்று விட்டாய். அன்று இரவு நம்முடைய கப்பலில் அரசாங்க வீரர்கள் தனியாக வந்து சில மூட்டைகளை ஏற்றினார்கள். சாதாரண கூலி ஆட்களை வைத்து மூட்டைகளை ஏற்றினால் ஆயுத ரகசியம் வெளியேறி விடும் என்று நினைத்த நீ அரசாங்க ஆட்களை வைத்து மூட்டைகளை ஏற்றினாய்.சுமைதூக்கும் தொழிலாளர்களில் சிலர் துரோகிகளாக மாறி விலை உயர்ந்த பொருட்கள் கப்பலில் ஏற்றப்பட்டால் அதைப் பற்றிய தகவல்களை கடல் கொள்ளையர்களுக்கு தெரிவித்து சன்மானம் பெறும் வழக்கம் இருப்பதை நீ அறிவாய் .அதனால் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தாய். ஆனால் இந்த ஏற்பாட்டை நான் சந்தேகித்து கப்பலில் தேடி ஆயுதமூட்டைகளை கண்டுபிடிப்பேன் என்பதை நீ எதிர்பார்க்கவில்லை" என்றான்.
அவனது கூர்ந்து கவனிக்கும் திறமையை மனதிற்குள் பாராட்டிய நீலன்
"நீ நினைத்தது சரிதான். இந்த ஆயுதங்கள் மதிமாறனின் உதவிக்குத் தான் செல்கின்றன. இதை வைத்து நீ என்ன செய்ய போகிறாய்?"
"இந்த ஆயுதங்களை மதி மாறனிடம் ஒப்படைப்பதால் எனக்கு தம்பிடி பிரயோஜனம் இல்லை. இதே ஆயுதங்களை நான் சிகப்பு முகமூடியிடம் விற்றால் எனக்கு நிறைய பொன் கிடைக்கும். சிகப்பு முகமூடி மதி மாறனை வென்று ரகசிய தீவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடுவான். அவனுக்கு உதவி செய்ய வளநாடு வந்து விடும். வள நாட்டிற்கு ரகசிய தீவின் மீது ஏற்கனவே ஒரு கண் இருப்பதை நீ அறிவாய் சிகப்பு முகமூடிக்கு உதவுவதன் மூலம் தங்கள் வணிக தொடர்புகளை பலப்படுத்தி கொள்ள வளநாடு முயற்சி செய்யும். ரகசிய தீவில் ஏற்படும் புதிய ஆட்சியில் எனக்கு ஏகப்பட்ட மரியாதை கிடைக்கும். அதனால் நான் இந்த ஆயுதங்களை சிகப்பு முகமூடியிடம் விற்க போகிறேன்" என்றான் நஞ்சுண்டன் கண்களில் கனவுடன்
"சரியான முட்டாள் நீ! ரகசிய தீவின் துறைமுகத்தில் என்னுடைய கப்பல் நுழைந்த வுடனேயே மதிமாறனின் ஆட்கள் ஆயுதங்களை எடுத்து செல்ல வந்து விடுவார்கள். தீவில் கால் வைக்காமல் நீஎப்படி சிகப்பு முகமூடியிடம் ஆயுதங்களை விற்க முடியும். ?உன்னுடைய கனவு நிறைவேறாது."
"அதையெல்லாம் நான் யோசிக்காமலா இருந்திருப்பேன்?. இங்கிருந்து கிளம்பிய சற்று நேரத்தில் உன் கப்பலின் பெயரை மாற்றி விடுவேன். கப்பலின் வடிவமைப்பையும் சற்று மாற்றி விட்டால் உன் கப்பலை உனக்கே அடையாளம் தெரியாது"
"நஞ்சுண்டா! நான் உன்னை சாதாரணமாக எடை போட்டு விட்டு விட்டேன். நீ படு மோசமான ஆளாக இருக்கிறாய்"
"உன்னை விட மோசமான ஆள் யாராவது இருக்க முடியுமா?" என்று சிரித்தான் நஞ்சுண்டன் .
" என்ன சொல்கிறாய் நீ? "நீலனின் முகம் மாறியது.
" உன் தலையில் இருக்கும் ஒரு ரகசியத்தை என்னிடமிருந்து நீ மறைத்து விட்டாய்?"
நீலன் அதிர்ச்சியில் சிலையாக நின்று விட்டான். மூவருக்கு மட்டுமே தெரிந்த இன்னொரு ரகசியம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்ற திகைப்பில் திகைத்து நின்றான் நீலன்.
" என்ன? என்ன சொல்கிறாய் நீ?" என்றான் நீலன் அதிர்ச்சியுடன் .
"மலை நாட்டு மன்னனையும் தயாநிதியையும் சந்தித்து விட்டு வந்த நீ அதன் பிறகு தான் தலைபாகையை அணிய துவங்கினாய். அந்த தலைப்பாகையில் ஏதோ ஒரு மிகப் பெரிய ரகசியம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது."
"அப்படி எதுவும் இல்லை. நீதவறாக நினைத்து கொண்டிருக்கிறாய். என் நரைமுடியை காட்டி ஒரு பெண் கிழவன் என்று கிண்டல் செய்ததால்தான் நான் தலைபாகையை அணிய ஆரம்பித்தேன். மற்ற காரணம் எதுவுமில்லை." என்று மழுப்பினான் நீலன்.
"நான் இதை நம்ப வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை" என்ற நஞ்சுண்டன் தன் ஆட்களுக்கு கண்ணை காட்டினான்..
நஞ்சுண்டன் தன்னிடம் கொடுத்த வாளை எடுத்து கொண்ட நீலன்" யாரும் என்னிடம் நெருங்காதீர்கள்" என்றான்.
கண் பார்வை குறைபாடு இருந்ததால் குருட்டாம் போக்கில் வாளை சுழற்ற தொடங்கினான் நீலன்.
iஅவனை நெருங்குவது கடினம். நம்மில் யாரையாவது அவன் காயப்படுத்திவிட கூடும்" என்றான் ஆட்களில் ஓருவன்.
"பொறு! அவன் களைப்படையும் வரை காத்திருப்போம்" என்ற நஞ்சுண்டன் கீழே உட்கார்ந்து கொண்டான்.
எதிர்தாக்குதல் எதுவும் வராததால் குழப்பமடைந்த நீலன் வாள் சுழற்றுவதை நிறுத்தினான்.
தரையில் இருந்த மணலை இரண்டு கைகளிலும் அள்ளிய நஞ்சுண்டன் அதை நீலனின் கண்களை நோக்கி வீசினான்.
கண்களில் திடிரென விழுந்த மண் துகள்களால் தடுமாற துவங்கினான் நீலன்.
"இப்போது அவனை பிடியுங்கள்" என்றான் நஞ்சுண்டன் .
விரைவிலேயே நஞ்சுண்டனின் ஆட்களால் மணலில் வீழ்த்தப்பட்டான் நீலன்.
அவனிடமிருந்தவாளும், தலைபாகையும் கைப்பற்றப்பட்டன.
தன்னிடம் கொடுக்கப்பட்ட தலைப்பாகை துணியை பிரித்து பார்த்தான் நஞ்சுண்டன் .
"வேண்டாம் நஞ்சுண்டா! அதை என்னிடம் கொடுத்துவிடு. வீணாக ஆபத்தை விலைக்கு வாங்காதே" என்று அலறினான் நீலன்.
தலைப்பாகை துணியில் இருந்த விசித்திர குறியீடுகளை புரியாமல் பார்த்து கொண்டிருந்த நஞ்சுண்டன் "இவன் அலறுவதை பார்த்தால் இதில் முக்கியமான ஏதோ ஒரு விசயம் இருப்பதை போல் தோன்றுகிறது. அதை அவன் வாயாலேயே சொல்ல வையுங்கள்" என்றவன் துணியை தன்னுடைய இடுப்பில் சொருகி பத்திரப்படுத்தினான்.
நஞ்சுண்டனின் ஆட்கள் நீலனின் மீது தாக்குதலை தொடங்கினர். இரண்டு பேர் அவனை பின்புறமாக பிடித்து கொள்ள ஒருவன் அவனது வயிற்றில் குத்துகளை விடத் தொடங்கினான்.
"இரவு நான் என்ன சாப்பிட்டேன் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறாயா நண்பா ? என்னை கேட்டால் சொல்கிறேன். எதற்காக என் வயிற்றுடன் பலப்பரிட்சை நடத்துகிறாய்?" என்றான் நீலன் குத்துகளின் வலியை தாங்க முடியாமல்.
"கிழவன் கிண்டல் செய்யுமளவிற்குத் தான் உங்கள் சிகிச்சை இருக்கிறது" என்றான் சினத்துடன் நஞ்சுண்டன் .
அதன் பிறகு நீலனின் மீதான அவர்களின் தாக்குதல் உக்கிரமமானது.
விரைவிலேயே அடி தாங்காமல் வயோதிகனான நீலன் அலற ஆரம்பித்தான்.
"நிறுத்துங்கள்" என்று உத்தரவிட்ட நஞ்சுண்டன் ரத்த களறியாக நின்ற நீலனின் தோளில் கையை வைத்தான்.
"ஏன் இப்படி அடி வாங்கி சாகிறாய்? பேசாமல் தலை பாகை துணியில் இருக்கும் ரகசியத்தை சொல்லி விடு. நீ சொல்லாவிட்டால் என் ஆட்கள் உன்னை அடித்தே கொன்று விடுவார்கள்."
" என் உயிரே போனாலும் அந்த ரகசியத்தை நான் சொல்ல மாட்டேன். உன்னால் முடிந்ததை செய்" என்றான் நீலன்நிற்க கூட சக்தியின்றி .
" பூஜையை மறுபடியும் ஆரம்பியுங்கள்" என்றான் நஞ்சுண்டன்
"எனக்கென்னவோ இன்று முழுவதும் பூஜை போட்டாலும் இவன் வாயை திறப்பது போலத் தெரியவில்லை." என்றான் அவன் சகாக்களில் ஓருவன்.
"நாம் வந்து நெடுநேரமாகிவிட்டது.இன்றைய பொழுது இங்கேயே கழிந்து விடும் போல் தெரிகிறது" என்றான் மற்றோருவன்
நீலனை அடித்து அடித்து தன்னுடைய ஆட்கள் களைத்துவிட்டதை உணர்ந்து கொண்டான். இனியும் இவர்களை வைத்து வேலை வாங்குவது உசிதமல்ல என்று நினைத்தவன் "சரி போதும். நாம் கிளம்பலாம்.இந்த தலைபாகை ரகசியத்தை நானே தெரிந்து கொள்கிறேன்" என்றான்.
நீலன் ஏதோ முனகுவதை பார்த்த ஒருவன் " அவன் ஏதோ சொல்ல வருகிறான்" என்றான்.
குனிந்து அவன் வாய் அருகே காதை வைத்து கேட்ட நஞ்சுண்டன் வாய் விட்டு சிரித்தான்.
"சாகும் தருவாயிலும் மது புட்டி வேண்டுமென்று கேட்கிறான் கிழவன் இவனது மது பழக்கத்தை வைத்து தான் இவனை நான் வீழ்த்தினேன். ஆனாலும் இவன் பாடம் கற்று கொள்ள மறுக்கிறான். மது பழக்கம் இருக்கும் வரை இவன் வாழ்வில் முன்னேற போவதில்லை"
நீலனின் காதுகளில் நஞ்சுண்டனின் வார்த்தைகள் தெளிவாக விழுந்தன.
நஞ்சுண்டன் தன் ஆட்களுடன் அங்கிருந்து கிளம்பினான். சிறு படகில் ஏறும் முன்பாக நஞ்சுண்டன் "நாம் எண்ணிக்கையில் சரியாக இருக்கிறோமா என்று மீண்டும் ஒருமுறை எண்ணி கொள்ளுங்கள் நண்பர்களே! யாராவது படகில் ஏறாமல் விட்டு போயிருந்தால் நரன் அவர்களை கொன்று உணவாக்கி கொண்டு தன் வாழ்நாளை நீட்டித்து கொண்டு விடுவான்"
அவர்கள் வாய் விட்டு சிரித்தார்கள்.
நஞ்சுண்டன் ஒரு மது பாட்டிலை நீலன் கிடந்த மணல் பரப்பில் வீசினான்.
"குடித்துவிட்டு போதையிலேயே செத்து விடுகிழவா " என்றான் நஞ்சுண்டன் .
அவர்கள் போய் சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்து உட்கார்ந்தான் நீலன்.
அவன் கண் எதிரே மணலில் புதைந்து கிடந்த மதுபுட்டி என்னை எடு என்றது.
நீலன் மதுபுட்டியை கையில் எடுத்தான்.
"மது பழக்கம் இருக்கும் வரை இவன் வாழ்வில் முன்னேற போவதில்லை" என்ற நஞ்சுண்டனின் குரல் அவன் காதில் ஓவித்தது.
நீலன் மதுபுட்டியை வெறித்து பார்த்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக