ரகசிய தீவு
அத்தியாயம் 4
பணயத்தில் ஒரு பங்காளி
கொலை வெறியோடு நீலனை அணுகி அவனை தாக்க முயன்ற மகேந்திரனை நண்பர்கள் இருவரும் தடுத்து நிறுத்தினார்கள். புதியவர்கள் இருவர் தன்னை தடுத்து நிறுத்தியதால் மகேந்திரன் கடும் சீற்றத்துடன் இருவரையும் நிமிர்ந்து பார்த்தான்.
"யார் இந்த அந்நியர்கள்? இப்பாலஸ் இவர்களை ஏன் இங்கே அழைத்து வந்தாய்?"மகேந்திரனின் கோபம் இப்போது யவனனின் மீது பாய்ந்தது.
" இவர்கள் இருவரும் அந்த எத்தனின் நண்பர்களாம். அவனை காப்பாற்ற இங்கே வந்திருக்கிறார்கள்"
"இவனுடைய நண்பர்களா? அவர்களும் இவனைப் போலத்தான் இருப்பார்கள். இவர்களை உடனே கைது செய்" என்றான் மகேந்திரன்.
யவனன் இருவரை நோக்கி நகர்ந்தான்.மகேந்திரன் கடும் கோபத்தில் இருப்பதால் கண் மண் தெரியாமல் கோபத்தில் முடிவெடுக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட ஆதித்தன் அவனை நிதானத்திற்கு கொண்டு வர ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை நடத்துவது தான் சரி என்ற முடிவுக்கு வந்து விட்டான்.பைராகியை நெருங்கிய யவனனின் இடுப்பில் சொருகியிருந்த குறு வாளை மின்னல் வேகத்தில் எடுத்த ஆதித்தன் அதை கண் இமைக்கும் நேரத்தில் மகேந்திரனின் கழுத்தில் வைத்தான்.
"இப்பாலஸ்! இருந்த இடத்தை விட்டு அசையாதே! வில்லங்கமாக எதையாவது செய்ய நீயும் உன் ஆட்களும் முயற்சி செய்தால் உன் எஜமானனின் தலை தப்பாது" என்று கர்ஜித்தான் ஆதித்தன்.
எதிர்பாராமல் அங்கே நடந்த நிகழ்வால் காட்சி தலை கீழானது.
மகேந்திரன் நடந்த நிகழ்வால் திக் பிரமை பிடித்து நின்றான்.
"இந்த தீவு என்னுடைய ஆளுகைக்கு உட்பட்டது. இங்கிருந்து உங்களால் அவ்வளவு எளிதாக தப்பி செல்ல முடியாது"
" நிலவரம் புரியாமல் பேசுகிறாய். என் நண்பன் உன் கண்களில் மண்ணை தூவிவிட்டு முத்தழகி என்ற மிகப் பெரிய கப்பலையே கடத்தி சென்ற போது நீ என்ன தான் செய்து கொண்டிருந்தாய்? உன் வீண் பூச்சாண்டியை என்னிடம் காட்டாதே! நான் நினைத்தால் கத்திமுனையிலேயே உன்னை கடல் வரை கூட்டி சென்று என்னுடைய கலத்தில் தப்பிச் செல்ல முடியும். ஆனால் அப்படி செய்தால் அது என் நண்பன் செய்த குற்றத்தை ஓப்பு கொண்டது போலாகி விடும். அதை நான் விரும்பவில்லை" என்றான் ஆதித்தன்.
"ஆதித்தா ! நமக்கு பிரச்சனை என்னவென்றே இன்னும் புரியவில்லையே?" என்றான் பைராகி குழப்பத்துடன் .
"அய்யய்யோ! நீங்கள் நினைப்பதுபோல் கப்பலை நான் கடத்தி செல்லவில்லை" என்று பதறினான் நீலன்.
"நீ இல்லாவிட்டால் வேறு யார் ? கப்பலை இயக்கும் ,வழியை தீர்மானிக்கும் அதிகாரம் மீகாமகனாகிய உனக்குத் தானே இருக்கிறது'' என்றான் மகேந்திரன் அவனது கழுத்தில் இருந்த குறுவாள் அவனிடம் நிதானத்தை வரவழைத்திருந்தது.
"அது உண்மைதான்.என் கப்பலை நானே கடத்தி சென்று விட்டு எதற்காக இங்கே திரும்ப வர வேண்டும்? சரக்கை இறக்காமல் ஏமாற்றி சென்ற என்னை நீ சும்மா விட மாட்டாயல்லவா? பிறகு நான் ஏன் இங்கே வந்தேன்?"
"ஒருவேளை சரக்கின் விலையான 5000 பொற்காசுகளை திரும்ப தர வந்திருக்கிறாயோ?" என்றான் மகேந்திரன்.
"உன்னிடம் பெற்ற அந்த பணமும் இப்போது என்னிடமில்லை" என்றான் நீலன் தலையை தொங்கப் போட்டபடி.
"பார்த்தீர்களா உங்கள் நண்பனின் லட்சணத்தை .இவனை எனக்கு பல வருடங்களாக வணிக ரீதியாக தெரியும். இந்த தீவிற்கு தேவையான உணவுப் பொருட்களை வியாபாரிகள் இவனது கப்பலில் அனுப்பி வைப்பார்கள். அவற்றிற்கான விலையை நான் இவனிடம் கொடுத்து விடுவேன். எல்லாமே இதுவரை நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. இவனது கடைசி வருகையின் போது என்னிடம் முன்கூட்டியே பொருட் களுக்கான பணத்தை பெற்று கொண்டான். அதுதான் அந்த 5000 பொற்காசுகள். அன்று இரவு என்கிட்டங்கியில் சரக்கை இறக்காமல் காசுகளை எடுத்து கொண்டு கப்பலோடு மாயமாகி விட்டான். துறைமுகத்தின் பொறுப்பதிகாரியான இந்த யவனனை எப்படியோ ஏமாற்றி கப்பலை எப்படியோ வெளியே கொண்டு சென்று விட்டான். இப்போது வேறு ஏதோ காரணத்திற்காக இங்கே வந்து விட்டு கப்பலை காணோம். காசையும் காணோம் என்று கதைவிடுகிறான்.இவனுக்கு உதவ நீங்கள் இருவரும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் மூவரும் சேர்ந்து என்னை ஏமாற்ற நினைக்கிறீர்களோ என்னவோ?" என்றான் மகேந்திரன் கசப்பான குரலில்.
மகேந்திரனின் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த ஆதித்தனின் குறுவாள் தாழ்ந்தது.
"என்னை மன்னித்துவிடுங்கள்! தவறு என் நண்பனுடையது. இப்போது நாங்கள் என்ன செய்தால் என் நண்பனை அழைத்து செல்ல அனுமதிப்பீர்கள்?" என்றான் மென்மையான குரலில் ஆதித்தன்.
"ஆதித்தா !தீவில் உணவு பொருட்கள் கையிருப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. இங்கே விளையும் சொற்ப உணவு பொருட்கள் இங்கிருக்கும் மக்களுக்கே போதாது. அதனால் வெளியிலிருந்து தான் உணவு பொருட்களை வரவழைக்கிறோம். உன் நண்பன் செய்த குளறுபடியால் உணவும் வரவில்லை. பணமும் போய் விட்டது. இப்போது பணம் வேண்டும். பழைய பாக்கியை கொடுத்தால் தான் வியாபாரிகள் உணவு பொருட்களை அனுப்புவார்கள். அதற்கு புதிய கப்பலை ஏற்பாடு செய்ய வேண்டும்."
"எங்களிடம் அவ்வளவு பொருள் இல்லைதீவின் தலைவரே! இருந்தால் கொடுத்து விட்டு சென்று விடுவோம்" என்றான் ஆதித்தன்.
"எங்கள் படகில் மூலிகைகளும் செடிகளும் தான் இருக்கின்றன. " என்றான் பைராகி .
" எல்லோரும் அவரவர் பிரச்சனையை பற்றி கவலைப்படுகிறீர்கள். என்னைப் பற்றியோ என் கப்பலை பற்றி யோ யாரும் கவலைப்பட மறுக்கிறீர்கள்" என்றான் நீலன்.
"நீலா! நிலைமை புரியாமல் பேசுகிறாய். நீ செய்த தவறால் தான் நாங்கள் அபாயத்தில் மாட்டியிருக்கிறோம்" என்றான் பைராகி கோபத்துடன் .
" பிரச்சனைகளை உருவாக்கிய நீலனிடமே தீர்வும் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றான் ஆதித்தன் ஏதோ யோசனையில் .
"என்னால் இந்த பிரச்சனைக்கு எளிதாக தீர்வு காண முடியும். இங்கே சரக்குகளை இறக்கிய பிறகு நான் ரகசிய தீவிற்கு பயணமாகி அங்கேயும் சரக்குகளை இறக்குவேன். அங்கே எனக்கு நிறைய செல்வாக்கு உண்டு. நான் சொல்வதை கேட்டு உதவும் வணிக நண்பர்களும் நிறையவே இருக்கிறார்கள். என்னை அங்கே அனுப்பினால் என்னால் உணவு பொருட்களை இங்கே அனுப்பி விட முடியும் "
"அங்கேயும் யவனனை போல் உன்னை யாராவது தேடிக் கொண்டிருக்கலாம்" என்றான் பைராகி .
"சேச்சே! அங்கே உங்களை போலவே எனக்காக எதையும் செய்யும் நண்பர்கள் ஏராளம் உண்டு" என்றான் நீலன்.
"அப்படியானால் நாம் உடனே கழுகில் ஏறி ரகசிய தீவிற்கு செல்வோம்" என்றான் ஆதித்தன் உற்சாகத்தோடு.
" ஆனால் இந்த ஏற்பாட்டிற்கு நான் ஒப்புகொள்ள வேண்டுமே?" என்றான் மகேந்திரன்.
" இதில் என்ன குறை கண்டாய் மகேந்திரா ? " என்றான் நீலன்.
"என்னைப் பார்த்தால் முட்டாளைப் போல் தெரிகிறதா உங்களுக்கு? பணத்தை இழந்து விட்டு பொருளையும் இழந்து விட்டு உங்களை நான் எந்த நம்பிக்கையில் விடுவிப்பது.ஏற்கனவே நீங்கள் மூன்று பேரும் கூட்டு களவாணிகளோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அதற்கு தோதாக மூவரும் ரகசிய தீவிற்கு பயணம் செய்வதாக கூறுவதை நான் எப்படி நம்புவது?"
மகேந்திரனின் சந்தேகம் நியாயமானது என்று மூன்று பேருக்குமே புரிந்தது.ஆதித்தனும் பைராகியும் ஓருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
நண்பர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ஆதித்தன் அவர்களை மீட்க கடைசி வரை போராடுவான் என்று பைராகிக்கு தெரியும்.
"ஆதித்தா ! இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. நம்மில் யாராவது ஒருவர் பணயமாக மகேந்திரனிடம் இருக்க வேண்டும். நீலனை பணயமாக இங்கே வைக்க முடியாது. ஏனென்றால் அவனால் தான் ரகசிய தீவிலிருந்து உணவு பொருட்களை இங்கே கொண்டு வர முடியும். அவனுக்கு உன்னுடைய ஓத்தாசை தேவை. இங்கே நான் உணவு பொருட்களின் தட்டுப்பாட்டை போக்க ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். அப்படியே அந்த அபூர்வ மூலிகை யையும் கண்டுபிடிக்க முயல்கிறேன்"
"இந்த தீவில் அபூர்வ மூலிகையா? அது என்னவென்று கூறு பைராகி" என்றான் மகேந்திரன். அவனுக்கு அது புதிய செய்தியாக இருந்தது.
"அந்த மூலிகையின் பெயர் என்னவென்று தெரியவில்லை. இந்த தீவை சேர்ந்த ஒரு நபர் தான் அந்த மூலிகையை பற்றிய கதையை சொன்னார். ஆடு ஓன்றை அடித்து அதன் கறியை பங்கு பிரித்தபோது அந்த நபர் தன் பங்கு கறியை அருகேயிருந்த செடியின் இலையில் பொதி செய்து கட்டி வந்தாராம். வீட்டிற்கு வந்து பொதியை பிரித்து பார்த்த போது தனி தனி கறி துண்டுகள் ஓன்று சேர்ந்து ஓரே கறி உருண்டையாக மாறி இருந்ததாம். பிறகு அந்த செடியை அதன் இலையை எவ்வளவு தேடியும் கிடைக்க வில்லையாம். அந்த செடியை கண்டுபிடித்து விட்டால் துண்டாகும் அவயங்களை திரும்ப இணைத்து விடலாம் என்று நினைக்கிறேன்." என்றான் பைராகி .
"இந்த கதையை நானும் பலர் பேச கேட்டிருக்கிறேன். அப்படி ஒரு அதிசய செடி இங்கே இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதை தேடி இங்கே வந்த முதல் ஆசாமி நீ தான் " என்றான் மகேந்திரன்.
" என் நண்பனை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.இந்த உலகத்தின் விலை மதிப்பு மிக்க பொக்கிசத்தையும் என் நண்பனையும் இணைவைத்தால் நான் என் நண்பனைத் தான் தேர்ந்தெடுப்பேன். நாங்கள் திரும்ப வரும் வரை என் நண்பனை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். அவனது உடலுக்கும் உயிருக்கும் ஏதாவது ஊறு நேர்ந்தால் விளைவு விபரீதமாக இருக்கும்."
"அவ்வளவு வல்லவனா உன் நண்பன் ? " என்றான் மகேந்திரன் இகழ்ச்சியாக .
" விரைவில் அவனைப் பற்றி நீயே தெரிந்து கொள்வாய் .அவனை பணயமாக விட்டு செல்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லை"
"என்னைப் பற்றி கவலைப்படாதே ஆதித்தா!வெற்றியுடன் திருப்ப வா!" என்றான் பைராகி .
"உணவு பொருட்கள் இந்த திவிற்கு வந்து சேர்ந்த அடுத்தகணம் என் நண்பன் விடுவிக்கப்பட வேண்டும்" என்றான் ஆதித்தன்.
" உன் நிபந்தனைக்கு ஒப்பு கொள்கிறேன். நண்பனுக்காக நீ அபாயமான ஒரு பயணத்தை மேற்கொள்ள போகிறாய். உன் நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள் " என்றான் மகேந்திரன்.
"அப்படியானால் நாங்கள் கிளம்பலாமா? நாளை காலை பயணமாக போகிறோம். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்றான் நீலன்.
"நீங்கள் கிளம்பலாம். உங்களுடன் இந்த யவனனும் வருவான்" என்றான் மகேந்திரன்.
நீலனின் முகம் இருண்டது.
" அவன் எதற்கு?" என்று முனகினான் நீலன்.யவனன் தன்னுடன் பயணித்தால் தன்னுடைய திட்டம் வீணாகிவிடும் என்ற பயம் அவனது குரலில் தெரிந்தது.
" காரணமாகத் தான். இருவரும் ரகசிய தீவிற்கு செல்வதாக கூறி விட்டு என் பாதுகாப்பில் இருக்கும் உங்கள் நண்பனை மீட்டு சென்று விட்டால் என்ன செய்வது? இப்பாலஸ் இவர்கள் உன் கண் பார்வையிலேயே இருக்கும் படி பார்த்து கொள். ஏதாவது இசகுபிசகாக நடந்தால் இருவரின் உயிர் பறவையை உடலிலிருந்து விடுதலை செய்துவிடு" என்றான் மகேந்திரன்.
இப்பாலசின் உதடுகளில் ஓரு கொடூர புன்னகை மலர்ந்தது.
நீலனின் முகத்தில் இருள் படர்ந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக