ஞாயிறு, 19 ஜூன், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

முக்கூடலின் சங்கமம்.

தன்னுடைய ஆளுகை நிரம்பிய தீவில் தன்னை யாரும் எதிர்த்து பேசவோ தட்டி கேட்கவோ இயலாத சூழலை மட்டுமே இதுவரை கண்டிருந்த யவன னான இப்பாலசிற்கு புதிதாக ஒரு மனிதன் தன்னுடைய வைத்திய முறைகளில் தலையிடுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதை விட அவன் அந்நியன் என்று தன்னை குறிப்பிட்டதில் அவனது கோபம் அதிகரித்தது.

அதே நேரம் நீலன் வியப்பின் உச்சியில் இருந்தான். உலகின் வேறு ஒரு மூலையில் முன் பின் தெரியாத ஆட்கள் நிறைந்த ஒரு தீவில் ஆதித்தன் எப்படி வந்து சேர்ந்தான் என்ற கேள்வி அவன் உள்ளத்தில் எழுந்தது.

" கள்வர்புரத்துகள்வனை நான் இங்கே சந்திப்பேன் என்று கனவுகூட காணவில்லை!" என்றான் நீலன் குரலில் ஆச்சரியம் வெளிப்பட.

"எனக்கும் அதே ஆச்சரியம் தான் முதிய நண்பா! கடலோடியான உன்னை இப்படி ஒரு தீவில் சந்திப்பேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை"

"ஆமாம். ஆ மட்டும் தனியே வந்திருப்பது போல் தெரிகிறதே? எங்கே உன் சகோதரன் அரிஞ்சயன்?" என்றான் நீலன்.

" அண்ணன் கள்வர்புரத்தில் இருக்கிறார். ஒரு அபூர்வ மூலிகை ஓன்றை தேடி நானும் பைராகியும் இந்த தீவிற்கு வந்தோம். வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக நடந்து விட்டது நம் சந்திப்பு"

"ஆதித்தா! என் அருமை நண்பா! நான் இப்போது ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். என்னை நீ தான் காப்பாற்ற வேண்டும்"

"நானிருக்க பயமேன்!" என்று சிரித்தான் ஆதித்தன்.

இருவரது சம்பாசணையை கேட்டு கொண்டிருந்த யவனன் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருப்பதை அந்த உரையாடலின் வழியே தெரிந்து கொண்டான்.

ஆதித்தனை பற்றி யவனன் இதுவரை கேள்விப்பட்டதில்லை. அதனால் அவன் தன் முரட்டு தனத்தை கைவிட தயாராகவில்லை.

"போதும்! உரையாடலை நிறுத்துங்கள். ஏய் கிழவா ! துணைக்கு ஆள் வந்து விட்ட தைரியத்தில் எதையாவது செய்ய நினைத்தால் உன் வாலை ஒட்ட நறுக்கி விடுவேன்" என்றான் யவனன்.

"வாலை நறுக்க நான் என்ன உன் வீட்டு வளர்ப்பு நாயா ? மகேந்திரன் எய்த அம்பு நீ. என்னை மரியாதையாக அவனிடம் அழைத்து செல். நான் அவனிடம் பேசிக் கொள்கிறேன்."

" உன் பழைய நண்பனை கண்டதும் உன் பேச்சு தோரணை மாறிவிட்டது"

நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆதித்தன்" யவனனே..! உன் பெயர் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?"

"அதற்கு முன்னால் உன் பெயரை சொல் "

"அவனைத் தான் நான் ஆதித்தன் என்று நான் பெயர் சொல்லி அழைத்தேனே? அது உன் காதில் விழவில்லையா?" என்றான் எரிச்சலுடன் நீலன்.

"அது என் காதில் நன்றாகவே விழுந்தது. அதை விடவும் கள்வர் புரத்து கள்வன் என்ற வார்த்தை நன்றாகவே விழுந்தது. எங்கள் நாட்டில் கள்வர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க ஊருக்கு ஒரு பெயர் வைத்து கொள்வது வாடிக்கை. நீ கூறிய ஆதித்தன் என்ற பெயர் ஏன் இவனது புனைபெயராக இருக்க கூடாது?"
என்று கூறி தன் மேதாவிலாசத்தை வெளிக்காட்டினான் யவனன்.

"நீ நினைப்பது தவறு.ஆதித்தன் என்பது தான் என்னுடைய சொந்த பெயர் .காரணமின்றி நான் புனைபெயர்களை சூட்டிக் கொள்வதில்லை. உன்னிடம் பெயரை மறைப்பதால் எனக்கு கிடைக்க கூடிய ஆதாயம் எதுவுமில்லை. என் நண்பனை இக்கட்டிலிருந்து காப்பாற்ற நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்"

"பரவாயில்லை. ஒருவன் முதுகைத்தான் என் சவுக்கு சுவை பார்க்கும் என்று நினைத்தேன். இப்போது துணைக்கு நீயும் வந்து சேர்ந்திருக்கிறாய். என் சவுக்குக்கு நல்ல வேட்டைதான். உன்னை பிடித்து வரச் சொல்லித்தான் எனக்கு உத்தரவு .அதை நான் செய்கிறேன். இனி உன்னை என்ன செய்ய வேண்டுமென்பதை மகேந்திரன் தான் முடிவு செய்ய வேண்டும். நடங்கள் முன்னே" என்றான் இப்பாலஸ்.

" இறுதி வரை உன் பெயரை சொல்ல மறுத்து விட்டாயே? ஒரு வேளை உன் பெற்றோர் உனக்கு பெயர் வைக்காமலேயே வளர்த்து விட்டார்கள் போலிருக்கிறது. பரவாயில்லை. நான் உன்னை யவனன் என்றே அழைக்கிறேன்."

"போதும் பகடி . என் பெயர் இப்பாலஸ். நீ என்னை எப்படி அழைத்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை" என்றான் எரிச்சலுடன் இப்பாலஸ்.

"கவலை இல்லாத மனிதரே! உம்மிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். துறைமுகத்தில் என்னுடைய நண்பன் ஒருவன் நாவாய் ஓன்றில் காத்திருக்கிறான். அவனும் இங்கே வந்து மகேந்திரனுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். உன் ஆட்களில் ஓருவனை துறைமுகத்திற்கு அனுப்பி அவரை அழைத்து வர சொல்ல முடியுமா?"

அந்த நபரின் பெயரையும் நாவாயின் பெயரையும் கூறு அவனை அழைத்து வர ஆளை அனுப்புகிறேன்" என்றான் யவனன் வேண்டா வெறுப்பாக .

" என் நண்பனின் பெயர் பைராகி .அவனது நாவாயின் பெயர் கழுகு " என்றான் ஆதித்தன்

யவனன் சைகை செய்ததும் அங்கிருந்த வீரர்களில் ஒருவன் துறைமுகத்தை நோக்கி கிளம்பினான்.

யவனனுக்கு ஆயாசமாக இருந்தது. முதலில் நீலன். அவனை தொடர்ந்து ஆதித்தன். இப்போது பைராகி என்ற புது ஆசாமி. ஒருவனை கூட்டி வரச் சொன்னால் மூன்று பேரை கூட்டி வரும் தன்னை பற்றி மகேந்திரன் என்ன நினைப்பான் என்று அவனது மனம் கவலையில் ஆழ்ந்தது.

அந்த சிறு குழு அங்கிருந்து கிளம்பியது. வெளியே இருள் கவியத் துவங்கியிருந்தது. வானில் நிலவும் நட்சத்திரங்களும் உலாவரத் தொடங்கி இருந்தன. ஆங்காங்கே இருந்த விளக்கு தூண்களில் ஆட்கள் தீப்பந்தங்களை பொருத்தி இருளை விரட்டி வெளிச்சத்தை கொண்டு வர ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

அந்த சிறு குழுமகேந்திரனின் மாளிகைக்குள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டது.

இவர்களுக்கு முன்பாகவே அங்கே அழைத்து வரப்பட்டிருந்தான் பைராகி .

ஆதித்தனை பார்த்ததும்" என்ன நண்பா! ஏதாவது பிரச்சனையா? ஊரை சுற்றி பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றாயே? இப்போது பலத்த காவலோடு அழைத்து வரப்படுகிறாயே? ஏதேனும் விபரீதமா?" என்றான் பைராகி பரபரப்புடன்.

" பிரச்சனை என்னால் வரவில்லை நண்பா.! இதோ இந்த கிழட்டு நண்பனால் வந்தது. பிரச்சனையின் முழு பரிமாணமும் அவனுக்கு மட்டும் தான் தெரியும். நானே தலையும் புரியாமல் காலும் புரியாமலும் தான் இங்கே வந்திருக்கிறேன்" என்ற ஆதித்தன் நீலனை நோக்கி கையை காட்டினான்.

நீலனை பார்த்த பைராகி"நண்பா! கடலோடியான உன்னை ஆதித்தன் எங்கே பிடித்தான்?" என்றான் ஆச்சரியத்துடன் .

" அவன் எங்கே பிடித்தான்? நானல்லவா அவனைப் பிடித்தேன்" என்றான் இப்பாலஸ்..

"இவன் வேறு நேரம் காலம் தெரியாமல் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறான். உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி பைராகி . சூழ்நிலையை பார்த்தாயா? பழைய நண்பர்கள் நீண்ட காலத்திற்கு பிறகு சந்திக்கும் போது மகிழ்ச்சியான சூழல் நிலவவில்லையே?" என்றான் நீலன் வருத்தத்துடன் .

" ஆபத்தில் உதவி செய்பவன் தானே நண்பன். நாம் இப்படி ஒரு இக்கட்டான சூழலில் சந்திப்பதே பொருத்தமானது " என்றான் ஆதித்தன்.

" இவ்வளவு தூரம் நடத்தி வந்து விட்டு குடிக்க தண்ணீர் கூட தராமல் வேடிக்கை பார்க்கிறார்கள் பண்பாடு தெரியாதவர்கள் "

"ஒருவேளை இது யவன நாட்டு வழக்கமாக இருக்கலாம்"

"நீ குடிக்க வேறு தண்ணியை அல்லவா கேட்பாய்" என்றான் இப்பாலஸ்சினத்தை அடக்கி கொண்டு. இக்கட்டான நேரத்திலும் அதை பற்றி கவலையில்லாமல் நண்பர்கள் மூவரும் பகடி செய்தபடி பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

""நான் மது பழக்கத்தை முற்றிலுமாக விட்டு விட்டேன்" என்றான் நீலன் ரோசத்துடன் .

"இன்று பலத்த மழை பெய்யும் என்று நான் நினைக்கிறேன்" என்றான் பைராகி சிரித்தபடி.

"ஆமாம் அரிஞ்சயனை விட்டு விட்டு நீங்கள் இருவரும் படகில்என்ன செய்கிறீர்கள்?" என்றான் நீலன்.

"சில அபூர்வ மூலிகைகளை தேடி பைராகிமேற்கொண்ட கடல் பயணத்தில் வழித்துணைவனாக நான் வந்தேன். இந்த மோகினி தீவில் ஒரு அபூர்வ மூலிகை ஓன்று இருப்பதாக கேள்விப்பட்டோம். அதை தேடித் தான் இங்கே வந்தோம். வந்த இடத்தில் இக்கட்டில் சிக்கிய உன்னை பார்த்தோம். பிறகு நடந்தவை உனக்கே தெரியும்."

"நாம் இங்கு வந்த விவரத்தை கூறி விட்டோம். ஆனால் நம் நண்பன்தன் சிக்கலை பற்றி வாய் திறக்க மறுக்கிறான்." என்றான் பைராகி .

"இங்கே நடக்கும் விசயங்களை முழுமையாக அறிந்தவர்கள் இருவர் தான். ஒருவன் நீலன். இன்னொருவன் இந்த யவனன்" என்றான் ஆதித்தன்.

"எனக்கு பிரச்சனை மேலோட்டமாகத்தான் தெரியும். என் எஜமானருக்குத்தான் பிரச்சனையின் முழு கன பரிமாணமும் தெரியும் " என்றான் இப்பாலஸ்.

" உன் எஜமானர் வரும் வரை நாம் நீலனின் பார்வையில் பிரச்சனையை கேட்போம்" என்ற ஆதித்தன் " என்ன பிரச்சனையென்று முழுதாக கூறுநீ லா!" என்றான்.

கிழவன்தட்டு தடுமாற ஆரம்பித்தான். இரண்டு நாட்களுக்கு முன் இரவில் நடந்தவை அவனுக்கு அரை குறையாக நினைவுக் கு வந்தது.

"நான் கல்லறைதீவில் இறக்கி விடப்பட்டது தான் எனக்கு நினைவில் இருக்கிறது" என்றான் நீலன்.

"கல்லறைதீவா ? அங்கிருந்து யாரும் உயிரோடு தப்பித்ததாக சரித்திரமே இல்லையே?" என்றான் யவனன் வியப்புடன்.
"அங்கிருந்து தப்பி வந்த முதலும் கடைசியுமான ஆள் நானாகத்தான் இருப்பேன்" என்றான் நீலன்.

அதே நேரம் கூடத்திற்குள் நுழைந்தான் மகேந்திரன். நீலனை பார்த்ததும் அவனது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"உன்னை நல்லவன் என்று நினைத்தேனே நயவஞ்சகா! என்னை ஏமாற்றி ஐயாயிரம் பொன்னை பறித்தாய். கிட்டங்கியில்இறக்க வேண்டிய என் தானியமூட்டைகளை இறக்காமல் அவற்றை கப்பலோடு கொண்டு போய் விட்டாய். எவ்வளவு துணிவிருந்தால் மீண்டும் இங்கே வர துணிந்திருப்பாய் துரோகி" என்ற மகேந்திரன் ஓடி வந்து நீலனின் கழுத்தை பிடித்தான்.

கழுத்தின் பிடி இறுக ஆரம்பித்ததும் நீலனின் விழி பிதுங்க ஆரம்பித்தது.நண்பர்கள் இருவரும் யவனனின் உதவியோடு மகேந்திரனை நீலனிடமிருந்து பிரித்தனர்.

சீராக மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட நீலன் "நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள்தானிய மூட்டைகளையும், பொன்னையும் இழந்தீர்கள். நானோ மனைவிக்கு இணையான என் கப்பலை இழந்து விட்டேன். நம் இருவரையும் முட்டாளாக்கியவன் வேறோருவன்" என்றான்.

"இவன் பொய் சொல்கிறான். அன்று இரவு கப்பல் கிளம்ப அனுமதி கேட்டு என்னிடம் வந்தது இவன் தான் " என்றான் ஆணித்தரமாக யவனன்.

நண்பர்கள் இருவரும் எதுவும் புரியாமல் நின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக