சனி, 29 அக்டோபர், 2022

ரகசிய தீவு 46

ரகசிய தீவு

அத்தியாயம் 46

மூன்று சிக்கல்கள்

ரகசிய தீவை நோக்கி முத்தழகி மிதந்து சென்று கொண்டிருந்தது. அதன் மாலுமியாக மீண்டும் பொறுப்பேற்றிருந்த நீலன் சிந்தனை வசப்பட்டிருந்தான்.

கருணாகரன் சிகப்பு முகமூடியிடம் ஒப்படைக்கவிருக்கும் ஆயுதங்களில் ஏதாவது சில்மிசம் செய்து அவனது செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நீலனின் விருப்பம் இயற்கையாகவே நிறைவேறி விட்டதால் அவன் அதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை.

அவனுக்கு இருந்தது மூன்று கவலைகள் தான். ஓன்று பணயக் கைதியாக மகேந்திரனிடம் ஒப்படைத்து விட்டு வந்த பைராகியை எப்பாடுபட்டாவது மீட்டாக வேண்டும். தான் ஒப்படைக்க வேண்டிய உணவு பொருள்களை இப்போது ரகசிய தீவில் கொள்முதல் செய்யலாம் .அதற்கு வேண்டிய பணத்தை கருணாகரனிடமிருந்து பெற்று கொள்ளலாம்.மலை நாட்டிற்கு பொக்கிசத்தை கொண்டு செல்லும் வரை தன்னுடைய தயவு கருணாகரனுக்கு தேவை என்பதை அவன் நன்றாக உணர்ந்திருந்தான்.

தன்னுடைய உதவி அவனுக்கு தேவை என்பதால் தான் என்ன சொன்னாலும் அவன் கேட்டுத்தான் தீர வேண்டும் என்று நீலன் நினைத்தான்.

தன்னுடைய எண்ணத்தை அவன் கருணாகரனிடம் வெளிப் படுத்திய போது அவன் நிர்தாட்சண்யமாக அதை மறுத்து விட்டான். உணவு பொருள்களை கொள்முதல் செய்து முத்தழகியில் ஏற்றினால் புதையலை ஏற்றும் போது அதன் கனம் இடையூராக இருக்கும் என்று காரணம் கூறி அதை ஏற்க மறுத்து விட்டான்.

உணவு பொருட்கள் இல்லாமல் வெறும் கையோடு சென்றால் மகேந்திரன் பைராகியை விடுவிக்க மாட்டான். இப்படி ஒரு வினோதமான சூழலில் சிக்கி தவித்த நீலன் அதிலிருந்து தப்ப இன்னொரு வழியை கண்டுபிடித்தான். அது தனக்கு பங்காக வந்து சேரும் புதையலின் பாகத்தை ம் கேந்திரனுக்கு கொடுத்து விட்டால் அவன் பைராகியை விடுவித்து விடுவான் என்று கணக்கு போட்டான்.

அந்த சொற்ப நகைகளை பார்க்கும் மகேந்திரன் முழு புதையலையும் அடைய ஆசைப்பட்டு விட்டால் என்ன செய்வது என்று அவன் யோசிக்கவேயில்லை. போதும் என்று சொல்லாத மனித மனதின் பேராசையை அவனுக்கு துல்லியமாக எடை போட தெரியவில்லை.

நீலனை ஏமாற்றி முழு பொக்கிசங்களையும் வள நாட்டின் கருவூலத்திற்கு கொண்டு சேர்க்க நினைக்கும் கருணாகரன் பாதி பொக்கிசங்களை தர இசையமாட்டான் என்பதையும் அவன் கணக்கில் கொள்ளவில்லை.

இரண்டாவதாக அவன் ஆதித்தனையும் யவனனையும் கண்டுபிடித்து இங்கிருந்து மீட்டு செல்ல வேண்டும்.

மூன்றாவதாக அவன் பொக்கிசங்களையும், நஞ்சுண்டனையும் கண்டுபிடித்து கப்பலுக்கு கொண்டு வர வேண்டும். ஆயுதங்களில் சேதம் நிகழ்ந்து விட்டதால் அவன் ஆயுத பரிமாற்றத்தை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.

இந்த மூன்றும் கன கச்சிதமாக நடந்தேறி விட்டால் தன்னுடைய நண்பர்களுடன் மலைநாட்டை நோக்கி பயணமாகி விடலாம். இவையெல்லாம் சரியாக நடக்க கடவுளின் ஆசி வேண்டும் என்று நினைத்தான் அவன்.

" என்ன நண்பா! ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாய்? உணவு பொருட்களை ஏற்ற மறுத்ததிற்காக என் மீது கோபமா?" என்றான் அவனுக்கு அருகே வந்த கருணாகரன்.

நதியை கடக்கும் வரை முதலையை பகைத்து கொள்ள கூடாது என்பது அவனது அரசியல் சித்தாந்தம். அந்த சித்தாந்தத்தை நீலனிடம் கடைபிடிப்பதை தவிர வேறு வழியேயில்லை என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.

"இல்லை. நீ சொல்லும் காரணம் ஏற்புடையது தான்.புதையல்களை ஏற்றிய பின்பு கப்பலின் எடை கூடி விடும். அதிகமான பாரத்தை ஏற்றுவது ஆபத்தை கூட வே அழைத்து செல்வது போல. நான் அதைப் பற்றி எதையும் நினைக்கவில்லை" என்றான் நீலன் சமாதானமான குரலில்.

"வேறு எதைப் பற்றி இவ்வளவு நேரம் யோசித்து கொண்டிருக்கிறாய்?" என்றான் கருணாகரன்.

"முத்தழகியில் பணியாற்றிய இந்த துரோகிகளை நாம் கரைக்கு போனதும் சிறையில் அடைத்து விடுவோம். இனி இந்த கப்பலில் வேலையாட்கள் இல்லாமல் எப்படி கடலில் கலத்தை செலுத்துவது?" என்றான் நீலன் பரிதாபமாக முகத்தை வைத்து கொண்டு.

"அடக்கடவுளே. இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை நான் மறந்து விட்டேன். நாம் ரகசிய தீவின் துறைமுகத்தில் பு திய ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுத்து கொள்ளலாம். கவலைப்படாதே" என்று அவனை தேற்றினான் கருணாகரன்.

"புரியாமல் பேசுகிறாய் நண்பா.வேலை தெரிந்த ஆட்கள் அடுத்த கப்பலில் அல்லவா வேலை செய்வார்கள்? அவர்கள் எப்படி நம்மிடம் பணிக்கு வருவார்கள். ?"

"கூரை மீது சோறை விட்டெறிந்தால் ஆயிரம் காகங்கள் என்ற பழமொழியை நீ கேட்டதில்லையா? அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு கொடுப்போம். அதை ஈடுகட்ட வேலை தெரியாத புது ஆட்களையும் பணிக்கு எடுத்து கொள்வோம் அவர்கள் தான் வேலையை விரைவில் கற்று கொள்ள ஆர்வமாக செயல்படுவார்கள்" என்றான் கருணாகரன். புதையலை எப்படியாவது வளநாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக எவ்வளவு செலவானாலும் சரி என்ற முடிவிற்கு கருணாகரன் வந்து விட்டிருந்தான்.

நீலன் யோசிப்பது போல் ஆட்கள் தேவை என்பதை பற்றியெல்லாம் அவன் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை..

"ஆட்களை வேலைக்கு சேர்ப்பதை பற்றி நீ கவலைப்பட வேண்டாம். துறைமுகத்தில் எனக்கு ஆப் த நண்பர்கள் சிலர் உண்டு. அவர்களிடம் அந்த வேலையை ஓப்படைத்து விட்டால் அவர்கள் அதை சிறப்பாக செய்து முடிப்பார்கள். நீ சிகப்பு முகமூடியிடம் ஆயுதங்களை தரும் போது நஞ்சுண்டனை உன்னிடம் ஒப்படைக்க சொல். அதை மறந்து விடாதே" என்றான் நீலன்.

"அவனை கொல்ல நினைக்கிறாயா?" என்றான் கருணாகரன் ஆவலுடன் .

"இல்லை. அவனை கொன்று என் கைகளை இரத்த சகதியில் முக்கியெடுக்க நான் விரும்பவில்லை"

"அவனை பிறகு என்ன தான் செய்ய போகிறாய்?"

"தானே சாகும்படி செய்ய போகிறேன்"

" எப்படி?"

"அது ரகசியம். அதை பிறகு சொல்கிறேன். நீ ஆயுதங்களை சிகப்பு முகமூடியிடம் ஒப்படைக்கும் போது ஒரே ஒரு மீரங்கியையும் சில குண்டுகளையும் எனக்காக விட்டு வைக்க வேண்டும்"

"எதற்காக அவை உனக்கு தேவைப்படுகின்றன."

"உன்னுடைய நினைவாக இருக்கட்டுமே என்று தான் கேட்கிறேன். அவற்றை வைத்து நான் என்ன செய்ய போகிறேன்?" என்று சிரித்தான் நீலன்.

"உனக்காக நான் என்னென்ன செய்திருக்கிறேன் நண்பா! முத்தழகியை மீட்டிருக்கிறேன், நஞ்சுண்டனை ஒப்படைக்கிறேன், புதையலில் பாதியை தருகிறேன். இப்போது பிரங்கியை வேறு அன்பு பரிசாக கேட்கிறாய். எல்லாவற்றையும் பெற்று கொண்டு என்னை ஏமாற்றி விட மாட்டாயே?"

"சேச்சே! உன்னை நான் ஏமாற்றுவேனா? நாம் இருவரும் கூட்டாளிகள் அல்லவா? ஆமாம் அந்த புதையல் எங்கு தான் இருக்கிறது? " என்றான் நீலன்.

"அந்த புதையல் இருக்கும் இடம் இருவருக்கு மட்டும் தான் தெரியும். மூன்றாவது ஆள் அதை தெரிந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை" என்றான் கருணாகரன்.

"சரி.விடு. நான் கேட்டவற்றையெல்லாம் நீ நிறைவேற்றி விட்டாய். உன் ஆசைப்படி அந்த புதையலை வளநாட்டிற்கு கொண்டு வருவது என்னுடைய பொறுப்பு" என்றான் நீலன்.

முத்தழகி ரகசிய தீவை நோக்கி பயணமாகி கொண்டிருந்தது.

அதே நேரம் ரகசிய தீவில்

ஆதித்தனின் குழுவினர் ஒரே இடத்தில் குழமி இருந்தனர். அவர்களை சுற்றி இருந்த மரம் செடி கொடி, புதர்களில் அசைவு ஏற்பட்டு சலசலப்பு சத்தம் ஏற்பட ஆரம்பித்தது

"அவர்கள் மறைந்திருந்து நம் மீது தாக்குதல் நடத்த முனைகிறார்கள்" என்றான் யவனன்.

" எதிரிகள் நெருங்கி வரும் போது தான் நாம் நம்முடைய வாளை பயன்படுத்த முடியும். தொலைவில் பதுங்கி முன்னேறி வருபவர்களை வீழ்த்த வில்லும் அம்பும் தான் சரியான ஆயுதங்கள் " என்ற ஆதித்தன் வில்லையும் அம்பையும் எடுத்து கொண்டான்.

"நம்மிடம் அம்புகள் குறைவாகத்தான் இருக்கின்றன" என்றான் கடோத்கஜன்.

" இருப்பதை வைத்து சிறப்புடன் செயல்படுவோம்" என்றான் ஆதித்தன்.

அவர்களை சுற்றி இருந்த புதர்களின் நடுவே இருந்து அவர்கள் வெளியே வந்தார்கள். முகத்தில் மை பூசி விதவிதமான பாசிமணிகள் அணிந்து மலைவாழ் மக்களைப் போல் இருந்தவர்களை பார்த்த யவனன்" அவர்கள் நம்மை சுற்றி வளைத்து விட்டார்கள்" என்றான்.

"கவலையேயில்லை.கண்ணை மூடிக் கொண்டு எந்த திசையில் அம்பை விட்டாலும் எவனாவது ஓருவன் சாவான் " என்ற ஆதித்தன் காட்டுவாசி ஒருவனின் நெஞ்சை குறி பார்த்து அம்பை விட்டான்.
"அய்யோ ! அம்மா" என்ற அலறலுடன் சாய்ந்தான் அவன்.

" இவர்கள் காட்டுவாசிகள் இல்லை" என்றான் ஆதித்தன்.

"அதைத்தானே உணவு கொண்டு வந்தவர்களும் சொன்னார்கள்" என்றான் கடோத்கஜன்..

"அவர்கள் சொன்னது உறுதியாகிவிட்டது" என்றான் ஆதித்தன்.

மூவரும் வில் அம்புகளால் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
அம்புகளின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைய ஆரம்பித்தது.

ரகசிய தீவு அத்தியாயம்45

ரகசிய தீவு

முடிவல்ல தொடக்கம்

மதிமாறன் விரித்து வைத்திருந்த வஞ்சக வலையில் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையில் வீழ்ந்து விட்டான் கரிகாலன்.மதிமாறன் தங்களின் நாடகத்தை எளிதாக கண்டுபிடித்து விடுவான் என்பதை கரிகாலன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவன் தன் கைகட்டை அவிழ்த்து தன்னை விடுவித்து கொள்ளும் முன்பாகவே மதிமாறன் அவனுடைய மார்பில் வாளைபாய்ச்சி விட்டான்.

தங்கள் கொள்ளை முயற்சி இனி நடந்தேறாது என்பதை புரிந்து கொண்ட அவனது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றனர்.கரிகாலனின் நண்பர்களில் ஒருவன் மதி மாறனின் வாளை மார்பில் வாங்கி கொண்டதுடன் அவனை இறுகப் பிடித்துக் கொண்டு தன்னுடைய நண்பர்கள் தப்பி செல்வதற்கு வேண்டிய கால நேரத்தை உருவாக்கி கொடுத்தான். வாசலில் புரவிகளுடன் நின்ற பார்த்திபனுக்கு என்ன நடக்கிறதென்று எதுவும் புரியவில்லை.கரிகாலனை இருவர் கைதாங்க லாக இருவர் தாங்கி வருவதை பார்த்து விபரீதமாக என்னவோ நடந்து விட்டது என்று யூகித்து கொண்டான்.

அவனது கேள்விக்கு வில்லவன் கத்திகுத்து காயம் என்று பதிலளித்ததில் அவனது யூகம் உறுதியானது. சற்று நேரத்தில் நான்கு பேரும் ஆளுக்கு ஒரு குதிரையில் ஏறிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.மதிமாறனின் அலறலில் காவல் கோட்டம் தன் அறைகுறை தூக்கத்திலிருந்து முழுதாக விடுபட்டு எழுந்தது. தன்னை நகர விடாது இறுகப் பிடித்திருந்தவன் நெஞ்சில் மீண்டும் ஒருமுறை கத்தியை பாய்ச்சினான்மதிமாறன் அவனது உயிர் பறவை உடலை விட்டுப் பறந்தது. அவனது உடல்வெட்டுண்ட மரமாக கீழே விழுந்தது.

"எங்கே என் குதிரை? அதை உடனே இங்கு கொண்டு வாருங்கள். எல்லோரும் அவர்களை பிடிக்க கிளம்புங்கள். அவர்கள் இங்கிருந்து வெகுதூரம் போயிருக்க முடியாது. அவர்களை விரட்டி பிடியுங்கள்" என்று கர்ஜித்தான்மதிமாறன்.

லாயத்திலிருந்து கொண்டு வரப்பட்ட குதிரையில் தாவி ஏறியவன் "நான்கு திசைகளிலும் அவர்களை பிரிந்து தேடுங்கள். அவர்களுக்கு உதவ வேறு யாராவது வெளியே காத்துக் கொண்டி ருக்கலாம். அப்படி அகப்படுபவர்களை உடனே சிறை செய்யுங்கள். நான் அவர்கள் போகும் திசையில் பயணமாகிறேன். படையின் ஒரு பிரிவு என்னை பின் தொடரட்டும்" என்ற மதிமாறன் குதிரையை பக்கவாட்டில் உதைத்து கிளம்பினான்.

அவனுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த நான்கு குதிரைகளும் ஒரே திசையில் விரைந்து கொண்டிருந்தன.

கரிகாலனின் காயத்திலிருந்து பெருகிய குருதி அவன் ஆடையை நனைத்து தரையில் சிந்த ஆரம்பித்தது. ஏராளமான ரத்த போக்கால் கரிகாலன் அறைகுறையாக மயக்கத்திற்கு போவதும் வருவதுமாக இருந்தான்.

அவனுக்கு விழிப்பு வந்தபோது அவன் ஈனஸ் வரமான குரலில் "பார்த்தி பா!" என்று தன் தம்பியை அழைத்தான்.
அவனது மெல்லிய குரலை கேட்ட பார்த்திபன்" என்ன அண்ணா ?" என்றான்.

"என் திட்டம் தோற்று விட்டது. அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது மீண்டும் ஒருமுறை நிருபணமாகி விட்டது. என் மரணம் நெருங்குகிறது. இனி நான் உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நான் இறந்தது தெரிந்தால் மக்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள்.மதிமாறனின் அராஜகம் இன்னும் அதிகமாகும். அதை தடுக்க சிகப்பு முகமூடி உயிரோடு இருக்க வேண்டும்"

"அப்படியெல்லாம் பேசாதே அண்ணா. இந்த உலகில் எனக்கு இருக்கும் ஒரே சொந்தம் நீ மட்டும் தான்."

"எனக்கு பிறகு மக்கள் தான் உன் சொந்தம். இதோ என்னுடைய சிகப்பு முகமூடி.இனி இது உனக்கு சொந்தம். என் விதிமுடியப்போகிறது. என்னை அழைத்து சென்றால் உங்கள் விதியும் முடிந்துவிடும்."

" என்ன அண்ணா சொல்கிறாய்?"

"ஆமாம். எனக்கு பின்னாலும் சிகப்பு முகமூடி வாழ வேண்டும். சர்வாதிகாரம் அதை பார்த்து நடுங்க வேண்டும். உன்னிடம் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைக்கிறேன். அதை நீ தான் நிறைவேற்ற வேண்டும். இதோ என் உடலிலிருந்து வெளியேறும் உதிரம் என் வழியை காட்டி கொடுத்து விடும். அதனால் நான் உங்களிடபிருந்து விலகி செல்ல போகிறேன். வருகிறேன் நண்பர்களே.புரட்சி வெல்லட்டும்" என்ற கரிகாலன் குதிரையின் வழியை மாற்றினான்.

"கரிகாலா! மீண்டும் தவறான முடிவை எடுக்காதே. நாங்கள் உன்னை தனியாக விடமாட்டோம்" என்றான் வில்லவன்.

"வில்லவா ! என் தம்பிக்கு துணையாக இருந்து அவனை வழிநடத்து.என்னுடைய நேரம் முடிவுக்கு வந்து விட்டது. நான் ஒரு சுமை. என்னை கழற்றி வீசுவதே முறை. போய் வருகிறேன் நண்பா " என்றான் கரிகாலன்.

"வேண்டாம் கரிகாலா!" என்றான் கண்ணீருடன் வில்லவன்.

நண்பர்களை பார்த்து கையை வீசி பிரியாவிடை கொடுத்த கரிகாலன் தன் குதிரையை தட்டி விட்டான்.

அவன் போகும் திசையை பார்த்த பார்த்திபன்" அண்ணன் போவது பிசாசு பள்ளத்தாக்காயிற்றே? அங்கே வழியே இல்லை. இருட்டில் பயணித்தால் அதள பாதாளத்தில் விழுந்து மரணம் நிச்சயம். அங்கே எதற்காக போகிறான்?" என்றான் குழப்பத்துடன் பார்த்திபன்.

" அவன் தன்னை அழித்து கொள்ள முடிவு செய்து விட்டான். தன் உடல் கூட எதிரிகளுக்கு கிடைக்க கூடாது என்று அவன் நினைக்கிறான். அப்போதுதான் சிகப்பு முகமூடி ஓரு மாயாவி . மரணமில்லாதவன் என்று மக்கள் நம்புவார்கள் என்று அவன் நினைக்கிறான்" என்றான் வில்லவன் கண்ணீருடன் .

குருதி பெருக்கை அடையாளமாக வைத்து பின் தொடர்ந்து கொண்டிருந்தான் மதி மாறன் . பயல் பயங்கரமாக காயம் பட்டு விட்டான் - குருதி பெருக் கோடு வெகுதூரம் அவன் பயணித்து ஓடி விட முடியாது என்று மனதிற்குள் ஆனந்த பாட்டு பாடிக் கொண்டிருந்தான் மதி மாறன் .

அவன் பாதி வழியிலேயே பிசாசு பள்ளத்தாக்கை நோக்கி செல்லும் கரிகாலனை பார்த்து விட்டான். வழி இல்லாத இந்த பாதையில் இவன் ஏன் தனியாக பயணிக்கிறான் என்று யோசித்தான்மதிமாறன். அவனது சகாக்கள் யாரும் அவனை பின் தொடர்ந்து வரவில்லை என்பதையும் அவன் கவனித்தான்.

யாரும் பயணிக்காத பாதையில் பயல் பதுங்கி கிடக்க தீர்மானித்து விட்டான் போலிருக்கிறது. கண்டிப்பாக அதள பாதாளத்தில் முடியும் இந்த பாதையை யாரும் சந்தேகிக்கவே மாட்டார்கள். பயல் மிகுந்த திறமைசாலி தான் .அதனால் தான் நம்மிடம் அகப்பட மறுக்கிறான் என்று நினைத்த மதிமாறன் அவனை பின் தொடர ஆரம்பித்தான்..

அறைகுறை மயக்கத்தில் இருந்த கரிகாலனுக்கு பின் தொடரும் குதிரையின் குளம் பொலி கேட்க ஆரம்பித்தது. யாரோ நம்மை பின்தொடர்கிறார்கள் என்பதை உணர்ந்த கரிகாலன் குதிரையை வேகமாக செலுத்தினான்.

காலை சூரிய உதயம் ஆரம்பமாக தொடங்கியது.

பாதையில் வழி இல்லை. பாதாளம் தான் என்பதை உணர்ந்த குதிரை நகர மறுத்தது.

குதிரை நின்று விட்டதால் வேறு வழியின்றி அதிலிருந்து குதித்து இறங்கினான் கரிகாலன்.

"கடைசியாக என்னிடம் அகப்பட்டு விட்டாய்" என்றான் மதி மாறன் தன் குதிரையை நிறுத்தியபடி.

கரிகாலன் தன்னிடமிருந்த குறு வாளை அவனை நோக்கி எறிந்தான். அது குறிதவறியது. "உன்னைப்போல்என் குறி தப்பாது. பார்க்கிறாயா?" என்ற மதிமாறன் அடுத்தடுத்து இரண்டு குறுவாள் களை கரிகாலனை குறிவைத்து வீசினான்.

தன் மார்பில் பாய்ந்த குறுவாள்களை தாங்கி கொண்ட கரிகாலன்" என்னை கொன்று விட்டதாக மனப்பால் குடிக்காதே மதி மாறா ! சிகப்பு முகமூடிக்கு சாவே கிடையாது. நான் திரும்பவும் வருவேன். என்னை எதிர்கொள்ள காத்திரு" என்றபடி பாதாளத்தை நோக்கி பாய்ந்தான். சூரியன் வானில் உதிப்பதற்கும் அவன் குதிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.

மதிமாறன் சூரியனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று நினைத்தான் அவன். அது முடிவல்ல தொடக்கம் என்று அவனுக்கு தெmயவில்லை.

தப்பி சென்ற பார்த்திபன் தன் அண்ணனின் சிகப்பு முகமூடி வேடத்தை அணிய ஆரம்பித்தான்.கரிகாலனின் மரணத்தால் வேதனையடைந்த யோகி அவன் இடத்தில் பார்த்திபனை வைத்து கொண்டார்.

இறந்தவன் எப்படி திரும்பவும் உயிர் பிழைத்து வந்தான் என்று மதிமாறன் குழம்ப ஆரம்பித்தான்.

இரட்டையரில் ஓருவன் இறந்தால் இன்னொருவனுக்கு அவனுடைய பலம் வந்துவிடும் என்ற அறிவியல் விதிக்கு ஏற்ப கரிகாலனும் பார்த்திபனும் இணைந்த கலவையாக மாறிக்கொண்டிருந்தான் பார்த்திபன்.

கரிகாலனின் வீரமும், பார்த்திபனின் யாரையும் நம்பாத பகுத்தறிவும் ஒரே உடலில் செயல்பட ஆரம்பித்தன.

வில்லவன் பார்த்திபனுக்கு துணையாக செயல்பட ஆரம்பித்தான். இன்று வரை மக்கள் சிகப்பு முகமூடிக்கு மரணமே கிடையாது என்று நினைத்து கொண்டிருக்க இதுதான் காரணம்.

கரிகாலனின் கதையை சொல்லி முடித்தாள் வில்லவனின் மனைவி பார்வதி.சந்திரவதனாவிற்கு பார்த்திபனின் மீதான அன்பு பெருக ஆரம்பித்தது.

புதன், 26 அக்டோபர், 2022

ரகசியதீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 4 4

எதிர்பாராதது.

மதிமாறன் தீவிரமான சிந்தனையில் இருந்தான்.கருணாகரன் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்த கரிகாலன் எந்த தடயமும் இல்லாமல் கற்பூரம் காற்றில் கரைந்தது போல் காணாமல் போயிருந்தான். அவன் தப்பி வெளியேற வெளி ஆட்கள் யாரும் உதவி செய்திருக்க முடியாது. அரசின் உயர் பதவியில் இருக்கும் யாரோ ஒரு கருங்காலி தான் அவனுக்கு ஆயுதம் வரும் இடங்களையும் வரி வசூல் செய்த தொகை வரும் பாதையையும் கூறியிருக்க வேண்டும்

அதே மர்ம நபர் தான் சிறையில் அடைபட்டு கிடந்த கரிகாலனையும் தப்ப வைத்திருக்க வேண்டும் என்று மதிமாறன் நினைத்தான். அதனால் இந்த முறை கருணாகரனை நம்ப இயலாமல் அவனே களம் இறங்க தீர்மானித்து விட்டான். அதனால் தனக்கு அம்மை வந்திருப்பதாக பொய்யான தகவல் ஓன்றை வெளியே கசியவிட்டான்.மதிமாறன் தனிமையில் ஓய்வெடுத்து கொண்டிருப்பதாக உலகம் நினைத்து கொண்டிருந்த போது அவன் மாறுவேடத்தில் காவல் கோட்டத்திற்கு போய் சேர்ந்திருந்தான். 

அதற்கு முன்பாகவே அவன்வேண்டுமென்றே வடதிசையில் இருந்த காவல் கோட்டத்திற்கு நிறைய ஆயுதங்களையும், செல்வங்களையும் இடமாற்றம் செய்தான். அது கரிகாலனை பிடிப்பதற்காக மதிமாறன் உருவாக்கி வைத்த பொறி.

இதை அறியாத கரிகாலன் யோகியின் பேச்சை புறக்கணித்தான். யோகியின் பேச்சை மீறி அந்த காவல்கோட்டத்தை தாக்கி ஆயுதங்களை திருடி தன்னுடைய வீரத்தையோகிக்கு பறைசாற்ற வேண்டும் என்று அவன் விரும்பினான்.

தான் மேற்கொள்ளும் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்தால் கூட பிடிபடும் தன்னை சிறையில் தான் அடைப்பார்கள். அங்கிருந்து மீட்க யோகி இருக்கிறார் என்ற அசட்டு தைரியம் அவனை வழி நடத்தியது.

இரவு நேரம் .

வீசி எரிந்த கோலி குண்டுகளாக நட்சத்திரங்கள் திசைக்கு ஓன்றாக சிதறியிருந்தன.காவல் கோட்டத்திலிருந்து அரை காத தூரத்தில் இருந்த காட்டு பகுதியில் தன் குழுவை சேர்ந்த ஐந்து பேருடன் தீக்காய்ந்து கொண்டிருந்தான் கரிகாலன்.அவனது குழுவில் பார்த்திபனும், வில்லவனும் இருந்தனர்.

"நண்பர்களே! கவனமாக கேளுங்கள்!விடிவதற்கு சற்று முன்பாகத்தான் நாம் அந்த காவல் கோட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப் போகிறோம். அப்போதுதான் அவர்கள் நல்ல தூக்கத்தில் இருப்பார்கள்" என்றான் கரிகாலன் தொண்டையை செருமியபடி.

"கரிகாலா! நீ அவர்களை தவறாக எடை போட்டுவிட்டாய். நம் பக்கம் ஐவர் தான் இருக்கிறோம். அவர்கள் இருபது பேருக்கு மேல் இருக்கிறார்கள். நீ சிகப்பு முகமூடியுடன் அவர்களின் முன்னால் தோன்றினாலே போதும். அவர்கள் எச்சரிக்கையடைந்து விடுவார்கள்" என்றான் வில்லவன்.

"அதைக்கூட வா நான் யோசிக்காமல் இருப்பேன்?" என்று சிரித்தான் கரிகாலன்.

"பிறகு எப்படித் தான் நாம் தாக்குதல் நடத்த போகிறோம்?" என்றான் பார்த்திபன்.

" தாக்குதல் பிறகு. முதலில் அவர்களை ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கப் போகிறோம்" என்றான் கரிகாலன்.

"நீ பிடிபடுவது தான் அவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருக்கும். அதை விட மகிழ்ச்சியான செய்தி வேறு என்ன இருக்க போகிறது ?" என்றான் மற்றொருவன்.

"சரியாகச் சொன்னாய் நண்பா. நாளை காலை நான் பிடிபட்ட கைதியாக அவர்கள் முன்னால் நிற்க போகிறேன். பரிசு தொகைக்கு ஆசைப்பட்டு என்னை பிடித்து அரசிடம் ஒப்படைக்க போகிறவர்கள் நீங்கள் நால்வரும். எப்படி என் திட்டம்?" என்று சிரித்தான் கரிகாலன்.

" அற்புதமான திட்டம். இதை யாரும் சந்தேகிக்கவே மாட்டார்கள். தேடப்படும் குற்றவாளியை நாம் பிடித்து கொண்டு போய் நிறுத்தினால் அவர்கள் முன் எச்சரிக்கையாக ஆயுதங்களை எடுக்க மாட்டார்கள். சிகப்பு முகமூடியை பிடித்து வந்த நம்மையும் சந்தேகிக்க மாட்டார்கள். அவர்கள் அலட்சியமாக இருக்கும் போது நாம் தாக்குதல் நடத்தினால் நாம் தான் வெல்வோம்" என்றான் உற்சாகத்துடன் வில்லவன்.

" என் திட்டத்தை சட்டென்று புரிந்து கொண்டு விட்டாய் நண்பா! என் கைகளை எளிதாக விடுவிக்கும் படி கயிற்றால் கட்டி விட்டால் போதும். பிறகு நடப்பதை நான் பார்த்து கொள்கிறேன்." என்றான் கரிகாலன் மகிழ்ச்சியுடன் .

"எனக்கென்னவோ இது சரியாகத் தோன்றவில்லை" என்றான் பார்த்திபன்.

"பார்த்திபா! நீ உள்ளே வர வேண்டாம். குதிரைகளுக்கு காவலாக வெளியே நின்றால் போதும். எங்கள் கை தாழும் போது உதவிக்கு உடனே வந்தால் போதும். நாம் தப்பி செல்ல குதிரைகள் மிகவும் அவசியம் " என்றான் கரிகாலன்

பார்த்திபன் அறைகுறை மனதோடு திட்டத்திற்கு சம்மதித்தான்.

விடியற்காலை .

சாம்பல் நிற இருட்டு எங்கும் பரவிக் கிடந்தது. காவல் கோட்டத்தின் வெளியே குதிரைகளின் குளம் பொலி கேட்பதை உணர்ந்த காவலன் ஒருவன் அறைகுறை தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தான்.

"யார் அது?" என்றபடி வாசலுக்கு வந்தவன் அங்கே நின்றவர்களைப் பார்த்து அதிர்ந்தான். வெளியே குதிரையிலிருந்து இறங்கி நின்றவர்களில் நடுநாயகமாக நின்றான் சிகப்பு முகமூடி. அவனது கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தன.

"யார் அது?" என்றான் காவலன் தன் கண்களை கசக்கியபடி. அவன் காணும் காட்சியை அவனால் நம்ப முடியவில்லை.

வில்லவன் சுதாரித்து கொண்டு "இவன் தான் நீங்கள் தேடும் சிகப்பு முகமூடி.இன்று எங்களிடம் வசமாக சிக்கி கொண்டு விட்டான். அவனை கையும் , காலுமாக பிடித்து வந்திருக்கிறோம். இவனை பிடித்து கொடுத்தால் அன்பளிப்பாக பெரும் தொகையை தருவதாக அறிவித்திருந்தீர்கள். அதை பெற்று கொள்ளவே இங்கே வந்தோம் " என்றான்.

"இவன் அவ்வளவு எளிதில் அகப்படுகிற ஆள் இல்லையே?காற்றில் கரையும் மாயாவியாயிற்றே? இவனை எப்படி நீங்கள் பிடித்து வந்தீர்கள்? சரி. இங்கேயே இருங்கள். நான் காவல் தலைவரை அழைத்து வருகிறேன்" என்ற காவலன் அவசர அவசரமாக உள்ளே ஓடினான்.

உள்ளே உறங்கி கொண்டிருந்த மதி மாறனை எழுப்பியவன்" பிரபு. உங்கள் கனவு நிறைவேற போகிறது. அந்த சிகப்பு முகமூடி அகப்பட்டு விட்டான். கிராமவாசிகள் சிலர் அவனை கைது செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்" என்றான் மகிழ்ச்சியுடன் .

தூக்கத்தில் எழுப்பியவனை திட்டுவதற்காக வாயை திறந்த மதிமாறன் அவன் சொன்ன சேதியை கேட்டதும் முகம் மலர்ந்தான்.
"நீ சொல்வது உண்மை தானா?" என்றான் மதி மாறன் .

"ஆமாம். அவர்கள் வெளியே உங்கள் வருகைக்காக காத்திருக்கிறார்கள்"

"அவர்களை உள்ளே அழைத்து வா" என்றான் மதி மாறன் .

காவலன் உடனே திரும்ப சென்று " அனைவரையும் உள்ளே வரச் சொல்கிறார் தலைவர் " என்றான்.

அனைவரும் உள்ளே சென்ற பின்னர் பார்த்திபன் வெளியே நிற்பதை பார்த்த காவலன்" தம்பி. நீ உள்ளே வரவில்லையா?" என்றான்.

"இல்லை ஐயா. இந்த குதிரைகளில் ஓன்று நான் இல்லாவிட்டால் சண்டித்தனம் செய்யும். அதனால் நான் இங்கேயே இருக்கிறேன்" என்றான் பார்த்திபன்.

முகம் கழுவி விட்டு வந்த மதி மாறனை பார்த்து அனைவரும் முகமன் கூறினார்கள்.

"யார் நீங்கள்?" என்றான் அவன்.

"மலையூர் கிராமவாசிகள் . "

"இவன் எப்படி உங்களிடம் அகப்பட்டான்?"

"இரவு நேரத்தில் கால் நடைகளை திருட முயன்றான். சத்தம் கேட்டு விழித்த நாங்கள் இவனிடம் போராடி இவனை வீழ்த்தினோம். எமகாதகப்பயல். எங்களை ஒரு வழி செய்து விட்டான்"

"ஆயுதங்களையும், பொக்கிசங்களையும் கொள்ளையடித்தவன் இப்போது ஆடு மாடுகளை கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டானா? ரொம்பவும் தரம் தாழ்ந்து விட்டதே உன் செயல்" என்ற மதிமாறன் சிகப்பு முகமூடியை பார்த்து சிரித்தான்.

"எனக்கும் பசிக்குமல்லவா?" என்றான் பரிதாப குரலில் கரிகாலன்.

" இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று தான் உன்னை சிறையில் அடைத்து மூன்று வேளை உணவும் கொடுக்க செய்தேன். நீ தான் என் நல்ல மனதை புரிந்து கொள்ளாமல் தப்பி ஓடிவிட்டாய்"

"சிறை உணவு அவ்வளவு ருசியாக இல்லை"

"இந்த முறை ருசியான உணவை வழங்க சொல்கிறேன்" என்றான் மதி மாறன் .

பிறகு நண்பர்களின் பக்கம் திரும்பியவன்" கிராமவாசிகளே! நீங்கள் இவனுடன் போராடித் தானே இவனை பிடித்தீர்கள்?"

"ஆமாம் பிரபு " என்றான் வில்லவன்.

"அந்த போராட்டத்தில் உங்களுக்கும் இவனுக்கும் எந்த காயமும் ஏற்படாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது."

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.கரிகாலன் மதி மாறனுக்கு சந்தேகம் வருவதை உணர்ந்து கொண்டவனாக கைகட்டை அவிழ்த்து தன்னை விடுவித்து கொள்ள முயன்றான்.

வில்லவன் என்ன பதில் சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போதே மதிமாறனின் வாள் கரிகாலனின் நெஞ்சில் பாய்ந்தது.

"அதை விட ஆச்சரியம். பிடிபட்ட இவனின் வாளை இவன் இடுப்பிலேயே விட்டு வைத்தது " என்றபடி வாளை உருவிய மதிமாறன் " இவை எல்லாமே திட்டமிட்ட நாடகம் என்பதை நான் அறிவேன் கரிகாலா. உன்னுடைய கதை இப்போது முடியப்போகிறது " என்று மீண்டும் ஒருமுறை அவனது நெஞ்சில் வாளைபாய்ச்ச முயன்றான். நண்பர்களில் ஒருவன் சட்டென்று இடையே புகுந்து அந்த வாளை மார்பில் வாங்கி கொண்டான். அத்தோடு மதிமாறனையும் நகர விடாமல் இழுத்து பிடித்து கொண்டான்.

"கரிகாலா! இது ஒரு வஞ்சக வலை. இதில் நீ சிக்கக் கூடாது. உடனே தப்பித்து விடு" என்றான் அவன்.

அவனது அலறல் சத்தம் கேட்டு காவலர்கள் விழித்து கொள்ள ஆரம்பித்தனர்.
காயமடைந்திருந்த கரிகாலனை அழைத்தபடி வெளியே வந்த வில்லவனை பார்த்த பார்த்திபன் " அண்ணனுக்கு என்னாயிற்று?" என்றான் பதட்டத்துடன் .

" கத்திகுத்து காயம் .நம் திட்டம் அவர்களுக்கு தெரிந்து விட்டது. நாம் உடனே தப்பி சென்றாக வேண்டும்" என்றான் வில்லவன்.

சில நிமிடங்களில் நான்கு குதிரைகள் அங்கிருந்து சிட்டாகப் பறந்தன.

"அவர்களை துரத்தி பிடியுங்கள்" என்று அலறினான்மதிமாறன்.

வெள்ளி, 21 அக்டோபர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 43

வஞ்சக வலை

மறுநாள் காலை சூரியன் கிழக்கிலிருந்து எழுந்து தன்னுடைய கடமையை துவக்கினான். யோகியின்ஆசிரமத்திற்கு வெளியே இருந்த மரத்தடியில் பார்த்திபனும் வில்லவனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். விடிய விடிய இருவரும் பிடிபட்ட கரிகாலனை யோகி எப்படி மீட்க போகிறார் என்பதை பேசி பேசி சலித்து கண் அயர்ந்து அப்போதுதான் தூக்கத்தின் பிடிக்குள் செல்ல ஆரம்பித்தார்.

கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல் ஒரு குரல் பார்த்திபனின் காதில் ஓலிக்க ஆரம்பித்தது. "பார்த்திபா! வில்லவா ! இருவரும் எழுந்திருங்கள். நான் வந்து விட்டேன்" என்றது ஒரு குரல்.

பார்த்திபனுக்கு அந்தக் குரல் வெகு பரிட்சையமாக தோன்றியது. அது அவனுடைய அண்ணன் கரிகாலனுடையது என்பதை அவன் உடனே கண்டுபிடித்து விட்டான். ஆனால் அந்த குரல் இங்கே கேட்க எந்த வாய்ப்பும் இல்லையே என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் போதே ஒரு வலியகரம் அவன் உடலை உலுக்க ஆரம்பித்தது.

பார்த்திபன் சட்டென்று கண்களை திறந்தான். சூர்ய மிர்ச்சைகள் அவனது கண்களில் பட்டு அவனது பார்வையை கூச செய்தன. ஆயிரம் கைகள் மறைத்தாலும் மறைக்க முடியாத ஆதவனும் அவனது அண்ணனுமான கரிகாலனும் ஓரே காட்சியில் அவனுக்கு தென்பட்டனர். தன் கண்களையே நம்ப முடியாத பார்த்திபன் கண்களை ஒரு முறை அழுத்த தேய்த்து கொண்டு மீண்டும் பார்த்தான். அது கரிகாலன் தான்.புன்னகை பூத்த முகத்தோடு காணப்பட்டதன்னுடைய சகோதரனை பாய்ந்து கட்டி கொண்டான் பார்த்திபன்

"அண்ணா ! நீயா ? நீ எப்படி சிறையிலிருந்து தப்பினாய்?" என்றான் தாள முடியாத வியப்புடன். சிறையில் தன் கண்களை கட்டி வெவ்வேறு பாதையில் யோகி அழைத்து செல்வதை கரிகாலனால் உணர முடிந்தது. அநேகமாக அந்த பாதை சிறையிலிருந்து வெளியேறும் ரகசிய சுரங்க பாதையாக இருக்க வேண்டும்.

அரசின் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் இந்த ரகசிய வழி முற்றும் துறந்த ஒரு யோகிக்கு எப்படி தெரிந்தது என்று அவன் ஆச்சரியப்பட்டான்.யோகிக்கு அரசின் உயர் மட்டத்தில் இருக்கும் யாருடைய உதவியாவது கிடைக்காமல் இப்படியான ரகசிய வழிகள் தெரிந்திருக்க நியாயமில்லை என்றது அவனது மனம்.

யோகி அவனுடைய கண்கட்டை அவிழ்த்த போது தான் ஆசிரமத்தின் நந்தவனத்தின் நடுவே நின்று கொண்டி ருப்பதை அவன் தெரிந்து கொண்டான்.

அவனுக்கு எதிரே நின்று கொண்டிருந்த யோகி மந்தகாசப் புன்னகையுடன்" என்ன கரிகாலா? இப்போதாவது என்னை நம்புகிறாயா?" என்றார்.

"நம்புகிறேன் சுவாமி .நாம் வந்தது சுரங்க பாதை என்று மட்டும் தெரிகிறது. ஆனால் அதன் தலைவாசல்?"

"எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம் அது. அதைப் பற்றி எதுவும் கேட்காதே. உன் சகோதரனும் வில்லவனும் உனக்காக இங்கே காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த விசயம் எதுவுமே தெரியக்கூடாது. நானும் நீயும் அறிந்த ரகசியமாக இந்த சுரங்க வழி இருக்க வேண்டும். மூன்றாம் மனிதர்கள் இதை தெரிந்து கொள்வதை நான் விரும்பவில்லை"

"இந்த ரகசியத்தை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். கவலைப்படாதீர்கள்" என்று அவர்கை மீது அடித்து சத்தியம் செய்தான் கரிகாலன்.

சற்று முன் நடந்த இந்த நிகழ்வை எண்ணிப் பார்த்த கரிகாலன் தன்னை நோக்கி கேள்வி கேட்ட பார்த்திபனை பார்த்து " இப்போது எதற்காக அதை கேட்கிறாய்? யோகி பல வித்தைகளை மறைத்து வைத்திருக்கிறார். பரகாயப் பிரவேசம் என்ற யோக முறையில் அவர் என்னை மீட்டு வந்தார்" என்றான் சிரிக்காமல்,

பேச்சு சத்தம் கேட்டு விழித்து கொண்ட வில்லவன் கரிகாலனைப் பார்த்து எதுவும் பேச தோன்றாமல் திகைத்து போய் நின்றான்.

"பயப்படாதே! என் சகோதரன் இறந்து ஆவியாக வரவில்லை. உண்மையாகவே சிறையிலிருந்து தப்பி வந்து விட்டான். அந்த யோகி உண்மையிலேயே அசகாய சூரர் தான் " என்றான் பார்த்திபன்

"அவ்வளவு கட்டு காவல் மிகுந்த சிறையிலிருந்து எப்படி தப்பி வந்தாய் கரிகாலா?" என்றான் வில்லவன்.

"யோகி ஆகாய மார்க்கமாக என்னை மீட்டு வந்தார். அப்போது என் கண்கள் கட்டப்பட்டிருந்ததால் என்ன நடந்ததென்று எனக்கு தெரியவில்லை" என்றான் கரிகாலன்.

"நான் இருக்கும் வரை எல்லாம் நல்லதாகவே நடக்கும் " என்றபடி அங்கே வந்தார் யோகி.

வில்லவனும், பார்த்திபனும் அவரை வணங்கினார்கள்.

"கரிகாலனை மீட்க உங்களால் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக நினைத்து விட்டோம். அதற்காக எங்களை மன்னியுங்கள் சுவாமி " என்றான் வில்லவன்.

"அந்த ஆகாய பயணம். அதை மட்டும் தான் என்னால் நம்ப முடியவில்லை" என்றான் பார்த்திபன்.

"யோகிக்கு அது சாதாரண விசயம். அவரை சந்தேகிக்க வேண்டாம்.. நாங்கள் கிளம்புகிறோம் சுவாமி " என்றான் கரிகாலன்.

"போய் வாருங்கள்" என்றார் யோகி.

மூவரும் மரத்தடியில் கட்டியிருந்த குதிரைகளை நோக்கி நடந்தனர்.கரிகாலனுக்கு பின்னால் நடந்து வந்த பார்த்திபன் அவனது மேலாடையில் ஒட்டியிருந்த ஒட்டடையை தற்செயலாக பார்த்தான். ஆகாய மார்க்கமாக யோகிகரிகாலனை மீட்டு வந்தால் பாழடைந்த கட்டிடங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் படியும் ஒட்டடை தன்னுடைய அண்ணனின் ஆடையில் எப்படி வரும்? தன் அண்ணனும், யோகியும் சேர்ந்து கொண்டு தன்னிடமிருந்து எதையோ மறைப்பதை பார்த்திபன் உணர்ந்து கொண்டான்.

போதாததற்கு கரிகாலனின் காலணியில் படிந்திருந்த சேறு ஆகாய பயணம் பொய் என்று சொல்லாமல் சொல்லி விட்டது. இரண்டும் சேர்ந்து ஏதோ ஒரு சுரங்க வழியின் வழியாக தன் அண்ணனை யோகி மீட்டு வந்திருக்கிறார் என்ற உண்மையை பார்த்திபன் தெரிந்து கொண்டான்.

தான் கண்டுபிடித்த உண்மையை அவன் கரிகாலனிடம் கேட்கவில்லை. சரியான காரணம் எதுவும் இல்லாமல் தன்னுடைய சகோதரன் தன்னிடம் இந்த உண்மையை மறைத்திருக்க மாட்டான் என்று மட்டும் அவனுக்கு தோன்றியது.

தன்னுடைய சந்தேகத்தை அவன் கரிகாலனிடம் கேட்காவிட்டாலும் தான் கண்டுபிடித்த உண்மையை தன் நண்பனான வில்லவனிடம் அவன் பகிர்ந்து கொள்ள தவறவில்லை. வில்லவனும் பார்த்திபனின் கருத்தை ஆமோதித்தான். இருவரும் தங்கள் சந்தேகத்தை தாங்கள் கண்டுபிடித்தவற்றை கரிகாலனிடம் வாய் திறந்து கேட்கவில்லை. கரிகாலன் சரியான காரணம் இல்லாமல் எந்த விசயத்தையும் மறைக்க மாட்டான் என்பதால் இருவரும் இந்த விசயத்தை கண்டும் காணாமலும் இருந்து விட்டனர்.

விடியற்காலையில் கரிகாலன் சிறையிலிருந்து தப்பிய தகவல் ரகசிய தீவு முழுக்க பரவ ஆரம்பித்தது.கரிகாலனின் மாயாவி பிம்பம் மீண்டும் ஒருமுறை உறுதியானது. அவனுக்கு மரணமே இல்லை. எங்கே அடைத்து வைத்தாலும் அங்கேயிருந்து தப்பித்து விடுவான் போன்ற வதந்திகள் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தன.

சிறைசாலையிலிருந்து கரிகாலன் தப்பிய செய்தியை யறிந்த மதிமாறனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. விடித்ததும் கரிகாலனை தூக்கில் போட்டு தன்னுடைய நீண்ட நாள் எதிரியை குழி தோண்டி புதைத்து விடலாம் என்று திட்டமிட்டிருந்த மதி மாறனுக்கு கரிகாலன் தப்பி சென்றது தலையில் இடி விழுந்தது போலிருந்தது.

கருணாகரனிடம் தனது சினத்தை காட்டி சீறியவன் இனி இவனை நம்பி பயனில்லை. நாமே களம் இறங்கிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.

சில நாட்கள் அமைதியாக இருந்த மதிமாறன் திடிரென்று கருணாகரனுக்கு ஒரு ஓலையை கொடுத்தனுப்பினான்.

தனக்கு அம்மை நோய் தாக்கியிருப்பதால் பத்து நாட்கள் ஓய்வெடுக்க போவதாகவும் தன்னை நேரில் சந்திப்பதை தவிர்க்கும்படியும் அதில் கூறியிருந்தான்.

மதிமாறன் தனக்கு தெரியாமல் எதையோ ரகசியமாக திட்டமிடுவதாக கருணாகரனுக்கு தோன்றியது. அவன் அரண்மனை வைத்தியரை விசாரித்த போது அவர் எந்த கவலையும் இல்லாமல் " நீ கேள்விப்பட்டது உண்மை தான் " என்று சொல்லியதை வைத்தே அவர் சொல்வது பொய் என்று அவன் தெரிந்து கொண்டு விட்டான்.

மதிமாறன் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறான் என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறையிலிருந்து தப்பிய கரிகாலன் அதற்கடுத்த இரண்டு வாரங்களுக்கு யோகி எந்த வேலையும் தராததால் அவரை நச்சரிக்க ஆரம்பித்தான்.

தீவின் கிழக்கு பகுதியில் இருக்கும் காவல் கோட்டத்தில் ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்படுவதை சொன்ன யோகி" ஆனால் இப்போது நாம் அங்கே தாக்குதல் நடத்துவது உசிதமல்ல. சோழி உருட்டி பார்த்தேன், தீய சகுனத்தை காட்டுகிறது. அதனால் இதை தவிர்த்து விடுவோம்" என்றார்.

சரி என்று தலையாட்டிய கரிகாலன் பாரிய ஆயுதங்களுக்காக அங்கே தாக்குதல் நடத்த தீர்மானித்தான். தாக்குதலில் வெற்றி பெற்ற பின் தகவலை யோகியிடம் சொல்லி கொள்ளலாம் என்று தீர்மானித்தான். அவன் இரவு நேரத்தில் அந்த காவல் கோட்டத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட ஆரம்பித்தான்.

அது மதிமாறன் தனக்கு விரித்து வைத்த வஞ்சக வலை என்பதை அவன் உணரவேயில்லை.

செவ்வாய், 18 அக்டோபர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 42

பரகாயப் பிரவேசம்

மதிமாறன் அனுப்பி வைத்த ஓலையை படித்த தயாநிதி மனம் குழம்பி போனான். தன்னுடைய ஆருயீர் நண்பனான மலையமானின் மரணத்தையும் அவன் குடும்பம் நிர்மூலமானதையும் அவனால் ஏற்றுக்கொள்ள வே முடியவில்லை.

நேர்மையும் கண்ணியமும் கொண்ட மலையமான் பெண்கள் விசயத்தில் நெருப்பு போன்றவன். தன் மனைவியை தவிர மற்ற பெண்களைசகோதரிகளாக நினைப்பவன். அப்படி கண்ணியமான நடத்தை கொண்ட மலையமானுக்கு எப்படி ஆசை நாயகியும் அவள் மூலமாக ஒரு மகனும் இருக்க முடியும்? யாரோ ஒரு எத்தன் மலையமானின் மரணத்தை பயன்படுத்தி கொண்டு தன்னை அவனுடைய மகன் என்று அறிவித்து கொண்டு சிகப்பு முகமூடியை அணிந்து கொண்டு மதிமாறனின் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கிறானோ என்ற சந்தேகமும் தயாநிதிக்கு எழுந்தது.

தன் அன்பு நண்பனின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து கொண்டிருக்கும் அந்த புல்லுருவியை அவன் மன்னிக்க விரும்பவில்லை. அந்த சிகப்பு முகமூடியை எப்படியாவது கண்டுபிடித்து அவன் கதையை முடித்துவிடவே அவன் விரும்பினான்.

அதற்கு ஒரே வழிமதிமாறனுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவுவது தான். அதற்கு தகுதியான ஆள் நீலன் தான் என்று அவன் நினைத்தான். இப்படி ஒரு காரியத்திற்கு அவன் நீலனை தேர்ந்தெடுக்க ஒரு பிரத்யேகமான காரணம் இருந்தது.

அவனுக்கும் நீலனுக்கும் இடையே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருந்தது. அந்த ஒப்பந்தத்தின் படி இருவருமே பலனடைந்து வந்தார்கள். ஆகவே தான் அவன் நீலனை இந்த காரியத்திற்கு தேர்ந்தெடுத்தான்.

ஆயுத உதவி கேட்டு கடிதம் எழுதிய மதிமாறன் நாட்டின் நிர்வாகம் பற்றி மாதா மாதம் எழுதி அனுப்பும் கடிதங்களில் சிகப்பு முகமூடியை பற்றி கண், காது, மூக்கு வைத்து தவறான செய்திகளை சித்தரிக்கவும் தவறவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் சிகப்பு முகமூடி எழுதுவது போன்ற பொய்யான கடிதங்களை தயார் செய்து அவற்றின் மூலம் தயாநிதிக்கு மிரட்டல் விடுக்கவும் ஆரம்பித்தான்.

அவனது குள்ள நரி தந்திரம் பலிக்க ஆரம்பித்தது. சிகப்பு முகமூடியின் திமிரான கடிதங்களை படித்து முதலில் கடும் கோபம் கொண்ட தயாநிதி தன் உடல்நிலையையும், மன நிலையையும் கருத்தில் கொண்டு அவற்றை படிக்காமல் தவிர்த்துவிட்டான். சிகப்பு முகமூடியிடம் இருந்து வரும் கடிதங்களை அவன் படிக்காமலேயே குப்பையில் வீசுவதை வாடிக்கையாக்கி கொண்டான்.

மதிமாறனின் சதி திட்டம் பற்றி எதுவும் தெரியாத கரிகாலன் தயாநிதிக்கு தான் எழுதும் கடிதங்களை மலைநாட்டுக்கு செல்லும் கப்பல் மாலுமிகள் மூலம் கொடுத்து விட ஆரம்பித்தான்.

உண்மை நிலைமையை விளக்கிகரிகாலன் எழுதிய கடிதங்களும் மிரட்டல் கடிதங்களாக நினைத்து வழக்கம் போல் குப்பை கூடையில் எறியப்பட்டன.

தயாநிதியிடமிருந்து எந்த பதில்ஓலையும் வராததால் மனச்சோர்வடைந்த கரிகாலன் சிறிது நாட்களுக்கு பிறகு தயாநிதிக்கு கடிதம் எழுதுவதையே விட்டு விட்டான்.

தனது நயவஞ்சக திட்டம் நிறைவேறிய ம கிழ்ச்சியில் திளைத்தான்மதிமாறன்.

தயாநிதியிடமிருந்து பதில் ஓலைவராததால் சிறிது நாள் அமைதியாக இருந்த கரிகாலன் அதன் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டான். வழக்கம் போல் மதிமாறனின் ஆட்களின் மேல் தாக்குதல் நடத்த தொடங்கி விட்டான்.

அவனை பிடிக்க முயன்று தோற்றுகொண்டிருக்கும் கருணாகரனின் மீது மதிமாறனின் பார்வை திரும்பியது. சிகப்பு முகமூடியை ஏன் பிடிக்க முடியவில்லை என்று கேள்வி கேட்டு அவனை குடைந்தான் மதிமாறன்.

அவனது கேள்விகளுக்கு வெவ்வேறு பதில் களை கூறி வந்தான் கருணாகரன் .அவனது பதில்களை கேட்டு அலுத்து போனான்மதிமாறன்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல் யோகியின் அறிவுரைப்படி மதிமாறனின் ஆட்கள் மீது தாக்குதல் நடத்த சென்ற கரிகாலன் துரதிர்ஷ்டவசமாக அவர்களின் பிடியில் அகப்பட்டு கொண்டான். அவனது தோழர்கள் அவனை கைவிட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

கருணாகரன் அவனை பலத்த காவலோடு மதிமாறனின் முன்னால் கொண்டு போய் நிறுத்தினான். கருணாகரனை சிகப்பு முகமூடியோடு பார்த்த மதிமாறனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் கருணாகரனை கட்டி பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிகாட்டினான்.

சிகப்பு முகமூடி சிறையில் அடைக்கப்பட்டான். அதற்கு முன்பாக அவனது முகமூடியை அகற்றி தன்னுடைய எதிரியை இனம் கண்டு கொண்டு விட்டான்மதிமாறன். மலையமானின் மூத்த மகன் தீ விபத்தில் சாகாமல் உயிரோடு இருப்பது அவனுக்கு அதிர்ச்சியை தந்தது.

கரிகாலன் தன்னிடம் சிக்கி விட்டதால் அவனது புரட்சி கூட்டம் செய்வதறியாது கலைந்து விடும். இனி தன் ஆட்சி அதிகாரத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நினைத்த மதிமாறன் தயாநிதிக்கு தான் சிகப்பு முகமூடியை போல் மிரட்டல்  கடிதம் எழுதி குழப்பம் ஏற்படுத்திய உண்மையை கூறி விட்டான். நாளை காலை சாகப்போகிறவன் தானே என்று அலட்சியமாக நினைத்து தன்னுடைய புத்திசாலிதனத்தை எதிரியும் தெரிந்து கொள்ளட்டும் என்ற தற்பெருமை நினைப்பில் உண்மையை உளறி விட்டான் மதி மாறன் ..

தயாநிதிக்கு தான் அனுப்பிய கடிதங்களுக்கு ஏன் ஒருபதில் கடிதம் கூட வரவில்லை என்று இப்போது கரிகாலனுக்கு தெளிவாக தெரிந்தது. தனிமை சிறையில் அடைக்கப்பட்டு கிடந்தான் கரிகாலன்.

அதே இரவு நேரத்தில் பார்த்திபனும், வில்லவனும் யோகியின் ஆசிரமத்தில் அவர் முன்னால் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

நாளை காலை கொல்லப்படபோகிற கரிகாலனை நாம் இன்று இரவுக்குள் எப்படியாவது மீட்டாக வேண்டும் என்று இருவரும் யோகியிடம் விவாதித்து கொண்டிருந்தனர்.

அவர்களை போல் கோபம், கொந்தளிப்பு, எதுவும் இல்லாமல் அமைதியே வடிவாக இருந்த யோகி இருவரும் வீணாக பதட்டப்பட வேண்டாம். நாளை காலை கரிகாலன் இதே இடத்தில் இருப்பான். அவனை மீட்டு கொண்டு வருவது என்னுடைய பொறுப்பு. இடையில் விபரீதமாக எதையாவது செய்து காரியத்தை குலைத்து விடாதீர்கள் என்றார்.

" என் அண்ணனை மீட்க நீங்கள் என்ன ஏற்பாடு செய்து வைத்துள்ளீர்கள்?" என்றான் பார்த்திபன்.

"அதை நான் இப்போது சொல்ல முடியாது. ஆனால் என்னால் ஓன்றை நிச்சயமாக சொல்ல முடியும். நாளை சூரிய உதயத்தின் போது உன் அண்ணன் கரிகாலன் இங்கே இருப்பான். அதற்குள் உன் அண்ணனை மீட்கிறேன் என்று ஏடாகூடமாக எதையும் செய்து விடாதீர்கள்" என்ற யோகி பூஜை அறைக்குள் சென்று கதவை உட்புறமாக தாழிட்டு கொண்டார்.

யோகியை நம்புவதா? வேண்டாமா என்ற குழப்பத்தில் நின்று கொண்டிருந்தனர் பார்த்திபனும், வில்லவனும்.

அன்று நள்ளிரவு நிலவு உச்சிக்கு வந்திருந்தது. சிறைக்கு வெளியே இருந்த காட்டு பகுதியில் இருந்து நரிகளின் சீரான ஊளை சத்தம் கேட்க ஆரம்பித்தது. அரவம் கேட்கும் போதெல்லாம் தங்களின் ஒலியை நிறுத்திவிட்டு அமைதியை சத்தம் போட்டு குலைத்து கொண்டிருந்தன சில்வண்டுகள்.

என்ன சிக்கல் வந்தாலும் தன்னை மீட்பதாக உறுதிமொழி கூறிய யோகி இப்படியான சந்தர்ப்பத்தில் தனக்கு உதவி செய்ய வந்து சேருவாரா என்ற எதிர்பார்ப்பில் உறக்கம் தொலைத்து கண் விழித்துக் கிடந்தான் கரிகாலன். வெவ்வேறு யோசனைகளில் மூழ்கி போன அவன் அப்படியே கண் அயர்ந்து விட்டான்.

அவன் உறக்கத்தின் பிடியில் தன்னை முழுதாக ஒப்புக் கொடுத்த போது யாரோ அவனை உலுக்கி எழுப்பினார்கள்.

"கரிகாலா! விழித்து கொள்" என்ற து ஒரு பரிட்சையமான குரல்.

கரிகாலன் தன் கண்களை திறந்தான்.அதுவரை இருளை பார்த்து கொண்டிருந்த அவனது கண்கள் திடீர் வெளிச்சத்தை எதிர்கொள்ள முடியாமல் கூசின .
அவனது அவஸ்தையை புரிந்து கொண்ட குரலுக்கு சொந்தக்காரன் தன் கையில் இருந்த தீ வட்டியை கீழே தாழ்த்தி பிடித்தான். அரைகுறை வெளிச்சத்தில் தெரிந்த உருவத்தை கண்களை கசக்கி கொண்டு தெளிவாகப் பார்த்தான் கரிகாலன்.

அவனது எதிரில் கையில் தீப்பந்தத்துடன் நின்று கொண்டிருந்தது யோகி.

"சுவாமி நீங்களா?" என்றான் நம்ப முடியாத அதிர்ச்சியுடன் கரிகாலன்.

"ஆம். நானே தான் " என்ற யோகி தன் இடுப்பில் இருந்த துணியை எடுத்து அவன் கண்களை கட்டினான்.

"ஏன் என் கண்களை கட்டுகிறீர்கள்?" என்றான் குழப்பத்துடன் கரிகாலன்.

"சில ரகசியங்களை நீ பார்க்காதிருக்க " என்ற யோகி" என் கையை பிடித்து கொண்டு என் பின்னால்வா! நாம் இப்போது இங்கிருந்து தப்பிக்க போகிறோம்" என்றார்.

" அப்படியே செய்கிறேன். நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?" என்றான் கரிகாலன் யோகியின் கையை பிடித்தபடி.

"பரகாயப் பிரவேசம் " என்று புன்னகைத்தார் யோகி.

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு
அத்தியாயம் 41

புதிதாக ஒரு கூட்டணி

மதிமாறனுக்கு சிகப்பு முகமூடியான கரிகாலன் மிகப் பெரிய தொல்லையாக மாறிக்கொண்டிருந்தான். அவனை பிடிக்க தளபதியான கருணாகரன் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளும் தோல்வியை தழுவிக் கொண்டிருந்தன.
சிகப்பு முகமூடியை பிடிக்க முடியாமல் தோல்வியோடு திரும்பி வரும் கருணாகரனுக்கும் மதிமாறனுக்கும் இடையே வாய் வார்த்தைகளும், மனஸ்தாபமும் முளை விட ஆரம்பித்தன.

ஓரு முறை தன்னை பிடிக்க துரத்தி வரும் மதிமாறனின் ஆட்களிடமிருந்து தப்ப அருகே இருந்த ஆசிரமத்திற்குள் நுழைந்து விட்டான் கரிகாலன்.அவனுடைய நல்ல நேரம் அப்போது ஆசிரமத்தில் கதா காலட்சேபம் நடந்து கொண்டிருந்தது. தான் அணிந்திருந்த சிகப்பு முகமூடியை கழற்றி விட்டு சாதாரண பொது ஜனங்களில் ஓருவனாக மாறி கூட்டத்தில் கலந்து விட்டான் கரிகாலன்.

அரசாங்க ஆட்களால் சல்லடை போட்டு தேடியும் அவனை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. வழக்கம் போல் தோல்வியுடன் அவர்கள் திரும்ப சென்று விட்டார்கள்.

கதா காலட்சேபம் முடிந்த பின்னால் கூட்டம் கலைய ஆரம்பித்தது.கரிகாலனும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். அப்போது அங்கே வந்த ஓரு சீடன் யோகி அவனை சந்திக்க விரும்புவதாக கூறினான். அவர் ஏன் தன்னை சந்திக்க விரும்புகிறார் என்று புரியாமலேயே அவரை பார்க்க அவரது அறைக்குள் நுழைந்தான் அவன்.

அவன் உள்ளே நுழைந்ததும் குடிசையின் கதவுகள் உட்புறமாக தாழிடப்பட்டன. எதிரிகள் தன்னை சுற்றி வளைத்து விட்டார்களோ என்று நினைத்த கரிகாலன் தன்னுடைய வாளை உருவினான். அவனது கையை பிடித்து தடுத்து ஒரு வலியகரம்.கரிகாலன் யார் என்று நிமிர்ந்து பார்த்தான். எதிரே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார் யோகி.

"அஞ்சாதே தம்பி. நான் உன் நண்பன் தான்.எதிரியல்ல. கதவை உட்புறமாக தாழிட்டது நான் தான்." என்று சிரித்தார் யோகி.

வாளை திரும்ப உறையில் போட்ட கரிகாலன்" எதற்காக கதவை தாழிட்டீர்கள்?" என்றான்.

" எல்லாம் காரணமாகத் தான் "

"அந்த காரணம் தான் என்னவென்று கேட்கிறேன்"

கடகடவென்று சிரித்த யோகி சட்டென்று அவன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சிகப்பு முகமூடியை உருவி எடுத்தார்.

"இந்த காரணம் போதுமா? நீ என் ஆசிரமத்தினுள் நுழையும் போது அவசர அவசரமாக இதை கழற்றி ஓளித்து வைப்பதை பார்த்தேன். மதிமாறனின் தூக்கத்தை கெடுக்கும் அந்த சிகப்பு முகமூடி நீதானா?" என்றார் யோகி சிரித்தபடி.

கரிகாலன் யோகியை பார்த்து அயர்ந்து போய் நின்றான். இப்படி தான்கையும் காலுமாக ஒருவரிடம் மாட்டிக் கொள்வோம் என்பதை அவன் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று தான் அலட்சியமாக இருந்ததை நினைத்து அவன் தன்னையே நொந்து கொண்டான்.

இனியோகியிடம் எதையும் மறைத்து பயனில்லை என்று நினைத்தவன் "ஆம். அந்த சிகப்பு முகமூடி நான் தான் " என்று உண்மையை ஓப்புக் கொண்டான்.

"பரவாயில்லையே? அது நான் இல்லை என்று வீணாக பிடிவாதம் பிடிக்காமல் உடனடியாக உண்மையை ஒப்புக் கொண்டு விட்ட உன் துணிச்சலை பாராட்டுகிறேன். ஆமாம் ! இந்த சிகப்பு முகமூடி அவதாரத்தில் நீ என்ன சாதிக்க நினைக்கிறாய்?"

"வேறு என்ன ? இந்த நாட்டின் விடுதலை தான்.மதிமாறனிடமிருந்து இந்த தீவு சுதந்திர நாடாக மாற வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை"

"எனக்கும் அதே ஆசைதான். நாம் இருவரும் ஓரேலட்சியத்தை நோக்கித்தான் பயணிக்கிறோம். ஆனால் வெவ்வேறு வழிகளில் முயல்கிறோம். அதனால் தான் நம் முயற்சிபலவீனமாகி நம் லட்சியம் தோற்கிறது"

" என்ன சொல்கிறீர்கள்?மதி மாறனை வீழ்த்த நீங்களும் ஆசைப்படுகிறீர்களா? அதற்கு என்ன காரணம்?" என்றான் வியப்புடன் கரிகாலன்.இந்த மதிமாறன் இன்னும் எத்தனை பேரை பகையாளிகளாக மாற்றி வைத்திருக்கிறானோ என்று யோசித்தது அவன் மனம்.

"மதி மாறனை வீழ்த்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை.லட்சியம். வெறி. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதை பிறகு கூறுகிறேன்.. நீ ஏன் அவனை வீழ்த்த நினைக்கிறாய்? அவன் மீது உனக்கென்ன கோபம்?"

"அவன் என் தந்தையை உயிரோடு எரித்து கொன்றவன் நான் அதற்கு பழி தீர்க்க நினைக்கிறேன்"

"உன் தந்தை?"

"தீ விபத்தில் இறந்து போனதாக எல்லோரும் நம்பும் மலையமான் தான் என் தந்தை. அவர் விபத்தில் இறக்கவில்லை.மதிமாறனால் தீ வைத்து சொல்லப் பட்டவர். அதற்கு நானே சாட்சி"

"அவருடன் அவரது மகன்கள் இருவரும் மாண்டு போனதாக ஊருக்குள் பேச்சு "

"அதை நம்பாதீர்கள். அவரின் மூத்த மகன் கரிகாலன் நான் தான். என் தம்பியும் நானும் இரவில் முயல் வேட்டைக்கு சென்றதால் அந்த விபத்திலிருந்து தப்பி பிழைத்து விட்டோம். அதன் பிறகு மதி மாறனை அச்சுறுத்த நான் எடுத்த அவதாரம் தான் சிகப்பு முகமூடி அவதாரம்."

"நீ எடுத்த அவதாரம் சரிதான். ஆனால் அவதாரத்தின் நோக்கம் தான் சரியில்லை."

"சுவாமி. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"நீ மதிமாறனின் ஆட்கள் மீது குத்துமதிப்பாக தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி விடுகிறாய். அதனால் மதிமாறனுக்கு எந்த நட்டமும் இல்லை. உனக்கு எந்த லாபமும் இல்லை"

"ஆமாம். உண்மைதான். அவனை தூங்கவிடாமல் நான் தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறேன். என்னை தலைவனாக ஏற்று ஒரு புரட்சி படை உருவாகி விட்டது.
அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்கள், உணவு பொருட்கள் என்று எதையும் ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால் இந்த கூட்டம் வறுமையினால் கலைந்து விட மட்டுமல்ல என்னை காட்டி கொடுக்கவும் துணிந்து விடும்"

"உண்மைதான். பசி ருசி அறியாது. நேர்மையையும் அறியாது. இதிலிருந்து தப்ப என்ன செய்ய போகிறாய்?"

"எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பெரியவர் நீங்கள் தான் சரியான ஆலோசனை கூற வேண்டும்"

"என்னை நாடி வந்தவர்களை நான் கைவிடுவதேயில்லை. உனக்கொரு உபாயம் கூறுகிறேன்.மதிமாறனின் ஆட்கள் வரி வசூல் செய்யும் பணத்தை நீ கொள்ளையடித்தால் ? அவனது ஆட்களை தாக்கி அவர்களின் ஆயுதங்களை பறிமுதல் செய்து உன் தாக்கினால்?"

" திட்டம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் அரசாங்க ரகசியங்களாயிற்றே?இவை நமக்கு எப்படி தெரிய வரும்?"

" என் செல்வாக்கு அரண்மனை வரை செல்லுபடியாகும். நான் சேகரித்து வைக்கும் தகவல்களை உனக்கு கூறுகிறேன். நீ அந்த இடங்களில் உன்னுடைய கை வரிசையை காட்டு. அந்த முயற்சியில் நீ பிடிபட்டாலும் கவலைப்படாதே! நான் உன்னை மீட்டு வருவேன். தினமும் இரவு முதல் சாமத்தின் தொடக்கத்தில் என் ஆசிரமத்திற்கு நீ வர வேண்டும். உனக்கு வேண்டிய தகவல்களை நான் தருவேன்" என்றார் யோகி.

"மிகவும் நன்றி சுவாமி. உங்களின் உதவியை நான் மறக்கவே மாட்டேன்" என்றான் நெகிழ்ச்சியுடன் கரிகாலன்.

"நான் உன்னை நம்புகிறேன். நீயும் என்னை முழுதாக நம்ப வேண்டும். நீ பிடிபட்டால் என்னை காட்டி கொடுத்து விட கூடாது. நான் பிடிபட்டால் உன்னை பற்றி மூச்சு கூட விடமாட்டேன்"

"நான் உங்களை முழுதாக நம்புகிறேன் யோகியாரே! என்னால் உங்களுக்கு எந்த கெடுதலும் நடக்காது. நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் "

" நல்லது. நாளை இரவு முதல் சாமத்தில் நாம் மீண்டும் சந்திப்போம்"

" வருகிறேன்" என்ற கரிகாலன் அங்கிருந்து கிளம்பினான். அதன் பிறகு அவர்களின் சந்திப்பு அடிக்கடி நடைபெற ஆரம்பித்தது.

கரிகாலனின் தாக்குதல்கள் அதன் பிறகு மிக துல்லியமாக நடந்தேறின.மதிமாறனின் ஆட்கள் கொண்டு வரும் செல்வம், ஆயுதம், வழிகள் தெளிவாக தெரிந்ததால் கரிகாலனால் எங்கே எப்படி அவர்களை மடக்கி தாக்குதல் நடத்துவது என்று தெளிவாக திட்டமிட முடிந்தது.மதிமாறனின் பக்கம் ஆயுத, செல்வ இழப்பு அதிகரிக்க ஆரம்பித்தது.

கரிகாலனின் தொல்லை அதிகரிக்க ஆரம்பித்தது. அவன் மீது முழு கவனத்தை செலுத்த முடியாதபடி தயாநிதியின் கேள்விகள் மதி மாறனை துரத்த ஆரம்பித்தன.

முதலில் தயாநிதியிடமிருந்து தப்ப நினைத்த மதிமாறன் ஒரு புனைகதையை உருவாக்க தொடங்கினான்.

அவன் தயாநிதிக்கு பதில் ஓலை எழுத ஆரம்பித்தான்.

தயாநிதியின் நண்பனான மலையமான் நள்ளிரவில் தீவட்டி கீழே விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி இறந்து விட்டதாகவும் கூடவே அவரது மகன்கள் இருவரும் அதே விபத்தில் மாண்டு போனார்கள். மலையமானின் ஆசை நாயகியின் மகன் ஒருவன் தன்னை மலையமானின் வாரிசு என்று சொல்லி கொண்டு சிகப்பு நிறமுகமூடியை அணிந்து கொண்டு தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து கொண்டு அரசாங்க பணத்தை கொள்ளையடித்தும் ஆயுதங்களை கைப்பற்றியும் ஆட்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகிறான். அவனுக்கு வளநாட்டின் உதவி இருக்குமென்று தான் நினைப்பதாகவும் கூறி ஓலையை நிறைவு செய்திருந்தான். அந்த சிகப்பு முகமூடியை அடக்க ஆயுதங்கள் தேவை என்பதையும் அவன் குறிப்பிட தவறவில்லை.

தன்னுடைய குள்ள நரிதந்திரத்தை நினைத்து தன்னையே தட்டி கொடுத்து கொண்டான் மதி மாறன் .

சனி, 15 அக்டோபர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 40

புதிதாக ஒரு அவதாரம்.

மலையமானின் இரண்டு மகன்கள் நள்ளிரவில் முயல் வேட்டையாட காட்டுக்கு சென்று விட்டதை அறியாத கருணாகரன் தன்னுடைய சிறிய படையுடன் இரவின் இருளில் மறைந்து கிடந்தான். மதிமாறனின் அடாத செயல்களை உடனுக்குடன் தயாநிதிக்கு தெரியப்படுத்தி அவனுடைய செயல்களுக்கு கடிவாளம் இடும் நபர் மலையமான் தான் என்பது தெரிந்ததும் மதிமாறன் அவனது வாழ்வை முடிக்க முடிவு செய்து விட்டான்.அதற்காகவே அவன் கருணாகரனை அனுப்பி வைத்திருந்தான்.

மலையமானும் அவனது இரண்டு மகன்களும் கொல்லப்பட வேண்டும் என்பது தான் மதி மாறனின் ஆசை. இரண்டு மகன்களில் யார் உயிர் பிழைத்தாலும் அவன் மலையமானின் இடத்தை இட்டு நிரப்பி விடுவான். தன் தந்தையை போல் பதவி மீது ஆசை இல்லாமல் இருக்காமல் ஆளுநராக ஆசைப்பட்டு விட்டால் தன் மகனையும் அவனுக்கு கொடுத்து ரகசிய தீவின் ஆளுநராகவும் அவனை நியமித்து விடுவான் தயாநிதி .

அதன் பிறகு தன்னுடைய நிலைமை கவலைக்கிடமாகி விடும் என்பதை மதிமாறன் தெளிவாக உணர்ந்திருந்தான். தன்னுடைய எதிர்கால எதிரியை முற்றிலுமாக ஓழித்து தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள அவன் விரும்பினான். ஓரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க திட்டமிட்டிருந்தான் அவன்.

மலையமானின் மாளிகையை நள்ளிரவில் தன்னுடைய ஆட்கள் மூலம் சுற்றி வளைத்த கருணாகரன் மலையமானும் அவனது மகன்களும் தப்பி வெளியேறி விடாதபடி கதவுகளை வெளியே தாழ்பாள் போட்டான். அதன் பிறகு கையோடு கொண்டு வந்த எண்ணெய்யை ஊற்றி மாளிகைக்கு தீ வைத்து விட்டான். மாளிகையிலிருந்து யாரும் தப்பி வெளியேறாதவாறு கருணாகரனும் அவனது ஆட்களும் பார்த்து கொண்டனர். தூக்கத்திலிருந்து விழித்து எழுந்த மலையமான் மாளிகை தீப்பற்றி எரிவதை பார்த்து திடுக்கிட்டான். அங்கிருந்து தப்பி வெளியேற அவன் செய்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அவனது உயிர் பறவை உடலை விட்டு வெளியேறியது.

வேட்டையிலிருந்து திரும்பி வந்த மூவரில் வில்லவன் தான் முதலில் மாளிகை தீப்பற்றி எரிவதை பார்த்தான்.

"கரிகாலா! யாரோ நம்முடைய மாளிகைக்கு தீ வைத்து விட்டார்கள்" என்றான் அவன் படபடப்புடன்.

"நம்மீது இவ்வளவு பகை கொண்டவர்கள் யாரும் இல்லையே? மாளிகையினுள் அப்பா வேறு இருக்கிறார். அவருடைய நிலைமை என்னவானதென்று தெரியவில்லையே? " என்றான் கரிகாலன்.

"அவர்கள் யார் என்று நான் பார்த்து வரவா?" என்றான் பார்த்திபன்.

"அரசாங்க உடைகளை அணிந்திருக்கிறார்கள். அப்படியானால் இது மதிமாறனின் கைவரிசை தான்." என்றான் வில்லவன்.

"ஓரு வேளை தயாநிதி மாமாவுக்கு தகவல் கொடுப்பது நம்முடைய தந்தை என்பது அவனுக்கு தெரிந்திருக்குமோ?" என்றான் கரிகாலன்.

" இருக்கலாம். இல்லையென்றால் அவன் ஏன் இப்படி வெறியாட்டம் போடப் போகிறான்? நீங்கள் இருவரும் இங்கேயே மறைந்திருங்கள். நான் போய் என்ன நடக்கிறதென்று பார்த்து வருகிறேன்" என்ற வில்லவன் இரவின் இருளில் கரைந்து முன்னேறினான். சகோதரர்கள் இருவரும் ஒருவர் கையை ஓருவர் ஆறுதலாக பற்றி கொண்டனர். திடிரென தங்களுக்கு ஆதரவாக இருந்த தந்தையையும் இழந்து விட்ட அதிர்ச்சியை இருவராலும் ஜீரணிக்க முடியவில்லை. திடிரென்று உலகமே சூனியமாகி இருவரும் அனாதையாகி விட்டதைப் போல் உணர்ந்தனர்.

"அண்ணா! அப்பா?" என்று தழுதழுத்தான் பார்த்திபன்.

"கவலைப்படாதே தம்பி. உனக்கு துணையாக நான் இருக்கிறேன்" என்றான் கரிகாலன் கண்களில் வெஞ்சினம் மின்ன.

சற்று நேரத்தில் முகமெல்லாம் புகை படிந்த கோலத்தில் இருட்டிலிருந்து வந்து சேர்ந்தான் வில்லவன்.

"கரிகாலா! நாம் இங்கிருந்து கிளம்பலாம்" என்ற வில்லவனின் குரல் தழுதழுத்தது.

"வில்லவா ! அப்பாவின் நிலை என்னாயிற்று? " என்றான் கரிகாலன்.

"கரிகாலா.அப்பா நம்மை அனாதையாக்கி விட்டு தூக்கத்திலேயே போய்விட்டார். அவர்களுக்கு நீங்கள் இருவரும் உயிரோடு இருப்பது தெரியாது. நீங்களும் நெருப்பிற்கு இரையாகி விட்டதாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். நம்மை அபாயம் சூழ்ந்திருக்கிறது. நாம் உடனடியாக இங்கிருந்து கிளம்ப வேண்டும்"

"அப்பாவை தீக்கு பலியாக்கிய அந்த மதிமாறனின் இந்த கொடுர செயலை நாம் தயாநிதி மாமாவிற்கு தெரிவித்தாக வேண்டும்" என்று குமுறினான் பார்த்திபன்.

"அப்பா தயாநிதியின் ரகசிய ஒற்றனாக செயல்பட்டு வந்தது மதிமாறனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. நம்மூவரைத் தவிர ரகசிய தீவில் வேறு யாருக்கும் இந்த ரகசியம் தெரியாது. விசயம் மலை நாட்டிலிருந்து தான் கசிந்திருக்க வேண்டும். அதுவும் தயாநிதியின் மாளிகையிலிருந்து "

"ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும்.மதிமாறனை பொறுத்தவரை நாங்கள் இறந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். ஆனால் மதிமாறனே தயாநிதியின் கேள்விக்கு பதில் சொல்லும் நிலைமையை உருவாக்க போகிறேன்."

" நீ என்ன சொல்கிறாய் கரிகாலா?" என்றான் வில்லவன் எதுவும் புரியாமல் .

"வில்லவா. அப்பா இறந்து விட்டார். அவரிடமிருந்து தயாநிதி மாமாவிற்கு இனி கடிதங்கள் போகாது. தயாநிதி மாமா தனக்கு கடிதம் எதுவும் வராததால் அதற்கு என்ன காரணம் என்பதை பற்றி கண்டிப்பாக விசாரிக்கத் தான் செய்வார். அப்போது அப்பா சொல்லப்பட்டது தெரிய வரும். அப்பா தயாநிதி மாமாவுடன் யார் மூலமாக கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் என்பது நமக்கு தெரியாது. வேறு யார் மூலமாகவாவது தான் நாம் மாமாவை தொடர்பு கொண்டு நடந்த உண்மைகளை எடுத்து கூற வேண்டும். அதற்கு முன் இங்கே ஒரு அவதாரம் நிகழ வேண்டும்" என்று கர்ஜித்தான் கரிகாலன்.

"அவதாரமா? அண்ணா நீ என்ன சொல்கிறாய்?" என்றான் பார்த்திபன் எதுவும் புரியாமல் .

" சொல்கிறேன் தம்பி .மதிமாறனின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் நாம் இடைஞ்சலாக இருப்போம் என்று நினைத்து தான் நம் குடும்பத்தையே அழித்தான் அந்த மதிமாறன். அவன் இனி நிம்மதியாக உறங்கவே கூடாது. அவன் தூக்கத்தை கெடுக்க ஒரு மாயாவியை நான் உருவாக்க போகிறேன்" என்ற கரிகாலன் தன் இடுப்பில் இருந்த சிகப்பு நிற துணியை எடுத்து முகமூடி போல் மாற்றி முகத்தில் கட்டி கொண்டான்.

"ஏழைகளின் பாதுகாவலன், ஏதேச்சதிகாரத்தின் எதிரி சிகப்பு முகமூடி இந்த கணத்தில் பிறந்து விட்டான். இது ஒரு புது அவதாரம். நாட்டின் நலன் கருதுபவர்களும், மதிமாறனின் அட்டுழியத்தால் பாதிக்கப்பட்டவர்களும் எனக்கு உதவி செய்வார்கள்" என்றான் கரிகாலன்.

மலையமான் மறைந்த அன்று இரவு மதிமாறனுக்கு தீராத தலைவலியை உருவாக்க சிகப்பு முகமூடி என்ற புதிய அவதாரம் உருவாகியிருந்தது.

மதிமாறனின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டவர்களும், ஏழை மக்களும் கரிகாலனின் பக்கம் திரள ஆரம்பித்தனர். அவர்கள் யாருக்கும் தாங்கள் ஆதரிப்பது மலையமானின் மூத்த மகனை என்பது தெரியாது. தெரியாத படிக்கு தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்து கொண்டான் சிகப்பு முகமூடி என்றழைக்கப்பட்ட கரிகாலன்.அவனது தந்தையான மலையமானிடம் அவன் கற்று தேர்ந்திருந்த வீர விளையாட்டுகள் மதிமாறனின் ஆட்களை சமாளிக்க உதவின.

மதிமாறனின் ஆட்கள் அநியாயமான வேலைகளை செய்ய கிளம்பும் போதெல்லாம் அவற்றை இடையிட்டு தடுப்பது சிகப்பு முகமூடியின் நித்திய கடமையாயிற்று. அவனிடம் தோற்று திரும்புவது அரசாங்க வீரர்களின் அன்றாட வாழ்வானது.அவனது சாகச செயலால் கவரப்பட்ட இளைஞர்கள் சிகப்பு முகமூடியின் புரட்சி படையில் இணைய ஆரம்பித்தனர்.

மலையமானின் குடும்பத்தை அடியோடு அழித்து விட்டோம். இனி தயாநிதியிடம் தன்னைப் பற்றி உளவு சொல்ல ஆள் இல்லை. இனி தன்னிஷ்டம் போல் அரசதிகாரத்தை நடத்தலாம் என்று நினைத்த மதிமாறனின் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டு விட்டான் புதி காக தோன்றிய சிகப்பு முகமூடி.

அவனைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் மதிமாறன் கதிகலங்கி கொண்டிருந்தான். மாயாவியை போல் திடிர் திடிரென்று தாக்குதல் நLத்திவிட்டு மக்களோடு மக்களாக கலந்து தப்பி விடும் அவனை பிடிப்பது குதிரை கொம்பாக இருந்தது.மக்கள் அவனை காட்டி கொடுக்க மறுப்பதால் அவனது கோபம் இன்னமும் அதிகரித்தது.தன்னுடைய பயத்தை கோபமாக மாற்றி கருணாகரன் மீது காட்டி கொண்டிருந்தான் அவன்.

கருணாகரனும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தும் சிகப்பு முகமூடியை பிடிக்க முடியவில்லை.

தன்னுடைய ஆருயிர் நண்பனான மலையமானிடம் இருந்து மதி மாறனுடைய செயல்களை பற்றிய எந்த ஓலையும் வராததால் குழப்பமடைந்தான் தயாநிதி . ரகசிய தீவிலிருந்து மலை நாட்டுக்கு வந்து செல்லும் கப்பல் மாலுமிகள் சொல்லும் தகவல்களை அவன் ரசிக்கவில்லை. யாரோ ஒருவன் சிகப்பு முகமூடி அணிந்து கொண்டு மதிமாறனின் ஆட்சிக்கு குறுக்கீடு செய்கிறான் என்பது மட்டும் அவனுக்கு தெரிந்தது.

இரண்டு விசயங்களையும் தெளிவுபடுத்தி கொள்ள நடந்த சம்பவங்களுக்கு விளக்கம் கேட்டு மதிமாறனுக்கு ஓலை அனுப்பி வைத்தான் தயாநிதி .

அவனது ஓலையை படித்து பார்த்த மதிமாறனுக்கு நடுக்கம் பிறந்து விட்டது. அவனது குள்ள நரி மூளை தயாநிதிக்கு என்ன பதில் சொல்லி சமாதானப் படுத்துவது என்று யோசிக்க ஆரம்பித்தது. 

மலையமானிடமிருந்து ஓலை தயாநிதிக்கு போகாமல் நின்று விட்டால் அவன் தன்னை கேள்வி கேட்பான் என்று அவன் யோசித்து கூட பார்க்கவில்லை. உடல், மனம், மூளை எல்லாமும் வஞ்சகத்தில் ஊறிப்போன அவன் அதற்கு ஒரு பதிலை தயார் செய்ய ஆரம்பித்தான்.

வெள்ளி, 14 அக்டோபர், 2022

ரகசியதீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 39

ரகசிய உளவாளி

தனக்கு வர இருந்த மாபெரும் அபாயத்தை எப்படியோ தவிர்த்து கொண்ட மகிழ்ச்சியில் அமைதியாக இருந்து கொண்டான் நீலன்.அவன் மனம் கருணாகரன் அந்த மார்க்கதரிசியின் புதையலை எங்கு தான் ஓளித்து வைத்திருப்பான் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

ரகசிய தீவில் வில்லவனின் மாளிகையில் உறக்கம் வராமல் உட்கார்ந்திருந்தாள் சந்திரவதனா. அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த வில்லவனின் மனைவி பார்வதி அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

அவளையே பார்த்து கொண்டிருந்த சந்திரவதனா "அக்கா! கரிகாலனின் கதையை சொல்வதாக நீங்கள் கூறினீர்கள். பிறகு அதை சொல்லாமல் அப்படியே அமைதியாகி விட்டீர்கள். ஏன் இந்த அமைதி ? " என்றாள் சந்திரவதனா .

"சந்திரவதனா .! நாங்கள் ஆளும் அரசின் அராஜங்களை எதிர்த்து போராடும் புரட்சி குழுவினர். எப்போது வேண்டுமானாலும் அரசால் எங்களுக்கு ஆபத்து நேரும். நீயோ இவற்றில் சம்மந்தப்படாத அந்நிய பெண். உன்னை நம்பி எப்படி கரிகாலனின் வரலாறை கூறுவது?"

"அப்படியானால் நீங்கள் என்னை இன்னமும் நம்பவில்லையா?"

"அப்படி அல்ல பெண்ணே.கரிகாலனும் பார்த்திபனும் ஓட்டி பிறந்த இரட்டை பிறவிகள்.கரிகாலன் இறந்து போன பின் பார்த்திபன் அவனைப் போல் நடித்து கொண்டிருக்கிறான். இந்த உண்மை அவனது நெருங்கிய சகாக்களுக்கு மட்டுமே தெரியும். சாதாரண பொது ஜனங்களுக்கு இந்த உண்மை தெரியாது. இந்த விசயம் ரொம்பவும் ரகசியமானது"

"அந்த ரகசியத்தைத் தான் இப்போது என்னிடம் சொல்லி விட்டீர்களே?"

"எனக்கு ஓட்டை வாய் சந்திரா. என்னை போல் நீயும் வேறு யாரிடமாவது இந்த ரகசியத்தை உளறிவிடக் கூடாது என்பதால் தான் நான் உன்னிடம் உண்மையை கூற தயங்குகிறேன்."

"நீங்கள் என்னிடம் தயங்க வேண்டிய தேயில்லை அக்கா. நானும் உங்களில் ஓருத்திதான் "
" எதை வைத்து நீ அப்படி சொல்கிறாய்?"

"உங்கள் தலைவரின் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் இளம் பெண் நானல்லவா?"
என்றாள் வெட்கத்துடன் சந்திரவதனா.

"அடி கள்ளி. இது எப்போது நடந்தது? பார்த்திபன் சரியான நெஞ்சழுத்த காரன். தன் காதலை அப்படியே மூடிமறைத்து விட்டானே ?"

"அவரை கோபிக்காதீர்கள் அக்கா. அவர் என் மீதான காதலை இன்னமும் வாய் திறந்து சொல்லவில்லை. நானும் அது போலவே தான் "

"இருவரும் வாய் திறந்து பேசாமல் இந்த சங்கதி எப்படியம்மா நடந்தது?"

"காதல் மொழி பேச கண்கள் போதாதா? இதழ் மொழியும் வேண்டுமா?"

"ஓஹோ.கதை அப்படி போகிறதா? அப்படியானால் பார்த்திபன் மீது உனக்கு இஷ்டம் தான் ? "

"ஆமாம். அவருக்கும் என் மீது ப்ரியம் தான்."

"அப்படியானால் உன்னிடம் இந்த கதையை சொல்லித்தான் தீர வேண்டும்." என்ற பார்வதி கரிகாலனின் கதையை கூற தொடங்கினாள்.

ரகசிய தீவின் முக்கியமான அரசியல் பிரமுகர்களில் மலையமானும் ஒருவர். அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் தான் கரிகாலனும், பார்த்திபனும். ரகசிய தீவின் ஆளுகையை கையில் வைத்திருந்த தயாநிதியும் மலையமானும் பால்ய காலத்து நண்பர்கள். அவ்வப்போது ரகசிய தீவிற்கு வரும் தயாநிதி மலையமானின் மாளிகையில் தங்கி பொழுதை போக்குவது வழக்கம்.

ரகசிய தீவின் ஆளுநராக மலையமானை நியமிக்க விரும்பினான் தயாநிதி . நண்பர்களுக்குள் அது சரி வராது என்று அந்த பதவியை ஏற்க மறுத்து விட்டான் மலையமான். அவனது இந்த செயலால் மலையமான் மீதிருந்த மதிப்பு பல மடங்கு அதிகமானது தயாநிதிக்கு .

பதவியை விரும்பாத மலையமானின் நட்பை விரும்பி போற்றிய தயாநிதி வேறு ஒரு நபரை ரகசிய தீவின் ஆளுநராக நியமித்தான். அந்த ஆளுநர் தவறாக எதையாவது செய்ய முற்பட்டால் மலையமான் தன்னுடைய நண்பனுக்கு அதை தெரிவித்து ஓலை அனுப்பி விடுவான்.

அதை படிக்கும் தயாநிதி அந்த தவறான முடிவில் தலையிட்டு மலையமான் எழுதிய தீர்வையும் அமல்படுத்துவான். இப்படியாக மலையமான் யாருக்கும் தெரியாமல் தயாநிதியின் ரகசிய உளவாளியாகவும் செயல்பட்டு வந்தான்.

தயாநிதிக்கு பெண் குழந்தை பிறந்ததும் நண்பர்களுக்கு இடையே இன்னொரு ஓப்பந்தம் உருவானது. பதவியை மறுத்த மலையமான் வீட்டில் தன்னுடைய பெண் மருமகளாக வாழ்க்கை பட வேண்டும் என்று விரும்பினான்மலையமான்.கரிகாலன், பார்த்திபன் இருவரில் யார் அவளை மணந்தாலும் சரி மலையமான் வீட்டு மருமகள் தன்னுடைய மகள் தான் என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

ரகசிய தீவிற்கு தான் வர முடியாத சூழலில் தன்னுடைய மனைவியையும், மகளையும் கப்பலில் அனுப்பி வைத்தான் தயாநிதி . அந்த கப்பல் வரும் வழியில் கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நிர்மூலமானது. அப்போது நடந்த சண்டையில் தயாநிதியின் மனைவி இறந்து போனாள். அந்த பெண் குழந்தை தயாநிதியின் ஒரே வாரிசுகாணாமல் போய்விட்டது.

அன்று சோகத்தில் வீழ்ந்த தயாநிதியால் மீண்டும் மீளவே முடியவில்லை. நண்பனின் பெண் குழந்தையை கண்டுபிடிக்க மலையமானும் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தார். ஆனாலும் பலனில்லை. அந்த குழந்தை காணாமல் போனது போனது தான்.

அப்போதுதான் மதி மாறன் இந்த தீவின் ஆளுநராக பொறுப்பேற்று ரகசிய தீவிற்கு வந்து சேர்ந்தான். அவனது இலக்கு தயாநிதியின் மகளை கண்டுபிடிப்பதல்ல. மார்க்கதரிசியின் தங்கத்தை கண்டுபிடிப்பது. அதற்கான முயற்சிகளில் அவன் ஈடுபட ஆரம்பித்தான்.

அப்படி ஒரு நாள் நகர் வலம் வந்தவன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்படி கொல்ல முயன்றவர்களை கொன்று மதிமாறனின் உயிரை காப்பாற்றினான் ஒருவன். அவன் தான் கருணாகரன்,

கருணாகரனின் வீரத்தை பார்த்து மகிழ்ந்த மதிமாறன் இப்படி ஒரு ஆள் தனக்கு தேவை என்று நினைத்து கருணாகரனுக்கு தளபதி பதவி கொடுத்து தன்னுடன் வைத்து கொண்டான்.

கருணாகரன் மதி மாறனுக்கு விசுவாசமாக நடந்து வந்தான்.மதிமாறனின் எதிரிகளை கொடூரமாக தண்டித்து தன்னுடைய நன்றியை அவனுக்கு பறைசாற்றினான். அவனது நடத்தையிலும் விசுவாசத்திலும் மகிழ்ந்த மதிமாறன் அவனுக்கு மார்க்கதரிசியின் தங்கத்தை தேடும் வேலையை கொடுத்தான்.

அதன் பிறகு அவனது கவனம் வரி வருவாய் மீது திரும்பியது. மலை நாட்டில் இருக்கும் தயாநிதிக்கு வருடா வருடம் வரி வசூலை அனுப்புவது தான் ரகசிய தீவின் ஆளுநராக வருபவரின் வேலை. அதிகமான வருவாயை வசூலித்து தயாநிதியின் காலடியில் கொட்டினால் அவன் தன்னுடைய விசயங்களில் தலையிட மாட்டான் என்றும் நல்ல விசுவாசி, சிறந்த நிர்வாகி என்று தன்னை நினைப்பான் என்று நினைத்த மதிமாறன் அதிகமான வரிகளை போட்டு மக்களை துன்புறுத்த ஆரம்பித்தான்.

வழக்கமாக வரும் வரி வருவாய் இப்போது கூடுதலாக வருவதைப் பார்த்து தயாநிதி முதலில் வியப்படைந்தான். பின்னாலேயே வந்து சேர்ந்த மலையமானின் ஓலை மதிமாறனின் கொடுமைகளை எடுத்து சொல்லியது.

அதை படித்து பார்த்த தயாநிதி மதிமாறனின் மீது மிகுந்த கோபம் கொண்டான். புதிய வரிகளை நீக்கும்படியும் பழைய வரிகளே நீடிக்கட்டும் என்றும் அவன் மதி மாறனுக்கு பதில் கடிதம் அனுப்பினான்.

தயாநிதியின் கண்டிப்பான ஓலையை படித்து பார்த்ததுமே மதிமாறனுக்கு ஒரு உண்மை புரிந்து விட்டது. இங்கே ரகசிய தீவில் நடப்பவற்றை தயாநிதியிடம் சொல்ல யாரோ ஒரு ரகசிய உளவாளி இருக்கிறான். அவனை முதலில் தொலைத்தாக வேண்டும். நாளை மார்க்கதரிசியின் தங்கப்புதையல் கையில் கிடைத்து விட்டால் அதை எடுத்து கொண்டு ஓடி விடவோ பதுக்கி வைக்கவோ முடியாது. அந்த ரகசிய ஓற்றன் அதை மோப்பம் பிடித்து தயாநிதிக்கு ஓலை அனுப்பி விடுவான்.

அந்த ரகசிய ஒற்றன் இருக்கும் வரை தான் சுயமாக இயங்க முடியாது என்று உணர்ந்து கொண்ட மதிமாறன் தன்னுடைய தந்தைக்கு ஓலை அனுப்பி அந்த ரகசிய ஒற் றன் யார் என்று கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டு கொண்டான்.

மதிமாறனின் தகப்பன் பொன்னாசை காட்டி தயாநிதியின் வீட்டில் வேலை செய்யும் வேலைகாரர்களில் ஒருவனை விலைக்கு வாங்கினான். அவன் திருடி வந்து கொடுத்த ஓலையை படித்ததுமே ரகசிய தீவின் ரகசிய ஒற்றன்மலையமான் தான் என்பது வெட்ட வெளிச்சமானது.

தன் தந்தை அனுப்பிய ஓலையின் மூலமாக மலையமான் தான் அந்த ரகசிய உளவாளி என்பதை தெரிந்து கொண்ட மதிமாறன் அவனது கதையை முடிக்கும் வேலையை கருணாகரனிடம் ஓப்படைத்தான். தன் விசுவாசத்தை காட்ட வேட்டை நாயாக சிறு படையுடன் கிளம்பினான் கருணாகரன்.

ரகசிய தீவில் மலையமானிடம் ஆசி பெற்று கொண்டு நள்ளிரவு முயல் வேட்டைக்கு கிளம்பினார்கள் பார்த்திபனும், கரிகாலனும் அவர்களின் உற்ற தோழனான வில்லவனும்..

அவர்கள் கையில் தீவட்டிகளுடன் கானகம் நோக்கி செல்வதை வாசலில் நின்றபடி பார்த்து கொண்டிருந்தான் மலையமான். "விளையாட்டு சிறுவர்கள் " என்று முணுமுணுத்தன அவனது உதடுகள் -

நடந்து கொண்டிருந்த மூவரும் திரும்பி பார்த்து மலையமானை பார்த்து கையசைத்தனர். அவர்கள் மீண்டும் பார்த்து கொள்ளவே போவதில்லை என்பதை அப்போது அவர்கள் அறியவில்லை.

புதன், 12 அக்டோபர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 38

இரும்பாய் வந்த இறைவன்

நீலன் பதட்டத்தின் உச்சியில் இருந்தான். அவன் கப்பல் திரும்ப கிடைத்த போது அவன் அடைந்திருந்த மகிழ்ச்சியை இப்போது இழந்திருந்தான்.

தான் ரகசியமாக முத்தழகியில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை மதி மாறனிடம் ஓப்படைக்க வேண்டும் என்பது தான் அவனுக்கு மலைநாட்டு அரசன் இட்டிருந்த கட்டளை அந்த ஆயுதங்களை கருணாகரன் சிகப்பு முகமூடியிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதை அவன் கொஞ்சம் கூட விரும்பவில்லை. ஆயுதங்கள் சிகப்பு முகமூடியிடம் அகப்பட்டு அவன் மதி மாறனை வீழ்த்தி விட்டு அரச அதிகாரத்தை கைப்பற்றி விட்டால் நீலனின் நிலைமை தர்மசங்கடமாகி விடும்.

மதிமாறன் தன்னுடைய தோல்விக்கு ஆயுதங்கள் சரியான நேரத்திற்கு தனக்கு வந்து சேரவில்லை என்பதை காரணமாக கூறுவான். ஆயுதங்களை மதி மாறனிடம் ஒப்படைக்காமல் கோட்டை விட்டு விட்டு சிகப்பு முகமூடியிடம் ஆட்சியை இழக்க காரணமாக இருந்தவன் நீலன் என்பதால் மலைநாட்டு அரசனும், ரகசிய தீவின் பொறுப்பதிகாரியுமான தயாநிதியும் நீலனின் மீது கோபம் கொள்வார்கள். அந்த கோபம் தன்னுடைய தலையை வாங்கி விடும் சக்தி படைத்தது என்பதை அவன் நன்றாக அறிந்து வைத்திருந்தான். 

சிகப்பு முகமூடியிடம் கருணாகரன் ஆயுதங்களை ஓப்படைக்க வேண்டும். அதே நேரம் அவை யுத்த களத்தில் சிகப்பு முகமூடிக்கு பயன்படவும் கூடாது.அப்படி நடந்து விட்டால் நீலனின் தலை தப்ப வாய்ப்பிருக்கிறது.

ஆயுதங்களை எப்படி செயலோய செய்வது என்று தெரியாத நீலன் சிந்தனை வயப்பட்டவனாக குறுக்கும் நெடுக்குமாக நடக்க தொடங்கினான். நீலன் திடிரென்று எதையும் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்த கருணாகரன் நீலன் தன் மனதிற்குள் வில்லங்கமாக எதையோ திட்டமிடுகிறான் என்பதை உணர்ந்து கொண்டான்.

தன் அருகே நின்ற ஆட்களில் ஓருவனை அருகே அழைத்தவன்" வீரனே! இதோ இந்த நீலன் மிகவும் பொல்லாதவன். ஆள் எதிரே நின்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவனை விலை பேசி விற்று விடும் ஆற்றல் படைத்தவன். இவனைப் பற்றி நீயும் கேள்விப்பட்டிருப்பாயே?" என்றான் கருணாகரன்.

"இந்த நரனைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன் தளபதி " என்றான் அந்த வீரன்.

"இவன் மிகவும் பொல்லாதவன். இந்த ஆயுதங்கள் விசயத்தில் இவனதுபோக்கு புதிராக இருக்கிறது. இவன் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லாமல் உள்ளத்தின் உள்ளத்தில் மறைத்து வைத்திருக்கிறான்.இவன் வில்லங்கமாக எதையோ செய்ய முயற்சிப்பது போல் தெரிகிறது. ரகசிய தீ வை கப்பல் சென்றடையும் வரை இவனை கவனமாக கண்காணிப்பது உன்னுடையது. உன் மீது அவனுக்கு எந்த சந்தேகமும் வந்து விடக் கூடாது. எச்சரிக்கையாக இரு" என்று அவனுக்கு எச்சரிக்கை செய்தான் கருணாகரன்

"உத்தரவு தளபதி. அவன் இனி என்னுடைய பொறுப்பு" என்றான் அந்த வீரன்.

நீலன் திடும் மென ஆயுதங்கள் இருந்த நிலவறையை நோக்கி நடக்க தொடங்கினான்.
அதைப் பார்த்த கருணாகரன் " நண்பா!அங்கே எங்கே செல்கிறாய்? " என்றான்.

நடந்து கொண்டிருந்த நீலன் சட்டென்று நின்றான்.

"ஆயுதங்கள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்க்க போகிறேன். அந்த நஞ்சுண்டன் ஒரு விச பாம்பு. கப்பலை கடத்தி வந்த பின்பு ஆயுதங்களை ஏதாவது செய்து தொலைத்திருப்பானோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது" என்றான் நீலன்.

கருணாகரன் விசமத்தனமாக சிரித்தான்.

"பாம்பின் கால் பாம்பறியும் " என்று உதட்டுக்குள் முணுமுணுத்தான் அவன்.

"நானும் அவற்றை பார்க்க வரலாமா?" என்றான் கருணாகரன்.

"தாராளமாக .நாம் இருவரும் தொழில் முறை கூட்டாளிகள் .நமக்குள் ஓளிவு மறைவு இருப்பதை நான் விரும்பவில்லை" என்றான் நீலன்.

கருணாகரன் நீலனுடன் நடை பயணத்தில் இணைந்து கொண்டான். கருணாகரனின் பேச்சிலும் நடத்தையிலும் தன் மீதான சந்தேகம் எதிரொளிப்பதை அனுபவஸ்தனான நீல னால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

நிலவறையில் மற்ற சரக்குகளுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுத பெட்டிகளை எண்ணிப் பார்த்த நீலன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

"அப்பாடா! மலை நாட்டின் துறைமுகத்தில் நான் எத்தனை பெட்டிகளை ஏற்றினேனோ அத்துணை பெட்டிகளும் அப்படியே உள்ளன" என்றான் நீலன்.

" கேட்கிறேன் என்று தப்பாக நினைக்காதே நண்பா.! மலை நாட்டின் துறைமுகத்தில் எத்தனையோ கப்பல்கள் இருக்கும் போது ஆயுதங்களை ஏற்றி செல்ல உன்னுடைய கப்பலை குறிப்பாக உன்னை ஏன் தேர்ந்தெடுத்தான் மலைநாட்டு அரசன் என்று எனக்கு புரியவில்லை. உனக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியுமா?" என்றான் கருணாகரன்.

கருணாகரன் இப்படி ஒரு கிடுக்கிபிடி கேள்வியை கேட்பான் என்று எதிர்பார்க்காத கிழட்டு மாலுமி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றான். விரைவிலேயே தன்னை சுதாரித்து கொண்டவன்" அதற்கு என்னுடைய கடலோடிய அனுபவம் காரணமாக இருக்கலாம். எல்லா கடல்களிலும் பயணம் செய்த அனுபவம் எனக்கு மட்டும் தானே இருக்கிறது" என்று சமாளித்தான்.

"ஆமாம். நீ சொல்வதும் உண்மைதான். உன்னளவு அனுபவம் பெற்ற மாலுமிகள் இங்கே யார் இருக்கிறார்கள்? ஆமாம். அந்த பெட்டிகளில் இருப்பவை ?"

" பீரங்கிகள் தான். தனித்தனியாக அவைபெட்டியில் பிரித்து அடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை விரைவில் ஓன்றாக இணைத்து கொடிய ஆயுதமாக்கிவிடலாம். மற்ற பெட்டிகளில் இருப்பவை பீரங்கிகளில் பொருத்தி தொலைதூரத்திற்கு வீசி எறியக்கூடிய பீரங்கி குண்டுகள் . " என்ற நீலன் குண்டுகள் அடைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டிகளை பார்த்தான். அவன் முகம் திடிரென்று மாறியது. அவசர அவசரமாக அந்த பெட்டிகளை அணுகியவன் அவற்றில் ஓன்றை திறந்து பார்த்தான்.

பெட்டியின் உள்ளே குண்டுகள் நிறைய இடைவெளிகளில் இருந்தன. நிறைய வைக்கோல் போர்கள் வைக்கப்பட்டு அவற்றின் இடைவெளி நிரப்பப்பட்டிருந்தது.

அவற்றை பார்த்தவுடன் அவனது முகம் மலர்ந்தது.

"ஏன் நண்பா! ஆயுதங்களில் ஏதாவது பிரச்சனையா?" என்றான் கருணாகரன்.

"இல்லை. ஆயுதங்கள் எண்ணிக்கையில் சரியாக இருக்கிறதா என்று திறந்து பார்த்தேன். சரியாகவே இருக்கிறது" என்ற நீலன் பெட்டியை மூடினான்.

"சரி வா போகலாம். " என்ற நீலன் அவசர அவசரமாக நிலவறையிலிருந்து வெளியேறினான். அவனது விந்தையான நடவடிக்கைக்கு அர்த்தம் தெரியாமலேயே வெளியே வந்தான் கருணாகரன்

மேல் தளத்தில் நின்று கொண்டிருந்த நீலன் கடவுளுக்கு நன்றி சொல்லி கொண்டிருந்தான்.
"கடவுளே! எனக்கு ஏற்பட்ட இக் கட்டிலிருந்து என்னை எப்படியோ காப்பாற்றி விட்டாய். இனி இந்த பீரங்கிகள் சிகப்பு முகமூடிக்கு கிடைத்தாலும் அவை அவனுக்கு பயன் படப் போவதில்லை. இந்த பிரச்சனைகள் முடிந்து மலைநாட்டிற்கு திரும்பியதும் முதல் வேலையாக ஒரு ரத்தின மாலையை வாங்கி இந்த பீரங்கி குண்டுகளை வைக்கும் பெட்டியை தயாரித்த கொல்லனுக்கு பரிசாகத் தர வேண்டும். அவன் மட்டும் பெட்டிகளை மரத்தில் தயாரித்திருந்தால் என்னுடைய நிலைமை சிக்கலாகியிருக்கும் ., என்று தன் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான் நீலன்.

இனி ஆயுதங்களில் எந்த சில்மிசமும் செய்ய வேண்டியதில்லை கடவுளே செய்ய வேண்டியதை செய்து விட்டார் என்று சந்தோஷமடைந்தது அவனது மனம்.

அதன் பிறகு அவன் ஆயுதங்கள் இருந்த நிலவறை பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.

நீலனை கண்காணிக்க கருணாகரன் நியமித்த வீரன் நீலனையே கண்காணித்து கொண்டிருந்தான். அவனது நடத்தை மாற்றம் பற்றி வீரன் சொன்னதை கேட்டு ஓன்றும் புரியாமல் உட் கார்ந்திருந்தான் கருணாகரன்.

நீலனின் மகிழ்ச்சிக்கு காரணம் இருந்தது. மலை நாட்டிலிருந்து சில வாரங்கள் பயணம் செய்து தான் முத்தழகி கப்பல் ரகசிய தீவிற்கு வந்து சேர்ந்திருந்தது.

அந்த ஒரு வார காலமாக பெட்டியில் அடைபட்டிருந்த பீரங்கி குண்டுகள் அலைகளில் எழுச்சியாலும் காற்றிலும் பெட்டிக்குள்ளேயே உருண்டு கொண்டிருந்தன. பெட்டிகள் மரத்தில் செய்யப்பட்டிருந்தால் அவை உருண்டதால் தேய்மானம் அடைந்திருக்காது. மலைநாட்டு கொல்லன் பீரங்கி குண்டுகளை இரும்பு பெட்டியில் அடைத்து வைத்திருந்ததால் அவை அங்கும் இங்கும் உருண்டு உராய்வினால் தேய்மானம் அடைந்திருந்தன.

நீலன் பெட்டியை திறந்து குண்டுகளை பார்த்ததுமே நிலைமையை ஊகித்து கொண்டான். கண்டிப்பாக தேய்மானம் அடைந்த இந்த குண்டுகள் பீரங்கி குழாய்களில் இறுக்கமாக பொருந்தாது என்பதால் குண்டுகள் தொலைதூரத்திற்கு பயணிக்காது. டீரங்கிக்கு அருகிலேயே விழுந்து விடும் என்பதால் அவற்றால் பெருத்த சேதத்தை உருவாக்க முடியாது. அதனால் சிகப்பு முகமூடிக்கு இவை கிடைத்தாலும் இவற்றால் அவனுக்கு எந்த பலனுமில்லை என்பதாலேயே நீலன்வாளாவிருந்து விட்டான். எப்படியோ தன்னுடைய எண்ணம் நிறைவேறி விட்டது என்ற சந் துஷ்டியில் அமைதியாகிவிட்டான் அவன்.

தன் கண் முன்பே நடந்த விசயங்களை பார்த்தும் எதையும் யூகிக்க முடியாமல் இருந்தான் கருணாகரன்.கருணாகரன் சொன்னது போலவே ஆளை எதிரே வைத்து கொண்டே அவனை விலை பேசி விற்று விட்டான் நரன்.

கப்பல் ரகசிய தீவை நோக்கி முன்னேறி கொண்டிருந்தது.

வியாழன், 6 அக்டோபர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 37

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்

மலை நாட்டின் ஆளுகைக்குட்பட்ட ரகசிய தீவினை ஆட்சி செய்யும் மதிமாறனிடம் ஆயுதங்களை ஓப்படைக்கும் பணியை தலைமை ஏற்று வந்தவன் நீலன். அவனை நம்பித்தான் அவ்வளவு ஆயுதங்களை அனுப்பி வைத்திருந்தான் மலைநாட்டு அரசன். இங்கோ நீலன் தன்னுடைய கப்பலை கைப்பற்றிய பின்பு நிலைமை தலைகீழானது.

அதே ஆயுதங்களை மதி மாறனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் சிகப்பு முகமூடியிடம் ஒப்படைத்து விட்டு ஓரு உள்நாட்டு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் வள நாட்டின் ஒற்றனான கருணாகரனின் திட்டம். நாட்டில் அமைதி குலைந்து போர் சூழல் நிலவும் போது மார்க்கதரிசியின் புதையலை எடுத்து கொண்டு இங்கிருந்து தப்பித்து ஓடி விடலாம் என்பது தான் அவனது திட்டம்.

ஆயுதங்களை பொறுத்தவரை யாரிடம் அதை ஒப்படைப்பது என்பதில் இருவருமே நேர் எதிராக நின்று கொண்டிருந்தனர்.கருணாகரனே தன்னுடைய வாயால் தான் வள நாட்டின் ஒற்றன் என்பதை வெளிப்படுத்தி விட்டான். ஆனால் அழுத்தக்காரனான நீலன் தான் மலைநாட்டின் ஒற்றன் என்பதை முற்றாக மறைத்து விட்டான்.

"இந்த ஆயுதங்கள் ரகசிய தீவிற்கு அதாவது மதிமாறனுக்கு போய் சேர வேண்டியவை தானே?" திடிரென்று நீலன் எதிர்பாராத ஒரு கேள்வியை வீசினான் கருணாகரன்.

"ஆமாம். இவை மதிமாறனிடம் ஓப்படைக்க சொல்லி என் கப்பலில் ஏற்றப்பட்ட ஆயுதங்கள் தான் " என்றான் நீலன்.

"இவை மலை நாட்டு அரசுக்கு சொந்தமானவை தானே?"

""ஆமாம். அதிலென்ன சந்தேகம்?"

"அரசின் நம்பிக்கைக்குரிய மாலுமிகளிடம் தான் இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைப்பார்கள். குடிகாரனான உன்னிடம் இந்த பணியை எப்படி ஒப்படைத்தார்கள் என்று யோசிக்கிறேன்." என்றான் கருணாகரன்.

"நீ யோசிப்பதில் பிழையில்லை. ஆனால் இன்னொரு முறை என்னை குடிகாரன் என்று சொல்லி என் கோபத்திற்கு ஆளாகாதே! நான் ஒரு நேரம் போல் இன்னொரு நேரம் இருக்க மாட்டேன் என்பதை நினைவில் வைத்து கொண்டு என்னிடம் பேசு" என்று கோபத்துடன் பதில் சொன்னான் நீலன்.கருணாகரன் கேட்ட கேள்விக்கு பதில் கூற நீலனிடம் எந்த பதிலும் இல்லை என்பதால் தற்காலிகமாக பேச்சைமாற்ற கோபம் கொள்வது போல் நடித்தான் அவன்.

"கோபப்படாதே நண்பா. உன் மீதான உரிமையில் நான் சற்று வரம்பு மீறி பேசிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடு. நான் சொன்னது போல் உன் கப்பலை மீட்டு உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். உனக்கு துரோகம் செய்த உன்னுடைய முன்னாள் நண்பர்களையும் கைது செய்து விட்டேன். அடுத்ததாக நாம் என்ன செய்ய போகிறோம்?" என்று பதிலை நீலனிடம் வாங்கும் முயற்சியில் இறங்கினான் கருணாகரன்.

" என் கப்பலுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். எனக்கு ரகசிய தீவில் தான் வேண்டிய பணியாட்கள் கிடைப்பார்கள். அதனால் கப்பலை முதல் வேலையாக ரகசிய தீவிற்கு திருப்ப வேண்டும். இந்த கனமான ஆயுதங்களை காலி செய்து புதையலை ஏற்ற இடத்தை தயார் செய்ய வேண்டும். அந்த புதையலும் கூட ரகசிய தீவில் தானே இருக்கிறது?"

"ஆமாம். அங்கே தான் இருக்கிறது. முதலில் நாம் ஆயுதங்களை காலி செய்ய வேண்டும். பிறகு தான் புதையலை எடுக்கும் வேலையை தொடங்க வேண்டும்"

"இந்த ஆயுதங்களை என்ன செய்ய போகிறாய்? யாரிடம் இவற்றை ஓப்படைக்க போகிறாய்?" என்றான் நீலன் படபடக்கும் இதயத்துடன் .

" இவற்றை நான் கண்டிப்பாக மதிமாறனிடம் ஒப்படைக்க போவதில்லை. அவனிடம் ஒப்படைத்தால் சிகப்பு முகமூடியின் புரட்சி அடக்கப்பட்டு என்னால் புதையலை எடுக்க முடியாது. நிம்மதியில்லாத சூழல் நாட்டில் நிலவினால் மட்டுமே என்னால் மார்க்கதரிசியின் புதையலை மீட்க முடியும். அதற்கு ஆயுதங்களை நான் சிகப்பு முகமூடியிடம் தான் ஒப்படைக்க வேண்டும்"

"இந்த ஆயுதங்களை அவனிடம் இலவசமாகத் தான் தரப் போகிறாயா?"

"ஆமாம்"

"அவனை பிடிக்க வேட்டை நாயாக அலைபவன் நீ. உன்னை அவன் எப்படி நம்புவான்?" என்றான் நீலன்.

" அவன் நம்பும் ஒரு ஆசாமி நம் பக்கம் இருக்கிறான். அவன் இந்த காரியத்தை நமக்காக செய்து தருவான்"

"யார் அந்த ஆசாமி என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"

"தாராளமாக .அந்த ஆசாமியின் பெயர் மர்மயோகி"

"அவர் சன்னியாசியாயிற்றே?" என்றான் நீலன் அதிர்ச்சியுடன் .

"அது வெளி உலகிற்கு. அவர் உண்மையில் என்னுடைய ஆள்" என்றான் விசமபுன்னகையுடன் கருணாகரன்.

"அடக்கடவுளே! இந்த உலகத்தில் யாரைத்தான் நம்புவது என்று எனக்கு தெரியவில்லை"

"உன்னை மட்டும் நம்பு நண்பா." என்றான் கருணாகரன் கண்ணடித்தபடி.

" என் கப்பலை மீட்டு கொடுத்தது போல் நீ இன்னொரு சகாயமும் எனக்கு செய்ய வேண்டும்"

" என்னவென்று சொல் .நீ சொல்வதை நான் செய்து தான் தீர வேண்டும். இந்த புதையல் வள நாட்டின் எல்லைக்குள் செல்லும் வரை உன் உதவி எனக்கு தேவை."

"இந்த புதையலை நீ வள நாட்டிற்கா கொண்டு செல்ல போகிறாய்?" என்றான் அதிர்ச்சியுடன் நீலன்.இந்த செய்தி அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த புதையலை மலை நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தான் நீலன்.அந்த திட்டம் இப்போது நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயம் முதன்முதலாக அவனது மனதில் தோன்றியது.

"ஆமாம். அங்கே வந்த பிறகு நீ உன்னுடைய பங்கு பொருட்களை பெற்று கொண்டு உன் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் கிளம்பலாம்" என்றான் கருணாகரன் மனதிற்குள் வள நாட்டிற்குள் காலைவைத்ததும் நீலனின் கதையை முடித்துவிட வேண்டும் என்று நினைத்து கொண்டான் கருணாகரன்.

இரண்டு வஞ்சகர்களும் இரண்டு வெவ்வேறு திட்டங்களுடன் நண்பர்களாக நடித்து கொண்டிருந்தனர்.

"ஆமாம். இந்த கப்பலில் உள்ள ஆயுதங்கள் கத்தி, வாள், ஈட்டி போன்றவை தானே?" என்றான் கருணாகரன் ஆவலுடன் .

"அவையும் இருக்கின்றன. அவற்றை விட ஆபத்தான ஆயுதம் சிலவும் இருக்கின்றன. அவை பேரழிவை உருவாக்ககூடியவை. வலிமை மிக்க கோட்டை சுவர்களையே தகர்த்து மணல்மேடாக்கிவிடும் சக்தி படைத்தவை "

"நீ சொல்லும் ஆயுதத்தை நான் இதுவரை கேள்விப்பட்டது கூட இல்லையே?" என்றான் வியப்புடன் கருணாகரன்.

"அவை மேலை நாட்டு ஆயுதங்கள் .அவற்றின் பெயர் பீரங்கிகள். எனக்கும் அவற்றை இயக்க தெரியும். தொலைதூரத்தில் உள்ள இலக்குகளை குத்துமதிப்பாக தாக்கி பெரும் நாசத்தை ஏற்படுத்தகூடியவை"

"ஆஹா.அருமை. இந்த ஆயுதம் மட்டும் சிகப்பு முகமூடியிடம் கிடைத்து விட்டால் மதிமாறனின் கதை முடிந்துவிடும்"

"அவற்றை இலவசமாக அவனிடம் தர வேண்டாம். ஒரு நிபந்தனைக்கு அவன் ஒப்பு கொண்டால் ஆயுதங்களை அவனுக்கு இலவசமாக தருவதாக பேரம் பேசு"

"நிபந்தனையா? அப்படி என்ன நிபந்தனை விதிக்க சொல்கிறாய்?"

" சொல்கிறேன். அது ஒரு பழைய கணக்கு .அதை நான் தீர்த்து கொள்ள இதுவே சரியான நேரம் "

"புரியும்படியாக சொல் "

" என் கப்பலை அபகரித்தானே நஞ்சுண்டன் .அவன் இப்போது ஆயுதங்களை விற்க சிகப்பு முகமூடியிடம் போயிருப்பான். அவனை என்னிடம் ஒப்படைக்க சொல். அதுதான் என்னுடைய நிபந்தனை. "

"ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க பார்க்கிறாய்"

"நஞ்சுண்டனை நீ என்னிடம் ஓப்படைத்தால் எனக்கு புதையலில் எந்த பங்கும் வேண்டாம்" என்றான் நீலன் உறுதியான குரலில்.

"நீ உண்மையாகத் தான் சொல்கிறாயா?"

"ஆமாம். நான் சத்தியமாக சொல்கிறேன். எனக்கு நஞ்சுண்டன் கிடைத்து விட்டால் புதையலில் எந்த பங்கும் வேண்டாம்"

" நல்லது " என்றான் கருணாகரன் மகிழ்ச்சியுடன் .

நீலன் யோசிக்க ஆரம்பித்தான். ஆயுதங்களை சிகப்பு முகமூடியிடம் கருணாகரன் ஓப்படைத்து ஆட்சி மாற்றம் நடந்து விட்டால் மலைநாட்டு அரசனால் தான் தேசதுரோகி என்று தண்டிக்கப்படுவோம் என்பதை அவன் அறிவான்.

அந்த ஆயுதங்களை செயல் இழக்க செய்து விட்டால் அவை சிகப்பு முகமூடியிடம் கிடைத்தாலும் அவற்றை அவன் பயன்படுத்த முடியாதபடி செய்து விட்டால் தான் தப்பித்து விடலாம் என்று அவனுக்கு தோன்றியது.

பீரங்கிகளை எப்படி செயல் இழக்கக் செய்வது என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.