திங்கள், 26 செப்டம்பர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 36

கரிகாலனின் கதை

ஆதி துணிச்சலாக மனித மாமிசம் உண்ணும் காட்டிற்குள் நுழைய தயார் என்று எழுந்து நின்றதும் அங்கிருந்த அனைவருக்கும் ஒரு பாலகனுக்கு இருக்கும் தைரியம் நமக்கு இல்லையே என்ற வெட்கம் பிறந்தது. அனைவரும் விடுதலை பெற்ற மக்களாக வாழ வேண்டுமென்றால் ஆயுதங்கள் தேவை. ஆயுதங்கள் தேவை என்றால் அதற்கு ஈடாகப் புதையல் தேவை. அதனால் பார்த்திபனின் திட்டத்திற்கு உடன்படுவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.

அனைவரையும் ஏற இறங்க ஒரு முறை பார்த்த பார்த்திபன் "நண்பர்களே! நம் நாடு சுபிட்சம் பெற நமக்கு விடுதலை தேவை. அதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை.இன்று மதியம் நாம் இங்கிருந்து காட்டிற்கு கிளம்புகிறோம். கூட்டமாக சென்று அடுத்தவர்களின் கவனத்தை திசை திருப்பாமல் சிறு சிறு குழவாகப் பிரிந்து நாம் நம்முடைய பயணத்தை தொடங்குவோம். கவனம் . ஆயுதங்களை மற்றவர்கள் பார்வையில் படாமல் மறைத்து எடுத்து செல்ல வேண்டும். காட்டை அடைந்ததும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டு விடலாம். இப்போது பயணத்திற்கான ஏற்பாடுகளை தயார் செய்வோம். வீட்டில் தகவல் சொல்லிவிட்டு விடைபெற்று வர நினைப்பவர்கள் உடனே கிளம்புங்கள். கவனம் வீட்டில் இருப்பவர்களிடம் மறந்து கூட காட்டிற்கு செல்கிறோம் என்று கூறி தேவையில்லாத பயத்தை உருவாக்கி விடாதீர்கள்." என்றான்.

அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். வில்லவன் பார்த்திபனை தனியாக அழைத்து சென்றான்.

"பார்த்திபா. இந்த நஞ்சுண்டன் இன்னமும் நம்மிடம் ஆயுதங்கள் எதையும் ஒப்படைக்க வில்லை. இவனை நம்பி நாம் எப்படி புதையலை ஒப்படைப்பது?" என்றான்.

"நல்ல கேள்வி தான் நண்பா. நாம் புதையலைக் கண்டு பிடித்த பின்பு அவற்றை நம்முடைய பாதுகாப்பில் வைத்திருக்க போகிறோம். அவன் நம்மிடம் ஆயுதங்களை ஓப்படைத்த பின்புதான் நாம் புதையலை திரும்ப தரப் போகிறோம்" என்றான் பார்த்திபன்.

"அதுதான் சரி. இவன் ஒரு துரோகி. நீலன் என்னும் மாலுமியை ஏமாற்றி அவனுடைய கப்பலை கடத்தி வந்து விட்டான்.இவனை முழுதாக நம்புவது அவ்வளவு சரியல்ல."

"நானும் இவனைப் பற்றி கேள்விப்பட்டேன். கேள்விப்பட்ட எந்த விசயங்களும் நல்லதாக இல்லை. அதனால் நஞ்சுண்டனிடம் நான் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறேன். சரி.வா. நாம் போய் வீட்டில் இருப்பவர்களிடம் விடை பெற்று வருவோம்"

"நான் என் வீட்டில் என் மனைவியிடம் விடை பெற்று வந்தால் போதும். அதற்கு நான் மட்டும் வீட்டிற்கு சென்றால் போதும். நீ ஏன் அங்கே வருகிறாய்?" என்றான் வில்லவன்.

"ஏன் நான் வரக்கூடாதா?" என்றான் பார்த்திபன் சங்கோஜ த்துடன்.

சந்திரவதனாவை பார்க்க அவனது இதயம் துடித்து கொண்டிருந்தது. அவளை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று பார்த்திபன் துடியாக துடித்து கொண்டிருந்தான். அவனது நோக்கத்தை புரிந்து கொண்டு விட்ட வில்லவன் அவனிடம் சற்று நேரம் விளையாடி பார்க்க தீர்மானித்தான்.

"வரலாம். ஆனால் நீ விடை பெற்று வருமளவிற்கு அங்கே யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே?" என்றான் வில்லவன் குறுநகையுடன் .

"ஏன் சந்திரவதனா இல்லையா? அவளை நான் தானே மதிமாறனிடமிருந்து காப்பாற்றி மீட்டு வந்தேன் ? அந்த விதத்தில் நான் அவளுடைய காப்பாளன் அல்லவா? நான் அவளிடம் விடை பெற்றுக் கொள்வதுதானே முறை?" என்றான் சற்றே வெட்கம் கலந்த சிரிப்புடன்.

"அடடே! நேற்று வரை காரியத்தில் தீரராக இருந்த தலைவர் இப்போது பேச்சிலும் வல்லவராகி விட்டார். எல்லாம் காதல் படுத்தும் பாடு" என்று சிரித்தான் வில்லவன்.

" என்ன? இது தான் காதலா?" என்றான் பார்த்திபன் எதுவும் அறியாதவன் போல.

"அடேயப்பா என்ன ஒரு நடிப்பு.? எப்படித் தான் இப்படி அப்பாவி போல் முகத்தை வைத்து கொள்கிறாயோ? இருக்கட்டும். அந்த பெண்ணிடம் உன் காதலை சொல்லிவிட்டாயா?"

"இல்லை.இன்னமும் சொல்லவில்லை."

"அந்த பெண்ணிற்கு உன் மீது ஏதாவது நாட்டம் இருப்பது போல் தோன்றுகிறதா?"

" அவள் வாய் திறந்து சொல்லாவிட்டாலும் கூட அவள் பார்வை என் மீது அவளுக்கு ஈர்ப்பு இருப்பதை சொல்கிறது."

"குறிப்பால் கண்டுபிடித்து விட்டாய் போலிருக்கிறது" என்று சிரித்தான் வில்லவன்.

" விளையாட்டு பேச்சு போதும். நாம் கிளம்பலாம்" என்றபடி குதிரையில் தாவி அமர்ந்தான் பார்த்திபன்.

"இரு .நானும் வருகிறேன்" என்றபடி இன்னொரு குதிரையில் தாவி ஏறினான் வில்லவன்.

சில விநாடிகளுக்குப் பிறகு இரண்டு குதிரைகளும் அங்கிருந்து சிட்டாகப் பறந்தன.

இருவரும் குதிரையில் புறப்படுவதை கவனித்து கொண்டிருந்தான் நஞ்சுண்டன் . தான் திட்டமிட்டபடியே ஒவ்வொரு காரியமும் இம்மி பிசகாமல் நடந்து வருவதை எண்ணி மனதிற்குள் சிரித்து கொண்டான் அவன். ஆயுதங்களை கை மாற்றிவிட்டு புதையலை எடுத்து கொண்டு முத்தழகி கப்பலோடு கண் காணாத இடத்திற்கு முக்கியமாக நீலனின் காலடிபடாத இடத்திற்கு சென்று விட வேண்டும் என்று நினைத்தான் அவன்.

நீலன் தன்னுடைய கப்பலை மீண்டும் அடைந்துவிட்டதை அவன் இன்னமும் அறியவில்லை.

வில்லவனின் வீட்டை அடைந்த இருவரும் குதிரையிலிருந்து இறங்கினர்.

"நான் என் மனைவியை சந்திக்க போகிறேன். நீ ? " என்றான் கேள்விகுறியோடு வில்லவன்.

"நான் சந்திரவதனாவை சந்திக்க செல்கிறேன்" என்ற பார்த்திபன் சந்திரவதனா இருந்த அறையை நோக்கி நடந்தான்.

சந்திரவதனா அவளுடைய அறையில் கலைந்த ஓவியம் போல் படுக்கையில் கிடந்தாள். அரவம் கேட்டு எழுந்து உட்கார்ந்தவள் பார்த்திபனை பார்த்ததும் "உள்ளே வாருங்கள்" என்றாள்.

அவளது அழுது சிவந்த கண்களை பார்த்தபடி தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான் பார்த்திபன்.

"சந்திரவதனா "

"சொல்லுங்கள்"

"உன்னுடைய ஆசையை நான் நிறைவேற்றி வைத்துவிட்டேன். இன்னும் என்ன மனக்குறை?ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறாய்?" என்றான் பார்த்திபன் காலியான நாற்காலி ஓன்றில் உட்கார்ந்தபடி.

"எனக்கு துணையாக இதுவரை எனக்கு அண்ணன் தம்பியாக பாதுகாப்பு தந்தவர்கள் என்னுடைய கலை குழுவினர் அவர்கள் நிலை என்னவானது என்று இன்னமும் தெரியவில்லை. அவர்களை நினைத்துத் தான் அழுகிறேன்."

"கவலைப்படாதே சந்திரவதனா! அவர்கள் என் ஆட்களின் கண்களில் படாமல் இந்த தீவிலிருந்து வெளியேறியிருக்க முடியாது. இன்னும் சில நாட்களில் அவர்களை நான் கண்டுபிடிக்கிறேன். இப்போது முக்கியமான வேலை ஒன்று என்னை அழைக்கிறது. உன்னிடம் சொல்லிவிட்டு போகவே நான் இங்கு வந்தேன்" என்ற பார்த்திபன் நடந்த சம்பவங்கள் முழுதையும் அவளிடம் எடுத்து கூறினான்.

"நீங்கள் அந்த வனத்திற்குள் போய்த்தான் தீர வேண்டுமா?" என்றாள் சந்திரவதனா கண்களில் ஏக்கத்துடன் .

"நாடு விடுதலை பெற இதை தவிர வேறு வழியில்லை. நான் சென்று வருகிறேன் சந்திரவதனா "

" எச்சரிக்கையாக போய் வாருங்கள்.உங்கள் வருகைக்காக இங்கே ஒரு பேதை பெண் காத்திருக்கிறாள் என்பதை மறந்து விடாதீர்கள். எனக்கு துணையாக இந்த உலகத்தில் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை."

"கவலைப்படாதே சந்திரவதனா! ேபான காரியத்தில் வெற்றியுடன் திரும்ப வருகிறேன்.அதுவரை நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியே செல்வதை முடிந்த வரை நீ தவிர்க்க வேண்டும்.மதிமாறன் உன்னையும் என்னையும் பிடிக்க வேட்டை நாய் போல சுற்றி கொண்டிருக்கிறான். அவன் பிடியில் நாம் அகப்பட்டு விடக் கூடாது" என்றான் கவலையுடன் பார்த்திபன்.

"நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன். என்னைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் பத்திரமாக போய் வாருங்கள்" என்றாள் சந்திரவதனா.

" போய் வருகிறேன்." என்ற பார்த்திபன் அங்கிருந்து வெளியேறினான்.

அவனுக்காக கூடத்தில் காத்துக் கொண்டிருந்தான் வில்லவன்.

"விடைபெறும் வைபவம் நல்லபடியாக நடந்து முடிந்து விட்டதா?" என்றான் வில்லவன் குறுஞ் சிரிப்புடன்.

"அங்கே எப்படி நடந்ததோ அதே போல் தான் இங்கேயும் நடந்தது. பெண்கள் எல்லா இடங்களிலும் பெண்களாகவே இருக்கிறார்கள்"

"சரி நாம் கிளம்பலாம். இப்போது நாம் காட்டிற்கு செல்ல போவதையும், நஞ்சுண்டனுக்கும் நமக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை பற்றி நாம் முக்கியமான ஒருவருக்கு தகவல் சொல்லியாக வேண்டும்"

"யார் அது?"

"மர்மயோகி" வில்லவனின் உச்சரிப்பை பார்த்த பார்த்திபன் சிறிது நேரம் யோசனையில் மூழ்கினான்.

"நாம் அவரிடம் இந்த விசயத்தை சொல்ல போவதில்லை" என்றான் தெளிவான குரலில் பார்த்திபன்.

"பார்த்தி பா! நீ என்ன சொல்கிறாய்?" என்றான் வில்லவன். எது செய்தாலும் துறவியிடம் கேட்டு விட்டே செய்யும் இயல்பு கொண்ட பார்த்திபன் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டது அவனுக்கு வினோதமாக இருந்தது.

"ஆமாம். நீ நினைப்பது சரிதான். இதுவரை நான் யோகியின் ஆலோசனையை கேட்டே நடந்து வந்தேன். இந்த முறை அதை மீற நினைக்கிறேன். காரணம் நமக்கு இருக்கும் ஒரே வழி இதுதான். இதையும் அவர் தலையிட்டு தடுத்து விட்டால் நமக்கு வேறு வழியே இல்லை. திறந்திருக்கும் ஓரே கதவையும் இழுத்து சாத்த நான் தயாரில்லை"

" உன் அண்ணன் கரிகாலனும் இதே போல் தான் யோகியின் பேச்சை கேட்காமல் காரியம் செய்தான். விளைவு. அவன் உயிர் போனது தான் மிச்சம் "

"நான் கரிகாலன் அல்ல. நான் பார்த்திபன். அவ்வளவு எளிதில் என் உயிரை பறித்து விட முடியாது" என்றான் பார்த்திபன்.

"போகும் காரியம் ஜெயமானால் சரிதான். சரி நாம் கிளம்புவோம்" என்றான் வில்லவன்.

இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.

அவர்கள் பேசுவதை மறைந்து நின்று கேட்டு கொண்டிருந்த சந்திரவதனா வில்லவனின் மனைவி பார்வதியை நெருங்கினாள்.

"அக்கா! எனக்கு ஒரு சந்தேகம்.திர்த்து வைப்பீர்களா?"

"சொல்சந்திரவதனா ? என்ன சந்தேகம் உனக்கு? என்றாள் பார்வதி.

"யார் இந்த கரிகாலன் ? " என்றாள் சந்திரவதனா.

"கரிகாலன்.பார்த்திபனின் தமையன் .இந்த புரட்சி கும்பலுக்கு விதை போட்டவன். ஆளும் தரப்பிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவன். அவனது கதையை முழுதாக சொன்னால் தான் உனக்கு புரியும்" என்ற பார்வதி கரிகாலனின் கதையை சொல்ல துவங்கினாள்.

ரகசிய தீவு

ரகசிய தீவு
அத்தியாயம் 35

இரண்டு உளவாளிகள்

ஆதித்தன் யவ னனை கூர்மையாக பார்த்தான். "யோகி என்பவர் யார்?" அவனிடமிருந்து புறப்பட்டது கேள்வி ஓன்று.

"நான் அந்த ஆசாமியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ரகசிய தீவில் இருக்கும் மக்களுக்கு ஆறுதல் தரும் ஆன்மீகப் பெரியவர் என்று கேள்வி.ஆனால் அவர் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. என்னை பொறுத்தவரை அவர் அரசின் எந்த அதிகார மட்டத்திற்கும் அணுக்கமாக இருந்தது கிடையாது" என்றான் யவனன்யோசனையுடன் .

"எங்கள் குழுவும் கூட அவரது ஆசிரமத்தில் ஓரு கலை நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம். எங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே சன்மானத்தை அள்ளி கொடுத்திருக்கிறார். மக்கள் மத்தியில் அவருக்கு மிகவும் நல்ல பெயர் இருக்கிறது. ஆனால் அவர் ஏன் இந்த காட்டுவாசிகளுக்கு உணவு கொடுத்து போஷிக்க வேண்டும் என்பது தான் புரியவில்லை" என்றான் கடோத்கஜன்.

"அவரின் நடத்தை எனக்கு புதிராக இருக்கிறது. நாம் முதலில் இவர்களை கட்டிப் போடுவோம். பசியோடு இருக்கும் நம் ஆட்களுக்கு முதலில் உணவு கொடுப்போம். அதன் பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்போம்" என்றான் ஆதித்தன்.

" அப்படியே செய்யலாம் .இவர்களை நாம் எங்கே அடைத்து வைப்பது?" என்றான் யவனன்.

"அதை நான் சொல்கிறேன். இங்கே உணவு கொண்டு வந்தவர்களில் யார் யாருக்கெல்லாம் கடலில் படகு செலுத்தும் கலை தெரியும்?" என்று அடுத்த கேள்வியை வீசினான் ஆதித்தன். அவர்கள் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டு உதடுகளை பிதுக்கினார்கள்.

"எங்களில் யாருக்கும் கலம் செலுத்தும் அனுபவம் இல்லை.கலத்தில் பயணம் செய்த அனுபவம் மட்டுமே சிலருக்கு இருக்கிறது" என்றான் தலைவன்.

" நல்லது. அப்படியானால் நாம் இவர்களை நம் கப்பலான கழுகில் அடைத்து வைப்போம். அது நங்கூரம் பாய்ச்சப்பட்டு நிற்பதால் இவர்களால் அதை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட முடியாது" என்றான் ஆதித்தன்.

ஆதித்தனின் யோசனை உடனடியாக அமல்படுத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் காலியாக இருந்த கழுகினுள் ஏற்றப்பட்டு அதன் உள்ளறையில் அடைக்கப்பட்டனர்.

"சரி நாம் கிளம்பலாம்.இந்த வண்டிகளை ஆளுக்கு ஓன்றாக எடுத்து கொண்டு நாம் நம் தோழர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம். நாம் கிளம்பி வந்து வெகு நேரமாகிவிட்டது. அவர்கள் பசியோடு நமக்காக காத்திருப்பார்கள்" என்றான் யவனன்.

"நாம் புறப்படலாம்" என்றான் ஆதித்தன்.

மூவரும் ஆளுக்கு ஓரு வண்டியில் ஏறிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். அவற்றில் பூட்டப்பட்டிருந்த கால்நடைகள் தங்களை புதிய மனிதர்கள் வழி நடத்துவதை பார்த்து முதலில் மிரண்டாலும் போகப் போக அவர்களின் கட்டளைக்கு அடிபணிய துவங்கி விட்டன.

கையில் ஆயுதங்களுடன் கிளம்பி சென்ற மூவரும் திரும்பி வரும்போது வாகனங்களில் உணவு பொருட்களுடன் வருவதைப் பார்த்த மற்ற நண்பர்கள் ஆச்சர்யமும், வியப்பும் அடைந்தனர். இந்த அடர்ந்த வனத்தில் இவர்களுக்கு எப்படி இவ்வளவு சமைக்கப்பட்ட உணவு பொருட்களும் வண்டிகளும் கிடைத்தன என்று தங்களுக்குள் கிசுகிசுப்பாக பேசி கொள்ள துவங்கினர்.

அவர்களின் வியப்பையும், திகைப்பையும் புரிந்து கொண்டு விட்ட ஆதித்தன் தாங்கள் உணவு தேடி கிளம்பிய விநாடியிலிருந்து நடந்த சம்பவங்களை விரிவாக எடுத்து கூறினான்.

"நண்பர்களே! நீங்கள் அனைவரும் மிகுந்த பசியுடன் இருப்பீர்கள். முதலில் நாங்கள் கொண்டு வந்த உணவினை உண்ணுங்கள். பிறகு என்ன செய்யலாம் என்பதை யோசிப்போம்!" என்றான் கடோத்கஜன்.

அவர்கள் கும்பலாக அமர்ந்து உணவை பகிர்ந்து உண்ண தொடங்கினர். ஆதித்தன் மட்டும் அவர்களுடன் அமராமல் நின்று கொண்டிருந்தான்.

"ஆதித்தா! நீ மட்டும் ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்?வா வந்து சாப்பிடு" என்றான் யவனன்.

" உன் அழைப்பிற்கு நன்றி நண்பா. உணவு போக வேண்டிய இடத்திற்கு போய் சேராததால் நம்முடைய நண்பர்கள் பசி தாங்க இயலாமல் உணவைதேடி இந்நேரம் கிளம்பி இருப்பார்கள். அதனால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்"

"நல்ல எண்ணம்தான். ஆனால் அதற்கு எந்த தேவையும் இங்கே இல்லை. என்னுடைய ஹேர்குலஸ் இந்த பகுதியை சுற்றி வட்டமிட்டு பறந்து கொண்டிருக்கிறது. அதன் கூரிய பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாது.அப்படி ஏதாவது சிறு அசைவு ஏற்பட்டாலும் ஹேர்குலஸ் நம்மை எச்சரிக்கை செய்து விடும்" என்று சிரித்தான் யவனன்.

"அதுவும் சரிதான்." என்ற ஆதித்தன் உணவருந்த உட்கார்ந்தான்.

அனைவரும் உணவருந்தி விட்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தனர். அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான் ஆதித்தன்.

அவனது சிந்தனையை கலைத்தது ேஹர்குல சின் கீச்சொலி.

அதுவரை வானத்தில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த அந்த பறவை திடிரென்று வழக்கத்திற்கு மாறாக தரையில் வந்தமர்ந்தது.

அதை பார்த்த யவனனின் முகம் மாறியது.

" நம்மை ஆபத்து நெருங்கி விட்டது" என்றான் யவனன். கடோத்கஜன் குழவினரை எச்சரிக்கை செய்தான். 

அவர்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து கொண்டு எதிரிகளை வரவேற்க தயாரானார்கள்.

அவர்களை சுற்றி இருந்த காட்டு பகுதியில் மண்டியிருந்த  புதர் செடிகளின் நடுவே அசைவு ஏற்பட ஆரம்பித்தது.

அனைவரும் விழிப்புடன் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தனர்.

xxxx

தன்னுடைய முத்தழகி கப்பல் தனக்கு திரும்ப கிடைத்து விட்டதில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான் நீலன்.அதற்கு உதவி செய்த கருணாகரனை கட்டி தழுவி தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்த நீலன் அடுத்ததாக ஓடிச் சென்றது கப்பலின் சுக்கானை பார்த்து தான். நீண்ட நாள்களுக்கு பிறகு தனக்கு பழக்கமான சுக்கானை தொட்டு தடவினான் நீலன்.அவனது உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் தத்தளித்தான் அவன்.

முத்தழகியின் வடிவமைப்பை மாற்றியமைத்திருந்த நஞ்சுண்டனின் வேலையை மனதார சபித்த அவன் "பொறுகண்ணே! விரைவிலேயே உன்னுடைய அழகான தோற்றத்தை நான் உனக்கு திரும்ப பெற்று தருகிறேன். அந்த அசிங்கம் பிடித்த பயல் உன்னுடைய அழகை கெடுத்து விட்டான். விரைவிலேயே அவன் அதற்கான தண்டனையை பெறுவான். அவன் இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவனை தேடிப் பிடித்து மென்னியை உடைக்காமல் விடமாட்டேன்" என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டான்.

தனக்கு துரோகம் செய்து விட்டு நஞ்சுண்டனுடன் இணைந்து கொண்ட தன்னுடைய முன்னாள் நண்பர்களை பார்த்து கோபத்துடன் பேசவும் அவன் மறக்கவில்லை.

"எனக்கு துரோகம் செய்த நண்பர்களே! சீ உங்களை போன்ற துரோகிகளை நண்பர்கள் என்று சொல்வதே பெரும் தவறு. தனிமை தீவில் செத்து ஒழிந்து போவான் இந்த நீலன் என்று நினைத்தீர்களோ? நான் நீலன். நான் உயிரோடு இருக்க யாரையும் கொன்று தின்ன தயங்காத நரன். அவ்வளவு எளிதில் நான் மரணத்திற்கு என்னை ஓப்புக் கொடுத்து விட மாட்டேன். எனக்கு துரோகம் செய்து விட்டு நஞ்சுண்டனுடன் சேர்ந்து கொண்டு நீங்கள் அடைந்த பலன் என்ன ?இதோ இந்த கப்பல் கரையை அடைந்ததும் நீங்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்பட போகிறீர்கள். துரோகம் வீழ்ந்தது தான் வரலாறு. நீங்கள் துரோகம் செய்து தனியாக விடப்பட்ட நான் இப்போது நன்றாகத்தான் இருக்கிறேன். இதோ நான் இழந்த என் கப்பல் திரும்ப கிடைத்து விட்டது. கடவுளின் அனுக்கிரகத்தால் நஞ்சுண்டன் உங்களை ஏமாற்றி ஓளித்து வைத்த செல்வம் உங்கள் யாருக்கும் கிடைக்காமல் எனக்கு கிடைத்த போதே உங்களுக்கு தெரிய வேண்டாமா கடவுளின் ஆசியை முழுமையாக பெற்றவன் நான் என்று " என்று கோபத்தில் இறைந்தான் நீலன்.

"எங்களை மன்னித்து விடு நீலா.நஞ்சுண்டனுடன் சேர்ந்து கொண்டு நாங்கள் உனக்கு துரோகம் செய்தது தவறு தான் " என்றான் அவனது முன்னாள் சகாக்களில் ஒருவன்.

"நீங்கள் அனைவரும் சாவகாசமாக வருந்த நீண்ட சிறைவாசம் காத்திருக்கிறது. அதில் உங்களுடன் கலந்து கொள்ள விரைவிலேயே நஞ்சுண்டனும் வந்து சேருவான். கவலைப்படாதீர்கள்" என்றான் நீலன் குரோதத்துடன் .

நீலனின் மகிழ்ச்சியையும், கோபத்தையும் கவனித்து கொண்டிருந்த கருணாகரன் "கவலைப்படாதே நீலா.! உன்னுடைய கனவை நான் நிறைவேற்றி வைத்துவிட்டேன். கை மாறாக நீ என்னுடைய கனவை நீ நிறைவேற்ற வேண்டும்."

" என்ன செய்ய வேண்டும் கருணாகரா. என் கையை விட்டு போனவற்றை திரும்ப என்னிடம் கொண்டு வந்து சேர்த்தவன் நீ. உன் கனவு என்னவென்று சொல் அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்" என்றான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நீலன்.

"எனக்கு மார்க்க தரிசியின் தங்கம் தேவை "

"என் கப்பல் தான் எனக்கு திரும்ப கிடைத்து விட்டதே? இனியும் ஏன் தாமதிக்க வேண்டும்? அந்த தங்கம் எங்கிருக்கிறது என்று சொல். அதை எடுப்போம்."

அது இருக்கும் இடம் ரகசியமானது. எனக்கு மட்டும் தான் அந்த இடம் தெரியும். நீ கப்பலை ரகசிய தீவை நோக்கி செலுத்து. அங்கே இருந்து நாம் மார்க்கதரிசியின் தங்கத்தை எடுப்போம்"

"சரி. உன் திட்டத்திற்கு நான் சம்மதிக்கிேறன். நீ ரகசிய தீவின் பிரதான தளபதி. அந்த தங்கத்தை மதி மாறனிடம் ஓப்படைத்து நல்ல பெயர் எடுக்காமல் அதை எடுத்து கொண்டு தப்பி ஓட திட்டமிடுகிறாய். அப்படி எங்கே தான் அந்த புதையலை கொண்டு சேர்க்க விரும்புகிறாய்?"

" என் தாய் நாட்டிற்கு அதை கொண்டு செல்ல விரும்புகிறேன்" என்றான் கருணாகரன் கண்களின் கனவுடன் .

"உன்னுடைய தாய் நாடா? அப்படியானால் ரகசிய தீவு உன்னுடைய தாய் நாடு இல்லையா?"

"இல்லை"

"அப்படியானால் உன்னுடைய தாய் நாடு?"

"வள நாடு. அந்த தங்கத்தை நான் அங்கு தான் கொண்டு செல்ல விரும்புகிறேன்" என்றான் கருணாகரன்

" காரணம்?"

"நான் அந்த நாட்டின் ஒற்றன்" என்றான் கருணாகரன்

மலைநாட்டு ஓற்றனான நீலனும் வள நாட்டின் ஒற்றனான நீலனும் எதிரெதிராக நின்று கொண்டிருந்தனர்.

வியாழன், 22 செப்டம்பர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 34

பேயின் அதிர்ஷ்டம்

இரவு வெகு வேகமாக பூமியை நெருங்கி கொண்டிருந்தது. கடலில் நங்கூரம் பாய்ச்சப்பட்டு நின்று கொண்டிருந்தது முத்தழகி கப்பல். அதன் தலைவனான நஞ்சுண்டன் ஆயுதங்களை விற்பதற்காக ரகசிய தீவிற்கு சென்று ஒரு வாரமாகிவிட்டது.

அவனிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் கப்பலில் இருந்தவர்களுக்கு வந்து சேரவில்லை. தான் ஒரு வார காலத்திற்குள் ஆயுதங்களை வாங்க கூடிய சிகப்பு முகமூடியை சந்தித்து விட்டு வருவதாக அவன் ஏற்கனவே தன்னுடைய சகாக்களிடம் சொல்லிவிட்டு சென்றிருந்தான். அவன் திரும்ப வரும் வரை கப்பலை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பை துணை மீகாமகனாகிய முத்துவேலனிடம் ஓப்படைத்து விட்டு சென்றிருந்தான்.

இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட முத்து வேலன் கடந்த ஓரு வாரமாக நெருப்பாற்றில் நீந்தி கொண்டிருந்தான். நஞ்சுண்டன் தலைவனாக இருந்தவரை அவனுக்கு பணிந்து நடந்து கொண்டிருந்த அனைவரும் தங்களில் ஒருவனான முத்து வேலன் தலைவரான தை விரும்பவேயில்லை. அதனால் யாரும் அவனுக்கு கட்டுப்பட மறுத்து அவரவர் இஷ்டத்திற்கு தறிகெட்டு காரியங்களை செய்து கொண்டிருந்தனர். எந்த வேலையும் இல்லாமல் சோம்பிகிடந்தவர்களுக்கு விளையாட்டு மட்டுமே ஒரே பொழுது போக்காக இருந்தது.

இலக்கு இல்லாத இந்த தங்குதலும் வெறுமையும், வீட்டை பிரிந்த விரக்தியும் அவர்களை மனச்சோர்வுக்கு ஆளாக்கிவிட்டிருந்தது. சாதாரண வாய் வார்த்தைகள் கூட வேறு மாதிரியாக புரிந்து கொள்ளப்பட்டு அவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் தலையிட்டு தடுத்து அவர்களிடையே ஓற்றுமையை ஏற்படுத்த படாத பாடுபட்டுக் கொண்டிருந்தான் முத்துவேலன்.

அவனது திறமை முழுவதும் ஆட்களை சமாதானம் செய்வதிலேயே கழிந்து கொண்டிருந்தது. எப்போதடா நஞ்சுண்டன் திரும்ப கப்பலுக்கு வந்து சேர்வான் என்று அனைவரும் காத்து கொண்டிருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பிற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது கப்பலில் இருந்த சரக்கை விற்று நஞ்சுண்டன் வாங்கி வைத்திருந்த பொற்காசுகள். அவற்றை அவன் எங்கே பதுக்கி வைத்திருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. அதை நஞ்சுண்டன் வந்து தான் பிரித்து அவரவர் பங்கை கொடுக்க வேண்டும். பலே திருடனான நஞ்சுண்டன் அதை கப்பலில் வைத்து விட்டு சென்றால் தான் நீலனை ஏமாற்றி முத்தழகியை கிளப்பிக்கொண்டு வந்தது போல் தன்னுடைய ஆட்களில் யாராவது தன்னை ஏமாற்றி விட்டு கப்பலை கிளப்பிக்கொண்டு போய் விட்டால் என்ன செய்வது என்று அது இருக்கும் இடத்தை ரகசியமாக வைத்திருந்தான். திறமை குறைவான குள்ள நரி தந்திரங்கள் தெரியாத முத்துவேலனை அதனால் தான் தனக்கு பின்னாலான தலைவராக நியமித்து வைத்திருந்தான்.

கப்பலில் இருந்த ஓவ்வொருவருமே அடுத்த நபருக்கு தெரியாமல் அந்த பொற்காசுகளை தேடிக் கொண்டிருந்தனர். எல்லோருமே கப்பலை அங்குலம் அங்குலமாக சல்லடை போட்டு தேடியும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு கனமுள்ள மூட்டையை நஞ்சுண்டன் யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்றிருக்க முடியாது. அது கண்டிப்பாக கப்பலில் தான் இருக்க வேண்டும். ஆனால் அது எங்கே என்பது தான் யாருக்கும் தெரியவில்லை.

ஆறாம் நாள் இரவு கப்பல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. நிலவு உச்சிக்கு வந்து ஜொலித்து கொண்டிருந்தது. கப்பலில் தூங்குபவர்களின் குறட்டை ஒலியை அலைகளின் ஓசை அமுக்கி கொண்டிருந்தது.

முத்து வேலன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அவனது மனம் ஏனோ தன்னுடைய பழைய எஜமானன் நீலனை நினைத்து ஏங்கி கொண்டிருந்தது. குடிபழக்கத்தை தவிர நீலனிடம் வேறு எந்த குறைகளும் இல்லை. நல்ல மனிதன் தான். கடலில் எத்தகைய இக்கட்டு வந்தாலும் சமாளிக்கும் திறமை பெற்றவன். பணத்திற்கு ஆசைப்பட்டு நஞ்சுண்டனுடன் சேர்ந்து கொண்டு நீலனுக்கு துரோகம் செய்து விட்டோமோ என்று அவன் மனதிற்குள் குமுறி கொண்டிருந்தான்.

நீலன் கல்லறைதீவில் பசியால் வாடி எப்போதோ இறந்து போயிருப்பான். இனி அவனை நினைத்து பரிதாபப் பட்டோ வருத்தப்பட்டோ பயன் எதுவும் இல்லை என்றது அவனது மனசாட்சி.

புரண்டு படுத்த முத்துவேலனின் நாசியில் திடிரென்று மல்லிகை பூ வாடை அடிக்க ஆரம்பித்தது. இந்த நள்ளிரவு நேரத்தில் எப்படி மல்லிகைமணம்வீசுகிறது என்று நினைத்தவன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.

தன் கண்களை துடைத்து கொண்டு நிமிர்ந்தவனின் காதில் தெளிவாக விழுந்தது அந்த கொலுசு சத்தம்.

ஜல்! ஜல்! என்று சீரான தாளகதியில் கேட்க ஆரம்பித்தது அந்த கொலுசு சத்தம். யாரோ மேல் தளத்தில் நடமாடுவதை உணர்ந்த முத்து வேலன் அருகில் இருந்த தீப்பந்தத்தை கையில் எடுத்து கொண்டு மேல் தளத்தை நோக்கி நடந்தான்.

அவன் மேல் தளத்தை அடைந்த போது அங்கே அடர்ந்த இருள் தான் அவனை வரவேற்றது.

மேல் தளத்தில் யாரையும் காணாமல் ஏமாற்றத்துடன் விழித்தான் அவன்.

தீப்பந்த வெளிச்சத்தில் அவனது பின்புறம் ஒரு நிழல் வேகமாக கடந்து செல்வதை அவனால் உணர முடிந்தது. அவன் மனதை பயம் ஆக்ரமிக்க ஆரம்பித்தது.மெல்லிய வியர்வை கோடு ஓன்று அவனது நெற்றியில் உற்பத்தியானது.

" யார்? யாரது?" என்றான் முத்து வேலன் பலவீனமான குரலில். அவன் குரல் அவனது காதுகளையே எட்டவில்லை.

"நான் தான் " என்றது ஒரு கரகரத்த குரல்.

அந்த குரல் அவனுக்கு ஏற்கனவே பரிச்சயமான குரல். அவன் மீது ஆதிக்கம் செலுத்திய அதிகாரம் காட்டிய குரல். அவனால் அந்த குரலை மறக்க முடியாது. ஆனால் இப்போது அந்த குரல் தன்னுடைய கப்பலிலேயே கேட்பதை அவனால் நம்ப முடியவில்லை. அந்த குரல் நீலனுடையது.

"யார் அது? நீலனா?" என்றான் முத்து வேலன் எச்சிலை முழுங்கியபடி.

"ஆம். நானே தான்" என்றது அதே குரல்.

அதே நேரம் முத்துவேலனின் கையில் இருந்த தீப்பந்தத்தின் மீது தன் வாயில் வைத்திருந்த எண்ணெயை ஊதினான். திடிரென்று ஓரு பெரும் தீப்பிழம்பு அதிலிருந்து உண்டானது. அந்த தீப்பிழம்பு மறைந்த போது அவனுக்கு எதிரே நின்று கொண்டிருந்தான் நீலன்.

அவனது உடையலங்காரம் வெகு வினோதமாக இருந்தது. முகத்தில் கருப்பு நிற கோடுகளை வரைந்து உதட்டின் ஓரத்தில் வெள்ளை நிறத்தில் இரண்டு கோரை பற்களை வரைந்து வைத்திருந்தான். இப்படி ஓரு கர்ண கொடுர தோற்றத்துடன் இரவில் ஒருவன் எதிரே வந்து நின்றால் மனத்துணிவு கொண்டவன் கூட சில நொடிகள் பேயோ என்று நினைத்துஆடிப்போய்விடுவான்.முத்துவேலன் உண்மையிலேயே இறந்து போன நீலன் திரும்ப பழி வாங்க வந்து விட்டதாக நினைத்து ஆடிப்போய்விட்டான்.

"யார் அது? நீலனா?" என்றான் மீண்டும் ஒருமுறை நடுங்கும் குரலோடு.

"நானே தான். பழைய கணக்கை நேர் செய்யகல்லறைதீவிலிருந்து வந்திருக்கிறேன். அந்த துரோகி நஞ்சுண்டனுக்கு துணை போன அனைவரையும் பழி தீர்க்க வந்திருக்கிறேன். கணக்கை உன்னிடமிருந்து தொடங்குகிறேன்" என்று சொல்லிவிட்டு ஓங்காரமாக சிரித்தான் நீலன்.

"என்னை மன்னித்து விடு நீலா. உனக்கு ஆதரவாக நான் பேசியிருந்தால் என்னையும் உனக்கு துணையாக கல்லறைதீவில் இறக்கி விட்டிருப்பர்ன் அந்த நஞ்சுண்டன் .என் உயிரை காப்பாற்றி கொள்ள எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் வேறு வழியின்றி நான் அவனது முடிவுக்கு கட்டுப்பட்டேன்" என்று கதற ஆரம்பித்தான் முத்துவேலன்.

"நன்றாக கதை சொல்கிறாய். ஆனால் என் மனம் அதை நம்ப மறுக்கிறது. நீ போய் அனைவரையும் இங்கே அழைத்து வா! நாம் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம்" என்றான் நீலன்.

"இதோ!பத்தே நிமிடங்களில் அனைவரையும் மேல் தளத்திற்கு அழைத்து வருகிறேன். என் மீது கோபப்பட்டு என்னை எதுவும் செய்து விடாதே" என்று கதறினான் முத்துவேலன்.

"அனைவரையும் ஆயுதங்களின்றி இங்கே வரச் சொல். நீ தாமதிக்கும் ஓவ்வொரு நொடியும் என் கோபம் அதிகரிக்கும் "

"இல்லை. இப்போதே அனைவரையும் அழைத்து வருகிறேன்" என்றபடி பந்தத்துடன் கீழ் தளத்திற்கு ஓடினான் அவன்.

கீழே மெய்மறந்து தூங்கி கொண்டிருந்த தன்னுடைய சகாக்களை எழுப்ப ஆரம்பித்தான் அவன்.

தூக்கம் கலைந்து எழந்தவர்கள் அவன் சொன்ன விசயத்தை கொஞ்சமும் நம்பவில்லை.

"கனவு ஏதாவது கண்டாயா? இறந்து போன நீலன் எப்படி உயிருடன் வர முடியும்? சரி. அவனது கால்களை பார்த்தாயா? அவை பூமியை தொட்டு கொண்டிருந்தனவா?" என்றான் ஒருவன்.

" என் கால்களே ஆடிக்கொண்டிருந்ததால் நான் அவன் கால்களை கவனிக்கவில்லை" என்றான் முத்துவேலன்.

ஒருவன் மட்டும் யோசித்து விட்டு கூறினான். "நரன். ஆம் அது தான் அவனது புனைபெயர் அவ்வளவு எளிதில் அவன் சாவுக்கு தன்னை ஒப்பு கொடுத்திருக்க மாட்டான். அவன் தன்னுடைய திறமையால் அந்த கல்லறைதீவிலிருந்து தப்பித்து வந்திருக்க வேண்டும். வாருங்கள் மேலே சென்று பார்ப்போம்"

அனைவரும் மேல் தளத்திற்கு வந்து சேர்ந்த போது கருணாகரன் தன் ஆட்களோடு காத்திருந்தான்.முத்தழகியை அவனுடைய சிறிய படகுகள் சுற்றி வளைத்திருந்தன.
சிரித்தபடி நின்றிருந்த நீலன்" வணக்கம் என் முன்னாள் நண்பர்களே!ம்யாரும் தேவையில்லா சாகசங்களை நிகழ்த்தி உயிரை இழந்து விட வேண்டாம். இந்த கப்பல் இந்த நொடியிலிருந்து என்னுடையது.கருணாகரா! இந்த துரோகிகளை கைது செய்ய உத்தரவிடு." என்றான் நீலன் கருணாகரனை பார்த்து.

"ம்" என்றான் கருணாகரன். அவனுடைய ஆட்கள் பம்பரமாக செயல்பட்டு அனைவரையும் கைது செய்தனர்.

"துரோகம் ஒரு நாளும் வென்றதில்லைநண்பர்களே!எதிரிகளை விட துரோகிகள் ஆபத்தானவர்கள்" என்ற நீலன்" நங்கூரத்தை உயர்த்துங்கள். கப்பல் கிளம்ப ட்டும் " என்றான்.

நங்கூரம் கப்பலின் மேல் தளத்திற்கு இழுக்கப் பட்ட போது அதனுடன் பிணைக்கப்பட்டிருந்த மூட்டை ஒன்றும் மேலே வந்தது. அது நஞ்சுண்டன் யார் கண்ணிலும் படாமல் ஓளித்து வைத்திருந்த பொன் மூட்டை . கப்பல் முழுக்க தேடியவர்களுக்கு நங்கூரத்தை உயர்த்தி பார்க்க தோன்றவில்லை என்பது தான் விதி.

நீலனின் முகம் மகிழ்ச்சியால் பூரித்தது.

அவன் இப்படி ஒரு அதிர்ஷ்டத்தை கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.

புதன், 14 செப்டம்பர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 33

தர்மத்தின் விளக்கம்

வள நாட்டின் அரசன் அங்குலி மாலன் தனக்கு எதிராக நின்று கொண்டிருந்த அமைச்சர் அம்பலவாணரை பார்த்தான்.

தன் கையில் இருந்த ஓலையை தடவிப் பார்த்த அம்பலவாணர் "நம்முடைய ஒற்றன் திருமூர்த்தியிடம் இருந்து நமக்கு ஒரு ஓலை வந்திருக்கிறது. அவனிடம் இருந்து நமக்கு வரும் இரண்டாவது ஓலை இது " என்றார் அம்பலவாணர்.

" இவ்வளவு விரைவாக நமக்கு இரண்டாவது ஓலையை அனுப்பி வைத்திருக்கிறான் என்றால் அவன் தன் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டி விட்டான் போல் தெரிகிறதே?" என்றான் அங்குலி மாலன் குரலில் வியப்பை காட்டி.

"எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. போன முறை அவன் அனுப்பிய ஓலை பறவை மூலம் நமக்கு வந்து சேர்ந்தது. இந்த முறை வந்த ஓலை நம்முடைய நாட்டிற்கு வந்த கப்பல் மூலமாக வந்து சேர்ந்திருக்கிறது. நம்முடைய ஒற்றன் கப்பல் மாலுமி மூலமாக ஓலையை கொடுத்து அனுப்பியிருக்கிறான்."

"அப்படியானால் அவன் இன்னமும் உயிரோடு ரகசிய தீவில் இருப்பது உறுதியாகிறது. மார்க்கதரிசியின் புதையல் எங்கிருக்கிறது என்று அவன் கண்டுபிடித்திருக்க வேண்டும்"

"ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நானும் நினைக்கிறேன்" என்றார் அம்பலவாணர்.

"சரி. நம்முடைய ஒற்றன் அனுப்பி வைத்த ஓலையை படியுங்கள் கேட்போம்" என்றான் அங்குலி மாலன்.

"இதோ படிக்கிறேன் மன்னா" என்ற அமைச்சர் அம்பலவாணர் தீப்பந்தத்திற்கு அருகே சென்று ஓலையை விரித்துப் பிடித்தார். அவரது கண்கள் ஓலையில் இருந்த எழுத்துகள் மீது ஓட ஆரம்பித்தது.

" மாட்சிமை தாங்கிய மன்னர் சமூகத்திற்கு!

தங்கள் ராஜ்ஜிய பரிபாலனத்திற்கு உட்பட்ட கடை நிலை ஊழியன் எழுதும் கடிதம் இது. தாங்கள் என்னை அனுப்பிய காரியம் ஜெயமாகும் நிலையை நெருங்கி விட்டேன். கனமான பு தையல்களை ஏற்றி வர ஒரு கப்பலையும் ஓரு மாலுமியையும் சம்பாதித்து விட்டேன். இன்னும் சில தினங்களில் நான் இங்கிருந்து புதையலோடு கிளம்பி விடுவேன். அப்படியான தருணத்தில் இங்கே என்ன வேண்டுமானாலும் நடந்து நிலைமை நமக்கு பாதகமாக மாறலாம். அப்படியான தருணத்தில் எனக்கு உதவி செய்ய ஒரு கப்பலை அனுப்பி வைக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன். நான் ஏற்பாடு செய்திருக்கும் கப்பலின் பெயர் முத்தழகி. ஆனால் அந்தப் பெயரில் அந்த கப்பல் இப்போது இல்லை. தோற்றத்தில் சற்று மாறி காணப்படும் இந்த கப்பல் பிரசித்தி பெற்றது.இதனை அடையாளம் கண்டு கொள்வதும் எளிது.இதில் தான் புதையலை எடுத்து வர தீர்மானித்திருக்கிறேன். அப்படி எடுத்து வரும் போது கடல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க நீங்கள் அனுப்பும் கப்பல் உதவி செய்தால் போதும் " இப்படிக்கு தங்கள் பணிவுள்ள அடிமை திருமூர்த்தி" என்று ஓலையை படித்து முடித்தார் அம்பலவாணர்.

"நாம் அனுப்பிய ஆள் வேலையை முக்கால்வாசி முடித்துவிட்டான் போல் தெரிகிறது" என்றான் அங்குலி மாலன்.

"ஆமாம். அப்படித்தான் தெரிகிறது" என்றார் அம்பலவாணர்.

"இவனது உதவிக்கு ஓரு கப்பல் தேவை. நாம் யாரை அனுப்புவது?"

"கவலைப்படாதீர்கள் மன்னா! நம் நாட்டின் மிக திறமையான மாலுமியை நான் இதற்காக தேர்ந்தெடுத்து விட்டேன். நீங்கள் சம்மதித்தால் அவன் சற்று நேரத்தில் இங்கிருந்து கிளம்பி விடுவான்"

"மிக திறமையான கடலோடியா?"

"திறமைசாலி மட்டுமல்ல. குள்ள நரித்தந்திரத்திற்கு பெயர் போனவன்"

" அவன் பெயர்?"

"தர்மபாலன்.தங்கள் அனுமதிக்காக வெளியே காத்து நிற்கிறான்"

" எல்லாவற்றையும் தயார் செய்து விட்டுத்தான் இங்கே வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. அவனை வரச் சொல்லுங்கள்" என்றான் அங்குலி மாலன்.

"அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது தானே அமைச்சராக என்னுடைய வேலை" என்ற அம்பலவாணர் தன் கைகளை தட்டி ஒலி எழுப்பினார்.

"தர்மபாலா! வெளியே காத்திருந்தது போதும். உள்ளே வா.மன்னர் உன்னை காண விரும்புகிறார்" என்றார் அம்பலவாணர்.

"அது என்னுடைய பாக்கியம் அமைச்சரே.!" என்றபடி அறைக்குள் நுழைந்தான் தர்மபாலன்.

ஆறடி உயரத்தில் அஜான பாகு வாக இருந்தான் அவன். அவனது கண்களில் நயவஞ்சகம் மின்னியது. அவனது முகத்தில் கொடுரம் நிரந்தரமாக தங்கியிருந்தது.

உள்ளே நுழைந்தவன் அங்குலி மாலனை பார்த்து வணங்கி மரியாதை செய்தான்.

"நீங்கள் சொன்ன ஆசாமி இவன் தானா?" என்றான் அங்குலி மாலன் அமைச்சர் அம்பலவாணரை பார்த்து.

"ஆமாம்.இவன் தான் நான் தேர்ந்தெடுத்த ஆசாமி .பெயர்தர்மபாலன்"

"தர்மபாலன்.? பெயரில் இருக்கும் தர்மம் இவனது செயலில் இருந்து விட்டால் நமது திட்டம் நிறைவேறாதுஅமைச்சரே!" என்றான் அங்குலி மாலன்.

"குறுக்கிட்டு பேசுவதற்கு மன்னிக்க வேண்டும் மன்னா . என்னுடைய பெயரில் மட்டுமே தர்மம் இருக்கிறது. என்னுடைய செயலில் தர்மம் கிடையாது. தர்மம் என்றால் என்ன? எது தேவையோ அதுவே தர்மம் என்கிறான் சாணக்கியன். கொலை, கொள்ளை இவையெல்லாம் எனக்கு தேவை என்பதால் என்னை பொறுத்தவரை இவையெல்லாம் தர்மங்களே" என்றான் தர்மபாலன்.

"நல்ல விளக்கம். உன்னுடைய விளக்கம் எனக்கு பிடித்திருக்கிறது. இந்த ராஜ்ஜியத்திற்கு உன்னுடைய சேவை தேவைப்படுகிறது"

உதவ தயாராக இருக்கிறேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உயிரை விடவும் நான் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டுமென்று கட்டளையிடுங்கள். உடனே செய்து முடிக்கிறேன். இப்படி ஒரு வேலைக்கு என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தது என்னுடைய பாக்கியம்" என்று உணர்ச்சி பொங்க பேசினான் தர்மபாலன்.

" நல்லது. இந்த காரியத்தை செய்ய நீதான் சரியான ஆள் என்று அமைச்சர் கூறியதால் தான் உன்னை தேர்ந்தெடுத்தோம். நீ நன்றி கூற வேண்டுமானால் அவருக்குத்தான் நன்றி கூற வேண்டும்" என்றான் அங்குலி மாலன்.

"இப்படி ஒரு வாய்ப்பை என்னை நம்பி சிபாரிசு செய்ததற்கு நன்றி அமைச்சரே" என்றான் தர்மபாலன் அமைச்சரை பார்த்து.

அதை தலையசைத்து ஏற்று கொண்ட அமைச்சர் அம்பலவாணர் " காரியத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு உனக்கு பரிந்துரை செய்த என் பெயரை காப்பாற்றுதர்மபாலா " என்றார்.

"என்னால் உங்கள் பெயருக்கு ஓரு இழுக்கும் ஏற்படாது அமைச்சரே . காரியம் என்னவென்று சொல்லுங்கள் களம் காண்கிறேன்" என்றான் அவன்.

"நீ முத்தழகி என்ற கப்பலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார் அமைச்சர் .

" கேள்விப்பட்டிருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் அதை பார்த்தும் இருக்கிறேன். உலகத்தில் அது பயணப்படாத கடல் வழிகளே இல்லை. அதனுடைய மாலுமி நீலன் என்பவன். வயதான கிழவன், குடிகாரன். ஆனால் அனுபவம் அதிகம் உள்ளவன். மிகுந்த சாமர்த்தியம் உள்ளவன். தண்ணீரிலும் தடம் கண்டு நடக்கும் ஆற்றல் கொண்டவன். அவன் உயிர் பிழைக்க தன் நண்பர்களையே கொன்று தின்றதால் நரன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறான். அவனை நான் பல முறை சந்தித்திருக்கிறேன்."

"உனக்கு அந்த கப்பலை பற்றி அதிகமாகவே விவரங்கள் தெரிந்திருக்கிறது. மிகவும் பாராட்ட வேண்டிய விசயம்தான். ஆனால் அந்த கப்பல் இப்போது ரகசிய தீவில் இருக்கிறது. அதன் பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதன் தோற்றத்தையும் மாற்றியமைத்திருக்கிறார்கள். அதை உன்னால் அடையாளம் காண முடியுமா?"

"கொஞ்சம் சிரமம் தான். ஆனால் கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டுபிடித்து விடலாம். அது ஒரு பெரிய விசயம் இல்லை"

"அந்த கப்பலில் விலை மதிப்பு மிக்க ஒரு பொருள் வருகிறது. அதை கடல் கொள்ளையர்கள் திருட திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.அப்படி யாரும் அதை கொள்ளையடிக்க விடாமல் அந்த கப்பலுக்கு துணையாக .இருந்து அதை இங்கே கொண்டு வர வேண்டும். உனக்கு இருக்கும் ஒரே சிக்கல் இதற்கு சூத்ரதாரியாக இருக்கும் நம் ஓற்றனை அடையாளம் காண முடியாதது தான். அவனை நாம் கடிதம் மூலமாக தொடர்பு கொள்ள முடியாது. நீ நாங்கள் அனுப்பிய ஆள் என்று அவன் எப்படி அடையாளம் கண்டு கொள்வான்?"

அதற்கு ஒரு வழி இருக்கிறது. மன்னரின் முத்திரை மோதிரம். அது என் கையில் இருந்தால் அந்த ஓற்றன் என்னை அடையாளம் கண்டு கொள்வான் இல்லையா?" என்றான் தர்மபாலன்.

"நல்ல யோசனையை கூறினாய். நீ அவனை அடையாளம் கண்டுகொள்ளாவிட்டாலும் என் முத்திரை மோதிரத்தால் அவன் உன்னை அடையாளம் கண்டு கொள்வான். இதோ என்னுடைய முத்திரை மோதிரம் " என்ற அங்குலி மாலன் தன்னுடைய மோதிரத்தை கழற்றிகொடுத்தான்.

அதை பணிவுடன் வாங்கி கொண்ட தர்மபாலன்" மிகவும் நன்றி அரசே ! என்னுடைய ஆலோசனையை ஏற்றதற்கு " என்றான். 

" நல்லது. நீ இப்போதே ரகசிய தீவிற்கு பயணமாகலாம். வெற்றியுடன் திரும்பி வா." என்றான் அங்குலி மாலன்.

" என் பெயரை கெடுத்து விடாதே!" என்றார் அமைச்சர் அம்பலவாணர்.

"என்னை நம்புங்கள். நான் வெற்றியுடன் திரும்ப வருவேன்" என்ற தர்மபாலன் முத்திரை மோதிரத்துடன் கிளம்பினான்.

அன்று இரவு தர்மபாலனின் கப்பல் வள நாட்டிலிருந்து ரகசிய தீவை நோக்கி கிளம்பியது.

காட்டில்.!

" என்ன சொல்கிறாய்? இப்படி உணவை சமைத்து இங்கே அனுப்புவது மர்ம யோகியா?" என்றான் யவனன்.

அவனது கைப் பிடியில் சிக்கி கசங்கி கொண்டிருந்தான் உணவு பொருள்கள் கொண்டு வந்த குழவில் இருந்த ஒருவன்.

"நான் உண்மையைத்தான் சொல்கிறேன். அவரது ஆசிரமத்திலிருந்து தான் இந்த உணவுகள் தினமும் அனுப்பப்படுகின்றன"

"யார் அந்த மர்மயோகி ?" என்றான் ஆதித்தன்.

" ஒரு ஆன்மீக பெரியவர். அவர் இப்படி செய்வார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை" என்றான் யவனன்.

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 32

பேசாதவன் பேசுகிறான்.

வில்லவனின் பணியாளான வாய் பேச இயலாத ஆதி நர மாமிசம் உண்ணும் தெற்கே உள்ள காட்டு பகுதிக்கு வர தயாராக இருப்பதாக தன் கையை உயர்த்தி காட்டியது அங்கிருந்த அனைவருக்கும் வியப்பை தந்தது.

மற்ற அனைவரும் உயிருக்கு பயந்து அந்த காட்டிற்குள் நுழைய தயங்கிய போது இவன் மட்டும் ஏன் தைரியமாக தன் கைகளை உயர்த்தினான் என்று பார்த்திபனுக்கு குழப்பமாக இருந்தது. அவனது தைரியத்தை மனதிற்குள் பாராட்டி கொண்டவன் அவனை வைத்தே தன் ஆட்களை தைரியப்படுத்த முனைந்தான்.

"இவன் உன்னுடைய பணியாள் தானே?" என்றான் பார்த்திபன் வில்லவனை பார்த்து.அது ஏற்கனவே அவனுக்கு தெரிந்த விசயம் என்ற போதும் புதிதாக கேட்பது போல் அவனது தோரணை இருந்தது.

"ஆமாம். இவன் என்னுடைய ஆள்தான். பாவம் வாய் பேச முடியாதவன். யாருக்கும் தெரியாத நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளாத ஓரு செய்தியை நான் இப்போது சொல்ல போகிறேன்.இவன் அந்த காட்டில் பிறந்து வளர்ந்தவன் தான் .இவனது பால்யம் அந்த காட்டில் கழிந்ததால் அந்த காட்டின் அத்துணை வழிகளும் இவனுக்கு தெரிந்திருக்கலாம் என்பது நமக்கு சாதகமான அம்சம் " என்றான் வில்லவன்.

"பாருங்கள் தோழர்களே! ஒரு சிறுவன் பால்யத்தை கடந்து இளமை பருவத்திற்குள் அடியெடுத்து வைக்கும் ஒருவன் தைரியமாக அந்த காட்டில் நுழைய விரும்புகிறான். அது அவனது சொந்த இடம். அதை மீண்டும் காண அவன் மனம் ஆசைப்படுகிறது. நம் நாடு விடுதலை பெற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் அதற்காக உயிரை விட தயங்குகிறோம். இப்படி கோழைத்தனமாக இருந்தால் நம்மால் எப்படி வெற்றி பெற முடியும்?"

"நீ சொல்வது சரிதான் பார்த்திபா!அங்கே இருப்பவர்கள் இவனது உறவுக்காரர்கள். இவனை நம் இனத்தவன் என்று அவர்கள் அடையாளம் கண்டுபிடித்து விட்டால் இவனை உயிரோடு விட்டு விடுவார்கள். ஆனால் நம்மை அப்படி உயிரோடு விட்டு வைப்பர்களா?" என்றான் ஓருவன்.

"நல்ல கேள்வி தான். நாம் அவனை மட்டும் காட்டுக்குள் அனுப்பி வைப்போம். அவன் தனது ஆட்களிடம் பேசி சமாதானம் செய்து விட்டு பிறகு நம்மை உள்ளே அழைக்கட்டும் "

"நீ சொல்வது சரிதான். ஆனால் அவனுக்கு பேச தெரிய வேண்டுமே? அவனோ பேச முடியாத ஊமை. அவனால் தன்னுடைய கருத்தை எப்படி பேசி புரிய வைக்க முடியும்?" என்றான் இன்னொருவன்.

அவனது இக்கட்டான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றான் பார்த்திபன்.

"என்னால் பேச முடியாதென்று யார் சொன்னது?" என்று ஓலித்தது ஒரு கம்பீர குரல் எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தனர். அங்கே உட்கார்ந்திருந்த ஆதி இப்போது கம்பீரமாக நின்று கொண்டிருந்தான்.

"நான் ஊமையல்ல.என்னால் பேச முடியும்' அழுத்தம் திருத்தமாக பேசினான் அவன்.

இதுவரை பேச முடியாத ஊமை என்று எல்லோரும் நினைத்து கொண்டிருந்த ஒருவன் திடிரென்று பேசியதில் மொத்த கூட்டமும் திகைத்து நின்றது.

வில்லவனால் இந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை.

"ஆதி ! நீயா பேசியது?" என்றான் திகைப்புடன்.

"ஆமாம் அண்ணா. நான் தான் பேசினேன். இதுவரை இரவில் மட்டுமே பேசி பழகிக் கொண்டிருந்த நான் முதன்முதலாக பகலில் இப்போது தான் பேசுகிறேன். இதுவரை வாய் பேச முடியாதவனாக நடித்து உங்களை ஏமாற்றியதற்காக என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா." என்றான் ஆதி.

வில்லவன் வீட்டில் தங்கியிருந்த போது நள்ளிரவில் ஏற்பட்ட பேச்சு சத்தத்தின் அர்த்தம் பார்த்திபனுக்கு இப்போது தான் விளங்கியது.

"உன்னை என்னுடைய சகோதரனை போல நடத்தி வந்தேனே ஆதி? என்னிடம் ஏன் உண்மையை மறைத்து ஊமை போல் நடித்தாய்?" என்றான் வில்லவன் சற்று கோபத்துடன் .

"என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா. என்னால் நகரவாசிகளை முழுதாக நம்ப முடியவில்லை. மரண தறுவாயில் என் தந்தை என்னிடம் வாங்கிய சத்தியமும் ஒரு காரணம் " என்றான் ஆதி.

"ஊமையாக நடிக்க சொல்லி உன் தந்தை உன்னிடம் சத்தியம் வாங்கினாரா?" என்றான் வில்லவன்.

"ஆமாம். நீங்கள் என்னை பார்த்த முதல் நாளை நினைத்து பாருங்கள். நர மாமிசபட்சிணிகள் ஊருக்குள் வந்து விட்டார்கள் என்று மக்கள் எங்களை தாக்கி கொண்டி ருந்தபோது கருணாகரன் அங்கே வந்தான். அவன் தான் என் தந்தையை கொன்றான். அடுத்ததாக அவன் என்னையும் கொல்ல முயன்றான். அப்போதுதான் நீங்கள் தலையிட்டு என்னை காப்பாற்றினீர்கள். நான் வாய் திறந்து பேசுவேன் என்று கருணாகரனுக்கு தெரிந்தால் அவன் உங்கள் எதிர்ப்பையும் மீறி என்னை கொன்றிருப்பான். என்னை காப்பாற்ற மரண தறுவாயில் இருந்த என் தகப்பன் முயன்றான். வாய் பேச முடியாத ஊமையாக நடித்தால் மட்டுமே நீ உயிர் பிழைக்க முடியும். அதனால் நீ ஓரு வார்த்தை கூட பேச கூடாது. தகுந்த சந்தர்ப்பத்தில் நீ அவனை பழி வாங்க வேண்டும் என்று என்னிடம் சத்தியம் வாங்கினார். அதற்கு கட்டுப்பட்டுத் தான் நான் இத்தனை நாட்களாக ஊமையாக நடித்தேன். நான் வாய் பேச முடியாத ஊமை என்பதால் தான் இத்தனை நாட்களாக கருணாகரன் என்னை உயிரோடு விட்டு வைத்தான் " என்றான் ஆதி.

"நீ ஊமையாக நடிப்பதற்கும் கருணாகரன் உன்னை கொல்லாமல் விட்டதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? நீ சொல்வது எனக்கு புரியவில்லை."

"நான் பேசினால் உண்மை வெளிவந்து விடும் அண்ணா. அதனால் தான் என்னை கொல்ல நினைத்தான் கருணாகரன் "

"அப்படி எந்த உண்மையை மறைக்க கருணாகரன் துடிக்கிறான்?"

" அவன் மறைக்க நினைப்பது மூன்று உண்மைகளை. முதலாவது அங்கே மனிதர்களை கொன்று தின்பது எங்கள் இனத்தவர்கள் இல்லை. ஏனென்றால் எங்கள் இனத்தவர் யாரும் அங்கே உயிருடன் இல்லை. எங்கள் இனத்தில் கடைசியாக மிஞ்சியிருப்பது நான் மட்டும் தான். இரண்டாவது உண்மை எங்கள் இனத்தவர்களை போல் வேடமிட்டு அங்கே வரும் மனிதர்களை கொன்று தின்பதாக நடித்து கொண்டிருப்பவர்கள் கடற்கொள்ளையன் மார்க்கதரிசியின் ஆட்கள் .மூன்றாவது உண்மை மார்க்கதரிசியின் புதையல் அங்கே தான் இருக்கிறது. அதை கண்டு பிடிக்காமல் இருக்கத்தான் இத்தனை நாடகங்களும்." என்றான் ஆதி.

"இவையெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?" என்றான் பார்த்திபன்.

"நடந்தவற்றை முழுதாக கூறினால் தான் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும் " என்றான் வில்லவன்.

"நடந்தவற்றை நான் விளக்கமாகவே சொல்கிறேன். அனைவரும் கேளுங்கள். நகரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை போலவே அந்த மலை காட்டில் நாங்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். என் அப்பா அம்மாவிற்கு நான் ஒரே பிள்ளை வேட்டையாடுவதும், தேன் எடுப்பதும், மீன்பிடிப்பதும் எங்கள் தொழில் பொழுது போக்கு. அந்த பால்ய வயதிற்கே உரிய குறும் போடுதான் என் சிறுவயது பிராயம் கழிந்தது. நகரத்தில் நடக்கும் எந்த விசயமும் அரசியல் உட்பட எதுவும் எங்களுக்கு தெரியாது. சில நபர்கள் மட்டும் நகரத்திலிருந்து வந்து எங்கள் பொருட்களை வாங்கி கொண்டு எங்களுக்கு தேவையானதை கொடுத்து செல்வார்கள். அதிகமாக ஆசைப்படாத மனம் எங்களுடையது என்பதால் வாழ்க்கை ஆனந்தமாக சென்றது. ஆனால் அது நிரந்தரமாக வில்லை என்பது தான் சோகம்.

ஓரு நாள் பலத்த புயல் ஓன்று வீசியது. எங்கள் இன மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு எந்த வேலையும் செய்ய முடியாமல் குடிசைகளுக்குள் முடங்கி கிடந்தனர். மறுநாள் காலை பருவ நிலைஇயல்புக்கு திரும்பியது. நான் கடற்கரையில் என் வயது தோழர்களோடு விளையாடி கொண்டிருந்த போது தான் அந்த கப்பலை பார்த்தேன். அது புயலில் சேதமடைந்து நீரில் பாதி மூழ்கிய நிலையில் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்நிய மனிதர்களை பார்த்தறியாத நாங்கள் பயத்துடன் வீட்டிற்கு ஓடி விட்டோம்.

நான் மட்டும் ஆர்வமிகுதியால் ஓளிந்திருந்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தேன்.

அவர்கள் மூழ்கிய கப்பலில் இருந்து பெரிய பெரிய பெட்டிகளை எடுத்து வந்து பூமியில் குழி தோண்டி புதைக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு உணவுக்காக காட்டில் அலைய ஆரம்பித்தனர். நாங்கள் கொடுத்த உணவை பணிவுடன் வாங்கி தின்றவர்கள் அதன் பிறகு உணவுக்காக எங்களை மிரட்ட ஆரம்பித்தனர். அவர்கள் நகரத்தை நோக்கி செல்வார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர்கள் கடல் கொள்ளையர்கள் நகரத்திற்குள் சென்றால் அவர்களை தூக்கில் போட்டு கொன்று விடுவார்கள் என்று அப்போது எங்களுக்கு தெரியாது. அந்த கூட்டத்தில் இருந்தவன் தான் கருணாகரன்.

அவன் தான் எங்கள் இனத்தை முற்றாக அழிக்க ஆலோசனை கூறியவன். அவனது திட்டப் படி புதையலை தேடி யாரும் வராமல் இருக்க இந்த காட்டை அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாக மாற்ற விரும்பினான். அவர்கள் எங்கள் இன மக்களை விரட்டி விரட்டி கொன்றார்கள். ஆயுத பலமிக்க அவர்களிடம் போராட முடியாமல் எங்கள் மக்கள் இறந்தார்கள். அதில் நான் என் தாயை இழந்தேன். அந்த காட்டில் என் சொந்த வீட்டில் மறைந்து வாழ்ந்தோம். அவர்கள் எங்கள் வேடத்தை அணிந்து கொண்டார்கள்..பண்டமாற்றுக்காக நகரத்திலிருந்து வந்த நபர்களை கொன்று நரமாமிசபட்சிணிகள் வாழம் காடு என்ற பயத்தை உருவாக்கினார்கள். எங்களை முற்றாக அழித்த பின் அவர்கள் உணவுக்காக திண்டாட ஆரம்பித்தார்கள். கருணாகரன் மட்டும் அவ்வப்போது இரவு வேளையில் நகரத்திற்கு சென்று வருவான்.அப்போதுதான் மதி மாறன் இந்த தீவின் ராஜ பிரதிநிதியாக ஆளுநராக வந்து சேர்ந்திருந்தான்.

உணவிற்காக தன் கூட்டம் திண்டாடுவதை பார்த்த கருணாகரன் ஒரு நாடகம் நடத்தி மதிமாறனின் நம்பிக்கையை பெற முயன்றான்.. கடல் கொள்ளையர்களான தன்னுடைய கூட்டத்தை சேர்ந்த நால்வர் மதி மாறனை கொல்ல தாக்குதல் நடத்தும் போது தான் மதி மாறனை காப்பாற்றுவது போல் நடித்து அவனது நன்மதிப்பை பெறுவது தான் திட்டம். அதில் நன்றாக தெரிந்த ஒரு கடல் கொள்ளையன் வேண்டும் என்று பேசி நால்வரில் ஒருவனாக மார்க்கதரிசியையும் பங்கேற்க செய்தான். அவர்களின் திட்டப் படியே மதிமாறனின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குறுக்கிட்டு தடுக்க வந்த கருணாகரன் திட்டப் படி அவர்களை அடித்து விரட்டாமல் கொன்றே விட்டான். அவனது வீரத்தில் மகிழ்ந்த மதிமாறன் தன் உயிரை காப்பாற்றியவனுக்கு தளபதி பட்டத்தை கொடுத்து மகிழ்ந்தான். தலைவனான மார்க்கதரிசியை கொன்று அந்த கூட்டத்திற்கே தலைவனாகி விட்டான் கருணாகரன். இறந்து போன நால்வரை பற்றிய கேள்விக்கு நான்கு பங்கை குறைத்து விட்டேன் என்று சந்தோசப்படுங்கள் என்று கூறி தன் சகாக்களை சமாதானப்படுத்தி விட்டான்.மார்க்கதரிசி என்னும் கொள்ளையன் அடையாளம் தெரியாத பிணமாக அடக்கம் செய்யப்பட்டு விட்டான். காட்டுக்குள் தப்பி ஓளிந்து வாழ்ந்த என்னையும் என் தகப்பனையும் கொல்ல அவர்கள் பெரும் முயற்சி செய்தனர்.

நாங்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஒரு நாள் நகரத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கே தான் மக்கள் எங்களை தாக்கினார்கள். அங்கே வந்த கருணாகரன் உண்மை வெளிவராது இருக்க என் தந்தையை கொன்றான். உயிரை காப்பாற்றி கொள்ள நான் நிரந்தர ஊமையானேன். இரவில் மட்டும் பேசி பழகுவேன்" என்று தன் கதையை சொல்லி முடித்தான் ஆதி.

திங்கள், 12 செப்டம்பர், 2022

ரகசிய தீவு 31

ரகசிய தீவு

அத்தியாயம் 31

இறந்தவன் வருகை

நீலன் சிறை அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது மனம் முழுவதும் இங்கேயிருந்து எப்படி தப்பிச் செல்வது என்பதில் லயித்திருந்தது. கருணாகரன் தன்னுடைய கப்பலை கண்டுபிடித்து தன்னிடம் ஓப்படைப்பான் என்ற நம்பிக்கையை அவன் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தான். தன்னோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆதித்தனும் யவனனும் கூத்தாடி கலைஞர்களும் சிறையிலிருந்து தப்பி சென்று விட்டதை அவன் கருணாகரன் சொல்லி தெரிந்து கொண்டு விட்டிருந்தான். ஆதித்தனை நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைக்க முடியாது என்பதை நீலன் நன்றாக அறிவான். சிறையில் இருந்த அனைவரையும் அவன் தான் தப்பிக்க வைத்து பத்திரமான இடத்தில் பதுக்கி வைத்திருக்க வேண்டும் என்று நீலனுக்கு நன்றாகத் தெரியும்.

ஆதித்தனும், யவனனும் தன்னை மீட்காமல் ரகசிய தீவிலிருந்து வெளியேற மாட்டார்கள். ஆனால் தான் இங்கு கருணாகரனின் தனிப்பட்ட சிறையில் அடைபட்டு கிடப்பது அவர்களுக்கு தெரியாது என்பதால் தன்னை தேடி கண்டு பிடிக்க அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தன்னை கண்டு பிடிக்கும் வரை தான் வாளாவிருக்க முடியாது. எப்படியாவது இங்கிருந்து தப்பிச் சென்று விட வேண்டும் என்று நினைத்த நீலன் அதற்கு என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

நீலன் யோசனையில் ஆழ்ந்திருந்த போது யாரோ நடந்து வரும் காலடி ஓசை கேட்டது. உணவருந்தும் நேரம் நெருங்கி விட்டதால் தன்னை கவனித்து கொள்ள கருணாகரன் நியமித்த வாய் பேச முடியாத பணியாள் தான் உணவு கொண்டு வருகிறான் போலிருக்கிறது என்று நினைத்தான் நீலன்.
நீலனின் எதிர்பார்ப்பிற்கு நேர் எதிராக சிறை கதவுக்கு எதிரே வந்து நின்றவன் கருணாகரன். எப்போதும் நீலனை தயக்கத்துடன் எதிர்கொள்வான் கருணாகரன் காரணம் அவன் கப்பலை தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற விரக்தி. ஆனால் இந்த முறை அவனது முகத்தில் கிழட்டு மாலுமியை பார்ப்பதில் எந்த சங்கடங்களும் இல்லை. எப்போதும் கவலை படர்ந்த அவனது முகத்தில் இப்போது மகிழ்ச்சியும் பூரிப்பும் பொங்கி வழிந்தது.

வழக்கத்திற்கு விரோதமான அவனது மு க மாற்றத்தை பார்த்து எதற்காக இவன் இன்று இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று பு ரியாமல் மனதிற்குள் குழம்பினான் நீலன்.

நீலனை பார்த்து புன்னகைத்த கருணாகரன் தன் இடுப்பில் இருந்த சிறை அறையின் சாவியை எடுத்து கதவை திறந்தான். எப்போதும் கதவுக்கு வெளியே நின்று பேசிவிட்டு செல்லும் கருணாகரன் இன்று வழக்கத்திற்கு விரோதமாக கதவை திறந்ததை பார்த்த நீலன் தன் கண்ணையே நம்ப முடியாமல் திகைத்து நின்றான்.

கதவை திறந்து உள்ளே வந்த கருணாகரனை பார்த்த நீலன்" என்ன இன்று வழக்கத்திற்கு மாறாக மகிழ்ச்சியாக இருக்கிறாய்? உன் வீட்டில் ஏதாவது விசேசமா? இல்லை கப்பல் கிடைக்காததால் என்னை விடுவிக்க முடிவு செய்து விட்டாயா?" என்றான்.

"இல்லை. நீலா! உனக்குத்தான் இன்று மகிழ்ச்சியான நாள். நான் கொண்டு வந்திருக்கும் செய்தியை கேட்டால் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பாய்" என்றான் கருணாகரன்.

"இன்று உன் செயல்கள் அனைத்தும் வெகு புதிராக இருக்கின்றன. மகிழ்ச்சியாக இருப்பது நீ. சிறையில் அடைபட்டு கிடக்கும் என்னைப் பார்த்து மகிழ்ச்சியான செய்தி என்கிறாய். எனக்கு ஓன்றும் புரியவில்லை"

"புரிய வைக்கிறேன். நான் சொல்லும் செய்தியை கேட்டால் நீயும் மகிழ்ச்சி கடலில் மிதப்பாய். உன்னுடைய கப்பல் முத்தழகி எங்கிருக்கிறது என்று நான் கண்டுபிடித்து விட்டேன்" என்ற கருணாகரன் நீலனை கட்டி அணைத்து கொண்டான்.

" என்ன? என்னுடைய கப்பல் கிடைத்துவிட்டதா?" என்று சந்தோசத்தில் திக்குமுக்காடினான் நீலன்.

அவன் மனம் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தது.

"உன்னுடைய கப்பல் கிடைக்கவில்லை. அது இருக்கும் இடம் மட்டும் இப்போது தெரிந்திருக்கிறது. நாம் தான் அதை மீட்க வேண்டும்" என்ற கருணாகரன் அரபு வியாபாரியான முகமதுவின் வருகையையும் வரும் வழியில் அவன் சந்தித்த விசித்திர கப்பலை பற்றிய தகவலையும் எடுத்து கூறினான்.

நீலன் கருணாகரன் கூறியதை நிதானமாக கூர்ந்து கேட்டான்.

"அந்த நஞ்சுண்டன்? அவனது பிடியில் தான் என் கப்பல் இருந்தது. அவன் அந்த கப்பலில் இருந்தால் அவனை பழி தீர்த்து ஓரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விடுவேன். அவனோடு தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று எனக்கு இருக்கிறது" என்று பல்லை கடித்தான் நீலன்.

"இல்லை. முகமது என்னிடம் சொன்ன விசயங்களை வைத்து பார்த்தால் அந்த கப்பலில் மீகாமன் யாரும் இல்லையென்று தான் தெரிகிறது" என்ற கருணாகரன் முகமது சொன்ன விசயத்தை எடுத்து கூறினான்.

"அந்த கப்பலில் உள்ளவர்களில் இரண்டு பேர் மட்டும் தான் புத்திசாலிகள். ஓருவன்நஞ்சுண்டன் "

"இன்னொருவன் யார்?" என்றான் கருணாகரன் ஆவலுடன் .

"அது நான் தான்." என்று சிரித்தான் நீலன்.

"போதும் தற்பெருமை. உன் மீதான கட்டுப்பாடுகளை, இந்த சிறைவாசத்தை இந்த கணத்திலிருந்து நீக்குகிறேன்"

" என் கப்பலை மீட்கும் வரை நான் இங்கிருந்து தப்பி ஓட மாட்டேன் என்று கருதுவதால் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாய். இப்போது என்னை விட புத்திசாலி நீதான் " என்றான் நீலன்.

"சரியாகப் புரிந்து கொண்டாய். உன் கப்பலை மீட்க என்ன செய்வதென்று நான் யோசித்து கொண்டிருக்கிறேன். உன் கப்பலை நாம் பகலில் நெருங்க முடியாது. நீயும் பகலில் வெளியே தலைகாட்ட முடியாது.நஞ்சுண்டனின் ஆட்கள் எச்சரிக்கையாகி விடுவார்கள். நாம் இரவில் தான் நம் முயற்சியை தொடங்க வேண்டும்" என்றான் கருணாகரன். 

எதையோ யோசித்து கொண்டிருந்த நீலன்" நீ சொல்வது உண்மைதான். உன் ஆட்களை இரவு பயணத்திற்கு தயாராக சொல். நாம் இரவில் கடலுக்கு செல்ல போகிறோம்" என்றான்.

"அவர்கள் கப்பலில் நிறைய ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் விழித்து கொண்டு தாக்குதலில் முந்தி கொண்டால் நம்முடைய நிலைமை மோசமாகி விடும்" என்றான் கருணாகரன்.

"கவலைப்படாதே! என்னிடம் அதற்கு ஒரு ஏற்பாடு இருக்கிறது. அதை செய்தால் போதும் அத்தனை பயல்களும் நடுங்கி விடுவார்கள்" என்றான் நீலன்.

" என்ன அது?" என்றான் கருணாகரன்

"இறந்தவனை எழுப்புவது " என்று சிரித்தான் நீலன்.

அவனை எதுவும் புரியாமல் பார்த்தான் கருணாகரன்.

"இன்று இரவு உனக்கு எல்லாம் விளங்கி விடும்" என்று சிரித்தான் நீலன்.

…..

பார்த்திபன் செங்கோடனின் உடலுக்கு சந்திரவதனா மூலமாக தீ மூட்டிவிட்டு தன்னுடைய இருப்பிடத்திற்கு திரும்ப வந்து சேர்ந்திருந்தான்.

சந்திரவதனாவை வில்லவன் மனைவியோடு அனுப்பி வைத்துவிட்டு தன்னுடைய ஆட்களை வரவழைத்தான் பார்த்திபன்.

வந்து சேர்ந்த தன் ஆட்களிடம் நஞ்சுண்டனை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு பேச ஆரம்பித்தான் பார்த்திபன்.

"நண்பர்களே. நாம் இந்த கொடுங்கோலாட்சியை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறோம். நம்மிடம் இந்த அரசை எதிர்க்க போதுமான ஆயுதங்கள் இல்லை. அவற்றை இந்த நண்பர் தருவதாக சொல்கிறார். அதற்கு பதிலாக இவர் கேட்கும் தொகையை நம்மால் தர முடியாது. ஆனால் அதற்கு பதிலாக மார்க்கதரிசியின் புதையலை நாம் இவருக்கு தேடித் தந்தால் நமக்கு அந்த ஆயுதங்கள் நம்மிடம் வந்து சேரும் "

"நீ சொல்வது சரிதான் பார்த்திபா. ஆனால் அந்த புதையல் எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியாதே?" என்றான் கூட்டத்தில் ஒருவன்.

"நம் நண்பர் அந்த புதையல் குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக திடமாக நம்புகிறார். அதை தோண்டி எடுக்க நம்முடைய உதவி தேவை. அதை ஏற்றி செல்ல கடலில் இவரது கப்பல் காத்திருக்கிறது" என்றான் பார்த்திபன்.

"அவை நம் நாட்டு செல்வங்கள் அல்லவா?" என்றான் இன்னொருவன்.

"இல்லை. அவை களவாடப்பட்ட பொருட்கள். அவை இவரிடம் இருப்பது உரிமையாளர்களுக்கு தெரிந்தால் வீணான பிரச்சனைகள் வரும் " என்றான் வில்லவன்.

"அந்த புதையலின் பொருட்டு நான் எந்த பிரச்சனைகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்" என்றான் நஞ்சுண்டன் .

"நமக்கு வேறு வழியில்லை. இவரது திட்டத்திற்கு நாம் உடன்பட்டால் தான் நமக்கு ஆயுதங்கள் கிடைக்கும் " என்றான் பார்த்திபன்.

"எங்களை வழி நடத்தும் தலைவன் நீ! நீ பார்த்து எதை செய்தாலும் அது சரியாகத் தான் இருக்கும். சரி. நாம் இந்த திட்டத்திற்கு உடன்படுகிறோம். நண்பர்களே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றான் ஒருவன்.

"நாங்கள் இதற்கு சம்மதிக்கிறோம்" என்று குரல் கொடுத்தது கும்பல் .நஞ்சுண்டனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடத் துவங்கியது. தன் திட்டம் இவ்வளவு எளிதாக நிறைவேறும் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை.

"அந்த புதையல் எங்கே இருக்கிறதென்று சொல் பார்த்திபா?" என்றது ஒரு குரல்.

"நாட்டின் தென்திசையில்" என்றான் பார்த்திபன்.

"அது நர மாமிசபட்சிணிகள் வாழும் காடாயிற்றே?" என்றது ஒரு குரல்.கூட்டத்திற்குள் கசமுச வென்று பேச்சு குரல் எழுந்தது.

"எங்கள் திட்டத்திற்கு உட்பட்டு எங்களுடன் அந்த காட்டிற்கு வர விரும்புகிறவர்கள் மட்டும் கைகளை உயர்த்துங்கள்" என்றான் பார்த்திபன்.

தோழர்கள் அனைவரும் அமைதியாக ஓருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். யாருடைய கைகளும் உயர மறுத்தன.

ஒரே ஒரு கை மட்டும் உயரத்தில் இருப்பதை பார்த்த பார்த்திபன்" யார் அது? கைகளை உயர்த்தியது ? எழுந்து நின்று உங்களை வெளிகாட்டுங்கள்" என்றான்.

கூட்டத்திலிருந்து எழுந்து நின்றான் ஆதி.

"இவன் உன்னுடைய பணியாள்தானே?" என்றான் பார்த்திபன் வில்லவனை பார்த்து.

"ஆமாம். ஆனால் இவன் எதற்கு அங்கே வர விரும்புகிறான் என்று தெரியவில்லையே?" என்றான் வில்லவன் குழப்பத்துடன் .கூ ட்டம் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தது.

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 30

தேடி வந்த அதிர்ஷ்டம்

கருணாகரனின் பிடியில் அகப்பட்டு தனிமை சிறையில் வாடிக் கொண்டிருந்தான் நீலன்.கருணாகரன் அவ்வப்போது வந்து அவனை சந்தித்து விட்டு சென்றான். அவன் அங்கு வரும் ஓவ்வொரு முறையும் நீலன் தன்னுடைய முத்தழகி கப்பல் கிடைத்துவிட்டது என்ற நினைப்பில் மகிழ்ச்சி கடலில் மூழ்குவான். ஆனால் கருணாகரன் ஒவ்வொரு முறையும் உதட்டை பிதுக்கி தன்னுடைய ஏமாற்றத்தை வெளிகாட்டுவான். தான் முத்தழகியை தேடும் பணியை முடுக்கி விட்டிருப்பதாகவும் விரைவிலேயே கப்பல் தன்னிடம் அகப்பட்டு விடும் என்றும் நீலனுக்கு ஆறுதல் கூறிவிட்டு செல்வான்.

சில நாட்களிலேயே கருணா கரனின் வருகையின் போது நீலனுக்கு ஏற்படும் உற்சாகம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. வாரத்தின் இறுதியில் நீலன் கருணாகரன் தன்னுடைய கப்பலை கண்டுபிடிப்பான் என்ற நம்பிக்கையை இழக்கக் துவங்கி விட்டான் நீலன். நீலனை தனிப்பட்ட முறையில் கவனிக்க ஒரு வாய் பேச முடியாத காது கேளாத ஊனமயும் செவிடனுமான ஒருவனை நியமித்திருந்தான் கருணாகரன் தனிமை சிறையில் அடைபட்டு கிடந்த நீலனுக்கு நேரத்திற்கு நேரம் சுவையான உணவு கிடைத்தது. கிடைத்த உணவை உண்ட நீலன் மறந்தும் கூட மதுபானம் எதையும் கேக்கவில்லை. அவனது கவனம் முழுக்க தன் உயிரை காப்பாற்றிய தான் மடியில் வைத்து பாதுகாத்த அந்த காலி மதுபுட்டி எங்கே தான் காணாமல் போயிருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தது.

நீலனிடம் இரண்டு திட்டங்கள் இருந்தன. அவன் கருணாகரன் மீது இருந்த நம்பிக்கையை இழக்கத் தொடங்கியிருந்தான்.கருணாகரன் சொன்னது போல் கப்பலை கண்டுபிடித்து மீட்டிருந்தால் அதில் பொக்கிசங்களை ஏற்றி கொண்டு கருணாகரனையும் ஏமாற்றி விட்டு கப்பலோடும் செல்வங்களோடும் தப்பி ஓடிவிட திட்டமிட்டிருந்தான்.

அவன் நினைப்பதுபோல் கருணாகரன் கப்பலை மீட்டு வருவது போல் அவனுக்கு தோன்றவில்லை. அதனால் தானே களத்தில் இறங்கி தன்னுடைய கப்பலை தேட முடிவெடுத்தான் நீலன்.அதற்கு அவன் முதலில் சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும். தப்பித்த பிறகு தன்னுடைய கப்பலை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு பிறகு இருக்கிறது ஒரு பழிவாங்கும் படலம். அந்த துரோகி நீலன். அவனை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். அவன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவனை தேடிக் கண்டு பிடித்து கொல்லவேண்டும். நீலன் தன்னுடைய மனதிற்குள் கருவிக் கொண்டான். முதலில் தன்னுடைய கப்பல் தனக்கு திரும்ப கிடைக்க வேண்டும். இன்னும் ஒரு நாள் பொறுத்திருந்து பார்ப்போம்.கருணாகரன் தன்னுடைய கப்பலை கண்டுபிடிக்காவிட்டால் இங்கிருந்து எப்படியாவது தப்பிச் சென்று விட வேண்டும் என்ற முடிவிற்கு நீலன்வந்துவிட்டிருந்தான்.

கருணாகரன் தன்னுடைய மாளிகையில் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். அவனுடைய ஆட்கள் துறைமுகத்தில் எங்கு தேடியும் நீலனின் கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவனிடம் சொன்னதை அவன் ஆழ்ந்து யோசித்து கொண்டிருந்தான். ரகசிய தீவிற்கு முத்தழகி கப்பலிலிருந்து வழக்கமாக வரவேண்டிய சரக்குகள் சிறிய கப்பல்களில் கரைக்கு வந்து சேர்ந்து விட்டன என்ற தகவல் ஓற்றர்கள் மூலம் அவன் காதுக்கு வந்து சேர்ந்திருந்தது. அந்த தகவல் உண்மையாக இருந்திருந்தால் நீலனின் கப்பலான முத்தழகி அருகில்தான் எங்கேயோ இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவன் வந்து சேர்ந்திருந்தான்.

அவனது சிந்தனையை கலைத்து அங்கே வந்து நின்று முகமன் கூறிய காவலனின் வருகை .

அவனது வருகையால் யோசனையிலிருந்து விடுபட்ட கருணாகரன்" என்ன விசயம்?" என்றான் அதட்டலான குரலில்.

" பிரபு. தங்களை காண அரபு தேசத்திலிருந்து முகமது வந்திருக்கிறார்" என்றான் காவலன்.

" வரச் சொல் " என்றான் கருணாகரன்.மதிமாறனுக்கு எதிராக எழப்போகும் புரட்சியை அடக்கவும், சிகப்பு முகமூடியை பிடித்து அவனது ஆட்களை கொல்லவும் மலை நாட்டிலிருந்து கணிசமான ஆயுதங்கள் முத்தழகியில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. போருக்கு தேவையான புரவிகளை வாங்கி கொள்ளவும் தயாநிதி அனுமதி தந்திருந்தார். ரகசிய தீவிற்கு தேவையான குதிரைகளை வழக்கமாக அரபுதேசத்து குதிரை வணிகனான முகமதுவிடமிருந்து கொள்முதல் செய்வது தான் வழக்கம். தனக்கு தேவையான குதிரைகளை சொல்லி ஓலை எழுதி அனுப்பியதுடன் அதை அப்படியே மறந்து விட்டான் கருணாகரன்.

பல கடல்களை, கப்பல்களை தாண்டி தன் கைக்கு வந்து சேர்ந்த ஓலையை படித்த முகமது தரமான குதிரைகளை கூட்டிக் கொண்டு ஒரு தனி கப்பலில் தன் ஆட்களோடு ரகசிய தீவிற்கு வந்து சேர்ந்து விட்டான்.

கருணாகரனின் மாளிகைக்குள் நுழைந்த முகமது முகமன் கூறி நின்றான்.

"வா முகமது! பயணம் எப்படி இருந்தது?" என்றான் கருணாகரன் அவனை வரவேற்றபடி.

"அல்லாவின் கருணையினால் நல்லபடியாக வந்து சேர்ந்து விட்டேன் பிரபு " என்றான் முகமது.

"நான் சொன்னபடி குதிரைகள் அனைத்தும் ?"

" பத்திரமாக கொண்டு வந்து சேர்த்து விட்டேன். இனி நீங்கள் அதை பார்வையிட்டு தேர்ந்தெடுப்பது மட்டும் தான் பாக்கி"

"நீண்ட தூர பயணத்தில் வெகுவாக களைத்திருப்பாய். முதலில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறு, நம் வியாபாரத்தை பிறகு பேசுவோம். யார் அங்கே ? முகமதுவும் அவனது ஆட்களும் தங்க வசந்த மாளிகையை தயார் படுத்துங்கள்"

சில காவலர்கள் கருணாகரன் முன்பு வந்து வணங்கினர்.

"வசந்த மாளிகையை உடனே தயார் செய்கிறோம் பிரபு " என்றவர்கள் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

"உன் வருகை எதிர்பாராமல் நிகழ்ந்து விட்டதால் உன் இருப்பிடத்தை தயார் செய்ய சற்று தாமதமாகிறது. மாளிகை தயாராகும் வரை நாம் ஏதாவது பேசிக் கொண்டிருப்போம். உனக்கு இதில் சம்மதம் தானே?"

"மறுப்பேனா? என்னுடன் உரையாடுவது நீங்கள் காட்டும் பெரும் கருணையல்லவா? ஆமாம். எனக்கு ஒரு சந்தேகம்."

" கேள்"

"என்னிடம் திடிரென்று இத்துணை குதிரைகளை கொள்முதல் செய்ய என்ன காரணம்? இங்கே போர் ஏதாவது நடைபெற போகிறதா?"

"சரியாக சொன்னாய். விரைவிலேயே இங்கே ஒரு போர் துவங்க போகிறது. அதற்கான முஸ்தீபுகள் துவங்கி விட்டன. இதில் யார் முந்தி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி என்ற இக்கட்டான நிலைமை. அதனால் தான் முந்தி கொண்டு முதல் ஆளாக உன்னிடம் குதிரைகளை கொள்முதல் செய்கிறேன்"

" வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். நீங்கள் புத்திசாலி என்பதை மெய்பித்து விட்டீர்கள்"

" பாராட்டுக்கு நன்றி முகமது .இந்த நீண்ட பயணத்தில் சுவராஸ்யமான சம்பவங்கள் ஏதாவது நடந்திருந்தால் அவற்றை கூறு. அவற்றை கேட்டு மகிழ்கிறேன்"

"சுவாரஸ்யமான விசயம் என்று எதுவும் நடைபெறவில்லை. ஆனால் ஐயத்திற்கு இடமான ஒரு சம்பவம் நடந்தது "

"ஐயத்திற்கு இடமான சம்பவமா? இது என்ன புதிர் போடுகிறாய்? விளக்கமாக கூறு"

" கூறுகிறேன் பிரபு. நாங்கள் குதிரைகளை ஏற்றிக் கொண்டு அரபு தேசத்திலிருந்து
கிளம்பிய பின் எங்கள் பயணத்தில் எந்த இடர்பாடுகளும் நேர வில்லை.நிர்மலமான வானமும்,மெல்லிய காற்றும் எங்கள் பயணத்திற்கு உதவி செய்தன. இயற்கை இடர்பாடுகள் சில சமயம் ஏற்பட்ட போது என்னுடைய மாலுமிகள் அதை திறமையாக சமாளித்து கலத்தை செலுத்தினர்.

அப்படி ஒரு நாள் எங்கள் பயணம் நடந்து கொண்டிருந்த போது எங்கள் கப்பலின் மீகாமன் தொலைதூரத்தில் ஒரு கப்பல் நின்று கொண்டிருப்பதை தொலைநோக்கி மூலமாகப் பார்த்தான். முதலில் அது கடல் கொள்ளையர்களின் கப்பல் என்று தான் நினைத்தோம். ஆனால் என் கப்பலின் மாலுமி மட்டும் அந்த கப்பல் நங்கூரம் பாய்ச்சப்பட்டு நடுக்கடலில் நிற்பதாக கூறினான். நாங்கள் தொலைநோக்கியில் பார்த்து அந்த கப்பலில் நங்கூரம் இல்லாததை உறுதி செய்து கொண்டோம். ஒரு வேளை நடுகடலில் கப்பலில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு பழுதாகி நிற்க கூடுமோ என்று சந்தேகித்தோம். அவர்களுக்கு உதவி செய்யலாம் என்று நாங்கள் அந்த கப்பலை நெருங்கினோம். அந்த கப்பலில் இருந்தவர்கள் எங்களின் கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை. ஒரு கேள்விக்கு ஓவ்வொருவரும் வெவ்வேறு பதில்களை கூறினார்கள். அவர்களின் பேச்சும், போக்கும் விசித்திரமாக இருந்தது. அவர்களின் பேச்சிலிருந்து அந்த கப்பலுக்கு மீகாமன் இல்லை என்று தெரிந்தது. கட்டுப்படுத்த யாரும் இல்லாத செம்மறியாட்டு கூட்டம் போல் அந்த கப்பல் இருந்தது. எங்கள் உதவி தேவையில்லை என்று அவர்கள் உதாசீனம் செய்ததால் நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம். அவர்கள் யார் எங்களிடம் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்று எனக்கு புரியவில்லை" என்றான் முகமது.

கருணாகரனுக்கு அந்த கப்பல் யாருடையது என்று தெளிவாக தெரிந்து விட்டது. அந்த கப்பல் நீலனிடமிருந்து நஞ்சுண்டன் கடத்தி சென்ற முத்தழகி தான் என்பது அவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் புரிந்து விட்டது.
அவன் மனம் மகிழ்ச்சியில் குதித்து கூத்தாடியது. முகமதை கட்டியணைத்தவன்"நல்ல செய்தி சொன்னாய் முகமது. அந்த கப்பலை நீ எங்கே பார்த்தாய் என்ற அடையாளத்தை கூறு. அந்த கப்பலைத் தான் நான் இத்தனை நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றான் கருணாகரன்.

முகமது அந்த இடத்தின் அடையாளத்தை எடுத்து கூறினான். அவன் பேசி முடிப்பதற்கும் வசந்த மாளிகை தங்குவதற்கு தயாரான செய்தியும் ஓரே நேரத்தில் வந்து சேர்ந்தது.

" முகமது. நீ இன்று வசந்த மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து கொள். நாம் நாளை சந்திப்போம்" என்றான் கருணாகரன்.

முகமது விடைபெற்று கிளம்பினான்.

துடிக்கும் இதயத்தோடு நீலனிடம் இந்த செய்தியை உடனே சொல்லியாக வேண்டும் என்ற துடிப்போடு கிளம்பினான் கருணாகரன்.

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 29

ஆன்மீகத்தின் புதையல்

கீழே கிடந்த எலும்பு கூட்டின் எலும்புகளை சோதித்த ஆதித்தன் தன்னுடைய கணிப்பை தன்னுடைய நண்பர்களுக்கு எடுத்து கூறினான். ஆதித்தனின் மதி யுகத்தையும் இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்ற அவனது அவதானத்தையும் நேரில் பார்த்த இருவரும் எதுவும் பேசாமல் வாயடைத்து போய் நின்றிருந்தனர்.

எதுவும் பேச தோன்றாமல் இருவரும் திகைப்புடன் ஆதித்தனையே பார்த்து கொண்டிருந்தனர். இருவரும் வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்த ஆதித்தன்" என்ன நண்பர்களே ஏன் என்னை இப்படி வைத்த கண் எடுக்காமல் இப்படி பார்க்கிறீர்கள்?" என்றான் எதுவும் புரியாமல் .

"இல்லை ஆதித்தா! உன்னை பற்றியும் உன் சகோதரனை பற்றியும் நிறைய பேர் பேசிகேட்டிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் நான் அதை நம்ப மறுத்து வந்தேன். ஆனால் இன்று உன் திறமையை நான் நேரிலேயே பார்த்து விட்டேன்" என்றான் கடோத்கஜன்.

" நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இங்கு இதுதான் நடந்திருக்கும் என்று நீயூகமாக சொல்வதை என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை" என்றான் யவனன் வியப்புடன்.

"போதும் புகழ்ச்சி .நாம் காரியத்தில் கவனம் செலுத்துவோம். அங்கே உணவு கொண்டு வருபவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை. அதனால் அவர்களை வீழ்த்துவது எளிது. அவர்களில் யார் தலைவன் என்று தெரியவில்லை. அவனை மட்டும் கண்டுபிடித்து அவனது கழுத்தில் கத்தியை வைத்து விட்டால் காரியம் முடிந்தது "

"இங்கே நடக்கும் நிகழ்வுகள் எதுவும் எனக்குப் புரியவில்லை. இங்கே காட்டுவாசிகள் மனிதர்களை கொன்று தின்பதாக நகரத்தில் பேசிக் கொண்டார்கள். இங்கே என்னடாவென்றால் அந்த பயமே இல்லாமல் ஓரு கும்பல் உணவோடு இங்கே வந்து கொண்டிருக்கிறது. கொன்று தின்னப் படாமல் இருக்கும் ஒரு எலும்பு கூடு வேறு குழப்பத்தை அதிகரிக்கிறது." என்றான் யவனன்.

"காட்டிற்குள் வரும் நம்முடைய விருந்தாளிகள் வாயை திறந்து உண்மையை பேசினால் எல்லாமே தெளிவாகிவிடும்" என்றான் ஆதித்தன்.

"நீ சொல்வதும் சரிதான். இப்போது நாம் என்ன செய்ய போகிறோம்? நம்முடைய அடுத்த திட்டம் என்ன?"

" திட்டத்தின் மைய மே நீ தான். நான் சொல்வதை நீ அப்படியே செய்தால் போதும் " என்ற ஆதித்தன் யவனனின் காதில் கிசுகிசுத்தான்.

"நீ சொன்னது புரிந்தது. நான் அதன் படியே நடக்கிறேன்" என்ற யவனன் வண்டி வரும் பாதையை நோக்கி செடிகொடிகளின் நடுவே மறைந்து மறைந்து முன்னேறினான்.

"நான் என்ன செய்வது?" என்றான் கடோத்கஜன்.

"பொறு. உனக்கான வேலையை நான் பிறகு கூறுகிறேன்" என்ற ஆதித்தன் வில்லை எடுத்து அம்பை நாணேற்றினான்.

எதுவும் புரியாமல் குழப்பத்தோடு நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினான்கடோத்கஜன்.

முன்னதாக பதுங்கி பதுங்கி வண்டி வரும் பாதையை அடைந்த யவனன் சாலையின் குறுக்காக படுத்து கொண்டான். அவ்வப்போது வண்டி வருகிறதா என்று தன் தலையை தூக்கி பார்த்து கொண்டான்.

மெதுவாக பாதையில் வந்த வாகன அணி வரிசை சாலையின் குறுக்காக படுத்திருப்பவனை பார்த்ததும் சற்று தயங்கி நின்றது. வாகன ஓட்டி வண்டியிலிருந்து குதித்து இறங்கினான். பின்புறமாக வந்த வண்டிகளை நிற்கும் படி சைகை செய்தவன் "தலைவரே! நம் பயணத்தில் எதிர்பாராத இடையூறு ஏற்பட்டுவிட்டது. யாரோ ஒருவன் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கிறான்" என்று கத்தினான்.

"நன்றாக பார். இந்த பகுதியில் யாரும் உயிரோடு நடமாட வாய்ப்பில்லை நம்மை தவிர. நம் தோழர்கள் அவனை கொன்று போட்டிருக்கலாம். அந்த பிரேதத்தை தூக்கி ஓரமாக போட்டுவிட்டு பயணத்தை தொடங்கலாம்" என்றான் தலைவன் போலிருந்தவன்.

இதை கேட்டவுடன் யவனன் தனக்குள் புன்னகைத்து கொண்டான்.திட்டத்தின் அடுத்த பகுதியை நிறைவேற்ற வேண்டியது தான் என்று நினைத்தவன் காக்காய் வலிப்பு வந்தவனைப் போல் கை கால்களை ஆட்ட துவங்கினான். இறந்த பிணம் என்று நினைத்தவன் உடலில் அசைவு ஏற்பட்டதும் நடந்து வந்தவன் நின்று விட்டான்.

"தலைவரே ! நாம் நினைப்பதுபோல் அவன் இன்னும் இறக்கவில்லை.காக்காய் வலிப்பு வந்து விழுந்து கிடக்கிறான் போல் தெரிகிறது"

" என்ன உளறுகிறாய்?"

"நான் சொல்வதை நம்பாவிட்டால் நீங்களே வந்து பாருங்கள்"

"இரு . நானே வருகிறேன்"

தலைவன் வண்டியிலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினான். தூரத்தில் நின்று யவனனை பார்த்தவன் "விசித்திரமாக இருக்கிறது. இங்கே இவன் எப்படி வந்து சேர்ந்தான்? இவனை நம் ஆட்கள் எப்படி உயிருடன் விட்டு வைத்தார்கள்?" என்று அடுத்தடுத்த கேள்விகளை வீசினான்.

" இவனை இந்த யவ னனை நான் எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே?" என்று தலையை தட்டிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தான்.

சட்டென்று அவனுக்கு காலையில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்து விட்டன. காலையில் துறைமுகத்தில் நLந்த கலவரத்தை வேடிக்கை பார்த்தவர்களில் அவனும் ஒருவன். அங்கே நடந்தவற்றில் யவனன் மட்டும் அவனுக்கு தனித்து தெரிந்திருந்தான். நாடு விட்டு நாடு வந்தவன் பிழைக்கும் வழியைப் பார்க்காமல் ஏன் இப்படி சிக்கலில் சிக்கி கொள்கிறான் என்று அவன் காலையிலேயே நினைத்திருந்தான்.
"இவன். இந்த யவனன் அரசின் கைதியாக நேற்று காலையில் சிறை செய்யப்பட்டான். நேற்று இரவு சிறையில் இருந்து எப்படியோ தப்பித்து விட்டான் போல் தெரிகிறது. நகரத்தில் இவனால் பதுங்க முடியாது. இவனது உடல் நிறமும் முடியின் வண்ணமும் இவனை தனியாக காட்டிவிடும். அதனால் விரைவில் பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் இந்த காட்டிற்குள் வந்து விட்டான் போலிருக்கிறது. இங்கே பதுங்கி இருந்தவன் காக்காய் வலிப்பால் பாதிக்கப்பட்டு விழுந்து விட்டான் போலிருக்கிறது" என்றான்.

" இவனை அரசு தேடிக் கொண்டிருக்கிறது. இவனை நாம் எப்படி காப்பாற்றுவது? இவனை காப்பாற்றினால் தேசதுரோக குற்றம் நம் மீது வந்து விடுமே?" என்றான் பணியாள்.

"நீ சொல்வதும் சரிதான். ஆனால் அதற்காக நாம் இவனை இப்படியே விட்டு விட்டு போக முடியாது. நாம் உதவி செய்யாவிட்டால் இவன் கண்டிப்பாக இறந்து விடுவான். அந்த பாவம் வேறு நம்மை சேர்ந்து விடும். சரி. நீ போய் அவனை தூக்கு "

"என்னை மன்னித்து விடுங்கள். நான் அவனை காப்பாற்ற முன்வர மாட்டேன். நாளை ஏதாவது விவகாரமாக நடந்தால் நான் தான் உதவி செய்ததாக சொல்லி என்னை மாட்டிவிட்டு விடுவீர்கள். உங்களுக்கு மேலிட செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. நீங்களே அவனை காப்பாற்றுங்கள். நாளை ஏதாவது பிரச்சனை வந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும். என் போன்ற சாமான்ய ஆளால் அது இயலாது"
என்று நழுவிக் கொண்டான் பணியாள்.

"முட்டாள் . விலகி நில். என் துணைக்கு யாராவது வாருங்கள்" என்றான் தலைவன்.

அனைவரும் அமைதியாக தலை குனிந்து நின்றனர். அதை பார்த்து கோபமடைந்த தலைவன்" கோழைகள். நானே போய் அவனை காப்பாற்றி கைது செய்து அரசிடம் ஒப்படைத்து நல்ல பெயர் வாங்கி கொள்கிறேன்" என்ற தலைவன் கீழே கிடந்த யவ னனை நோக்கி நடந்தான்.

யவனனுக்கு அருகே உட்கார்ந்து குனிந்தவனின் வயிற்றை முத்தமிட்டது ஒரு குறுவாள்.அதுவரை வலிப்பு வந்தது போல் நடித்து கொண்டிருந்த யவனன் சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தான்.

"முட்டாள்களே! இது ஒரு நாடகம் .இவனை உடனே பிடியுங்கள்." என்று தலைவன் கத்தினான்.

பணியாட்களில் ஒருவன் தன் இடுப்பில் இருந்த வாளை உருவமுனைந்த போது எங்கிருந்தோ வந்த அம்பொன்று அவன் கையை படுகாயப்படுத்தியது.

"யாரும் வீர சாகசம் எதையும் செய்ய முனையாதீர்கள். முனைந்தால் உயிர் உடலை விட்டு பறந்து விடும். உங்கள் தலைவனின் தலை தரையில் உருண்டு விடும்" என்று எச்சரித்தான் யவனன். அவனது எச்சரிக்கையும் அவன் தலைவன் கழுத்தில் வைத்திருந்த வாளையும் பார்த்தவர்கள் எதையும் செய்ய நினைக்காமல் அமைதியாக நின்றனர்.

தலைவனைப் பார்த்து புன்னகைத்த யவனன்" நான் மட்டும் சிறையில் இருந்து தப்பியதாக தப்பு கணக்கு போட்டு விட்டாய். என்னுடன் இன்னும் இருவர் கூடுதலாக தப்பி வந்திருக்கின்றனர். அவர்கள் தான் மறைந்திருந்து அம்பு ஏய்தவர்கள் " என்றான்.

"உயிரை காப்பாற்ற வந்த என்னை நீதவறாகப் புரிந்து கொண்டு விட்டாய்" என்றான் நைச்சியமாக தலைவன்.

"போதும் நிறுத்து. உன் பசப்பு வார்த்தைகளை என்னிடம் வீணடிக்காதே. என்னை அரசிடம் பிடித்து கொடுக்க நினைத்தவன் தானே நீ ? நீபேசியது அனைத்தையும் நான் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன்."

"சண்டாளன். எல்லாவற்றையும் கேட்டு தொலைந்து விட்டான்" என்று முணுமுணுத்தான் தலைவன்.

ஆதித்ததும், கடோத்கஜனும் மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தனர்.

"யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றான் கஷ்டப்பட்டு அதிகார தோரணையை வரவழைத்து கொண்ட தலைவன்.

"அது நான் கேட்க வேண்டிய கேள்வி. வினோதமாக நீ எங்களை கேட்கிறாய்" என்றான் ஆதித்தன்.

கடோத்கஜன் உணவு அண்டா ஓன்றை திறந்து பார்த்தான்.

"இந்த காட்டில் வசிக்கும் நர மாமிசபட்சிணிகள் எப்போதிருந்து சைவ உணவுக்கு மாறினார்கள்? கலவை சாதத்தை எடுத்து போகிறீர்களே?" என்றான் கடோத்கஜன்.

"உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை" என்றான் தலைவன் திமிராக.

"சரி.எனக்கு நீ பதில் சொல்ல வேண்டாம். என் குறுவாளுக்கு பதில் சொல் " என்ற ஆதித்தன் தலைவனின் மார்பில் குறுவாளை வைத்தான்.

"நீ பதில் சொல்ல தாமதிக்கும் ஓவ்வொரு மணித்துளிக்கும் என் கத்தி கொஞ்சம் கொஞ்சமாக உன் மார்பினுள் இறங்கும் " என்றான் ஆதித்தன்.

அவன் குறுவாளை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்த ஆரம்பித்தான். தலைவனின் மேலாடை ரத்தத்தால் நனைய ஆரம்பித்தது.

"சித்ரவதையை நிறுத்து. நான் உண்மையை சொல்லிவிடுகிறேன்" என்றான் தலைவன்.

"அப்படி வா வழிக்கு .சொல் உண்மையை .இந்த உணவு யாருக்கு செல்கிறது?"

" காட்டுவாசிகளுக்கு "

" இதை யார் அனுப்பி வைப்பது?"

"நான் சொல்வதை நீ நம்ப மாட்டாய்"

"நீ சொல்வதை நான் நம்புகிறேன். உண்மையை சொல் "

"எங்களை காட்டுவாசிகளுக்கு உணவு கொண்டு செல்ல பணித்தது மர்மயோகி"

" என்ன?" என்றான் யவனன் அதிர்ச்சியுடன் .

"இன்னொரு விசயம். காட்டில் இருப்பவர்கள் காட்டுவாசிகள் அல்ல" என்றான் தலைவன்.

மூவரும் குழப்பத்தோடு ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு 

அத்தியாயம் 28

இறந்தவன் கடிதம்

வள நாட்டின் அரசன் அங்குலி மாலன் தனக்கு எதிரே நின்றிருந்த அமைச்சர் அம்பலவாணனையே உற்று பார்த்து கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே இருந்த அம்பலவாணரின் முகம் சிந்தனை வசப்பட்டிருந்தது. அவரது சிந்தனைக்கு காரணம் அவர் கையிலிருந்த ஓலை.

"அந்த ஓலையை முழுதாக படித்து முடித்து விட்டீர்களா?" என்றான் அங்குலி மாலன்.

"படித்து விட்டேன். இந்த ஓலை எப்போது வந்தது? எங்கிருந்து வந்தது?" என்றார் அம்பலவாணர்.

"சற்று முன் தான் இந்த ஓலை புறா மூலம் இங்கு வந்து சேர்ந்தது. இதிலிருக்கும் தகவலைப் பற்றி விவாதிக்கத்தான் நான் உங்களை உடனடியாக அழைத்து வரச் சொன்னேன்."

"இந்த ஓலையை எழுதிய நபர் இறந்து ஐந்து வருடங்களாகி விட்டது.இறந்தவனிடமிருந்து ஓலை வந்திருப்பது எனக்கு விசித்திரமாக தோன்றுகிறது "

"எனக்கும் தான். இந்த ஓலையை எழுதிய நபர் யார்? அவனைப் பற்றி எனக்கு எந்த நினைவும் இல்லை.உ ளவும், ஓற்றும் உங்கள் கண்காணிப்பின் கீழ் வருகிறது. அதனால் இவனைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அவனைப் பற்றிய முழு விவரங்களையும் எனக்கு கூறுங்கள்"

" கூறுகிறேன். அதற்கு முன்னால் இந்த ஓலையை மீண்டும் ஒருமுறை சத்தமாக வாசிக்கிறேன். கவனமாக கேளுங்கள்" என்ற அம்பலவாணர் கையில் இருந்த ஓலையை பிரித்து அதை சத்தமாக வாசிக்க துவங்கினார்.

"வள நாட்டின் மன்னருக்கு!
தங்களின் விசுவாசமான குடிமகன் ரகசிய தீவிலிருந்து எழுதுவது. நான் அந்த மார்க்கதரிசியின் தங்க புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டேன். அதை தாயகம் கொண்டு வருவதற்கான முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறேன். விரைவில் வெற்றி செய்தியுடனும் தங்கப்புதையலுடனும் தங்களை சந்திப்பேன்.

நான் யார் என்று அடையாளம் புரியாவிட்டால் ஒற்றர் படை தலைவரான அமைச்சர்அம்பலவாணரிடம் இந்த லிகிதத்தை காட்டவும். அவருக்கு இந்த கடிதத்தின் சராம்சம் முழுதாக புரியும். ஏனென்றால் வள நாட்டை பொறுத்தவரை நான் இறந்து போனவன். ஆனால் ஆண்டவன் அருளால் நான் சாகவில்லை என்பது தான் உண்மை. விரைவில் தாயகம் திரும்ப காத்திருக்கிறேன்

இப்படிக்கு

கடிதத்தின் இறுதியில் கையெழுத்திற்கு பதில் ஒரு திரிசூலம் வரையப்பட்டிருந்தது.

ஓலையை சுருட்டி வைத்த அம்பலவாணர் அங்குலி மாலனை நிமிர்ந்து பார்த்தார்.

" அவன் தன் பெயரை வெளியே தெரிவிக்க விரும்பவில்லை போல " என்றான் அங்குலி மாலன்.

"நாம் எதிரி நாட்டுக்குள் நுழைந்து உளவறிவது போல எதிரிகளும் நம் நாட்டிற்குள் ஊடுருவி உளவு வேலையில் ஈடுபடலாம். அவர்கள் நம் ஆட்களை இனம் காணாதிருக்க நம் ஆட்களின் உண்மை பெயரை மறைத்து விடுவோம். வேறு பொய்யான பெயரை அவனுக்கு சூட்டி விடுவோம். கடிதம் எழுதும் போது சூசகமான சின்னங்களை கையெழுத்திற்கு பதிலாக எழுதுவது நம் வழக்கம்."

"அந்த திரிசூல சின்னத்தை வைத்து அவனை அடையாளம் கண்டுபிடித்து விட்டீர்களா?"

" கண்டுபிடித்து விட்டேன். இந்த சின்னம் நம்முடைய ஆளுடையது என்பதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. அவனுடைய பெயர் திருமூர்த்தி .நம் ஓற்றர் படையில் இருக்கும் வெகு திறமையான ஆட்களில் அவனும் ஒருவன்."

" அவனுக்கு கடைசியாக என்ன பணி கொடுக்கப்பட்டது?" என்றான் அங்குலி மாலன்.

"உங்களுக்கே நன்றாக தெரியும். மார்க்கதரிசி என்னும் கடல் கொள்ளையன் நம் நாட்டு வணிக கப்பல்களையும், மலைநாட்டு வணிக கப்பல்களையும் கொள்ளையடித்து வந்தது. அவனை பிடிக்கவும் அவனிடம் இருக்கும் தங்கத்தை கைப்பற்றவும் நம்மால் நியமிக்கப்பட்டவன் தான் இந்த திருமூர்த்தி என்கிற ஒற் றன். இவனை இந்த பணியில் ஈடுபடுத்த பிரத்யேகமான காரணம் ஓன்று உண்டு. அவனது தகப்பன் ஒரு கடலோடி .அதனால் கடலைப் பற்றிய அனுபவம் அவனுக்கு அதிகம் உண்டு. அதனால் இந்த பணிக்கு இவன் தான் சரியான ஆள் என்று இவனை நியமித்தேன்.

இவனும் எப்படியோ மார்க்கதரிசியின் கூட்டத்தில் ஊடுருவி விட்டான்.வெகு விரைவிலேயே தன்னுடைய அனுபவம் வாய்ந்த அறிவால் மார்க்கதரிசியின் நம்பிக்கையை பெற்று விட்டான். தன்னுடைய நடவடிக்கைகளை பற்றி மாதம் ஒரு முறை ஓலை அனுப்பி எனக்கு தகவல் தெரிவிப்பான். ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவனிடமிருந்து ஓலை வருவது திடிரென்று நின்று விட்டது. நான் விசாரித்த போது புயலில் சிக்கிய மார்க்கதரிசியின் கப்பல் கடலில் மூழ்கி விட்டதாகவும் அப்போது தப்பிபிழைத்தவர்கள் ரகசிய தீவில் எங்கோ ஓரு இடத்தில் புதையலை புதைத்து வைத்து விட்டதாகவும் கேள்விப்பட்டேன். தப்பி பிழைத்தவர்களில் நம்முடைய ஆளும் இருந்தால் கண்டிப்பாக எனக்கு கடிதம் எழுதுவான் என்று நினைத்தேன். ஆனால் அவனிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லை. அதனால் அவன் இறந்திருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். ஆனால் இன்று இறந்தவனிடமிருந்து கடிதம் வந்திருப்பது தான் புதிராக இருக்கிறது"

"இந்த கடிதம் அவன் எழுதியது தான் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இல்லையே?"

"ஏன் அப்படி கேட்கிறீர்கள்?"

" என் கேள்விக்கு காரணம் இருக்கிறது. ஐந்து வருடங்களாக நம்மை தொடர்பு கொள்ளாமல் இருக்க என்ன காரணம் இருக்க முடியும்?"

" காரணம் இல்லாமல் அவன் இப்படி செய்ய மாட்டான். ஒரு வேளை காரியம் ஜெயமான பின்பு நம்மை தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்திருக்கலாம். என்ன காரணம் என்பது அவனை கேட்டால் தான் தெரியும்."

" நல்லது. இப்போது நாம் என்ன செய்வது?"

"வேறு என்ன செய்ய முடியும்? அடுத்த ஓலைவரும் வரை காத்திருக்க வேண்டியது தான் " என்றார் அம்பலவாணர்.

" காத்திருப்போம். களவு போனவள நாட்டின் செல்வங்களை திரும்ப பெற நான் காத்து கொண்டிருக்கிறேன்" என்றான் அங்குலி மாலன்.

ரகசிய தீவில்!

ஆதித்தனும், யவனனும், கடோத்கஜனும் மறைந்து நின்று நடப்பதை கவனித்து கொண்டிருந்தனர்.

பெரிய பெரிய பாத்திரங்களை சுமந்து கொண்டு வாகனங்கள் மெதுவாக வந்து கொண்டிருந்தன.

"மனிதர்களை கொன்று தின்னும் நர மாமிசபட்சினிகன் வசிக்கும் காட்டிற்குள் இந்த வாகனங்கள் போவது போல் தெரிகிறது" என்றான் யவனன்.

"இது இன்று மட்டும் நடப்பதல்ல. வாடிக்கையாக தினமும் நடக்கும் சம்பவம் " என்றான் ஆதித்தன் அமைதியாக .

"iஉனக்கு எப்படி இது தெரியும்?" என்றான் கடோத்கஜன்.

" வண்டி வரும் பாதையை கவனியுங்கள். வண்டி அடிக்கடி இதில் பயணமாவதால் வண்டி சக்கரம் தரையில் படும் இடங்களில் புற்கள் வளராமல் இருக்கின்றன. இன்று மட்டும் வண்டிகள் வருவதாக இருந்தால் அந்த இடங்களில் புற்கள் வளர்ந்திருக்கும் "

" புத்திசாலி தான் நீ " என்றான் யவனன்.

"இன்னொன்றையும் கூறுகிறேன். கேட்டு விட்டு மொத்தமாக பாராட்டு. இந்த வண்டி குறைந்தது ஒரு மணி நேரமாவது பயணமாகி இருக்க வேண்டும். வண்டிக்குபின்னால் நடந்து வரும் ஆட்கள் அடிக்கடி வேர்வையை துடைத்து கொண்டிருக்கிறார்கள். அதிகாலையிலேயே நடை பயிற்சியில் ஈடுபட்டதால் வருவது தான் அந்த வியர்வை . மாடுகளின் வாயில் நுரை தள்ளுவதை வைத்து பார்த்தால் உணவு சமைக்கும் இடம் ஒரு மணி நேர பயண தூரத்தில் தான் இருக்க வேண்டும்."

"ஆஹா "

"மூன்று வேளைக்கு மான உணவு தான் இங்கு வந்திருக்கிறது. இது வாடிக்கையாக நடக்கும் சம்பவம் போல் தெரிகிறது."

"எனக்கு பயங்கரமாக பசிக்கிறது. நம் ஆட்களும் பசியில் வாடுகிறார்கள். நாம் அந்த உணவை கைப்பற்றினால் என்ன?" என்றான் கடோத்கஜன்

"நானும் அதைத்தான் நினைத்தேன். வாடிக்கையாக உணவு போகும் இடத்திற்கு போகாவிட்டால் என்ன நடக்கும் என்று பார்க்க விரும்புகிறேன்" என்றான் ஆதித்தன்.

"சரி. பேசியது போதும். நாம் விரைவாகச் சென்று அந்த வண்டிகளை கைப்பற்றுவோம்." என்றான் யவனன்.

" அப்படியே வண்டிகாரர்களை விசாரிப்போம்" என்றான் கடோத்கஜன்.

"உணவு ேபாக வேண்டியவர்களுக்கு போகாது. உணவு கொண்டு போனவர்களும் திரும்பி வரவில்லை. இரண்டு பக்கமும் இன்று குழப்பமான நிலைமை ஏற்பட போகிறது " என்று சிரித்தான் ஆதித்தன்

"நான் அந்த திசையில் யோசிக்கவேயில்லை. இப்போது என்ன செய்வது?"

"நம் திட்டப் படிவண்டிகளை மறிப்போம். வாருங்கள் போகலாம்" என்றான் ஆதித்தன்.

மூவரும் பு தர்களை கடந்து மரங்களின் மறைவில் முன்னேறினர். கடோத்கஜன் எதையோ மிதித்து விட சடக் என்று எழுந்தது சத்தம்.

சத்தம் வந்த திசையில் பார்த்தான் யவனன். அங்கே ஒரு எலும்பு கூடு கிடந்தது.

"அந்த காட்டுவாசிகள் மனிதர்களை தின்று விட்டு எலும்பை இங்கே எறிந்திருக்கிறார்கள்" என்றான் கடோத்கஜன்.

அந்த எலும்பு கூட்டை உற்று பார்த்த ஆதித்தன் "உங்கள் நினைப்பு தவறு. பொதுவாக காட்டுவாசிகள் மனித உடலை பகுதி பகுதியாக பிய்த்துத்தான் தின்பார்கள். இப்படி முழுதாக விட்டு வைக்க மாட்டார்கள். இதோ. இந்த எலும்பு கூட்டின் நெஞ்செலும்பை பாருங்கள். உடைந்திருக்கிறது. யாரோ இவனது மார்பில் கத்தியால் குத்தியிருக்கிறார்கள். அதில் தான் இவனது நெஞ்செலும்பு உடைந்திருக்கிறது. இவனது மண்டையோட்டின் பின் பகுதி சேதமடைந்திருக்கிறது. இவனை யாரோ கல்லால் பின்னால் இருந்து தாக்கியிருக்க வேண்டும். காயப்பட்டு விழுந்தவனின் மார்பில் குறுவாளைபாய்ச்சி கொன்றிருக்கிறார்கள்" என்றான் ஆதித்தன்.

"நீ சொல்வதை வைத்து பார்த்தால் காட்டிற்குள் இருப்பது?" என்றான் யவனன்.

" காட்டுவாசிகள் இல்லை" என்று சிரித்தான் ஆதித்தன்.

ரகசிய தீவு அத்தியாயம்27

ரகசிய தீவு

அத்தியாயம் 27

இடுகாட்டில் எரி அம்பு

இடுகாட்டில் கருணாகரன் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இடுகாட்டின் நடுவே செங்கோடனின் உடல் சிதையின் மீது கிடத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் கூட்டம் நடக்கும் சம்பவங்கள் எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்தது. செங்கோடனின் சவத்தை இங்கே கொண்டு வந்து வைத்து எதை சாதிக்க நினைக்கிறான் மதி மாறன் என்று யாருக்கும் புரியவில்லை. கருணாகரனுக்கும் அதே சந்தேகம் இருந்தது. அனாதை பிணங்களை அடக்கம் செய்வது தான் ரகசிய தீவு இதுவரை கடைபிடித்து வந்த விதிமுறை.

மதிமாறன் அந்த வழக்கமான விதிமுறையை மீறி எதற்காக செங்கோடனின் பிரேதத்தை அடக்கம் செய்யாமல் எரிக்கும் வழக்கத்திற்கு மாற்றினான் என்ற சந்தேகம் அவனது மனதில் எழுந்தது. அது மட்டுமல்லாமல் செங்கோடனின் பிரேதத்திற்கு தீ மூட்ட போவது யார் என்ற கேள்வியும் கருணாகரனின் மனதில் உலா வந்தது. சரி என்ன தான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டிருந்தான். அவனுக்கு அருகே நின்ற வீரபாகுவின் பார்வை இடுகாட்டின் ஓரத்தில் சற்று மேடிட்டிருந்த மண் குவியல்களின் மேல் நிலைத்தது.

அந்த இடத்தில் பணிரெண்டு இடங்களில் மண்மேடிட்டிருந்தது. எப்போதோ இறந்து போனவர்களை பு தைத்த புதை குழி அது.வீரபாகுவின் பார்வை அங்கே நிலைப்பதை பார்த்த கருணாகரன்" என்ன வீரபாகு ? பழைய ஞாபகமா?" என்றான்.

"ஆமாம். இவர்களால் நள்ளிரவில் நான் படும் பாடு எனக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அதற்கு பயந்து நான் இரவில் இங்கிருந்து ஓடி விட முடியாது"

"ஓடித்தான் பாரேன்"

"அந்த பன்னிரெண்டு குழிகளுக்கு அருகே எனக்காக இன்னொரு குழி வெட்டப்படும் என்பதை நான் அறிவேன்"

"புத்திசாலி தான் .நிலவரத்தை நன்றாகப் புரிந்து கொண்டு விட்டாய்" என்றான் விசமசிரிப்புடன் கருணாகரன்.

" கிடைக்க போகும் பலன் பெரிது. அதனால் தான் எல்லாவற்றையும் பல்லை கடித்து கொண்டு பொறுத்து கொள்கிறேன்"

" என் நிலைமையும் அதேதான். ஆனால் இந்த நிலைமை வெகு நாள் நீடிக்காது. சீக்கிரமாகவே நம் இருவருக்கும் விடுதலை கிடைத்துவிடும்." என்றான் கருணாகரன்.

இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக ஒரு வரை ஒருவர் பார்த்து கொண்டனர். அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் ஓளிந்திருந்தன.

அதே நேரம் பலத்த பாதுகாப்புடன் அங்கே வந்து சேர்ந்தான்மதிமாறன். குதிரையிலிருந்து இறங்கிய மதிமாறன் நேராக கருணாகரனிடம் சென்றான்.

" எல்லா ஏற்பாடுகளும் தயாரா?" என்றான் மதி மாறன் .

" எல்லா ஏற்பாடுகளும் தயார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. நீங்கள் எதிர்பார்ப்பது போல் அந்த கூத்தாடி கும்பல் இங்கே வருவது போலவோ இல்லை பதுங்கி கிடப்பது போலவோ எனக்கு தோன்றவில்லை. ஆமாம் இந்த பிரேதத்திற்கு தீ வைக்கப் போவது யார்? இவனது மகன் தானே இவனுக்கு கொள்ளி வைக்க வேண்டும்? அவனை அழைத்து வந்து விட்டீர்களா?"

"இவனுக்கு மகன் இல்லை. மகள் மட்டும் தான். அதுவும் வளர்ப்பு மகன் தான் " என்று தானறிந்த உண்மையின் ஒரு பாகத்தை தன்னை அறியாமலேயே உளறி விட்டான்மதிமாறன்.

"அந்த சந்திரவதனா இவனது வளர்ப்பு மகளா ? " என்றான் கருணாகரன் இது அவன் இதுவரை கேள்விப்படாத புது விசயமாக இருந்தது.

சட்டென்று சுதாரித்து கொண்ட மதிமாறன் " ஆமாம். பெண்கள் இதுவரை இடுகாடு வந்து கொள்ளி வைத்ததில்லை. இவனுக்கு கொள்ளி வைக்க மகனும் இல்லை. அதனால் வேறு வழியில்லை."

" வழக்கம் போல்புதைத்து விடலாம் என்கிறீர்களா?"

"இல்லை. நான் அப்படி சொல்லவில்லை. கொள்ளியை நான் வைத்தால் என்ன?"

"நாட்டின் தலைவன் என்ற முறையில் ஒவ்வொரு குடிமகனும் உங்கள் குழந்தை தான். அதனால் நீங்கள் கொள்ளி வைப்பதும் சரிதான்."

"அப்படியானால் அதற்கான சடங்குகளை செய்ய சொல் " என்றான் மதி மாறன் . அவனது மனம் குழப்பத்தில் இருந்தது. கூத்தாடி கும்பலோ, சிகப்பு முகமூடி யோ இங்கு இந்த நேரம் வந்தாக வேண்டுமே என்று அவன் மனம் அலை பாய்ந்தது. தன் தடுமாற்றங்களை வெளிகாட்டாமல் சடங்குகளை செய்ய துவங்கினான்மதிமாறன்.

மக்கள் அந்த சடங்குகளை கவனித்து கொண்டிருந்த போது சற்று தொலைவில் மாறுவேடத்தில் நின்று கொண்டிருந்த வில்லவன் தன் ஆட்களுக்கு சைகை காட்டினான். அவனது ஏற்பாட்டின்படி காலையிலேயே அவனது ஆட்கள் மாடு மேய்ப்பவர்கள் போல் மாடுகளையும், எருமைகளையும் அங்கே கொண்டு வந்து மேயவிட்டு விட்டு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

வில்லவன் சைகை காட்டியதை பார்த்ததும் அவனது ஆட்கள் துரிதமாக செயல்பட்டனர்.

மாடுகளையும் எருமைகளையும் அணிவகுத்து நிறுத்தியவர்கள் அவற்றை சாட்டையால் அடித்தும் வாலை முறுக்கி கடித்தும் சுடுகாட்டை நோக்கிவிரட்டி விட்டனர். மிரண்டு போன கால்நடைகள்பெருத்த சத்தத்துடன் கூட்டத்திற்குள் நுழைந்து கலவரத்தை உண்டாக்கின

கால்நடைகளுக்கு பயந்த பொதுமக்கள் அங்கும் இங்கும் மிரண்டுஓடி நிலைமையை மோசமாக்கினார்கள். காவலுக்கு இருந்த காவலர்கள் கூட கால்நடைகளுக்கு பயந்து தெறித்து ஓடினர்.

நடப்பவற்றை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்த மதிமாறன் "கருணாகரா! இங்கே என்ன நடக்கிறது? " என்று கோபத்தில் இறைந்தான்.

" என்ன நடக்கிறது என்று உங்களை போலவே எனக்கும் ஒன்றும் புரியவில்லை. நீங்கள் இங்கேயே இருங்கள் நான் என்ன நடக்கிறதென்று பார்த்து வருகிறேன்" என்ற கருணாகரன் அங்கிருந்து நகர்ந்தான்.

சுடுகாட்டில் எழுந்த புழுதி புயலுக்கு நடுவே திடிரென்று வந்து நின்றது ஒரு புரவி .அதில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் பார்த்திபன். வழக்கம் போல் அவனது முகத்தை ஓரு சிகப்பு முகமூடி அலங்கரித்து கொண்டிருந்தது. அவனது குதிரையில் அவனுக்கு முன்பாக அமர்ந்திருந்தாள் சந்திரவதனா. அவள் முகம் அழுது அழுது சிவந்து சோகத்தில் மூழ்கியிருந்தது.

"கவலைப்படாதேசந்திரவதனா! நான் திட்டமிட்டபடி என் தோழர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இது தான் நான் செயல்பட சரியான தருணம். நீ ஆசைப்பட்டது போல் உன் தந்தையின் சிதைக்கு நீயே தீ மூட்டலாம்" என்ற பார்த்திபன் தனது அம்பாரத்திலிருந்து ஓரு அம்பை வானை நோக்கி ஏவினான். அதன் பின் பக்கத்தில் இணைக்கப்பட்டிருந்த எண்ணெய் குடுவை ஒன்றும் அந்த அம்புடன் சேர்ந்தே பயணமானது. கலவரத்தை பார்த்து கொண்டிருந்த மதிமாறன் தன்னுடைய வாளை உருவிக்கொண்டு கிளம்பினான். அவனுக்கு பொது மக்கள் யார் கலகக்காரர்கள் யார் என்று பிரித்தறிய முடியவில்லை.பார்த்திபன் விட்ட அம்பு ஆகாயத்தில் பயணமாகி பிறகு தனது வேகத்தை இழந்து புவி ஈர்ப்பு விசையால் கீழ்நோக்கி பயணமானது. அதன் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த எண்ணெய் குடுவை அதன் வேகத்தை அதிகரித்தது. கீழே வந்த அம்பு நேராக சிதையில் வந்து விழுந்தது. அதன் நுனியில் இருந்த எண்ணெய் குடுவை உடைந்து சிதையில் சிதறியது.

வில்லவன் வைத்திருந்த தீப்பந்தத்தில் தன் அம்பின் நுனியை பற்ற வைத்த பார்த்திபன் " சந்திரவதனா! இதோ இந்த எரி அம்பு தான் உன் தந்தையின் சிதைக்கு தீ மூட்டப் போகிறது. இஷ்ட தெய்வத்தை வணங்கி விட்டு இதை பிடி" என்றான் பார்த்திபன்.

அவள் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கி முடித்ததும் அவளது கரத்தை அம்பில் வைத்து பிடிக்கச் செய்த பார்த்திபன் முன்பு எய்தது போலவே இம்முறையும் அம்பை எய்தான்.

அடுத்த விநாடி எரி அம்பு ஒன்று வானில் கிழித்து கொண்டு பயணமானது. என்ன நடக்கிறதென்று மதிமாறன் யூகிக்கும் முன்னரே சிதையில் விழுந்த அக்னி அம்பு ஏற்கனவே சிதறி கிடந்த எண்ணெயில் பற்றி கொண்டு எரிய ஆரம்பித்தது.

கருணாகரன் காவலர்களை ஒன்றிணைத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்று கொண்டிருந்தான்.மதிமாறன் தன்னுடைய ஆட்களில் சிலரை அழைத்து கொண்டு பார்த்திபனும் சந்திரவதனாவும் இருந்த இடத்தை அடைந்த போது அங்கே யாருமேயில்லை.

காற்றில் கற்பூரம் கரைந்தது போல் எந்த தடயமும் இல்லாமல் பார்த்திபன் சந்திரவதனாவுடன் காணாமல் போயிருந்தான்.

"இந்த முறையும் எப்படியோ தப்பி விட்டான்" என்று பல்லை கடித்தான் மதி மாறன் . அவன் கண்ணுக்கு முன்னால் தெரிந்த சந்திரவதனாவைகையில் பிடிக்க முடியவில்லையே என்ற கழிவிரக்கம் அவனது குரலில் எதிரொலித்தது. இத்தனை பேர் எதிரில் அந்த சிகப்பு முகமூடி தன்னை கையலாக தவனாக உறுதி செய்து விட்டானே என்ற அவமானத்தில் அவன் கூனி குறுகி கொண்டிருந்தான்.

அங்கே தன் ஆட்களுடன் வந்து சேர்ந்த கருணாகரனை பார்த்த மதிமாறன் " அவனது ஆட்கள் யாராவது?"

"அகப்படவில்லை. எல்லோரும் தாங்கள் நினைத்த காரியத்தை முடித்துவிட்டு சிட்டாக பறந்து விட்டார்கள். காலையிலிருந்து நன்றாக திட்டமிட்டு தெளிவாக செயல்பட்டிருக்கிறார்கள்"

" எதிரிக்கு பாராட்டு பத்திரம் வாசிக்காதே கருணா கரா! அவனை பிடிப்பதற்கான முயற்சியை செய்.முக்கியமாக அந்த பெண் உயிரோடு எனக்கு வேண்டும்"

"அந்த பெண் "

"ஏன் எதற்கு என்று அனாவசியமாக கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்காதே! எனக்கு அந்த பெண் உடனே வேண்டும்" என்று கோபத்தில் உறுமினான்மதிமாறன்.

"உத்தரவு" என்றான் கருணாகரன்.

அதே நேரம் சிறையில் அடைபட்டு கிடந்த நீலன் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியை தொடங்கினான்.