ரகசிய தீவு
அத்தியாயம் 19
காற்றில் கரைந்தவன்.
நண்பர்கள் மூவரும் குழப்பத்தின் உச்சத்தில் இருந்தனர். தனியறையில் அடைக்கப்பட்டிருந்த நீலனை காணவில்லை. தீப்பந்த வெளிச்சத்தில் அறையை ஆராய்ந்த ஆதித்தன் சன்னல் கம்பிகள் சேதமில்லாமல் அப்படியே இருப்பதை பார்த்தான். " நம்மை போல் நீலன் தப்பி செல்ல எந்த முயற்சியும் செய்யவில்லை" என்றான் யவனனிடம் கம்பிகளை சுட்டி காட்டி.
"ஆமாம். தப்பி செல்ல கொஞ்சமாவது சுய சிந்தனை தேவை. இவன் மதுபோதையில் அல்லவா இருந்தான்? இவனால் எப்படி தப்பி சென்றிருக்க முடியும்.?'' என்றான் யவனன்.
"இறந்து கிடக்கும் இந்த மனிதன் கலை குழுவின் தலைவன் செங்கோடன் என்கிறான் கடோத்கஜன்.இவன் நாளை அல்லவா இங்கே வந்து சேர வேண்டும்? இந்த இரவு நேரத்தில் இந்த சிறைக்குள் எப்படி வந்தான்?" என்றான் ஆதித்தன் கேள்விகுறியோடு.
"இறந்து கிடப்பவனின் வாயில் எதற்கு இத்தனை ரத்த போக்கு? ஒரு வேளை கொடும் சித்ரவதைக்கு ஆளாகி இருப்பானோ?" என்ற யவனன் செங்கோடனின் இரத்தம் வழிந்து உறைந்து போயிருந்த வாயை ஆராய்ந்தான்.
"ஆதித்தா! இது என்ன கொடுரம் ? இவனது நாவை யாரோ அறுத்து விட்டிருக்கிறார்கள். மனித தன்மையற்ற இந்த செயலை யார் செய்திருப்பார்கள்?" என்றான் யவனன் அதிர்ச்சியுடன் .
"வேறு யார் இதை செய்ய முடியும்?மதி மாறனாகத்தான் இருக்க முடியும் " என்றான் ஆதித்தன் யோசனையுடன் .
"நீலன் ஏன் இந்த கொலையை செய்திருக்க கூடாது?" என்றான் கடோத்கஜன் சந்தேகம் நிரம்பிய குரலில்.
"நீ என்ன சொல்கிறாய்?" என்றான் யவனன்.
"மதுபோதையில் இருந்த நீலன் செங்கோடனுடன் வம்பு வளர்த்து சண்டை இழுத்திருக்க வேண்டும். அந்த சண்டையில் செங்கோடனின் நாக்கு துண்டிக்கப்பட்டிருக்கலாம். எனக்கென்னவோ செங்கோடனை கொன்றது நீலன் என்று தான் தோன்றுகிறது."
உளறாதே .! அப்படி நீலன் செங்கோடனை கொன்றால் இந்த அறையிலேயே தான் இருந்திருக்க வேண்டும். அவன் எப்படி தப்பி வெளியேறியிருக்க முடியும்?" என்றான் யவனன்.
" அவன் தப்பவில்லை. தப்புவிக்கப்பட்டிருக்கிறான்." என்றான் ஆதித்தன்
"நீ என்ன சொல்கிறாய்?" என்றான் கடோத்கஜன்.
"நீலனை யாரோ காப்பாற்றி வெளியே கொண்டு போயிருக்கிறார்கள். மூன்றாவது நபர் ஒருவன் நீலனுக்கு உதவி செய்திருக்கிறான். அவன் யார் என்று தெரியவில்லை."
"அதைப் பற்றி நாம் பிறகு யோசிப்போம். இப்போது இங்கிருந்து தப்பி செல்லும் வழியைப் பார்ப்போம்." என்றான் யவனன்.
மூவரும் வந்த வழியாக திரும்பி நடந்தனர். அவர்கள் முன்பு அடைபட்டிருந்த சிறைகூடத்திற்கே திரும்ப வந்து சேர்ந்தனர்.
அவர்கள் வந்து சேர்வதற்கும் கலை குழுவின் கடைசி ஆள் கயிற்றின் மீது நடந்து மறு முனையை அடைவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
ஆதித்தன் கயிற்றை அவிழ்த்து விடும்படி சைகை செய்தான்.
கடைசி ஆசாமி கயிற்றை அவிழ்த்து விட்டதும் சிறையின் சன்னல் வழியாக கயிறு நீண்டு தொங்கியது. மூவரும் அதன் வழியாக கீழே இறங்க தொடங்கினர்.
மூவரும் சிறையின் பின்பக்கமாக இறங்கியதும் அதற்காகவே காத்திருந்தது போல் எங்கிருந்தோ பறந்து வந்தது ஹேர்குலஸ்.
"நல்ல காரியம் செய்தாய் பறவையே .! " என்று அதை கொஞ்சி முத்தமிட்டான் இப்பாலஸ்.
"நல்ல நேரத்தில் உன் பறவை நமக்கு உதவியாக வந்து சேர்ந்தது. அதற்கு என்னுடைய நன்றியை சொல்லி விடு" என்றான் ஆதித்தன்.
" என்னுடைய நன்றியையும்" என்றான் கடோத்கஜன்.
"கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன்" என்ற யவனன் அதனுடன் கிரேக்க மொழியில் எதையோ பேசி உரையாடினான்.
"இப்போது நாம் எங்கே போகப் போகிறோம்.?" என்றான் கடோத்கஜன்.
"துறைமுகத்திற்கு. அங்கே என்னுடைய படகு கழுகு நிற்கிறது. அதை எப்படியாவது மீட்டு வர வேண்டும்"
"வந்து?"
" உன் குழுவினரை அதில் ஏற்றிக் கொண்டு நாம் கிளம்ப வேண்டும்"
"எங்கே?"
"மதிமாறனின் பார்வை படாத இடத்திற்கு "
"அப்படி ஒரு இடம் இந்த தீவில் இருக்கிறதா?"
"ஏன் இல்லை ? " என்றான் யவனன் எதிர் கேள்வியோடு.
"அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்ன?" என்றான் ஆதித்தன் வியப்போடு
"மதிமாறனின் பார்வை மட்டுமல்ல. காலடிபடாத இடம் கூட இந்த தீவில் இருக்கிறது. அந்த இடத்தில் மதிமாறன் கால் வைக்கவே அஞ்சுவான்"
"அப்படி பயங்கரமான ஒரு இடமா?"
"ஆமாம். நீ அசைவமா?சைவமா?"
"இதென்ன சம்மந்தம் இல்லாத கேள்வி. "
"சம்பந்தம் இருக்கிறது. என் கேள்விக்கு பதில் சொல் "
"அசைவம்"
"இது வரை நீ ஆடு, கோழி போன்றவற்றை தின்றிருப்பாய். நான் சொல்லும் இடத்தில் இருப்பவர்கள் சுத்தமான அசைவம். அவர்கள் நம்மை உயிரோடு தின்று விடுவார்கள் .நர மாமிச பட்சிணிகள் உலாவும் காடுகள் நிறைந்த தெற்கு பகுதி தான் நான் சொல்வது." என்றான் யவனன்.
கடோத்கஜனின் உடல் சில்லிட்டது.
"எமனின் திசை தெற்கு " என்று முணுமுணுத்தன அவனது உதடுகள்.
"இந்த விசயம் உனக்கு எப்படி தெரியும்?" என்றான் ஆதித்தன்.
" எல்லாம் செவி வழி செய்தியாக கேள்விப்பட்டது தான். இப்போதைக்கு நாம் பதுங்கி கொள்ள இதை விட சிறந்த இடம் கிடைக்காது" என்றான் யவனன்.
"சரி. உன்னுடைய யோசனையை பரிசீலனை செய்வோம். இப்போதைக்கு துறைமுகத்திற்கு சென்று கழுகை மீட்டு வரும் வழியை பார்ப்போம்" என்றான் ஆதித்தன்.
அதே நேரம் தீவின் வேறு ஒரு இடத்தில் இருந்த கைவிடப்பட்ட பாழடைந்த கட்டிடம் ஒன்றின் இருளடர்ந்த பகுதி ஓன்றில் கை கால்கள் கட்டப்பட்டு நாற்காலியில் அமர வைக்கப்பட்டி ருந்தான் நஞ்சுண்டன் அவனது முகம் அடி வாங்கி வீங்கியிருந்தது. அவனுக்கு எதிரே நின்று கொண்டிருந்தவன் தனது வலது கையில் துணி ஓன்றை சுற்றி கட்டியிருந்தான். அதில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
"இது வரை பல முறை உன்னை கேட்டு விட்டேன். உண்மையை சொல்ல மறுக்கிறாய்" என்றான் அவன்.
"நான் உண்மையைத்தான் சொல்கிறேன். நீ தான் என் வார்த்தைகளை நம்ப மறுக்கிறாய்" என்றான் நஞ்சுண்டன் தன் வாயிலிருந்த சிவப்பு திரவத்தை துப்பியபடி.
"யார் நீ? எதற்காக சிகப்பு முகமூடியை தேடிக் கொண்டிருந்தாய்?" என்றான் அவன்.
நஞ்சுண்டன் ஜாக்கிரதையடைந்தான். தன்னை தூக்கி வந்தவர்கள் அரசாங்க ஓற்றர்களா இல்லைதான் தேடி திரியும் சிவப்பு முகமூடியின் ஆட்களா என்று அவனுக்கு உறுதியாக தெரியவில்லை. அதனால் இரண்டு பேருக்குமே நடு வாந்தரமாக பதில் சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் அவன்.
"நான் தான் முன்பே பல முறை கூறி விட்டேனே? என் பெயர் நஞ்சுண்டன் நான் ஒரு கப்பல் மாலுமி "
" கேட்டு சலித்த பதில் தான். ஆனாலும் பதிலில் எந்த மாற்றமும் இல்லாமல் அதையே கிளிப்பிள்ளை போல் சொல்கிறாய். ஆனால் சிகப்பு முகமூடியை ஏன் தேடினாய் என்பதற்கு மட்டும் பதில் சொல்ல மறுக்கிறாய்"
"நான் அவனை சந்திக்க வேண்டும் என்று நெடுநாளாக ஆசைப்படுகிறேன். அதை எப்படி சாத்தியப்படுத்தி கொள்வது என்று தெரியாமல் முட்டாள் தனமாக கடைவீதியில் விசாரித்து விட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விட்டு விடுங்கள்"
"அப்படியெல்லாம் எளிதாக உன்னை மன்னித்து விட்டு விட முடியாது."
"என்னை இப்படி தூக்கி வந்து அடித்து துன்புறுத்துகிறீர்களே? நீங்கள் யார்? சிகப்பு முகமூடியை பற்றி விசாரிப்பது அவ்வளவு பெரிய குற்றமா?"
" குற்றம் தான். ஒரு தேடப்படும் குற்றவாளியை தேடி திரியும் உன்னை நாங்கள் சந்தேகிப்பது நியாயம்தானே?"
"அப்படியானால் நீங்கள் சிகப்பு முகமூடியை பிடிக்க நினைக்கும் அரசாங்க ஆட்கள் இல்லையா?"
"இல்லை. நாங்கள் சிகப்பு முகமூடியின் ஆட்கள் ."
"பயப்படாதீர்கள். நான் நீங்கள் நினைப்பதுபோல் அரசாங்கத்தின் உளவாளியோ ஒற்றனோ இல்லை."
"அது சரி. நீ ஏன் சிகப்பு முகமூடியை சந்திக்க நினைக்கிறாய்?"
"அதை நான் சிகப்பு முகமூடியிடம் தான் சொல்வேன். நிச்சயமாக சொல்கிறேன். நான் உங்களின் நண்பன் தான்.எதிரியல்ல. என்னை நம்புங்கள்"
"இன்னும் சிறிது நேரத்தில் தலைவர் இங்கே வருவார்."
"முதலில் என் கை கால் கட்டை அவிழ்த்து விட்டு விட்டு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள். நான் வெகுவாக களைத்து போயிருக்கிறேன்."
கட்டுகள் களையப்பட்டு கொடுக்கப்பட்ட தண்ணீரை கடகடவென்று குடித்து முடித்தான் நஞ்சுண்டன் .
சற்று நேரத்தில் சிகப்பு நிறமுகமூடி அணிந்த ஒரு மனிதன் அந்த அறைக்குள் பிரவேசித்தான்.
அவனைப் பார்த்ததும் எழுந்து நின்ற நஞ்சுண்டனைப் பார்த்து "யார் நீ? எதற்காக என்னைப் பார்க்க விரும்புகிறாய்?" என்றான் அவன் கணீர் குரலில்.
"நான் ஒரு மீகாமன். என் பெயர் நஞ்சுண்டன் .நான் உங்களுக்கு தேவையான சில பொருட்களை விற்க வந்திருக்கிறேன். அது தெரியாமல் உங்கள் ஆட்கள் என்னைப் பிடித்து அடித்து சித்ரவதைகள் செய்து விட்டார்கள்."
அதற்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. இது எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வழக்கமாக நடக்கும் சோதனை தான்.இதில் என் நண்பர்களை குற்றம் சொல்ல ஓன்று மில்லை."
"iஉங்கள் சூழ்நிலை எனக்கு புரிகிறது"
" நல்லது. எங்களிடம் விற்க நீ எதைக் கொண்டு வந்திருக்கிறாய்?"
"உங்களுக்கு மிகவும் தேவையான பொருட்கள் தான். அவற்றை நீங்கள் மறுக்கவே மாட்டீர்கள்"
"முதலில் விசயத்தை சொல். பிறகு அவற்றை வாங்குவதா வேண்டாமா என்று நான் சொல்கிறேன்."
"நீங்கள் செய்ய போகும் புரட்சிக்கு ஏராளமான ஆயுதங்கள் தேவை. அவற்றை நீங்கள் அரசாங்க காவல் படைகளை தாக்கி அவர்களிடம் இருந்து எடுத்து கொள்கிறீர்கள். இனி அந்த மாதிரி கொள்ளையடிக்க வேண்டிய சூழ்நிலை இராது. ஏனென்றால் என்னிடம் ஏராளமான ஆயுதங்கள் இருக்கின்றன. நான் அவற்றை உங்களிடம் விற்க விரும்புகிறேன்."
"அந்த ஆயுதங்கள் உனக்கு எப்படி கிடைத்தது?"
"அது வந்து .. அது எப்படியோ கிடைத்தது. அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை?" என்றான் நஞ்சுண்டன் .
"நீ சொன்னதை பற்றி நான் யோசித்து முடிவெடுக்க வேண்டும். இவனை நன்றாக கவனித்து கொள்ளுங்கள். நாளை காலை இவனை மீண்டும் சந்திக்கிறேன்" என்ற சிகப்பு முகமூடி அங்கிருந்து வெளியே வந்தான். வெளியே காத்திருந்தவன் " வில்லவா.! இது என்ன விளையாட்டு. சிகப்பு முகமூடியை அணிந்து கொண்டு நீ ஏன் பார்த்திபனைப்போல் நடிக்கிறாய்? பார்த்திபன் எங்கே போனான்?" என்றான் படபடப்புடன்.
" எல்லாம் காரணமாகத் தான். நாம் பிடித்து வந்தவன் நல்லவனா கெட்டவனா என்று நமக்கு தெரியாது. அவனை ஆழம் காணவே இந்த ஆள் மாறாட்டம் .இரவின் முதல் சாமம் துவங்கி விட்டது.பார்த்திபன் எங்கிருப்பான் என்று நமக்கு நன்றாக தெரியும். நான் அவனை சந்திக்க செல்கிறேன். இவனை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். இவனிடம் ஏதோ ஒரு தப்பு உள்ளதாக என் உள்ளுணர்வு சொல்கிறது " என்ற வில்லவன் குதிரையை அங்கிருந்து விரட்டினான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக