ரகசிய தீவு
அத்தியாயம் 24
இருவல்லவர்கள்.
எங்கே இருக்கிறது என்றே தெரியாத ஒரு பு தையலை பற்றி இரண்டு வெவ்வேறு நபர்கள் ஓரே மாதிரியாக பேசுவதை வியப்புடன் பார்த்து கொண்டிருந்தான் பார்த்திபன்
"ஏன் என்னை அப்படி பார்க்கிறாய்?" என்றான் நஞ்சுண்டன் .
"அந்த புதையலைப் பற்றிய தகவல் உனக்கு எப்படி தெரியும்?" என்றான் பார்த்திபன்.
"அந்த புதையலை பற்றி எனக்கு யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஓரு யூகமாக அது எங்கே இருக்கிறது என்று நான் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன் அப்படி கண்டு பிடித்த இடத்தை தான் நான் உன்னிடம் கூறினேன்."
" உன் யூகத்தை சொல் அது சரியா தவறா என்று நான் சொல்கிறேன்." என்றான் பார்த்திபன்.
"அதற்கு நான் மார்க்கதரிசியின் கதையை சொல்லியாக வேண்டும். அவன் இந்த பிராந்தியத்தின் புகழ் பெற்ற கொள்ளைகாரன். கடலில் கப்பலில் சென்று கொள்ளையடிப்பதை தொடங்கி வைத்த முதல் ஆள் அவன்தான். மலைநாடும் வள நாடும் கடல் பிரதேசத்தில் போட்டி போட்டு கொண்டு வியாபார போட்டியை ஆரம்பித்தன. இரண்டு நாடுகளும் கடல் வழியைப் பயன்படுத்தி பல நாடுகளில் வியாபாரத்தை ஆரம்பித்து செல்வ செழிப்பில் வளர ஆரம்பித்தன. இதை சாதாரண வணிக கப்பலின் மாலுமியான மார்க்கதரிசி மவுனமாக கவனித்து கொண்டிருந்தான். அவன் மனதில் குயுக்தியான ஒரு திட்டம் தோன்றியது. இரண்டு நாட்டு கப்பல்களும் பல்வேறு நாடுகளில் ஏராளமான பொருட்களை ஏற்றி செல்வதையும், பொருள் ஈட்டுவதையும் கவனித்த அவன் அந்த கப்பல்களை கொள்ளையடித்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான். தான் இரண்டு நாடுகளுக்கு எதிராக செயல்பட போவதால் அந்த இரண்டு நாடுகளிலும் கால் வைக்க முடியாது என்று அவனுக்கு தெரியும். அதற்கும் துணிந்து தான் அவன் கடல் கொள்ளைகாரனாக மாறினான். முதலில் அவனது ஆட்கள் அவனது பேச்சை யோசனையை கேட்க மறுத்தனர். ஆனால் முதல் கொள்ளையில் கிடைத்த செல்வத்தை பார்த்தவர்கள் வாயடைத்து போனார்கள். அவர்கள் கனவிலும் பார்க்க முடியாத சம்பாதிக்க முடியாத செல்வத்தை அவர்கள் ஓரே திருட்டில் அடைந்து விட்டார்கள்.
பிறகென்ன? அவர்கள் அனைவரும் அவனது பேச்சுக்கு கீழ்படிந்தனர். அவர்கள் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்தனர். அதில் கிடைத்த பொருட்களை மலிவான விலைக்கு விற்று காசாக்கினார்கள். அந்த திருட்டு பொருட்களை வாங்கவும் வணிகர்களில் ஒரு கூட்டம் தயாரானது. சில கப்பல்களை தாக்கி கைப்பற்றிய போது அதில் எந்த பொருட்களும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர். இப்படி ஓன்று மில்லாத கப்பல்களை தாக்கி சக்தியை வீணாக்க விரும்பாத மார்க்கதரிசி தனக்கென துறைமுகங்களில் ஒரு ஒற்றர் படையை உருவாக்கி கொண்டான். அந்த ஓற்றர் படையில் சுமைதூக்குபவர்கள், மூட்டைதைப்பவர்கள் என்று சாமான்ய ஆட்கள் மார்க்கதரிசி தரும் பணத்திற்காக விலை மதிப்பு மிகுந்த பொருட்கள் செல்லும் கப்பலை காட்டி கொடுக்க துவங்கினர். பொறாமை பிடித்த வியாபாரிகளே தங்களின் சக வியாபாரியை காட்டி கொடுத்து கவிழ்த்தனர். மொத்தத்தில் மார்க்கதரிசியின் புதிய உத்தி அவனை பண மழையில் நனைய வைத்தது.
மார்க்கதரிசியின் அட்டகாசத்தால் வள நாடும், மலைநாடும் ஏராளமான இழப்பை சந்தித்தன. இரண்டு நாடுகளும் தனித்தனியாக அவனை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. இருவரில் எவரிடம் சிக்கினாலும் தனது தலை தப்பாது என்று தெரிந்து வைத்திருந்த மார்க்கதரிசி தன்னுடைய செல்வத்தை தங்கபாளங்களாக மாற்றி வைத்திருந்தான்.பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுவான் என்பது போல மார்க்கதரிசியும் ஓரு நாள் கடலில் இரு நாட்டு கப்பல்களிடமும் அகப்பட்டு விட்டான். இரு நாட்டு கப்பல்களிடமிருந்து தப்பிக்கவும் தன்னுடைய புதையலை மறைத்து வைக்கவும் அவன் தேர்ந்தெடுத்த இடம் தான் இந்த ரகசிய தீவு. அவனது துரதிர்ஷ்டம் அவன் ரகசிய தீவிற்கு வரும் வழியிலேயே கடும் புயல் அவனது கப்பலை சின்னாபின்னமாக்கி விட்டது. சிதைந்து போன அவனது கப்பலின் சில பாகங்கள் தான் கடலில் மிதந்து அவனது கப்பலை அடையாளம் காட்டின. மார்க்கதரிசியும் அவனது ஆட்களும் கடலில் முழ்கி இறந்து போனதாக அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். மார்க்கதரிசியின் புதையல் கடலில் கப்பலோடு மூழ்கி விட்டதாகவும் அதை அவன் கரையில் எங்கேயோ புதைத்து விட்டதாகவும் இரண்டு வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன." என்று சொல்லி கதையை நிறுத்தினான் நஞ்சுண்டன் .
"நீ சொன்ன இந்த கதையை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தீவின் தெற்கு பகுதியில் அந்த புதையல் இருப்பதாக நீ எப்படி கூறினாய்?" என்றான் பார்த்திபன்.
"மார்க்கதரிசி திறமையான கடலோடி .வானிலையை வைத்தே புயல் வரப்போவதை அவன் முன்கூட்டியே கணித்திருப்பான்.இரண்டு நாட்டு கப்பல்களும் தன்னை துரத்தி வரும் போது கப்பலில் இருக்கும் புதையலின் கனம் கப்பலின் வேகத்தை குறைத்திருப்பதை அவன் உணர்ந்திருப்பான். புயலிலிருந்து தப்ப அவனுக்கு பாதுகாப்பான இடம் தேவை. அந்த இடம் மலை நாட்டின் ஆளுகைக்குட்பட்ட ரகசிய தீவின் துறைமுகம் இல்லை. அங்கே கால் வைத்தால் தான் கைது செய்யப்படுவோம் என்று அவனுக்கு தெரியும். அதனால் அவன் ஆள் நடமாட்டம் இல்லாத தெற்கு பகுதியைத் தான் தேர்ந்தெடுத்திருப்பான். தன்னுடைய புதையலை அங்கே புதைத்து விட்டு புயல் நின்றதும் எடை குறைந்த தன்னுடைய கப்பலில் தப்பி ஓடிவிட்டு மீண்டும் ஒரு நாள் திரும்ப வந்து தன்னுடைய புதையலை எடுத்து செல்லலாம் என்று அவன் திட்டமிட்டிருக்கலாம். என் கணிப்பு சரியாக இருந்தால் அந்த புதையல் தெற்கில் இருக்கும் வனப்பகுதிக்குள் தான் எங்கோ புதைக்கப்பட்டிருக்க வேண்டும். தெற்கு பகுதியை நான் உறுதியாக சொல்ல இன்னொரு காரணம் இருக்கிறது" என்றான் நஞ்சுண்டன் .
"என்ன அது?"
"அந்த பகுதியில் மட்டும் தான் கடலின் ஆழம் அதிகம். மார்க்கதரிசியின் எடை மிகுந்த கப்பல் அந்த பகுதியில் மட்டும் தான் கரைவரைக்கும் செல்ல முடியும். துறைமுகத்தில் மணல் அதிகம் இருப்பதால் கரையிலிருந்து சற்று தொலைவிலேயே கப்பல்கள் நின்று விடுவதை நீ பார்த்திருப்பாய்"
பார்த்திபன் நஞ்சுண்டனின் பேச்சை வியப்புடன் கேட்டு கொண்டிருந்தான்.
"தெற்கு பகுதிக்கு யாரும் போவதில்லை. அங்கே கடல் ஆழம் என்று உனக்கு எப்படி தெரியும்? நீ கூறுவதை பார்த்தால் நீ அங்கே போயிருப்பாய் போலிருக்கிறதே?" என்றான் பார்த்திபன்.
"நீலனுடைய கப்பலில் நான் இங்கு வரும் ஒவ்வொரு முறையும் அந்த புதையல் எங்கிருக்கும் என்று தேடுவது என் வாடிக்கை. அப்படி ஒரு நாள் நான் சிறு படகு ஒன்றை எடுத்து கொண்டு தெற்கு பகுதிக்கு பயணமானேன். அங்கு சூழல் வினோதமாக இருந்தது. கடலில் அலைகளே இல்லை. ஒரு நதி படுக்கை போல கடல் அமைதியாக இருந்தது. நான்கையோடு கொண்டு போயிருந்த சிறு கற்களை வைத்து பரிசோதனையில் ஈடுபட்டேன்.. தண்ணீரின் நடுவே கற்களை போட்டால் வட்டவட்டமாக அலைகள் எழுவது வாடிக்கை. இங்கே நான் கற்களை வீசிய போது வட்டமாக அலைகள் எழும்பவில்லை. ஆனால் கரையோரமாக கற்களை வீசிய போது அரைவட்டமாக நீர் எழுந்து வந்தது. அதை வைத்து நான்கரைப் பகுதி ஆழமாக இருப்பதை தெரிந்து கொண்டேன்"
" புத்திசாலி தான் நீ!"
" இதையெல்லாம் எனக்கு கற்று கொடுத்ததேநீலன் தான். அவனுக்குத் தான் நீ நன்றி சொல்ல வேண்டும்"
"அது யார்?"
" என்னுடைய குரு"
"உன்னை விடவும்உன் குரு புத்திசாலியாக இருக்க வேண்டும்"
"ஆமாம். புத்திசாலி தான் .என்னால் அந்த புதையலை தனியாக எடுக்க முடியாது. உன் ஆட்கள் உதவி செய்தால் அந்த புதையல் எனக்கு கிடைக்கும். உனக்கும் ஆயுதங்கள் கிடைக்கும்."
"அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. நம்மை அங்கே அழைத்து செல்ல ஓரேஒருவன் தான் இருக்கிறான்."
நஞ்சுண்டன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
"யார் அவன்?"
" அவன் ஒரு ஊமை .அவன் பெயர் ஆதி. அவன் இதற்கு சம்மதிக்க வேண்டும். நம் இருவரின் தலையெழுத்தும் இப்போது அவன் கையில் இருக்கிறது" என்றான் பார்த்திபன்.
இருவரும் மவுனமாக ஒருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.
அதே நேரம் மதிமாறன் தன் எதிரே நின்றிருந்த கருணாகரனை பார்த்து "கருணாகரா! என்ன சொல்கிறாய் நீ?" என்றான்.
"நேற்று இரவு நாம் சிறையில் அடைத்த நீலனை காணவில்லை. அவன் இருந்த அறையில் வேறோருவன் இறந்து கிடக்கிறான்" என்றான் கருணாகரன்.
"இறந்தவன் பெயர் செங்கோடன். அந்த கோமாளி கூட்டத்தின் தலைவன் அவன். அவனை சிறையில் அடைத்தது நான் தான் "
"அவனது நாக்கு துண்டிக்கப்பட்டிருக்கிறது"
"நான் தான் அதற்கு உத்தரவிட்டேன்."
"நள்ளிரவில் நீங்கள் தனியாக சிறைக்கு வந்ததாக காவலர்கள் கூறினார்கள்"
"ஆமாம். நான் தான் அவன் உயிர் பறவையை உடலை விட்டு பறக்க வைத்தேன். அந்த நீலன்? அவன் எப்படி தப்பி சென்றான்?"
" அவன் மட்டுமல்ல. அந்த கூட்டமே சிறையை விட்டு தப்பி சென்று விட்டது" என்ற கருணாகரன் சிறைசாலையிலிருக்கும் ரகசிய வழியில் தான் நீலனை கூட்டி சென்றதை மறைத்து விட்டான். இந்த தகவலை கேட்டு மதிமாறன் கோபத்தில் குமுறுவான் என்று கருணாகரன் எதிர்பார்த்தான். ஆனால் அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக மதிமாறன் கோபத்தில் குதிக்காமல் அமைதியாக இருந்தது அவனை குழப்பியது.
"அவர்களை எளிதாக பிடித்து விடலாம். இறந்தவனின் இறுதி சடங்கு இன்று மாலை நடப்பதாக தீவு முழுவதும் தண்டோரா போட்டு அறிவிக்க சொல். "
"கடைசி மரியாதை செலுத்த அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?"
"அவர்கள் அத்துணை பேரும் எனக்கு தேவையில்லை. ஓரே ஒரு ஆள் என்னிடம் அகப்பட்டால் போதும் "
"யார் அது?"
"சந்திரவதனா .அந்த பெண் எனக்கு உயிரோடு வேண்டும்" என்றான் மதி மாறன் விசம சிரிப்புடன்.
நீலன் எங்கே போய் தொலைந்திருப்பான் என்று யோசிக்க ஆரம்பித்தான்மதிமாறன்.
செங்கோடன் யாரிடமும் பேசி விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் மதிமாறன் அவன் நாக்கை அறுத்திருக்க வேண்டும். பின்பு ஏதோ காரணத்தால் அவனை கொன்று விட்டான். இப்போது அவன் மகள் வேண்டும் என்கிறான்.இவனது செயல்கள் ஓன்றுக் கொன்று முரணாக புதிராக இருக்கிறது.மதிமாறன் தன்னிடமிருந்து எதையோ மறைக்கிறான் என்று நினைத்தவனாக அங்கிருந்து கிளம்பினான் கருணாகரன்.செங்கோடனிடம் ஏதோ ஒரு ரகசியம் மறைந்திருக்கிறது என்றது அவன் மனம். அந்த ரகசியமும் தனக்கு மட்டுமே தெரியும் என்ற இறுமாப்பில் இருந்தான்மதிமாறன் I
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக