ரகசிய தீவு
அத்தியாயம் 21
புதையல் காத்த பூதம்
அந்த சிறுவனையே பார்த்திபன் கவனிப்பதை பார்த்த வில்லவன்"ஏன் இவனை அப்படி பார்க்கிறாய்?" என்றான்.
"மனிதமாமிசம் சாப்பிடும் ஒருவனை இப்போது தான் நேரில் பார்க்கிறேன்" என்றான் பார்த்திபன்.
" ஆனால் இவனை நீ அப்படி ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியதில்லை. இவன் அசைவ உணவுகூட உண்பதில்லை. சைவ உணவைத்தான் சாப்பிடுகிறான்"
" வினோதமாக இருக்கிறது நீ கூறுவது.தெற்கு பக்கம் உள்ள அந்த அடர்ந்த காட்டில் இருந்தவன் எப்படி இங்கே வந்தான்?"
"இந்த கேள்விக்கு மட்டும் எனக்கு விடை தெரியவில்லை. பதில் கூறும் நிலையிலும் இவன் இல்லை. ஆனால் இவ்னை ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த போது இவன் இவனது தகப்பனுடன் இருந்தான். பொதுமக்கள் இவர்களின் வருகையால் அச்சமுற்று இருவரையும் தாக்க முயன்று கொண்டிருந்தார்கள். இவனது தகப்பன் கண்ணீரோடு எங்களுக்கு புரியாத மொழியில் மன்றாடிக் கொண்டிருந்தான். அப்போதுதான் கருணாகரன் அங்கே வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும் இவனது தகப்பன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. தன் கையிலிருந்த கத்தியை எடுத்து தன்னுடைய மார்பில் பாய்ச்சிக் கொண்டான். அவன் துடிதுடித்து சாகும் முன் தன்னுடைய மகனிடம் தங்களின் மொழியில் எதையோ சொல்லிவிட்டு இறந்து விட்டான். தன் கண் முன்பாகவே தன்னுடைய தகப்பன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இவனுக்கு பேச்சு பறிபோய்விட்டது. அங்கேயிருந்த நான் தான் இவனை காப்பாற்றி கூட்டி வந்து வளர்த்து வருகிறேன். ஆதி என்று அவனுக்கு பெயர் வைத்ததும் நான் தான் .பயல்படுசுட்டிகை. என் தொழிலுக்கு ஒத்தாசையாக வந்தவன் விரைவிலேயே தேர்ந்த வேலைகாரனாக மாறி விட்டான்."
"இவனிடம் எப்படி பேசுவது?"
"சைகை மொழி தான். முதலில் தடுமாறினாலும் விரைவில் அதை கற்று கொண்டு விட்டான். நம் உதட்டின் அசைவை வைத்தே நாம் என்ன பேசுகிறோம் என்பதை கண்டுபிடித்து விடுவான்"
" புத்திசாலி தான் . இங்கே சந்திரவதனா இருப்பதை இவன் வெளியே யாரிடமும் சொல்ல மாட்டான். நல்ல தேர்வு" என்று வில்லவனை பாராட்டினான் பார்த்திபன்.
இருவரும் வீட்டின் உள்ளே நுழைந்தனர்.ஆதிவாசல் கதவை மூடுவதற்காக கதவை நோக்கி நடந்தான்.
வீட்டின் முற்றத்தில் சந்திரவதனாவும் வில்லவனின் மனைவியும் உட்கார்ந்து எதையோ பேசிக் கொண்டிருந்தனர்.
"நீங்கள் இன்னமும் உறங்கவில்லையா?" என்றான் பார்த்திபன் வியப்புடன்
"இல்லை. உங்கள் வருகைக்காக நாங்கள் இன்னமும் சாப்பிடாமல் காத்து கொண்டிருக்கிறோம்" என்றாள் சந்திரவதனா.
"இரண்டாம் சாமம் தொடங்கி விட்டது.இன்னமும் சாப்பிடாமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் என்னாவது? வாருங்கள் சாப்பிடலாம்" என்ற பார்த்திபன் வில்லவனுடன் கை கழுவ சென்றான்.
அமைதியாக இரவு உணவை உண்டு முடித்தனர் அனைவரும் .
"அந்த யோசி என்ன தான் சொல்கிறார்?" என்றான் வில்லவன்.
"சந்திரவதனா இங்கே இருப்பது வரை அவருக்கு எல்லா விசயங்களும் தெரிந்திருக்கிறது. இதுவெல்லாம் அவருக்கு எப்படி சாத்தியமாகிறது என்று எனக்கு புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவருடைய அனுமதி இல்லாமல் நான் எதையும் செய்ய கூடாது என்று அவர் நினைக்கிறார். அப்படி எதையாவது அவருக்கு தெரியாமல் நான் செய்து விட்டால் என் அண்ணனை போல் நானும் மரணமடைவேன் என்று மறைமுகமாக என்னை எச்சரிக்கிறார். இன்னொரு விசயம் மதிமாறனுக்கும் அவருக்கும் ஏதோவொரு தனிப்பட்ட விரோதம் இருக்கும் போல் தெரிகிறது. அவனை ஆட்சியிலிருந்து அகற்ற விரும்பித்தான் அவர் நமக்கு உதவி செய்கிறார். "
"அவரிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குளிர்காலத்தில் தீ மூட்டி குளிர்காய்வதைப் போல் இவரிடம் பட்டும் படாமலும் நாம் நடந்து கொள்ள வேண்டும்"
"ஆமாம். முழுதாக அவர் சொல்வதை நாம் கேட்க கூடாது. அது இருக்கட்டும். அந்த நஞ்சுண்டன். அந்த கடலோடி .அவனை என்ன செய்வது?"
"அதை நாளை காலையில் அவனை நேரில் சந்தித்த பின்பு முடிவு செய்வோம்."
"சரி. இப்போது நாம் படுக்க போகலாம்"
அனைவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் நுழைந்து படுக்கையில் சாய்ந்தனர்.
நள்ளிரவு .
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பார்த்திபன் திடிரென்று உறக்கம் கலைந்து எழுந்தான்.
அறைக்கு வெளியே ஒரு மெல்லிய பேச்சுக் குரல் கேட்க ஆரம்பித்தது.
மந்திர உச்சாடனம் போல எழுந்த அந்த குரலை கூர்ந்து கேட்டான் பார்த்திபன். அந்த ஓலியை முழுமையாக அவனால் கிரகித்து புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் அறையிலிருந்து வெளியே வந்து ஓலி வந்த திசையில் நடந்தான். அவனது காலடி ஓசை கேட்டதும் அந்த விசித்திர ஒலி திடிரென்று நின்று ஆழ்ந்த அமைதி நிலவியது. வாசல் கதவின் அருகே படுக்கையில் படுத்திருந்த ஆதி ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை விட்டு கொண்டிருந்தான். பார்த்திபன் யார் இப்படி வினோதமாக முணுமுணுத்தது என்று தெரியாமல் மீண்டும் தன் அன்றக்கே திரும்பி வந்தான். யோசித்தபடி படுத்தவன் அப்படியே தூங்கி போனான்.
படுத்திருந்த ஆதி கண்களை சட்டென்று திறந்தான். தனக்குள் சிரித்து கொண்டவன் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தான்.
அதே நேரம் நகரின் வேறு ஒரு பகுதியில் இருந்த மாளிகையின் பாதாள அறையில் அடைபட்டு கிடந்த நீலன் மெல்ல கண் விழித்தான். அவனது போதையின் கடுமை வெகுவாக குறைந்திருந்தது. தலைவலி அவன் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. தான் எங்கே இருக்கிேறாம் என்று அவனுக்கு முதலில் புரியவில்லை. தான் முதலில் அடைக்கப்பட்ட சிறை இதுவல்லவென்று அவன் சிறையின் அமைப்பை வைத்து ஊகித்து கொண்டான். இது வேறு இடம் என்று புரிந்ததும் அவனுக்குள் எழுந்த முதல் கேள்வி தான் எப்படி இங்கே வந்தோம் என்பது தான்
யாரோ தன்னை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். தன்னை இங்கே கொண்டு வந்தது தனி ஆளா இல்லை ஒரு கூட்டமா என்று அவனுக்கு புரியவில்லை.
மெல்ல மெல்ல அவன் கண்கள் இருட்டுக்கு பழக ஆரம்பித்தது. கண்கள் இருளுக்கு நன்றாகப் பழகியதும் அறையின் ஓரு மூலையில் ஒரு பானையும் தம்ளரும் இருப்பதை அவன் கண்கள் பார்த்தன.
மெல்ல எழுந்து சென்று பானை தண்ணீரை பிடித்து குடித்தான் அவன். குளிர் நீர் அவனது வயிற்றில் பாய்ந்ததும் அவனது சிந்தனை தெளிவானது. தன் இடுப்பில் இருந்த காலி மது குப்பியை தேடத் துவங்கினான் நீலன்.தன் உயிரை காப்பாற்றிய அந்த மது குப்பியை மறக்காமல் நினைவு பரிசாக தன்னுடைய இடுப்பிலேயே வைத்திருந்தான் அவன். அந்த மது குப்பி யைத் தான் இப்போது காணவில்லை.
நீலனின் கோபமும் ரத்த அழுத்தமும் அதிகரிக்க துவங்கியது.
"ஏய் யார் அங்கே ?திருட்டு பயல்களா? என்னுடைய மது புட்டியை யார் திருடியது ?யாராக இருந்தாலும் அதை திருப்பி கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் நடப்பதே வேறு " என்று கர்ஜிக்க துவங்கினான் நீலன்.
அவனது குரல் சுவற்றில் பட்டு எதிரொளித் தது. அவனது பேச்சிற்கு மறுமொழி வராமல் ஆழ்ந்த அமைதி நிலவியது.
"மடையர்களே! ஓழுங்காக என் மதுபுட்டியை திரும்ப கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் நீங்கள் யாரும் நிம்மதியாக உறங்க முடியாது. கத்தி கூப்பாடு போட்டு உங்கள் உறக்கத்தை கெடுத்து விடுவேன்" என்று மேலும் கத்த ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டது. முக்காடு அணிந்த ஒரு உருவம் கையில் தீப்பந்தத்துடன் நகர ஆரம்பித்தது. தீப்பந்த வெளிச்சம் நகர்வதை வைத்து அந்த உருவம் தன்னை நோக்கித்தான் வருகிறது என்பதை உணர்ந்து கொண்ட நீலன் தன்னுடைய ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
படிகளில் ஏறி வந்த அந்த கரிய உருவம் நீலன் இருந்த அறைக்கு நேராக வந்து நின்றது.
"யார் நீ? எதற்காக என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறாய்? என்னுடைய மது குப்பி எங்கே?" என்று உறுமினான் நீலன்.
அந்த உருவம் தன் தலையிலிருந்த முக்காட்டை மெல்ல நீக்கியது. எதிரே நின்றவனின் முகம் தீப்பந்த வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது.
"அடப்பாவி. நீயா ?" என்றான் நீலன் அதிர்ச்சியுடன் .
"ஆம். நானே தான் " என்று புன்னகைத்தான் எதிரே நின்ற கருணாகரன்.
"என்னை எதற்காக இங்கே கொண்டு வந்தாய்? எப்படி கொண்டு வந்தாய்? எங்கே என் மதுகுப்பி ?"
"பதறாதே .! உன்னுடைய எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன்"
"சொல்லி தொலை விரியனே" என்றான் நீலன் எரிச்சலுடன் .
"உன்னால் எனக்கு ஓரு காரியம் நடக்க வேண்டியதிருக்கிறது. அதனால் தான் உன்னை இங்கே கொண்டு வந்தேன். சிறைசாலையிலிருந்து வெளியேற ஒரு ரகசிய வழி உண்டு. அது எனக்கு மட்டுமே தெரியும். மதிமாறனுக்கு கூட அந்த ரகசிய வழி தெரியாது. அந்த வழியாகத்தான் நான் உன்னை இங்கே கொண்டு வந்தேன். ஆனாலும் நீ பிணம் போல் கனக்கிறாய். கொஞ்சம் குறைவாக சாப்பிட்டு உன் உடலை குறைக்க முயற்சி செய்"
"உன் அக்கறைக்கு நன்றி. என் மது குப்பி எங்கே?"
"அதை நான் பார்க்கவேயில்லை. உன்னை தூக்கி வரும் போது எங்கேயாவது கீழே விழந்திருக்கலாம்"
"பொய் சொல்கிறாய் நீ?"
"இல்லை உண்மையைத்தான் சொல்கிறேன். காலியான மது குப்பியை வைத்து நான் என்ன செய்ய போகிறேன். உன்னோடு அறையில் இருந்தவன் யார்? அவனை நீ எதற்காக கொன்றாய் ?"
" என்ன உளறுகிறாய்? அந்த அறையில் நான் மட்டும் தானே இருந்தேன்"
" ஓ! நீ வேறு குடிபோதையில் இருந்தாய் அல்லவா? நீ அவனை கொல்லாவிட்டால் வேறு யார் அவனை கொன்றிருப்பார்கள்? அவன் உயிரோடு இருந்திருந்தால் உன்னை நான் தூக்கி வந்ததற்கு சாட்சியாகி இருப்பான். அவனை நானே கொன்றிருப்பேன். முகம் தெரியாத யாரோ அந்த வேலையில் முந்திக் கொண்டு விட்டார்கள். ஆனால் சிறைக்குள் நுழைந்து கொலை செய்யும் அதிகாரம் உள்ள அந்த முகம் தெரியாத மனிதனைப் பற்றி நான் விசாரித்து தெரிந்து கொள்கிறேன். விசாரணையில் உண்மை தெரிந்துவிடும்"
"அது உன்னுடைய பாடு. என்னை வைத்து என்ன செய்ய போகிறாய்?"
"உன்னை வைத்து தான் என்னுடைய லட்சியத்தை நிறைவேற்றிகொள்ள போகிறேன்"
"அயோக்கியனுக்கு லட்சியமா? சொல்! கேட்டோம். அதையும் "
"இந்த தீவில் இருந்து ஓரு பொருளை நான் எடுத்து செல்ல போகிறேன். அதற்கு நீயும் உன் கப்பலும் தேவை "
"நல்ல ஆளை தேடிப் பிடித்தாய் போ! நானோ கப்பலை தொலைத்து விட்டு நாயாக அலைந்து கொண்டிருக்கிறேன்.ஆமாம்! அப்படி எதைத்தான் நீ இங்கிருந்து எடுத்து செல்ல விரும்புகிறாய்?"
"நான் சொல்வதை நீ நம்ப மாட்டாய்?"
"பரவாயில்லை. சொல். நீ பொய் சொன்னால் அதை நான் எளிதாக கண்டுபிடித்து விடுவேன். ஏனென்றால் நானும் ஒரு பொய்யன் தான். பாம்பின் கால் பாம்பறியும்."
" சொல்கிறேன். நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் எனக்கு கவலையில்லை. மார்க்கதரிசியின் தங்கத்தை நான் இங்கிருந்து எடுத்து செல்ல விரும்புகிறேன்"
"நீ பொய் சொல்கிறாய். அந்த புதையல் எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியாது"
"அந்த புதையல் எங்கிருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும். அதை மதிமாறனுக்கு தெரியாமல் இங்கிருந்து எடுத்து செல்ல உன்னுடைய உதவி மட்டும் தான் தேவை " என்ற கருணாகரனை அதிர்ச்சியுடன் பார்த்தான் நீலன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக