புதன், 17 ஆகஸ்ட், 2022

ரகசிய தீவு.அத்தியாயம்23

ரகசிய தீவு

அத்தியாயம் 23

மாண்டவர் பூமி

அரசாங்க காவலர்களின் உடைகளை அணிந்த பின் அந்த மூவர் அணி வெகு வேகமாக எந்த தடையும் இல்லாமல் துறைமுகத்தை சென்றடைந்தது. அமைதியான உறக்கத்தில் இருக்கும் இந்த தீவு விடிந்தவுடன் அல்லோகலப்படுவதை நினைத்து பார்த்தான் ஆதித்தன். கைதிகள் தப்பி சென்ற தகவல் கிடைத்ததும் தீவு முழுவதும் உசார் நிலைக்கு சென்று விடும்.தீவின் மூலை முடுக்கெல்லாம் தேடுதல் வேட்டை நடத்தப்படும். துறைமுகத்தில் காவல்பலப்படுத்தப்படும். இங்கிருந்து கிளம்பி செல்லும் கப்பல்கள் கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படலாம். ஆனால் யாருமே தப்பி சென்றவர்கள் தீவின் தெற்கு பகுதியில் மறைந்திருப்பதை யூகிக்க கூட முடியாது.இவ்வாறு பலவிதமான சிந்தனைகளில் ஆழ்ந்தான் ஆதித்தன்.

"நல்ல வேளை. நம்முடைய கப்பல் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனித்து நிற்கிறது." என்றான் யவனன்.

"வெகு விரைவில் அதை இங்கிருந்து கிளம்பி செல்ல வேண்டும்" என்றான் கடோத்கஜன்.

" வாருங்கள். கப்பலில் ஏறி அதை கிளப்பும் வழியை பார்ப்போம்" என்றான் ஆதித்தன். 

"இங்கிருந்து கப்பலுக்கு எப்படி போவது?நம் கப்பல் ஒரு கல் தொலைவில் அல்லவா இருக்கிறது? " என்றான் யவனன்.

"நமக்கு வேறு வழியில்லை. நாம் அந்த தூரத்தை நீந்தித்தான் கடக்க வேண்டும். சிறிய படகு ஓன்று இருந்தால் நாம் நம்முடைய கப்பலுக்கு போய் விடலாம். இந்த பகுதி மணல் நிரம்பியதாக இருப்பதால் கப்பல் கரைக்கு வந்தால் தரை தட்டி விடும். அதனால் துறைமுகத்திலிருந்து சற்று தொலைவிலேயே கப்பல்கள் நிற்பது தான் வழக்கம். நம்மிடம் படகுகள் இல்லாததால் நாம் அந்த தூரத்தை நீந்தித்தான் கடக்க வேண்டும்" என்றான் ஆதித்தன்.

"நள்ளிரவில் ஜலக் கிரிடையா?" என்றான் கடோத்கஜன். வேறு வழி இல்லாத நிலையில் மூவரும் கடலில் குதித்து நீந்த ஆரம்பித்தனர். கப்பலில் ஏறியதும் கடோத்கஜன் முதல் வேலையாக கடலில் ஆழப் பாய்ச்சியிருந்த நங்கூரத்தை வெளியே எடுத்து கப்பலின் மேல் தளத்தில் வீசினான்.

"நல்ல காரியம் செய்தாய். இனி நம்மை தடுக்க யாரும் இல்லை. நாம் கிளம்பலாம்" என்றபடி ஆதித்தன் கப்பலின் சுக்கானை பிடித்து இயக்க தொடங்கினான். சற்று நேரத்தில் காற்றின் துணையோடு சத்தமின்றி மூவரையும் சுமந்து கொண்டு துறைமுகத்திலிருந்து கிளம்பியது கழுகு.

"நாம் எப்படியோ கப்பலை தூக்கி வந்து விட்டோம். நம் நண்பர்களை நாம் எப்படி கண்டுபிடிப்பது?" என்றான் கடோத்கஜன்.

"கவலைப் படாதே! இது தீவு. இதன் கரையோரமாகவே நாம் கப்பலை செலுத்தி செல்வோம். இதன் புவியியல் அமைப்பு நமக்கு சாதகமாக இருக்கிறது. வட்ட வடிவமாகத்தான் தீவின் கடற்கரை இருக்கும்.சிறையிலிருந்து தப்பிச் சென்ற நம் நண்பர்கள் கடலின் ஏதாவது ஒரு கரையில் நமக்காக காத்து கொண்டிருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஓரு முறை எரி அம்புகளை விண்ணில் ஏவி தங்களின் இருப்பிடத்தை நமக்கு தெரிவிப்பார்கள். எரி அம்புகள் எந்த திசையில் வருகிறதோ அந்த திசையை நோக்கி நம்முடைய கப்பலை செலுத்தினால் போதும். நம்முடைய நண்பர்களை சென்றடைந்து விடலாம்" என்றான் ஆதித்தன்.

"சரியான ஆலோசனையைத் தான் கூறியிருக்கிறாய். நான் வானத்தை கவனிக்கிறேன் எரி அம்புகள் ஏதாவது தென்படுகிறதா என்று " என்ற யவனன் வானத்தை வெறிக்க ஆரம்பித்தான்.

சற்று நேரத்திலேயே அவனுக்கு எரிஅம்பு ஓன்று தென்பட்டது.

"அதோ. அந்த திசையில் தான் எரி அம்பு ஓன்று தென்பட்டது" என்றான் யவனன்.

" நல்லது. நான்சுக்கானை திருப்பி அந்த திசையில் கப்பலை செலுத்துகிறேன்" என்றான் ஆதித்தன்.

கடலில் கலம் விரைந்து சென்றது. வெகு விரைவிலேயே அவர்கள் கரையில் காத்து கொண்டிருந்த நண்பர்களை பார்த்து விட்டார்கள். கப்பலை பார்த்ததும் உற்சாக குரல் எழுப்பிய நண்பர்கள் வெகு வேகமாக நீந்தி வந்து கப்பலில் ஏறிக் கொண்டனர். அனைவரும் ஆசுவாசமடைந்த பின் கடோத்கஜன் பேச ஆரம்பித்தான்.

"நான்பர்களே! நான் இப்போது ஒரு சோகமான செய்தியை சொல்ல போகிறேன். மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள். நம்முடைய தலைவர் செங்கோடன் இன்று இரவு எப்படியோ ரகசிய தீவிற்கு வந்து விட்டிருக்கிறார். அவரை சிறையில் அடைத்து விட்டான் அந்த மதிமாறன். நாங்கள் தப்பி வரும்போது நீலனையும் மீட்டு செல்ல நினைத்தோம். அவனை தப்புவிக்க அவன் இருந்த சிறை அறைக்கு செல்லும் போது அதே அறையில் நம்முைடைய தலைவர் இறந்து கிடப்பதை பார்த்தோம். அந்த அறையில் அடைபட்டு கிடந்த நீலனை வேறு காணவில்லை" என்று நடந்தவற்றை விவரித்து கூறினான்கடோத்கஜன்.

" என்ன? நம்முடைய தலைவர் இறந்து விட்டாரா?" என்று அதிர்ச்சியடைந்தனர் அனைவரும் .

"இது வரை செங்கோடன் வந்து நம்முடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்று நினைத்தோம். ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. அவர் உயிரோடு இருந்திருந்தால் சந்திரவதனாவை நான் எப்படியாவது மீட்டு கொள்கிறேன். நீங்கள் அனைவரும் பத்திரமாக ஊருக்கு போய் சேருங்கள் என்றல்லவா சொல்லியிருப்பார்?"

"ஆமாம். நீ சொல்வது போல் தான் அவர் நடந்து கொண்டிருப்பார். அவர் மகளுக்காக நம் உயிரை பணயமாக வைத்து விளையாட அவர் விரும்பியிருக்க மாட்டார் "

"எத்தனையோ முறை நம்மை கடும் வறுமை சூழ்ந்த போதெல்லாம் தன்னுடைய ஆபரணத்தை கழற்றிகொடுத்து அதை வைத்து நம்முடைய பசியை தீர்த்தவர்கள் செங்கோடனும், சந்திரவதனாவும், நம்மை வேற்று மனிதனாக பார்க்காமல் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக பார்த்து கொண்டவர்கள் இவர்கள் இருவரும் . இவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்?"

"சந்திரவதனா நம் அனைவரையும் சகோதரனாகத்தான் நினைத்து பழகி வந்தாள். அவளை அனாதையாக மூன்றாம் மனிதன் ஓருவனிடம் விட்டு விட்டு செல்ல என்னுடைய மனம் விரும்பவில்லை. அந்த பெண்ணை நாம் எப்படியாவது மீட்டாக வேண்டும்"

'அது ஆதித்தனால் மட்டும் தான் முடியும். ஆதித்தா இந்த விசயத்தில் நீதான் எங்களுக்கு உதவ வேண்டும். தயவு செய்து மறுத்து விடாதே." என்றான் கடோத்கஜன்.

"நண்பர்களே! உங்களுடைய நிலமை எனக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் என் பக்கமாக இருந்து எனக்கு உதவி செய்தால் நான் சந்திர வதனாவை மீட்டு வருவேன்" என்றான் ஆதித்தன்.

"நீ என்ன கேட்டாலும் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்கள் அனைவரும் கோரசாக .

"உங்களுக்கு சந்திர வதனா தேவை. எங்களுக்கு நீலன் தேவை. இந்த புள்ளியில் நாம் ஒன்றிணைகிறோம். இருவரும் கிடைக்க நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம்" என்றான் ஆதித்தன்.

கலம் விரைவிலேயே தீவின் தென்பகுதியை அடைந்தது. ஆதித்தன் ஏதேதோ சிந்தனைகளில் மூழ்கி இருந்ததால் கரையோரம் கப்பலை நிறுத்த மறந்து விட்டான். ஆதித்தனின் போக்கு புரியாத கடோத்கஜன் வெகு வேகமாக ஓடிப்போய் நங்கூர சங்கிலியை கடலில் வீசினான். ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டது. தீவின் தெற்கு கரையை நோக்கி சென்ற கப்பல் நங்கூரம் கடலின் அடிப்பகுதியில் சிக்கியதால் கரையில் கச்சிதமாக நின்றது.

"இந்த பகுதி ஆழமாக இருக்கிறது. அதனால் தான் கப்பல் கரைதட்டவில்லை. கடலின் அடிப்பகுதி மணல் இன்னும் ஆழத்தில் இருக்கும் போலிருக்கிறது" என்றான் ஆதித்தன்.

"ஆமாம். நீ சொல்வது உண்மைதான். இந்த பகுதியில் கடலில் அலைகள் எழும்ப வேயில்லை. அமைதியாக இருக்கிறது கடல்" என்றான் யவனன்.

அவர்கள் கரையில் இறங்கிய போது கிழக்கில் கதிரவன் உதயமாகத் தொடங்கி விட்டான்.

"கரையில் இருக்கும் செடி கொடிகளை வெட்டி எடுத்து கப்பலை மூடுங்கள். இங்கே ஓரு கப்பல் நிற்பது யார் கண்ணுக்கும் தெரியக் கூடாது" என்று உத்தரவிட்டான் ஆதித்தன்.

அவனது கட்டளை உடனடியாக நண்பர்களால் நிறைவேற்றப்பட்டது.

"நாம் மர நிழலில் சற்று ஓய்வெடுப்போம். பிறகு என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசிக்கலாம்" என்றான் ஆதித்தன்.

அதே நேரம் தூங்கி கொண்டிருந்த நஞ்சுண்டன் உலுக்கி எழுப்பப்பட்டான்.

அவனை எழுப்பியவன் "உன்னை பார்க்க தலைவர் வந்திருக்கிறார்" என்றான்.

நஞ்சுண்டன் க ண்களை தேய்த்து கொண்டு எழுந்தான்.

இப்போது அவனுக்கு எதிரே சிகப்பு முகமூடி அணிந்த ஒருமனிதன் நின்று கொண்டிருந்தான்.

அவனது உடலமைப்பும் குரலும் அவன் தான் நேற்று சந்தித்த மனிதன் அல்லவென்று நஞ்சுண்டனுக்கு உணர்த்தின.

"நீங்கள்?" என்று இழுத்தான் நஞ்சுண்டன் .

"நீ நேற்று சந்தித்த மனிதன் நானல்ல. என்னுடைய நண்பன்" என்றான் பார்த்திபன்.

"எதற்கு இந்த நாடகம்?"

" எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். உன்னிடமிருக்கும் ஆயுதங்களுக்கு பதிலாக உனக்கு என்ன வேண்டும்?"

"வேறு என்ன ?செல்வம் தான் "

"நீ எதிர்பார்க்குமளவிற்கு அது எங்களிடம் இல்லை. சொற்ப அளவிலேயே அது உனக்கு கிடைக்கும் "

"நீங்கள் அரசு படைகளிடம் ஆயுதங்களை கொள்ளையடிக்கும் போதே உங்கள் நிலைமை புரிகிறது"

"நீ எதிர்பார்த்ததை கொடுக்கும் நிலைமையில் நான் இல்லை"

"உன்னால் கொடுக்க முடியும் "

" எப்படி? எதை வைத்து சொல்கிறாய்?"

"மார்க்கதரிசியின் புதையல் "

" இந்த சூழலில் அது கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியாதே?"

"அது எங்கிருக்கிறது என்று எனக்கு தெரியும். உன் உதவி இருந்தால் அதை நான் மீட்டு விடுவேன். ஆயுதம் உனக்கு. பு தையல் எனக்கு. என்ன சொல்கிறாய்?"

"நல்ல உடன்படிக்கைதான். ஆனால் அது எங்கிருக்கிறது என்று நீ சொல்லவேயில்லையே?"

"அந்த புதையல் நர மாமிசப் பட்சிணிகள் வாழும் தெற்கு திசையில் இருக்கும் காட்டில் இருக்கிறது" என்று சிரித்தான் நஞ்சுண்டன்

மாண்டவர் பூமி என்று யோகி குறிப்பிட்ட இடம் இதுதானா என்று திகைப்புடன் நின்றான் பார்த்திபன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக