ரகசிய தீவு
அத்தியாயம் 22
சிறையில் ஒரு ஒப்பந்தம்
ரகசிய தீவின் ஏதோ ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மார்க்கதரிசியின் தங்கப்புதையல் எங்கே இருக்கிறதென்று தனக்கு தெரியும் என்று கருணாகரன் சொன்னதை கேட்ட நீலன் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தான்.கருணாகரனிடம் மதிமாறன் தங்க புதையலை தேடி கண்டு பிடிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருப்பதை நீலன் ஏற்கனவே நன்றாக தெரிந்து வைத்திருந்தான். ஆனால் அந்த புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பின்பும் கூட அவன் அதை மதி மாறனிடம் ஏன் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறான் என்று அவனுக்கு புரியவில்லை. தன்னுடைய சந்தேகத்தை அவன் வாய் விட்டு கேட்கவும் செய்தான்.
அவனது கேள்வியை கேட்ட கருணாகரனின் உதட்டில் ஓரு கேலி சிரிப்பு பிறந்தது.
"என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரிகிறது ?அரும்பாடுபட்டு கண்டுபிடித்த அந்த புதையலை அப்படியே எடுத்து மதிமாறனிடம் ஓப்படைக்க நான் என்ன மடையனா?" என்று பதிலை கேள்வியாக கேட்டு விட்டு சிரித்தான் அவன்.
"சரியான விரியன் பாம்பு நீ.அந்த புதையலை எப்படியோ கண்டுபிடித்து விட்டாய். பிறகுஉனக்கு இங்கே என்ன வேலை?புதையலை கிளப்பி கொண்டு ஓட்டம் பிடிக்க வேண்டியதுதானே?"
" என்னுடைய நோக்கமும் அது தான். அப்படி புதையலை கிளப்பி செல்ல உன்னுடைய சகாயம் எனக்கு தேவை "
"உனக்கு நான் எப்படி உதவி செய்ய முடியும்?"
"உன்னால் மட்டும் தான் எனக்கு உதவி செய்ய முடியும். கனம் நிறைந்த அந்த புதையலை எடை குறைவான கப்பல்களில் இங்கிருந்து எடுத்து செல்ல முடியாது. புதையல்களின் எடையை தாங்க இயலாமல் அந்த கப்பல்கள் கடலில் மூழ்கவே வாய்ப்புகள் அதிகம். மிகப் பெரிய கப்பலான முத்தழகியில் மட்டுமே அந்த புதையல்களை இங்கிருந்து எடுத்து செல்ல முயலும். துரதிர்ஷ்டவசமாக ரகசிய தீவிற்கு வந்து செல்லும் ஓரே ஒரு பெரிய கப்பல் உன்னுடையது தான். அதனால் தான் அந்த புதையலை எடுத்து செல்ல உன்னுடைய உதவியை கேட்கிறேன்."
"நல்ல ஆளைப் பார்த்து உதவி கேட்டாய் போ! நானே என்னுடைய கப்பலை நஞ்சுண்டனிடம் இழந்து விட்டு அதை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். நான் எப்படி உனக்கு உதவி செய்ய முடியும்?" என்றான் நீலன்.
" உன் கப்பலை .நான் எப்பாடுபட்டாவது மீட்டு தருகிறேன். என்னுடைய திட்டத்திற்கு நீ ஓத்துழைக்க வேண்டும்"
"உனக்கு ஒத்துழைப்பதால் எனக்கு என்ன பயன்?"
"உன்னுடைய கப்பல் உனக்கு திரும்ப கிடைக்கிறதே?"
"உனக்கு அது தேவைப்படுகிறதே? அதில் மட்டும் தானே உன்னுடைய புதையலை கொண்டு செல்ல முடியும்? உன்னுடைய தேவைக்காகத் தான் நீ என்னுடைய கப்பலை தேடி கண்டுபிடித்து மீட்க போகிறாய். அதனால் எனக்கு என் கப்பல் திரும்ப கிடைக்கும். வேறு பலன் எதுவும் கிடையாது. உன்னுடைய உதவி இல்லாவிட்டாலும் நான் என்னுடைய கப்பலை மீட்டு விடுவேன் என்பது தான் நிஜமான உண்மை./
" புத்திசாலி கிழவன் நீ. இலவசமாகவே உன்னுடைய கப்பலை அடைவதுடன் புதையலிலும் பங்கு கேட்கிறாய். அப்படித்தானே?" என்றான் கருணாகரன்.
"என்னை விட புத்திசாலி நீதான். என்னுடைய எண்ணத்தை நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டு விட்டாய். இளைஞனான உனக்கே அவ்வளவு புதையல்களும் தேவைப்படும் போது மரணத்திற்காக காத்து கொண்டிருக்கும் இந்த கிழவனின் கடைசி காலம் நிம்மதியாக கழியவும் கொஞ்சம் செல்வம் தேவைதானே?" என்றான் நீலன் நைச்சியமாக.
"நீ கேட்பதும் நியாயம் தான். எவ்வளவு தான் எதிர்பார்க்கிறாய்?" என்றான் கருணாகரன் கடுப்புடன் .நீலன் இப்படி புதையலில் பங்கு கேட்பான் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய கப்பல் திரும்ப கிடைத்தாலே நீலன் திருப்தியடைந்து தன்னுடைய திட்டத்திற்கு உடன்பட்டு விடுவான் என்று அவன் நினைத்திருந்தான்.
" பாதிக்கு பாதி " என்றான் நீலன் கண்களில் பேராசை மின்ன.
"மிகவும் பேராசை படுகிறாய். எழுபது சதவீதம் எனக்கு. முப்பது சதவீதம் உனக்கு. பாதிக்கு பாதி வாங்கி அதை அனுபவிப்பதற்குள் உன்னுடைய ஆயுள் முடிந்துவிடும். உன் சொற்ப ஆயுளை கழிக்கமுப்பது சதவீத செல்வமே உனக்கு போதுமானதாக இருக்கும் "
"நீ சொல்வதும் சரிதான். அவ்வளவு செல்வத்தை வைத்து நான் என்ன செய்ய போகிறேன்? இளைஞன் நீ. உனக்கு அதிகமாக இருப்பதுதான் முறை. உன்னுடைய திட்டத்திற்கு நான் உடன்படுகிறேன்."
" நல்லது. இந்த உடன்படிக்கையால் நாம் இருவருமே பயனடைய போகிறோம்."
" எல்லாம் சரிதான்.மதிமாறனின் கண்களுக்கு தப்பி எப்படி புதையலை கடத்த போகிறாய்?"
"உன்னை எப்படி சிறையிலிருந்து மீட்டு வந்தேனோ அப்படித்தான்." என்று சிரித்தான் கருணாகரன்.
"என்னை எப்போதுதான் விடுவிக்க போகிறாய்?"
"உன் கப்பலை மீட்ட பின்பு .அதுவரை நீ இங்கு தான் இருக்க வேண்டும்" என்ற கருணாகரன் இருட்டில் வெளியேறினான். நீலன் சோர்ந்து போய் சுவற்றில் சாய்ந்தான்.
அதே நேரம் ஆதித்தனும் யவனனும் கடோத்கஜனுடன் சிறையிலிருந்து தப்பி இருட்டின் துணையோடு வெளியேறி கொண்டிருந்தனர்.
"நாம் இப்போது துறைமுகத்திற்கு தானே போகிறோம்?" என்றான் யவனன்.
"ஆமாம். அங்கே தான் நம்முடைய கப்பல் கழுகு நின்று கொண்டிருக்கிறது. அதை எப்படியாவது மீட்க வேண்டும். பிறகு கடல் வழியாக தீவின் கரையோரமாக பயணம் செய்து நம் கலை கூத்தாடி நண்பர்களை காப்பாற்ற வேண்டும். அதன் பிறகு அனைவரும் தென்ப குதியில் இருக்கும் நர மாமிசம் பு சிக்கும் காட்டுவாசிகள் வசிக்கும் காட்டிற்குள் சென்று பதுங்க வேண்டும். மற்றதை பிறகு பேசிக் கொள்ளலாம்." என்றான் ஆதித்தன்.
"அது சரி. இப்போது நாம் நகரத்தை தாண்டி துறைமுகத்தை நோக்கி போயாக வேண்டும். அரசாங்க ஆட்கள் நம்மை பிடித்து விட்டால் நம்முடைய அத்துணை திட்டங்களும் பாழாகி விடும்" என்றான் கடோத்கஜன்.
" உன்னுடைய ஆட்கள் தான் பாவம்.செங்கோடன் இறந்து போனதை அறிந்து அதிர்ந்து போய் விடுவார்கள்"
"ஆமாம். அவர் ஒரு பொறுப்பான தகப்பனை போல எங்களை ஏழ்மையிலும் பாதுகாத்தார். அவருடைய இழப்பு எங்களுக்கு பேரிடி தான் "
"நாம் இங்கிருந்து நகரத்தை கடந்து துறைமுகத்தை அடைய ஒரே வழிதான் இருக்கிறது" என்றான் ஆதித்தன்.
" என்ன அது?" என்றான் யவனன்.
"உன்னை கைதியாக்குவது" என்று சிரித்தான் ஆதித்தன்.
"என்னையா?" என்றான் யவனன் எதுவும் புரியாமல் .
"ஆம். உன்னைத்தான் " என்றான் ஆதித்தன்.
அடுத்த வீதியில் ரோந்து பணியில் இருந்த மூன்று காவலர்களில் ஒருவன் கையில் தீப்பந்தம் இருந்தது. இருட்டில் எதுவோ அசைவதை பார்த்தவன்" யாரது?" என்றான்.
இருட்டில் இருந்து மூன்று பேர் வெளியே வந்தனர். நடுவில் இருந்த யவனனின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தன.
"யார் நீங்கள்?" என்றான் காவலன்.
"இந்த தெருவில் குடியிருப்பவர்கள்.இவன் ஒரு திருடன். எங்கள் வீடுகளில் நுழைந்து திருட முற்பட்டான். அதை நாங்கள் பார்த்து விட்டோம். இவனை பிடிக்க முயற்சி செய்தோம். இவனோ எங்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்தான். சிறிது நேர கைகலப்பிற்கு பின் எங்களிடம் பிடிபட்டு விட்டான். அவன் கை கால்களை கட்டி இங்கே அழைத்து வந்தோம். நீங்களே இவனுக்கு என்ன தண்டனை தருவது என்று முடிவு செய்யுங்கள்." என்றான் ஆதித்தன்.
"நல்ல காரியம் செய்தீர்கள். எங்கள் வேலையை சுலபமாக்கி விட்டீர்கள்.இவனை பார்த்தால் யவனனைப் போல் தெரிகிறதே? இவனுக்கு என்ன தண்டனை தருவது என்பதைப் பற்றி என்னுடைய உயரதிகாரி தான் முடிவு செய்ய வேண்டும். வாருங்கள். அவரிடம் செல்வோம்" என்றான் அவன்.
"சரி.வாருங்கள். நாங்கள் இவனை அவரிடமே ஓப்படைத்து விடுகிறோம்" என்றான் கடோத்கஜன். நால்வரும் காவல் அதிகாரியை நோக்கி நடந்தனர்.
நால்வரையும் பார்த்த அதிகாரி " யார் இவர்கள்?" என்றான்.
காவலன் ஆதித்தன் கூறியதை அப்படியே திரும்ப கூறினான்.
காவல் அதிகாரி யவனனை மேலும் கீழமாக பார்த்தான்.
"இவனை ... இந்த யவ னனை நான் எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே என்று நினைவு வரவில்லை." என்று நெற்றி பொட்டை தட்டியவன் "ம்! இப்போது நினைவு வந்து விட்டது. இவன் காலையில் நாம் கைது செய்து சிறையில் அடைத்த ஆசாமியாயிற்றே?" என்றான்.
"ஓரு வேளை இவன் சிறையிலிருந்து தப்பி வந்திருப்பானோ?" என்றான் மற்றோருகாவலன்.
ஆதித்தனையும் கடோத்கஜனையும் கூர்ந்து பார்த்த காவல் அதிகாரி யவ னனை மீண்டும் ஏற இறங்க பார்த்து விட்டு "கைகலப்பு நடந்ததாக நீ சொல்கிறாய். ஆனால் அதற்கான எந்த தடங்களையும் மூவரின் உடலிலும் காணமுடியவில்லையே? "என்று யோசித்தவன் நிமிர்ந்த போது யவனனின் வாள் அவனது மார்பை தொட்டு நின்றது.
"நீ புத்திசாலி தான் .இதுவொரு நாடகம் என்பதை காலம் தாழ்த்தி நீ புரிந்து கொண்டு விட்டாய்." என்று சிரித்தான் யவனன்.
ஆதித்தனும், கடோத்கஜனும் ஆளுக்கொரு காவலர்களை மடக்கி பிடித்திருந்தனர்.
"உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றான் காவலர் தலைவன்.
"சிறிது நேரம் நீங்கள் பிறந்த நாள் உடையில் இருக்க வேண்டும். உங்கள் உடைகள் எங்களுக்கு வேண்டும்" என்றான் ஆதித்தன்.
சற்று நேரத்தில் மூவரும் கை கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்படும் இருட்டில் உருட்டி விடப்பட்டனர்.
மூவரும் அரசாங்கசீருடையை அணிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
"இந்த உடைக்குள் என் உடல் அடங்க மறுக்கிறது. மிகவும் இறுக்கமாக இருக்கிறது" என்று புலம்பினான்கடோத்கஜன்.
"கொஞ்ச நேரம் பொறுத்து கொள். கப்பலை மீட்ட பின்பு உடையிலிருந்து நீ விடுதலை பெறலாம்" என்றான் ஆதித்தன்.
மூவர் அணி இரவின் இருளில் பதுங்கியபடி துறைமுகத்தை நோக்கி பயணமாகினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக