வியாழன், 4 ஆகஸ்ட், 2022

ரகசிய தீவு




அத்தியாயம் 20

நர மாமிசபட்சிணி

இரவின் முதல் சாமம் துவங்கி மெல்லிய இருள் பரவத் தொடங்கியிருந்தது. இரை தேடி கூட்டை விட்டுபறந்த பறவைகள் திரும்ப தங்கள் கூடுகளுக்கு திரும்ப துவங்கியிருந்தன. அவற்றின் கீச்சு குரல்களை கேட்டபடி தன்னுடைய குதிரையை செலுத்தி கொண்டிருந்தான் பார்த்திபன். நிலவு மெல்ல வானின் உச்சிக்கு பயணப்பட தொடங்கியிருந்தது. தன்னுடைய குதிரையை மெல்ல நடத்தி சென்று கொண்டிருந்த பார்த்திபனின் மனம் பல்வேறு குழப்பங்களில் சிக்கி தவித்து கொண்டிருந்தது.

அவனது மனம் ஏனோ சந்திரவதனாவின் அழகில் லயித்து கிடந்தது.பார்த்திபன் இதற்கு முன்னால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலபெண்களை காப்பாற்றி இருக்கிறான். அந்த பெண்கள் மீது அவனுக்கு எந்தவொரு எண்ணமும் தோன்றியதில்லை. ஆனால் இந்த பெண்ணை பார்த்ததும் தன்னுடைய மனம் ஏன்கள் குடித்த குரங்கு போல் துள்ளாட்டம் போடுகிறது என்று அவனுக்கு விளங்கவேயில்லை. அவளது குவளை கண்களும், எள்ளுப்பூ மூக்கும், அழகான உதடுகளும் வரிசையான பல் வரிசையும் அவனுக்குள் ஒரு உன்மத்தத்தை உருவாக்கி விட்டிருந்தன. அவளது அருகே அவளை பார்த்து கொண்டே தன் வாழ்நாளை கழித்து விட மாட்டோமா என்று அவனுக்கு தோன்றியது. அவனது எண்ணத்தை நினைத்து அவனுக்கே வெட்கமாக இருந்தது.மதிமாறனின் ஆளுகையிலிருந்து எப்படியாவது ரகசிய தீவை மீட்க நினைக்கும் தன்னுடைய லட்சியத்திற்கு இடையூறாக ஒரு பெண் வந்திருப்பதையும் அவள் மீது தனக்கு கோபம் வராமல் பரிவும் காதலும் வந்திருப்பதை நினைத்து அவன் குழம்பிக் கொண்டிருந்தான்.

அதே நேரம் அவனது இன்னொரு மனம் வில்லவன் சொன்ன அந்த புதிரான மனிதனைப் பற்றி யோசித்து கொண்டிருந்தது. அவன் தன்னை எதற்காக தேடி அலைந்து கொண்டிருக்க கூடும்? ஒரு வேளை அவன் தன்னை பிடிக்க மதிமாறன் அனுப்பி வைத்த ஒற்றனாக இருப்பானோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்ததால் தான் அவன் வழக்கமான முறைப்படி அவனை விசாரி என்று வில்லவனுக்கு கட்டளையிட்டான். வில்லவன் தன்னுடைய வழக்கமான முறையில் அந்த புதிய மனிதனை விசாரணைக்கு உள்ளாக்கி இருப்பான் என்று அவனுக்கு தெரியும்.

இப்படி பல்வேறு யோசனைகளுடன் பயணித்த பார்த்திபன் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த அந்த ஆசிரமத்தை வந்தடைந்தான்.சில்வண்டுகள் ரீங்காரமிட அமைதியாக இருந்த ஆசிரமத்தின் உள்ளே இருந்து கதா காலட்சேப ஓசை மட்டும் மெலிதாக கேட்டு கொண்டிருந்தது. ஆசிரமத்தின் முன்பு இருந்த குதிரை லாயத்தில் தன்னுடைய குதிரையை கட்டி விட்டு எதிரே தென்பட்ட ஓற்றையடி பாதையில் கால்களை எட்டி போட்டான் பார்த்திபன்.வரவர பேச்சு குரல் மட்டும் பெரிதாக கேட்க ஆரம்பித்தது. தீப்பந்த வெளிச்சத்தில் ஒரு மரத்தின் கீழ் ஒரு யோகி உட்கார்ந்து ராம கதையை சொல்லி கொண்டிருந்தார்.

நிறைய சிறுவர்களும் பெரியவர்களும் அதை கேட்டு கொண்டிருந்தனர். "அறுபதினாயிரம் மனைவிகளை கொண்ட ராமனின் தகப்பனாகிய தசரதன் ஓரு மனைவியை கூட சந்தேகப்படவில்லை. ஆனால் ஒரே ஒரு மனைவியை பெற்றிருந்த ராமன் தன் மனைவியை சந்தேகப்பட்டது தான் விதியின் விளையாட்டு " என்ற யோகி இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த பார்த்திபனைப் பார்த்ததும் "இன்று கதை இத்தோடு முடிந்தது. நாளை மகாபாரதம் .அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள்" என்றார்.

அவ்வளவு பெரிய கூட்டம் சிறிது நேரத்தில் கலைய ஆரம்பித்தது. சிலர் யோகியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டு அவர் கொடுத்த திருநீறை வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

பார்த்திபனைப் பார்த்ததும் "சற்று நேரம் காத்திரு" என்று கண்களால் சைகை செய்தார் யோகி.

அவரது சங்கேதத்தை புரிந்து கொண்டு விட்ட பார்த்திபன் கூட்டம் கலையும் வரை ஒரு ஓரமாக ஓதுங்கி நின்றான்.

கூட்டம் முற்றிலுமாக கலைந்து சென்ற பின்பு அவனைப் பார்த்த யோகி" என் பின்னால் வா" என்றபடி நடக்க ஆரம்பித்தார்.

ஓரு ஓலை குடிலுக்குள் நுழைந்தவர் "வா பார்த்திபா.! உன் வரவுக்காகத் தான் நான்காத்திருந்தேன்" என்றார்.

"வணக்கம் சுவாமி.! இன்று நான் ... " என்று காலையில் துறைமுகத்தில் நடந்த விசயத்தை விளக்கி கூற முயன்றான்.

அதை கை நீட்டி தடுத்த யோகி" நீ எதுவும் சொல்ல வேண்டாம். நடந்த அனைத்தையும் நான் நன்கு அறிவேன். அந்த பெண்ணை நீ இப்போது எங்கே வைத்திருக்கிறாய்?" என்றார்.

பார்த்திபனின் புருவங்கள் வியப்பால் முடிச்சிட்டன. தீவின் மூலை முடுக்குகளில் நடக்கும் அத்தனை விசயங்களையும் மனிதர் உட்கார்ந்த இடத்திலேயே தெரிந்து கொள்கிறாரே என்ற வியப்பு அவனை ஆட்கொண்டது.

"இது எப்படி உங்களுக்கு தெரியும்?"

" என் கேள்விக்கு இதுவல்லவே பதில்?" என்று எதிர் கேள்வி வந்தது யோகியிடமிருந்து .

" மன்னித்து விடுங்கள். அந்த பெண் என் நண்பனின் வீட்டில் பத்திரமாக இருக்கிறாள். அவளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு இந்த விசயங்கள் எப்படித் தெரிகிறது?"

" எல்லாம் இறைவன் எமக்களித்த ஞானதிருஷ்டியால் தான். இந்த ஞானதிருஷ்டியால் நான் கண்டு சொன்னதை உன் அண்ணன் கேட்க மறுத்து தன்னிச்சையாக செயல்பட்டான்.விளைவு மரணம் அவனை கட்டியணைத்து கொண்டு விட்டது. எல்லாம் என் பேச்சை கேட்க மறுத்ததன் விளைவு" என்று புன்னகைத்தார் யோகி.

"வருங்காலத்தை முன்பே அறிந்த நீங்கள் ஓன்றை மட்டும் சொல்ல மறுக்கிறீர்கள்"

"நீ எதைப் பற்றி கேட்க விரும்புகிறாயோ கேள் .இறைவன் சம்மதித்தால் என் மூலமாக உன் கேள்விக்கு தகுந்த பதில் கிடைக்கும். இல்லையென்றால் என்னால் எதுவும் சொல்ல முடியாது"

"நான் வேறு எதைப் பற்றி கேட்க போகிறேன் சுவாமி .எல்லாம் அந்த மார்க்கதரிசியின் புதையலைப் பற்றித்தான்."

"அதை தெரிந்து நீ என்ன செய்ய போகிறாய்?"

"அதை நான் என்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தப் போவதில்லை. அந்த புதையலை வைத்து நான் நிறைய ஆயுதங்களை வாங்க வேண்டும். அதை வைத்து புரட்சி செய்து மதி மாறனை இந்த தீவை விட்டே விரட்ட வேண்டும். இப்போது என் புரட்சி இயக்கத்தில் நிறைய ஆட்கள் இருந்தாலும் அத்துனை பேருக்கும் போதுமான ஆயுகங்கள் இல்லை. அரசாங்க ஆட்களிடம் நாங்கள் கொள்ளையடிக்கும் ஆயுதங்களும் போதுமானவையாக இல்லை"

" உன் நிலைமை எனக்கு புரிகிறது. அந்த புதையல் உனக்கு கிடைத்தால் உன லட்சியம் நிறைவேறி விடும்."

"ஆமாம்"

"இதோ இப்போதே அந்த புதையல் எங்கிருக்கிறது என்று இறைவனிடம் கேட்டு ெசால்கிறேன்"

யோகி தன் கண்களை மூடி யோகத்தில் ஆழ்ந்தார். சற்று நேரத்தில் கண்ணை திறந்தவர் | "அந்த புதையல் இருக்கும் இடத்தை கடவுள் காட்டி விட்டான்" என்று புன்னகைத்தார்.

"எங்கே இருக்கிறது சுவாமி அந்த புதையல்?" என்றான் ஆவலுடன் பார்த்திபன்.

"மாண்டவர் பூமியில் "

"எனக்குப் புரியவில்லை சுவாமி "

"எனக்கும் தான் பு ரியவில்லை. அந்த புதையல் இருக்கும் இடத்தை சுற்றி நிறைய எலும்புகளையும், மண்டையோடுகளையும் தான் இறைவன் காட்டுகிறான். மிகவும் ஆபத்தான இடத்தில் அந்த பு தையல் இருப்பது போல் தெரிகிறது. அந்த புதையலை தேடிப் போய் இறந்தவர்களின் எலும்பு கூடுகளாக அவை இருக்கலாம்"

"மிகவும் புதிராக இருக்கிறது நீங்கள் சொல்வது. சரி நான் இதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன்."

"வேறு விசயம் ஏதாவது?"

"நஞ்சுண்டன் என்ற கடலோடி என்னைப் பற்றிகடைவீதியில் விசாரித்து கொண்டிருந்திருக்கிறான். அவனை என் ஆட்கள் பிடித்து வந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்."

"புது ஆட்களிடம் எச்சரிக்கையாக இருபார்த்திபா.! அவன் அரசின் உளவாளியாக இருக்கக் கூடும்"

"எனக்கும் அதே சந்தேகம் தான். அதனால் வழக்கமான பாணியில் வில்லவனை விசாரிக்க சொல்லியிருக்கிறேன்."

" நல்லது. நாம் எப்படியாவது மதி மாறனை ஓழித்து இந்த தீவை சுதந்திர நாடாக்க வேண்டும்"

"உங்களுக்கு ஏன் இந்த ஆசை சுவாமி?"

"எனக்கும் மதிமாறனுக்கும் தீர்க்கப்பட வேண்டிய கணக்கு ஓன்று இருக்கிறது. அந்த கணக்கின் விடை அவனது உயிர் " என்று இருளை வெறித் தார் யோகி.

தன்னைப் போலவே யோகியும் மதிமாறனால் பாதிக்கப்பட்டிருப்பார் போலும் என்று நினைத்து கொண்டான் பார்த்திபன்.

யோகியிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினான் பார்த்திபன். பாதி வழியில் அவன் பயணம் செய்த போது எதிர் பட்டான் வில்லவன். தன் குதிரையை திருப்பிக் கொண்டு பார்த்திபனுடன் இணைந்து கொண்டான் வில்லவன்.

"என்னாயிற்று? அந்த நஞ்சுண்டன் யார் என்று விசாரித்து விட்டாயா?" என்றான் பார்த்திபன்.
"அவன் தன்னை கடலோடி என்கிறான். ஆனால் ஆயுதங்களை விற்க கொண்டு வந்திருப்பதாக சொல்கிறான். ஆளைப் பார்த்தால் ஆயுத வியாபாரி போல் தோன்றவில்லை" என்றான் வில்லவன்.

" அவன் சொல்வது உண்மைதான். நாம் அரசை தாக்கி ஆயுதங்களை திருடி சென்று விடுவதால் மலை நாட்டிலிருந்து ஆயுதங்களை தருவித்திருக்கிறான் மதி மாறன் . அந்த ஆயுத கப்பலின் தலைவன் இவனாகத்தான் இருக்க வேண்டும்.இவன் ஒரு தவறான ஆசாமி. அந்த ஆயுதங்களை நம்மிடம் விற்று பணமாக்க முயற்சி செய்கிறான் என்று நினைக்கிறேன்.மதிமாறனிடம் ஆயுதங்களை ஓப்படைப்பதால் அவனுக்கு எந்த பலனுமில்லை."

"மதிமாறனிடம் அவன் ஆயுதங்களை ஒப்படைத்தாலும் கூட அவற்றை நாம் தானே திருட போகிறோம்?"

"ஆமாம். சரியாக சொன்னாய் " என்று சிரித்த பார்த்திபன்" ஆயுதங்களையே பொறியாக பயன்படுத்தி நம் ஆட்களில் நிறைய பேரை அவன் பிடித்து விடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறவாதே" என்றான்.

" இப்படி ஒரு கோணம் இருப்பதை நான் மறந்து விட்டேன்"

"அனைத்து திசைகளிலும் யோசித்தாக வேண்டும் நாம் .இல்லையென்றால் மதிமாறனிடம் அகப்பட்டு விடுவோம்" என்றான் பார்த்திபன்.

இருவரும் இரண்டாம் சாமம் நெருங்கும் சமயத்தில் வில்லவனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

வழக்கமான சங்கேத முறையில் கதவை தட்டினான் வில்லவன்.

சற்று நேரத்தில் கதவு திறந்தது. திறந்தவன் ஒரு பதினாறு வயது சிறுவன்.

"வில்லவா ! யார் இந்த சிறுவன் ? இவனை இதற்கு முன்பு இங்கே நான் பார்த்ததில்லையே?" என்றான் பார்த்திபன்.

"ஆமாம்.இவன் பெயர் ஆதி. அது நான் வைத்த பெயர் .இவனது உண்மையான பெயர் எனக்கு தெரியாது. இவனுக்கு காது கேட்காது. வாய் பேச முடியாது. சந்திரவதனாவுக்கு உதவியாக இவனை இங்கே கூட்டி வந்திருக்கிறேன்.. இவன் ஊமை என்பதால் விசயம் வெளியே போகாது"

"நல்ல காரியம் செய்தாய்" என்று அவனை பாராட்டினான் பார்த்திபன்.

"இவன் எங்கிருந்து வந்தான் என்று தெரிந்தால் நீ ஆச்சரியப்படுவாய்"

"எங்கிருந்து வந்தான்?"

"தெற்கேயிருந்து."

"அந்த நர மாமிசபட்சிணிகள் வாழும் காடு"

"ஆம். அந்த காடு தான் இவனது பிறப்பிடம்.இவன் அந்த நர மாமிசம் உண்ணும் மலைவாழ் இனத்தை சேர்ந்தவன்"

பார்த்திபன் அந்த சிறுவனை பார்த்தான். அவனது இருண்ட கண்களில் வஞ்சகமும், வெறியும் மின்னுவதை பார்த்திபன் கண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக