ரகசிய தீவு
அத்தியாயம் 25
மிரட்டல் மொழியாள்.
கருணாகரன் தீவிரமான யோசனையில் இருந்தான். தனக்கு தெரியாத ஏதோ ஒரு ரகசியம்மதிமாறனுக்கு தெரிந்திருக்கிறது. அன்று ஒரு நாள் இரவில் ஏதோ ஒரு ரகசியம் ஓளிந்திருக்கிறது. அன்று இரவு செங்கோடன்மதி மாறனை தேடி வந்திருக்கிறான் என்பது காவலர்கள் மூலம் அவனுக்கு தெரிய வந்தது. அதன் பிறகு நடந்த வாக்குவாதத்தில் செங்கோடனை சிறையில் அடைக்க மதிமாறன் உத்தரவிட்டது வரை எல்லாமே சரியாக இருப்பது போல் அவனுக்கு தோன்றியது. ஆனால் சிறையில் அடைக்கப்பட்டவனின் நாக்கை எதற்காக மதிமாறன் துண்டிக்க செய்தான் என்ற விடை தெரியாத கேள்வி அவனது மனதை குடைந்தது.
செங்கோடன் சிறையில் யாரிடமும் பேசி விடக் கூடாது என்ற காரணத்தால் தான் மதி மாறன் அவன் நாக்கை துண்டிக்க உத் தரவிட்டிருக்க வேண்டும். அவன் பேசக்கூடாது என்று மதிமாறன் விரும்புகிறான் என்றால் அவனிடம் ஏதோ ஒரு ரகசியம் ஓளிந்திருக்க வேண்டும். கலை கூத்தாடிகள் அனைவரும் சிறையிலிருந்து தப்பி சென்ற விசயம் தெரிந்த பிறகு அவன் தன்னிடம் சினத்தில் சீறுவான் என்று நினைத்திருந்தான் கருணாகரன் ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக மதிமாறன் கோபத்தில் கொந்தளிக்கவில்லை. ஆனால் தப்பி சென்ற அத்தனை பேரையும் திரும்ப பிடிக்கவும் அவன் முனைப்பு காட்டவில்லை. ஆனால் அத்துனைபேரில் அவன் சந்திர வதனா மட்டும் கிடைத்தால் போதும் என்று சொன்னது அவன் மனதை உறுத்தியது. மதிமாறன் பெண் பித்தன்தான். ஆனால் சந்திரவதனா விசயத்தில் அந்த பெண் பித்தை தாண்டி வேறு ஏதோ விசயம் மறைந்திருப்பதாக அவனது உள் உணர்வு கூறியது.
காவலர்களை அழைத்து செங்கோடனின் மரணத்தை பற்றி தீவு முழுவதும் அறிவிப்பு கொடுக்க சொன்னவன் அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவனுக்கு மார்க்கதரிசியின் தங்கம் இருக்கும் இடம் தெரியும். அதை கலத்தில் கொண்டு செல்ல நீலன் என்ற திறமையான கப்பல் மாலுமியும் கைவசத்தில் இருக்கிறான். இனி அவனுக்கு தேவைப்படுவதெல்லாம் புதையலை கொண்டு செல்லும் அதன் எடையை தாங்ககூடிய கப்பல் மட்டும் தான். அது நீலனிடம் இல்லை என்று அவனுக்கு தெரியும். ரகசிய தீவிற்கு வர வேண்டிய முத்தழகி கப்பல் இன்னமும் வந்து சேரவில்லை. ஆனால் அதிலிருந்து வரவேண்டிய சரக்குகள் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்து விட்டன. அப்படியென்றால் துறைமுகத்திற்கு சற்று தொலைவில் எங்காவது அந்த கப்பல் நின்று கொண்டிருக்க வேண்டும். முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும். அதை கண்டுபிடித்தவுடன் முதல் வேலையாக அதில் இருக்கும் ஆயுதங்களை அழிக்க வேண்டும். அப்போதுதான் புதையலை ஏற்றுவதற்கு போதுமான இடம் கிடைக்கும்.
அந்த ஆயுதங்கள் மதிமாறனின் கைக்கு கிடைத்து விட்டால் அவன் சிகப்பு முகமூடியையும் அவனது புரட்சி கூட்டத்தையும் அழித்து ஒழித்து விடுவான். இவர்கள் இருவரும் மல்லுகட்டி கொண்டிருக்கும் இடைவெளியில் புதையலை கிளப்பி சென்று விட வேண்டும் என்பது தான் அவனது திட்டம்.
அவன் தன்னுடைய ஆட்களில் சிலரை அழைத்தான்.
"இந்த கணத்திலிருந்து உங்களுக்கு கடலில் தான் வேலை. எப்பாடுபட்டாவது அந்த முத்தழகி கப்பலை கண்டுபிடியுங்கள். உங்களில் ஓரு பிரிவினர் அந்த கப்பலை கண் பார்வையிலேயே வைத்திருங்கள். இன்னொரு பிரிவினர் என்னிடம் வந்து தகவல் சொல்லுங்கள். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் கூறுகிறேன்" என்றான் கருணாகரன்.
அவர்கள் அவனிடமிருந்து விடைபெற்று கிளம்பினார்கள். கருணாகரன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
அதே நேரம் ரகசிய இடம் ஓன்றில்
நஞ்சுண்டன் கை கால்கள் கட்டப்படாமல் சுதந்திரமாக நடமாட விடப்பட்டிருந்தான்.
அவனை சுற்றி பார்த்திபனின் ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
வெளியே வில்லவனும் பார்த்திபன் பேசிக் கொண்டி ருந்தார்கள்.
" இவனை நம்பலாம் என்று சொல்கிறாயா?" என்றான் வில்லவன்.
"ஆசாமி சூது நிறைந்தவன் என்பதை மறுப்பதிற்கில்லை. பூரணமான நம்பிக்கையை இவன் மீது வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இப்போதைக்கு இவனது சகாயம் நமக்கு தேவை. நமக்கு தேவை ஆயுதங்கள் .அவை இவனிடம் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றை விலை கொடுத்து வாங்க நம்மிடம் பொருள் இல்லை. அந்த புதையல்! அது இப்போது கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். நம்முடைய துரதிர்ஷ்டம் அது எங்கே இருக்கிறது என்று நமக்கு தெரியாது. அவனுடைய அதிர்ஷ்டம் அது இருக்கும் இடம் அவனுக்கு தெரிந்திருக்கிறது. அதை அடைய நாம் உதவி செய்தால் அந்த ஆயுதங்கள் நம் வசமாகும்"
"நல்ல பேரம் தான். இதற்கு நாம் ஒப்புகொள்ளலாம் தான். இதனால் நாம் இழக்கப் போவது ஓன்று மில்லை,,
"புரியாமல் பேசாதே வில்லவா! அந்த காட்டில் இருக்கும் நர மாமிசபட்சிகள் நம்மை எளிதாக புதையலை எடுக்கவிட்டு விடுவார்களா? அவர்களிடம் பலியாகாமல் நாம் புதையலை எடுத்தாக வேண்டும். இந்த முயற்சியில் நாம் எத்தனை உயிர்களை இழக்க போகிறோம் என்று நமக்கு தெரியாது"
"ஆமாம். அதை நான் யோசிக்க மறந்து விட்டேன்"
" அவன் அந்த நஞ்சுண்டன் யூகமாக குத்துமதிப்பாகத் தான் எல்லாவற்றையும் சொல்லி கொண்டிருக்கிறான். அவன் சொல்வதை நம்பி இதில் இறங்குவது பைத்தியக்காரத்தனம் போல தோன்றுகிறது."
"ஆமாம். நாம் இந்த விசயத்தை சற்று ஆறப்போடுவதே நல்லது " என்றான் வில்லவன்.
அதே நேரம் விரைந்து வந்து நின்றது ஒரு புரவி .பார்த்திபனுக்கு வணக்கம் செலுத்திய புரவி வீரன்"தலைவரே! அந்த பெண் உங்களை பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள்" என்றான்.
" யார்? சந்திரவதனாவா?" என்றான் பார்த்திபன்.
"ஆம். அந்த பெண் தான் " என்றான் குதிரை வீரன்.
"நீ முன்னால் போ! நான் பின்னால் வருகிறேன்" என்றான் பார்த்திபன்.
அவனையே பார்த்து கொண்டிருந்த வில்லவன்" பார்த்திபா! அந்த பெண்ணிற்கு ஏதாவது ஒன்று என்றால் நீ பதறி துடிக்கிறாய்." என்று தனது மனதில் இருப்பதை முழுதாக சொல்லாமல் பாதியில் நிறுத்தினான்.
"பெண் மோகத்தால் லட்சியத்தை கைவிட்டு விடுவான் பார்த்திபன் என்று நினைக்கிறாயா நண்பா ? தவறான எண்ணம்.பார்த்திபன் யாருமற்ற அபலை பெண் என்பதால் மட்டுமே அவள் மீது அக்கரை காட்டுகிறான். நீநினைப்பதுபோல் ஓன்றும் இல்லை. தவறான எண்ணங்களுக்கு என் மனதில் இடமே இல்லை" என்றான் பார்த்திபன்.
"உன்னை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் உணர்வுகளுக்கு ஆட்படும் சாதாரண மனித பிறவிகள் தானே நாம் அனைவரும் " என்றான் வில்லவன்.
"எந்த காரணத்தாலும் நான் என் லட்சியத்தை கைவிட்டு விட மாட்டேன். என்னை வீணாக சந்தேகிக்காதே நண்பா" என்றான் பார்த்திபன்.
"இல்லை. நான் அப்படி கூறவில்லை. நாம் ஒரு லட்சியத்தை நோக்கி பயணமாகி கொண்டிருக்கும் போது அதற்கு தடையாக பல விசயங்கள் வரக்கூடும். பெண்களும் காதலும் அவற்றில் பிரதானமானவை. நாம் அவற்றை தவிர்த்து கொண்டு நம்முடைய மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும். நண்பன் கடமை தவறும் போது அவனுடைய தவறை சுட்டி காட்டி திருத்துவது உண்மையான நண்பனின் கடமை. அதைத்தான் நானும் செய்தேன். என்னை தவறாக நினைக்காதே" என்றான் வில்லவன் சங்கடத்துடன்
"உனக்கு அப்படி ஒரு நினைப்பு வருமளவிற்கு நடந்து கொண்டது என்னுடைய பிழைதான். இனி எந்த தவறும் நடக்காமல் பார்த்து கொள்கிறேன்" என்றான் பார்த்திபன்.
இருவரும் அமைதியாக ஓருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். பார்த்திபன் சிரித்து கொண்டான்.
"சரி வா!கிளம்பலாம்.அந்த பெண் புதிதாக என்ன பிரச்சனையை கிளப்பி வைத்திருக்கிறாள் என்று பார்ப்போம்"
இருவரும் தங்களின் குதிரையை விரட்டினர். வில்லவனின் மாளிகைக்கு இருவரும் வந்து சேர்ந்த போது வில்லவனின் மனைவி இருவரையும் வரவேற்றாள்.
"அந்தப் பெண் திடிரென அழ ஆரம்பித்து விட்டாள். "
" என்ன காரணம்? யாராவது அவளை திட்டினார்களா?"
"இல்லை"
"பிறகெதற்கு அவள் திடிரென்று அழ ஆரம்பித்திருக்கிறாள்?"
"அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லையே?"
"நானே விசாரித்து தெரிந்து கொள்கிறேன்" என்ற பார்த்திபன் சந்திரவதனா இருக்கும் திசையை நோக்கி நடந்தான்.
"இந்த பெண்ணால் புதிதாக ஏதோவொரு பிரச்சனை வந்து சேருமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது." என்றாள் பார்வதி.
"கவலைப்படாதே! இதே கவலை எனக்கும் இருக்கிறது. இதைப் பற்றி நான் பார்த்திபனிடம் பேசி எச்சரிக்கை செய்திருக்கிறேன். நாம் பயப்படும்படி எதுவும் நடக்காது" என்ற வில்லவன் ஆதுரமாக அவளை அணைத்து கொண்டான்.
தனிமையில் இருந்த சந்திரவதனாவை அணுகிய பார்த்திபன் அவளது கண்ணீரை பார்த்து துணுக்குற்றான். ஓரு பெண்ணின் கண்ணீரை பார்த்ததும் அவன் தன்னிலை மறந்தான். வில்லவனின் எச்சரிக்கையும் மறந்தான்.
"சந்திரவதனா எதற்காக கண்ணீர் ?நீ கண்ணீர் விடுமளவிற்கு அப்படி என்ன நடந்தது?"
"என் தந்தை இறந்து விட்டார்."
"உன் தந்தை இன்று காலையில் தீ விற்கு வருவதாக கூறி இருந்தாயே? பிறகு எப்படி?"
"ஆமாம். அப்படித்தான் கூறினேன். ஆனால் என் எதிர்பார்ப்புக்கு மாறாக அவர் நேற்று இரவே தீவிற்கு வந்து விட்டார். அந்த கொடியவன் மதிமாறன் அவரை சிறையில் அடைத்து விட்டான். அங்கே அவர் இறந்து விட்டார்."
"இது உனக்கு எப்படி தெரியும்?"
.
" அரசாங்க ஆட்கள் இந்த விசயத்தை காலையில் வீடு வீடாக அறிவித்து சென்றார்கள். அதை நான் கேட்டேன்"
"நிலைமையை புரிந்து கொள் சந்திரவதனா. நாம் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மை பிடிக்க அந்த மதிமாறன் குழ்ச்சி வலை பின்னியிருக்கிறான். இதில் உன் தந்தை அகப்பட்டு விட்டிருக்கிறார். "
"எனக்கு அதுவெல்லாம் தெரியாது. நான் என் தந்தையின் முகத்தை பார்க்க வேண்டும். அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி அவரது உடலுக்கு கொள்ளி வைக்க வேண்டும்"
"இது என்ன பைத்தியக்காரத்தனம். இவையெல்லாம் நடக்கக்கூடிய விசயங்களே அல்ல. நம் நிலமை பு ரியாமல் நீ பேசுகிறாய். பெண்கள் கொள்ளி வைப்பதெல்லாம் சாஸ்திரமே இல்லை"
அவையெல்லாம் மனிதர்கள் உருவாக்கியது.காலம் மாறும் போது சாஸ்திரங்களும் மாறித் தானாகவேண்டும்"
"இது சாத்தியமற்றது "
"இது நடக்காவிட்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன்" சந்திரவதனா தன் இடுப்பில் சொருகியிருந்த குறுவாளை எடுத்து காட்டினாள்.
"என்னை நானே மாய்த்து கொள்வேன்"
அவள் விழிகளில் இருந்த தீவிரத்தை பார்த்த பார்த்திபன் உறைந்து போய் நின்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக