திங்கள், 13 பிப்ரவரி, 2023

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன்!

ஆபரேசன் அஷ்டவக்கிரன்.

அத்தியாயம் 10

டிரைவர் சொன்னதை கேட்டதும் சதாமின் நடுமுதுகில் வேர்த்தது.

"நீ சொல்வது உண்மையா?" என்றான் பதட்டத்துடன்.

" என்னோட கண்ணால பார்த்தேன்.துரை பாண்டியனை கொல்ல வந்த கும்பலிடம் இருந்து இவங்க ரெண்டுபேர் தான் காப்பாத்துனாங்க. இரண்டுபேருமே காக்கி கலர் பேண்ட் போட்டுகிட்டு போலீஸ்னு சொல்லிட்டு இருந்ததை நானே பார்த்தேன்.அதுக்கு பிறகுதான் துரைபாண்டியன் போலீசில் சரணடைந்தான்.அவ்வளவுதான் எனக்கு தெரியும்" என்றான் டிரைவர்.

"அவனுக போட்டோவை எனக்கு வாட்ஸ்அப் பண்ணு" என்ற சதாம் காரில் ஏறிக்கொண்டான்.

வந்துசேர்ந்த இருவரின் போட்டோவையும் தன் ஆட்கள் அங்கம் வகிக்கும் வாட்ஸ்அப் குருப்பில் சுற்றலில் விட்டவன்" காரை எடு" என்றான்.

தம்பி தேடிக்கொண்டிருந்த சரக்கு கிடைத்துவிட்டது. ஆனால் அதை தயாரிப்பவர்கள் மீது அவனுக்கு போதுமான நம்பிக்கை இல்லை. போலீஸ் என்று டிரைவர் சொன்னதும் கொஞ்சம் உஷாராகி விட்டான்.

அவனுக்கு குற்றாலத்தை தெரியும். அவ்வப்போது பவுடர் வாங்க வருகிறவன். கையில் காசு இல்லாவிட்டால் கடனுக்கு சரக்கு வாங்கி போகிறவன் பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து போனை எடுக்காமல் பிரசரை ஏற்றுகிறவன். இழுத்தடித்து எப்படியோ காசை கொடுத்து செட்டில செய்துவிடுவான்.அவனை போலீஸ் என்று டிரைவர் சொன்னதை அவனால் நம்பமுடியவில்லை.

குற்றாலத்தின் கூட இருந்தவன் அவ்வளவு நல்லவனாக தோன்றவில்லை.அவன் ஒருவேளை போலீசாக இருந்து குற்றாலத்தை இன்பார்மராக பயன்படுத்துகிறானோ என்றுகூட நினைத்தான் சதாம்.

நமக்கு எதற்கு வம்பு. ஏதாக இருந்தாலும் தம்பியே முடிவெடுக்கட்டும் என்று கடைசியாக நினைத்துகொண்டான்

அவன் தம்பியின் இடத்திற்குள் நுழைந்தபோது ஒருவனை கட்டிவைத்து முகத்தில் குத்திகொண்டிருந்த தம்பி ரத்தம் படிந்த கையை பைப் தண்ணீரில் கழுவிவிட்டு "சதாம். சாம்பிள் கொண்டுவந்துருக்கியா?" என்றான்.

"இதோ" என்ற சதாம் பவுடர் பாக்கெட்டை கொடுத்தான்.

"நம்ம கெமிஸ்டை கூப்பிடுங்கடா" என்றான் தம்பி.

கண்ணாடி அணிந்து பிரெஞ்சுபியர்ஸ் தாடியோடு எங்கிருந்தோ வந்தவன் பவுடர் பாக்கெட்டை வாங்கினான்.

"இதை டெஸ்ட் பண்ணு.. ஆஸ்திரேலியா சரக்கோடு ஓத்து போகுதான்னு பாரு" என்றான தம்பி.

அவன் தலையாட்டிவிட்டு இருட்டில் மறைந்தான்

"சொல்லு சதாம். இவனை எங்கே பிடித்தாய்?"

"எனக்கு தெரிஞ்ச பயதான். குற்றாலம்னு பேரு. அவனாதான் என்னை போன் பண்ணி கூப்பிட்டான்.அவன் கூட இன்னொருத்தன் இருந்தான். அவன்தான் பார்ட்டியாம்"

"அவனுக்கு இது எப்படி கிடைச்சதுன்னு தெரியுமா?"

"தெரியலை. முதல்ல அவன் கொடுத்தது ஓரிஜினலா இல்லையான்னு பார்ப்போம்"

"துரை பாண்டியன் இடத்தை இவன்பில் அப்பண்ணினால் பரவாயில்லை."

"இவன் கொஞ்சம் திமிரா இருக்கான்"

"இவனுக்கு எப்படி அந்த வித்தை தெரிந்தது? இங்கே அது தெரிஞ்ச ஒரே ஆள் அவன்தான்"

"தெரியலை. விசாரிக்கனும்"

உள்ளே வந்த கெமிஸ்ட் "தலைவரே. சரக்கு தரம்.துரையோட அதே ஸ்டேண்டர்டு." என்றான்.

"அப்பா. நிம்மதி" என்றான் தம்பி.

சதாமின் செல்போனில் வாட்ஸ்அப் நோட்டிபிகேசன் சத்தம் தொடாந்து வர ஆரம்பித்தது.

"என்னாச்சு சதாம்? போன்ல இத்தனை நோட்டிபிகேசன்?"

" ஒரு சின்ன பிரச்சனை"

" என்னன்னு சொல்லு"

" இந்த போட்டோவை பாருங்க. இவனுக ரெண்டுபேர் தான் சரக்கை என்னிடம் கொடுத்தது" என்ற சதாம் போனை தம்பியிடம் கொடுத்தான்.

"இதுல யாரு சரக்கு பார்ட்டி?"

சதாம் வாசுவின் படத்தை காட்டினான்.

தம்பி அதை ஜும் செய்து பார்த்தான்.

" இவன் பேரு?"

"வாசு"

" இந்த பேரை எங்கியே கேள்விப்பட்டு இருக்கேன்" என்ற தம்பி வாட்ஸ்அப் குரூப் சாட்டை பார்க்க ஆரம்பித்தான்.

"இவர்கள் இரண்டு பேரையும் நம் ஆளுக ஏற்கனவே பார்த்திருப்பதாக சொல்கிறார்களே?"

"துரை பாண்டியனை காப்பாற்றியது இவனுக தானாம். இவனுக ரெண்டுபேரும் போலீஸ்னு என்னோட டிரைவர் சொல்றான்."

"இவனை போலீஸ்னு நினைக்கலாம். ஆனா கூட இருக்கிற இந்த கோமாளியை எப்படி போலீஸ்னு நம்புறது?"
அவன் சுட்டிகாட்டியது குற்றாலத்தை.

"ஏதாவது அண்டர்கவர் ஆப்ரேசன் ல இருப்பாங்க போல. போலீஸ்ல தான் ஏகப்பட்டடிப்பார்ட்மண்ட் இருக்கே? அதுல ஏதுலயாவது வேலை பார்ப்பான் போல, இவனை எனக்கு கொஞ்ச நாளாத்தான் பழக்கம். அதுவும் பவுடர் வாங்க வரும்போது தான், "

" இரு. இப்ப கன்பார்ம் பண்றேன்" என்ற தம்பி ஜெயிலரை போனில் அழைத்தான்.

"சொல்லுங்க சார்"

"அந்த துரைபாண்டியனோட அசிஸ்டெண்ட். அவன் பேரு என்ன?"

"வாசு. அவன் நேத்தே ரிலீசாகி விட்டான். பேசிப் பார்த்தேன். ஒன்னும் கத்துக்கலைன்னு சொல்லிட்டான்"

"நீ முட்டாள்னு தெரியும். ஆனா இவ்வளவு பெரிய முட்டாள்னு தெரியாது. அவன் இப்ப எங்கிட்டவந்துட்டான். அவன் உங்க டிப்பார்ட்மெண்டுதானே?"

" என்னங்க சொல்றீங்க?"

"பொய் சொல்லாதே.அவன் உங்க ஆளு தானே?"

"அவன் எங்க ஆளுன்னு சொன்னானா?"

"இல்லை."

"அவங்க மாமா மாதிரி போலீசாகனும்னு வேணா சொன்னான்,

"அவங்க மாமா போலீசா?"

"அவரும் போலீசாக ஆசைப்பட்டாருனு சொன்னான் "

"குழப்பாதே! போனை வை" என்று போனை அணைத்தான் தம்பி.

"அந்த துரைபாண்டியன் ஏதோ தெளிவா பிளான் பண்ணியிருக்கான். இந்த வாசு அவனோட ஆள் தான். நமக்கு வாசுன்னு சின்ன மீனை போட்டு பெருசா எதையோ பண்ண நினைக்கிறான். இது ஒரு டிராப்னு நினைக்கிறேன். சதாம். அந்த துரைபாண்டியன் பைத்தியமாக நடித்து கூட நம்மை ஏமாற்றலாம். நீ போய் அவனை உடனே பாரு.அதுக்கு முன்னால அந்த குற்றாலத்தின் நெம்பரை கொடு. நான் பேசணும்"

என்றான் தம்பி.

நெம்பரை கொடுத்துவிட்டு வெளியேறினான் சதாம்.

தம்பிக்கு தெளிவாக புரிந்துவிட்டது.துரை பாண்டியன் தான் இதன் சூத்ரதாரி.வாசுவுக்கு தொழில் கற்றுகொடுத்ததும் அவன் தான். எதற்காக இந்த நாடகம்? அவன் குற்றாலத்தை போனில் அழைத்தான்.

" நான் தம்பி பேசறேன்"

"சொல்லுண்ணே"

"அந்த வாசுகிட்ட போனை கொடு"

"இதோ"

"வாசு"

"சொல்லுங்க"

" நான் தம்பி. என்கிட்ட வேலைக்கு வர்ரியா? துரைபாண்டியனோட இடத்தை நீ எடுத்துக்க. உனக்கு என்ன வேணும்னு சொல்லு. தர்ரேன்"

"என்ன தருவீங்க?"

"என்ன வேணும்னு கேளு."

"எனக்கு மாயா வேணும்"

"எனக்கு புரியலை'

" எனக்கு துரைபாண்டியனோட பொண்ணுமாயா வேணும். இதை தவிர வேற டிமாண்ட் இல்லை."

"நேர்ல வா. பேசுவோம்" என்று போனை அணைத்தான் தம்பி.

மாயா தன்னிடம் இருந்து தப்பிபோய் இரண்டு நாட்களாகிவிட்டதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. இப்போது காணாமல்போன அதே மாயாவை தேடிக்கொண்டு ஒருவன். தம்பிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இப்போது மாயாவுக்கு எங்கே போவது? அவன் வெகுவேகமாக சிந்திக்க ஆரம்பித்தான்.

அதேநேரம் சதாம் அரசு மன நல விடுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தான்

ரிசப்சனில்" நான் துரைபாண்டியனை பார்க்கனும்" என்றான்.

"நீங்க?"

"அவர் தம்பி."

"அது போலீஸ் கேசுங்க. போலீஸ் பர்மிசன் இல்லாம நாங்க யாரையும் விடக்கூடாது"

"ஓ! அப்படியா?சரி. நான் பர்மிசனுடன் வருகிறேன்" என்று திரும்பி நடந்தான் சதாம்.

"ஷ்" என்ற சத்தத்திற்கு திரும்பினான் அவன்.

ஓரமாக மறைந்து நின்றிருந்த வார்டன் "நான் துரைபாண்டியனிடம் கூட்டிபோனால் என்ன தருவ?" என்றான்.

சதாம் நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை அவனிடம் நீட்டினான். அவசரமாக அதை பதுக்கியவன்" என் பின்னாடியே வா" என்றான்.

வராந்தாவில் நடந்து சென்றவன் ஒரு கதவை திறந்தான்" உள்ளேதான் இருக்கான். போய் பாரு. பத்து எண்றதுக்குள்ள வந்துரு" என்றான்.

அறையின் நடுநாயகமாக ஒருவன் உட்கார்ந்து சுவரை வெறித்து கொண்டிருந்தான்.

"துரை பாண்டியன்" என்றபடி அவன் முதுகில் கைவைத்தான் சதாம்.

திரும்பியவன் துரைபாண்டியன் இல்லை. வேறோருவன். விகாரமாக சிரித்தவன்" நான் தான் துரைபாண்டியன்" என்று சிரித்தான்

"பத்து எண்ணியாச்சு. வெளியே வா" என்று வார்டன் அவனை வெளியே இழுத்தான்.

துரைபாண்டியன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டான் என்று சதாமுக்கு புரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக