ஆப்ரேசன் அஷ்டவக்கிரன்
அத்தியாயம் 9
வாசு சிறையைவிட்டு வெளியே வந்தபோது அவனுக்காக குற்றாலம் காத்துகொண்டிருந்தான்.
"என்னப்பா !உன்னோட வாத்யார்பூரா பாடமும் ஒழுங்கா சொல்லிகொடுத்தாரா? இல்லை அரியர் ஏதாவது வைச்சிருக்காரா?"
"முக்கியமான மேட்டரை மட்டும் இன்னும் சொல்லி தரலை."
"அதையும் சொல்லிகொடுத்தா அவன் பொண்ணை நீ கண்டுபிடிச்சு காப்பாத்தமாட்டியே? சரியான கொடக்கண்டன் அவன் "
" இருக்கட்டும். நானும் அந்த ஆள் இருக்கிற இடத்துல இருந்தா இதைத்தான் பண்ணுவேன்"
"சரி. ரெண்டுபேரும் பிளான் பண்ணினபடி ஒன்னாவே ஜெயிலுக்கு வந்து தொழில் கத்துகிட்ட. அடுத்தது என்ன பண்ண போற?'
" இரு. அந்தாளு கிளம்பும்போது ஒரு சீட்டை கொடுத்தான் .அதுல என்ன இருக்குன்னு பார்ப்போம்" என்ற வாசுதன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அந்த சுருட்டப்பட்ட சீட்டை பிரித்தான்.
அதில் ஒரு செல்போன் கடை அட்ரசும் அதன் கீழே 2112 என்ற நான்கு எண்களும் எழுதப்பட்டிருந்தன..
"இது என்ன நெம்பர்.? ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டு மாதிரி இருக்கு" என்றான் குற்றாலம்.
" அந்தாளோட போனை போலீஸ் சீஸ் பண்ணிட்டாங்க. அதே நெம்பரை திரும்ப வாங்கனும்னா துரைபாண்டியனோட அதே ப்ரூப் வேணும். அது அவன் மககிட்டத்தான் இருக்கனும். அவளைத்தான் தம்பி பிடிச்சு வைச்சிருக்கானே?"
"அது அவனுக்கு டீ குடிக்கிற காசுப்பா. இது வேற ஏதாவது நெம்பரா இருக்கலாம்"
"முதல்ல அந்த சீட்டுல இருக்கிற செல்போன் கடைக்கு போகலாம்"
"அதான் சரி. முதல்ல ஒரு ஆட்டோவை பிடிப்போம்" என்ற குற்றாலம் கைதட்டினான்.அதை மதித்து நின்ற ஆட்டோ வில் இருவரும் ஏறிக்கொண்டனர்.
"அடுத்தது என்னப்பா பண்ண போற?"
" அதை அப்புறம் பார்ப்போம். நான் மூணு மாசம் உள்ளே போயிட்டேன். வெளியே என்ன நடந்ததுன்னு சொல்லவே மாட்டேங்குறியே?"
"தலை நீ. நீ இல்லா நாங்க என்ன பண்ணமுடியும்? முன்ன மாதிரி வாழ்க்கை செழிப்பா இல்லை. மூணு மாசமா நாய்படாதபாடு. நம்ம பசங்க ஏதோ கிடைச்சதை வைச்சு வாழ்க்கையை ஓட்டுறோம்.கிருஷ்ணாபுரம்னு ஒரு ஊர்ல கலவரம் பண்ணனுமாம். ஆள் வேணும்னு வந்தாங்க. ரொம்ப தூரம்னு அந்த புராஜக்டை வேணாம்னு சொல்லிட்டோம்"
வாசுவின் புருவங்கள் நிமிர்ந்தன.
"எந்த கிருஷ்ணாபுரம்?" என்றான் பரபரப்புடன்.
"கவலைப்படாதே! நீ நினைப்பது சரிதான். உன்னோட சொந்த ஊர்தான்.அந்த பெர்லைட் கம்பெனில தான் ஏதோ பிரச்சனை பண்ண நினைக்கிறாங்க"
வாசு சிந்தனையில் ஆழ்ந்தான்.அவனையே பார்த்து கொண்டிருந்த குற்றாலம்" என்ன யோசிக்கிற? அந்த ஊரே வேணாம்னுதானே இங்க ஓடிவந்தாய்? ஆனா பாரு இப்ப அந்த ஊர்ல ஒரு பிரச்சனைன்னு சொன்னதும் தானா உன் மனசு பதறுது. அது தான் ஊர் பாசம், "
"உண்மைதான்" என்றான் வாசு.
"சார். நீங்க சொன்ன இடம் வந்துருச்சு" என்றான் ஆட்டோ டிரைவர்.
கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு இருவரும் துரைபாண்டியன் குறிப்பிட்டிருந்த கடையை தேடி நடந்தனர்.
ஒரு சந்தில் யாரும் கவனிக்காத இடத்தில் ஒளிந்திருந்தது அந்த செல்போன் கடை.
இருவரும் கடைக்குள் நுழைந்ததை பார்த்து அவன் எழுந்தான் காதில் இருந்த ஹேட் போனை கழற்றியவன் "ரீ சார்ஜா சார்" என்றான்.
வாசு எதுவும் பேசாமல் பேப்பரை நீட்டினான்.
அதை பார்த்தவன் முகத்தில் பரபரப்பு தொற்றியது.
" ஒரு நிமிசம் இருங்க." என்றவன் கடை ரேக்குக்கு பின்புறமாக சென்றான்.
பத்து நிமிடத்தில் திரும்ப வந்தவன்"இந்தாங்க" என்று ஒரு செல்போனை கொடுத்தான்.
"அவ்வளவுதான் கிளம்புங்க" என்றவன் மறுபடியும் ஹேட் போனை காதில் மாட்டிகொண்டு சாய்ந்தான்.
இருவரும் திரும்ப நடந்தனர்
அவன் கையிலிருந்த செல்போனை வாங்கி ஆன் செய்தான் குற்றாலம்.
" இது ரொம்ப காஸ்ட்லி செல்போன். இதோட செட்டப்பை பார்த்தால் சாட்டிலைட் போன் மாதிரி தெரியுது"
"அதேதான்" என்றான் வாசு.
"இதுல எதை பேசினாலும் டிராக் பண்ண முடியாதே?"
"ஆமா. இதைப் பத்திதுரை ஏற்கனவே சொல்லி இருக்காரு. இப்ப நாம ரூமுக்கு போவோம்" என்றான் வாசு.
அவனது மூளை எப்படி துரைபாண்டியனை நெருங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தது. தானாக போனால் குலம் என்ன கோத்திரம் என்ன என்று விசாரிப்பான். நீ தானே என்னை தேடி வந்தாய் என்று குத்தி காட்டி பேசவும் வாய்ப்பிருக்கிறது. அவனே தன்னை தேடி வரனும். அதற்கு என்ன செய்யலாம்?
அவன் தன்னுடைய பழைய அறைக்குள் நுழைந்ததும் அவனது ஆட்கள் அவனை சூழ்ந்துகொண்டனர்.வாசு திரும்பி குற்றாலத்தை பார்த்தான்.
" நான் தான் போன் பண்ணி நீரிலீசுன்னு சொன்னேன். இவனுக யாரும் இன்னைக்கு தொழிலுக்கு போகலை"
"இன்னைக்கு நைட் பார்ட்டி இருக்கு தானே?" என்றான் ஒருவன்.
" வைச்சிட்டாப் போச்சு" என்றான் குற்றாலம்.
அன்று இரவு மொட்டைமாடியில் கச்சேரி துவங்கியது.
இரவு அனைவரும் தூங்கியபிறகு வாசு குற்றாலத்திடம் பேச ஆரம்பித்தான்.
"குற்றாலம். தம்பி என்னை தேடனும்? அதுக்கு என்ன பண்ணலாம்?"
"அவனும் தான் புது டிரக் டேஸ்டரை தேடிட்டு இருக்கான்"
"நம்மை அவனுக்கு அறிமுகப்படுத்திவைக்க யாராவது வேணும்"
"யாரு வருவா? நம்ம ஹிஸ்டரி ரொம்ப மோசமா இருக்கு. இது வேற புது தொழில். அதுவும் 80 பர்செண்ட்தான் தெரியும்"
"வேற வழி இல்லை. ரிஸ்க் எடுத்துத்தான் ஆகனும். இப்ப என்னோட சரக்கு தான் என்னை தேட வைக்கனும்"
"என்ன பண்ணலாம்னு யோசி. "
"யோசிக்கிறேன்".என்றான் வாசு சிந்தனை வசப்பட்டவனாக.
மறுநாள் காலையில் சிறையில் கிடைத்த சொற்ப பணத்துடன் ரூமைவிட்டு வெளியேறினான் வாசு.
தனக்குபழக்கமான இடத்தில் கொஞ்சம் பவுடரை வாங்கியவன் ஒரு சைண்டிபிக் கடையில் சில எக்யூப்மெண்டுகளை, கெமிக்கல்களை வாங்கிகொண்டு அறைக்கு திரும்ப வந்தான். டாய்லெட்டுக்குள் நுழைந்து உள்ளே தாழிட்டவன் அதை மினிலேபாக மாற்றினான்.
வெளியே குற்றாலம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முன்னும் பின்னுமாக நடந்துகொண்டிருந்தான்.
இவ்வளவு நேரமாக டாய்லெட்டில் என்ன செய்கிறான்? ஒரு வேளை நைட் தின்றசில்லி சிக்கன்காரம் ஒத்துகொள்ளாமல் வயிற்றுபோக்கு ஏற்பட்டுவிட்டதோ என்றுகூட அவன் நினைத்தான்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவன் தரமுயர்த்தப்பட்ட சரக்கோடு வெளியே வந்தான்.
"இது 80 பர்செண்ட் தர முயற்த்தப்பட்ட சரக்கு. இதை தம்பி கண்ணுக்கு கொண்டு போகனும்"
"கவலைய விடு.சதாம்னு ஒருத்தன் தம்பி கேங்ல எனக்கு பழக்கம்.அவன்கிட்ட முதல்ல போவோம்"
"இப்பவே போன் பண்ணு"
" இரு கூப்பிடுறேன்" என்ற குற்றாலம் போன் போட்டான்
"யார் ரா?" என்றது எதிர்முனை.
"அண்ணே! நான் குற்றாலம் பேசறேன்"
"சொல்றா சப்பை. என்ன மேட்டரு? பணம்னா போனை வைச்சிரு. உன்னை நம்பி பத்து காசு தரமாட்டேன்"
"தம்பியண்ணன் ஏதோ பவுடர் தேடுறதா கேள்விப்பட்டேன்"
"அதுக்கு என்ன இப்ப?"
" ஒரு பார்ட்டி கைல இருக்கு. பாத்தா பவுடர் அதே மாதிரி இருக்கு"
"அதை முதல்ல பாத்துருக்கியாடா நீ? விளையாட்டு பண்ணாதே"
"நிஜமா ண்ணே. நீ முதல்ல சாம்பிள் சரக்கை பாரு. அப்புறம் பேசு."
"சரி.எங்கே வரனும்"
"கிளப்புக்கு."
"அரைமணி நேரத்துல அங்கே இருப்பேன்" என்று போனை வைத்தான் சதாம்.
"போலாம்பா, "என்றான் குற்றாலம்.
கிளப்.
டேபிளில் எதிர் எதிரே உட்கார்ந்திருந்தனர் மூவரும்.
" யாரு இவன்?" என்றான் சதாம் வாசுவை காட்டி.
"இவர் தான் தயாரிப்பு"
"மாசம் நூறு கிலோ வேணும் தரமுடியுமா?"
"முதல்ல சரக்கை பாருண்ணே"
சதாம் சாம்பிள் பாக்கெட்டை பிரித்து ஒரு சிட்டிகையை எடுத்து மூக்கில் வைத்தான் அவனுக்கு எந்தவித்தியாசமும் தெரியவில்லை.
"அதேமாதிரிதான் இருக்கு. ஆனா சில டெஸ்டுக்கு பின்னாடிதான் கன்பார்ம் பண்ணமுடியும். இதுக்கு மட்டும் காசு வாங்கிக்க. தம்பிகிட்டபேசிட்டு கூப்பிடுறேன்"
"சரிண்ணே "
" இதுக்கு எவ்வளவுன்னு சொல்லு?"
"நீ சொல்லுப்பா." என்றான் குற்றாலம் வாசுவை பார்த்து.
" ஒரு லட்சம்" என்றான் வாசு.
"இந்தா." என்று இரண்டாயிரம் ரூபாய் கட்டை டேபிளில் வைத்தான் சதாம்.
வாசு அதை எடுத்துகொண்டான்.
"சரி. கிளம்பு. நானே கூப்பிடுறேன்" என்றான் சதாம்.
இருவரும் கிளம்பிய பின்பு யாருக்கோ போன் செய்த சதாம்" துரைபாண்டியன் மாதிரியே இன்னொருத்தன் வந்துருக்கான்.அவன் கொடுத்த சாம்பிளை டெஸ்ட்பண்ணிட்டு பேசிக்கலாம்" என்று போனை அணைத்தான்.
அவன் தன்னுடைய காரை நெருங்கிய போது டிரைவர் பதட்டத்துடன் "நீங்க வரமாட்டிங்கன்னு நினைச்சேன்" என்றான்
சதாம் புரியாமல் ஏன் என்றான்.
"இப்ப ரெண்டு போலீஸ்காரர்கள் போனதை பார்த்தீர்களா?"
"போலீசா? யாரு?"
"கேப்பீங்கன்னு போட்டோ எடுத்து வைச்சிருக்கேன். பாருங்க" என்ற டிரைவர் போட்டோவை காட்டினான் அதில் வாசுவும் குற்றாலமும் இருந்தனர்
"இவனுக போலீசா?" என்றான் சதாம் அதிர்ச்சியுடன்.
"துரை பாண்டியனை காப்பாத்தி ஜெயில்ல போட்ட தே இவனுக தான் .இதுல ஒருத்தன் இன்ஸ்பெக்டர். இன்னொருத்தன் சப் இன்ஸ்பெக்டர்.எப்பவும் மப்டில தான் இருப்பாங்க" என்றான் டிரைவர்.
சதாமின் முதுகில் வேர்வை ஊறத்தொடங்கியது
#தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக