புதன், 15 பிப்ரவரி, 2023

அஷ்டவக்கிரன்11

Aஆப்ரேசன் அஷ்வக்கிரன்

அத்தியாயம் 11

பூபதி கருவறையில் இருந்த சாமியை பார்த்து கொண்டிருந்தான்.அவன் எப்போதும் வைக்கும் ஒரே பிராத்தனையை இப்போதும் வைத்தான்."சோமசுந்தரம் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும்"சோமசுந்தரம் அவனுடைய மனைவியின் தம்பி. அவனைப் பற்றி நினைப்பதற்கு இப்போது பூபதி மட்டும்தான் இருந்தான். தன் அருகே இருந்தமங்கலத்தை பார்த்த பூபதி "போலாமா?" என்றான்.

"போலாம்பா!" என்றாள மங்களம்.

மங்களம் அவனது ஒரே மகள்.

"ஆமா. நீ என்ன வேண்டிகிட்ட சாமியிடம் "

" நான் வேண்டுவதற்கு நிறைய இருக்குப்பா. காணாம போன பெரிய அண்ணன் அருணாசலத்தை பற்றி. எப்பவாவது வந்துட்டு போற வாசுவை பத்தி. எந்த நினைப்பும் இல்லாம அருணாசலத்தோட நினைவுல சுயபுத்தி இல்லாத அம்மாவை பக்தி. வார்த்தையில் என்னை கொல்கிற என் மாமியாரை பற்றின்னு. நான் வேண்டுனா லிஸ்டு ரொம்ப பெருசா போகும்." என்று கசப்புடன் புன்னகைத்தாள் மங்களம்.

"கடவுள் ஏன் தான் நம்மை இப்படி சோதிக்கிறானோ தெரியலை. உன்னோட அண்ணன் கடைசியா எப்போ வந்தான்?"

"மூணு மாசம் முன்னாடி."

"என்ன வேலை செய்யறானாம்?"

"கேட்டேன் சொல்லலை"

" இந்த ஊர் தான் அவனை விரட்டிவிட்டுச்சு. சரி உட்காரு. போகலாம்." என்ற பூபதி தன்னுடைய TVS 50 ஐ கிளப்பினான். மங்களம் உட்கார்ந்ததும் வண்டி கிளம்ப ஆரம்பித்தது.

பூபதி நகராட்சியில் மேஸ்திரியாக வேலை செய்துகொண்டிருந்தான்.கிருஷ்ணாபுரத்தின் சாதிய தீண்டாமை அவனை அவனது குடும்பத்தை சின்னாபின்னமாக்கியிருந்தது.

சின்ன வயதில் பூபதிக்கு சாதியென்றால் என்னவென்றே தெரியாது. மற்றவர்களிடம் அப்பா துண்டை இடுப்பில் கட்டியபடி பேசுவதும் சின்ன பசங்கள் எல்லாம் அப்பாவை பேர் சொல்லி வாடா போடா என்று கூப்பிடுவதும் அவனுக்கு கோபத்தை தந்தன. வேற வழியில்லை. கண்ணு. அவங்க உசந்த சாதி. நாம தாழ்ந்த சாதி. அடங்கித்தான் போகவேண்டும் என்ற அப்பாவின் அறிவுரையும் அவனுக்கு எரிச்சலை உருவாக்கின. அவன் யார் வீட்டிலும் நுழைந்ததில்லை யாரும் அவனை வீட்டின் உள்ளே கூப்பிடமாட்டார்கள். சில தெருக்களில் செருப்பு போட்டு நடக்க முடியாது. பதினைந்து வருடம் வரை பூபதி செருப்பை போட்டதில்லை.

வாடா போடா என்று அப்பாவை அழைக்கும் முதலாளிகள் அதை அப்படியே தங்கள் மகன்களிடம் சொல்லிகொடுத்துவாடா போடா என்று அழைக்கச் சொல்லி "நான் கூப்பிடுறதை பார்த்து அப்படியே கூப்பிட்டு பழகுறான்" என்று சொல்லி சிரிப்பார்கள்.பூபதியின் அப்பா அதை ஏற்றுகொண்டாலும் பூபதியால் அதை ஏற்க முடிந்ததில்லை. அவன் திரும்ப ஏண்டா என்று கேட்டுவிடுவான். அதனால் பூபதி மீது அவர்களுக்கு ஒரு கண்.

இதிலிருந்து விடுபட ஒரே வழி படிப்புதான் என்று முடிவு செய்த பூபதி படிக்க ஆரம்பித்தான். நன்றாக படிக்கும் பூபதியின் படிப்பை கெடுக்கவும் வேலைகள் நடந்தன. உடல்நிலை சரியில்லாத அம்மாவிற்கு பணம் வேண்டுமென்று முதலாளிகளின் வீட்டுவாசல்படியில் நின்றபோது " இவன் படிச்சு என்ன பண்ண போறான்? பணம் தர்றேன் பேசாம பண்ணையத்துக்கு அனுப்பேன்" போன்ற நிபந்தனைகள் விதிக்கபபட்டன. இவற்றையெல்லாம் மீறித்தான் அவனால் படிக்க முடிந்தது. அவனால் எல்லா முயற்சிகளும் செய்தும் பத்தாவது வரை படிக்கத்தான் அவனது குடும்ப சூழல் இடம் கொடுத்தது.

அப்போதுதான் ஊருக்குள் சிவப்பு கொடிகட்ட துவங்கியிருந்த கம்யூனிஸ்ட கட்சி அவனை ஈர்த்தது. கட்சியில் உறுப்பினரானான். ஏராளமான புத்தகங்களை படித்து அறிவை விரித்துகொண்டான்.தோழர்கள் அவனுக்கு பஞ்சாயத்தில் டிராக்டர் ஓட்டும் வேலையை வாங்கி தந்தனர். தன் சமூக மக்கள் அதிகமாக இங்கே வேலையில் இருப்பதை பூபதி பார்த்தான்.ஏன் வேறு எந்த சாதியினரும் சமூகத்தினரும் இந்த வேலைகளை செய்வதில்லை? காலம்காலமாக ஒரே சாதி மட்டும் ஏன் இந்த வேலையை செய்துகொண்டிருக்கவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

மெல்லமெல்ல கேள்விகள் கேட்க ஆரம்பித்து சட்டதிட்டங்களை தெரிந்துகொள்ள ஆரம்பித்தான். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக வளர ஆரம்பித்தவன் எல்லா பிரச்சனைகளிலும் தலையிட ஆரம்பித்தான். போராட்டம், மறியல் என்று சுற்ற ஆரம்பித்தான்.

இவனை என்ன செய்து தடுப்பது என்று யோசித்தவர்கள் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.பூபதியின் வாழ்க்கை திசைமாறியது. வந்த மனைவியின் பேச்சை கேட்டு பூபதி பொது வாழ்க்கைக்கு முற்றுபுள்ளிவைத்தான் அவனுக்கு முதலில் பிறந்தவன் அருணாசலம். அவனுக்கு பின்னால் பிறந்தவன் வாசு. கடைசியாக பிறந்தவள் மங்களம்.

அவனது மனைவி சரஸ்வதியின் தம்பி தான் சோமசுந்தரம். சொந்த மச்சினன்.பூபதியைவிட அதிகமாக சாதியால் பாதிக்கப்பட்டவன். ஒரு பிரச்சனையில் குடும்பத்தோடு ஊரைவிட்டே போனவன். அவன் எங்கிருக்கிறான் என்று இன்றுவரை பூபதிக்கு தெரியாது.

குடும்பம் நன்றாக போய்கொண்டிருந்தபோது தான் மூத்தமகன் அருணாசலம் திடிரென்று ஒருநாள் காணாமல் போனான்.அவனை யாரோ காரில் தூக்கி சென்றதாக அதை நேரில் பார்த்த வாசு கூறினான். போலீசில் கம்ளைண்ட் செய்தும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

மூத்தமகன் காணாமல்போன அதிர்ச்சியில பூபதியின் மனைவி சரஸ்வதிக்கு சித்தபிரமை ஏற்பட்டுவிட்டது.அண்ணனை கண்முன்னால் இழந்த சோகத்தில் வாசு அதிர்ச்சியில் மூழ்கினான். நள்ளிரவு தூக்கத்தில் திடிரென்று எழுந்து கொண்டு அண்ணன் வேணும் என்று அழ ஆரம்பித்துவிடுவான்.திடிர் திடிரென்று வீட்டைவிட்டு ஓடிவிடும் வாசு இரண்டு மூன்று நாட்கள் கழித்து திரும்ப வீட்டிற்கு வந்துவிடுவான். மனைவியை குணப்படுத்த பணத்தை செலவு செய்ய ஆரம்பித்தான் பூபதி. ஆனாலும் அவளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.

தன் மகன் உளவியலாக பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று தெரிந்தாலும் அதை குணப்படுத்த என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை.வாசு எப்படியோ அடித்து பிடித்து காலேஜ் வரை வந்துவிட்டான்.பூபதியை தீண்டிய அதே சாதிய பாகுபாடு அவனையும் தீண்ட தொடங்கியபோது இந்த ஊரே வேண்டாம் என்று ஊரைவிட்டே ஓடிவிட்டான்.அவ்வப்போது அவனது சொந்த சுபாவப்படி வருவான். போவான்.அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கும் எதுவும் தெரியாது.

மிச்சமிருப்பது மங்களம். அவளால் அதிகம் படிக்க முடியவில்லை. மனநலமற்ற தாயை வைத்து கொண்டு அவளே எல்லா வீட்டுவேலைகளையும் பார்க்க வேண்டியிருந்ததால் அவளால் பள்ளிகூடம் போக முடியவில்லை. ஆனால் எழுதப்படிக்க கற்றுகொண்டிருந்தாள்..அவளுக்கு சொந்தக்கார பையனான செல்வத்தையே கல்யாணம் செய்து வைத்துவிட்டான் பூபதி. அவன் டெர்லைட் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தான். சரியான அம்மா கோண்டு.

அவனது அம்மா பார்வதி. பணத்தாசை பிடித்தவள். பூபதியின் வீட்டை எழுதி வாங்குவது அவளது திட்டம்.வாசுவுக்கும் அதில் சம்மதம் தான். ஆனால் காணாமல்போன மூத்தமகன் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம் என்பதால் அந்த சொத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. வாசு மாதாமாதம் பார்வதிக்கு பணம் அனுப்பி கொண்டிருந்ததாலேயே அவள் மங்களத்திடம் கருணை காட்டிகொண்டிருந்தது யாருக்கும் தெரியாது. மூன்று மாதமாக வாசு பணம் அனுப்பவில்லை. திட்டுவதற்கு மருமகளும் இல்லை.அவள் வாசுவை தேடிக்கொண்டிருந்தாள். மருமகளை திட்ட கூடுதலாக ஒரு காரணம் பார்வதிக்கு இருந்தது. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களாகியும் பிள்ளை பெறாத மருமகளை வார்த்தை சாட்டையால் விளாசி கொண்டிருந்தாள் அவள். அவளது இம்சை கடவுளுக்கே பொறுக்காமல் மங்களம் கர்ப்பமாகிவிட்டாள். மூன்று மாதத்தில வளைகாப்பு முடிந்து அப்பாவின் வீட்டிற்கே வந்துவிட்டாள் மங்களம்.

தான் கர்ப்பமாக இருப்பதை வாசுவிடம் சொல்ல முயன்ற மங்களத்திற்கு ஏமாற்றம்தான் பரிசாக கிடைத்தது. அவனது போன் எப்போதும் சுவிட்ச் ஆப் என்றே கூறிக்கொண்டிருந்தது. அவனாகவே அவளை தேடி வந்தால்தான் உண்டு. தன் தாயின் ஆட்டத்தை தட்டி கேக்காததன் கணவன் செல்வத்தின் மீது அவளுக்கு மெலிதான கோபம் உண்டு.

வண்டி ஓட்டிக்கொண்டிருந்த பூபதி "இன்னும் ஒரு ஏழு மாசம் நிம்மதியா இருக்கலாம்" என்றான்.

"அம்மாவை பாத்துக்க நான் வந்துட்டேன்னு சொல்றியாப்பா?"

"இல்லைம்மா. நியாயமா உங்கம்மாதான் உனக்கு எல்லா வேலையும் இப்ப செய்யனும். ஆனா நிலைமையை பாத்தியா? நீதான் உங்கம்மாவை பாத்துக்கனும். நான் உன்னோட மாமியார் வாயை சொன்னேன்"

"நான் இல்லாம எப்படிப்பா அம்மாவை பாத்துக்குற?"

"வீட்டுல வைச்சு பூட்டித்தான்.அதைவிடும்மா. அப்படியே பழகிருச்சு. வாரிசு வரப்போகுது. சந்தோஷமா இருப்போம்.எனக்கு இருக்குறது நீ மட்டும்தான் மா"

அவனுக்கு கண்ணீரால் பாதை மறைத்தது. மேல்துண்டால் துடைத்துகொண்டான்

"ஏம்பா. அழுதியா?"

"இல்லைம்மா. தூசி கண்ல விழுந்துருச்சு. ஆமா நாளைக்கு நீ செக்கப்புக்கு போகனுமா?"

"ஆமாப்பா"

"அந்த டாக்டர் பேரு என்னம்மா?"

"அவரு பேரு டாக்டர் சம்பத்குமார்"

டாக்டர் சம்பத்குமார் மங்களத்தின் கேஸ் பைலை தனியாக எடுத்து வைத்தான்.

"எட்டாவது கேஸ் சிக்கிருச்சு" என்றன அவனது உதடுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக