வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன்4


"தன் தந்தையை மீட்க மிதிலையை சென்றடைந்தான் அஷ்டவக்கிரன்.அரண்மனைக்கு செல்லும் வழியில் ஜனகன் நகர்வலம் வருவதை கண்டான்.நடுதெருவில் நடந்து சென்ற அஷ்டவக்கிரனை ஓரமாக நடந்து செல்லும்படி பணியாளர்கள் மிரட்டினார்கள்."ஓ! அரசனே! கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள்,உடல் ஊனமுற்றோருக்கு அரசனாக இருந்தாலும் வழி விட வேண்டும் என்று சாத்திரங்கள் கூறுவதை நீ படித்ததில்லையா? "என்றான்.அவனது தைரியத்தை பாராட்டிய ஜனகன் அவனை அரண்மனைக்கு அழைத்து சென்றான்.அங்கே நடந்த வாத போட்டியில் வென்ற அஷ்டவக்கிரன் தன் தந்தையை மீட்டதுடன் வந்தியை தோற்கடித்து நாட்டை விட்டே துரத்தினான்.அவனது அறிவுகூர்மையை கண்ட ஜனகன் அவரை குருவாக்கி கொண்டான்."


காசி.!
நகரத்தின் நான்கு பக்கமும் பிணம் எரியும் சுடுகாட்டை கொண்ட பல்லியும் கழுகும் வசிக்க இறைவனால்  தடைவிதிக்கப்பட்டதாக நம்பப்படும்இந்துக்களின் புனித நகரம். அந்த நகரத்தில் தமிழகத்தின் பல சமூகங்களுக்கு விடுதிகள் உண்டு. ஏராளமான மடங்களும் உண்டு.

அப்படி ஒரு மடத்தின்தலைவன் தான் அவதார் பாபா. அவதார் பாபா இன்னொரு இறைவன்.அவனால் செய்துமுடிக்க முடியாத விசயங்களே இங்கே கிடையாது. ஆன்மீகம் என்பது எவ்வளவு பெரிய முதலீடு இல்லாத வியாபாரம் என்பது அவனுக்கு நன்றாக தெரியும். அந்த ஆன்மீக பைத்தியம் உண்மையான மனநலன் பாதித்த நபரை கூட சித்தர் முனிவர், யோகி என்று நம்பவைத்துவிடும். அதிகமேதமைக்கும் பைத்தியக்காரத்தனத்திற்கும் ஒரு நூல்தான் இடைவெளி என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்

எல்லா மதங்களிலும் பைத்தியக்காரத்தனம் உண்டு என்றாலும் இந்துமதத்தில் அது கூடுதலாகவே உண்டு என்பதையும் அதை சாதாரண பாமரன் நம்பும் வரை தன் போன்ற ஆசாமிகளுக்கு கவலை இல்லை என்பதையும் அவன் நன்றாக உணர்ந்திருந்தான்.

அவனுக்கு இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் 18 மொழிகளிலும் எழுதவும் பேசவும் தெரியும். கம்யூட்டரை வெகு அனாயசமாக கையாளும் திறன்படைத்தவன். காலத்திற்கு தகுந்ததுபோல் தொழிலை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்பது அவனது நம்பிக்கை. மற்ற சாமியார் களைப்போல் வாயில் லிங்கம் எடுப்பது வெறும் கையில் விபூதி எடுப்பது போன்ற சில்லறைத்தனமான வேலைகளை அவன் செய்வதில்லை. மக்களின் அன்றாடபிரச்சனைகளை தீர்த்து வைப்பதுதான் அவனது வேலை.

இதனால் அவனுக்கு இந்துமதத்தின் மீது பற்று இல்லை என்றெல்லாம் நினைத்து விடக்கூடாது. மற்ற சாமியார்களைப்போல் அவனுக்கும் தீவிர இந்துத்துவாதான் போர்வை. அந்த இந்துத்துவ வெறி தான் அவனை ஆளுங்கட்சியே பணிந்து வணங்கும் சாதுசேனாவில் முக்கிய புள்ளியாக்கியது. மக்களை மதரீதியாக சாதி ரீதியாக பிளவுபடுத்தி ஆட்சியை நிலைக்க செய்வதற்கான ஆலோசனைகளை தருவது தான் சாதுசேனாவின் வேலை. அதில் அவதார் பாபா தான் முக்கிய புள்ளி.

வழிவழியாக பிராமணர்களே தலைவர்களாக இருந்து வரும் மடம் அது. இதற்கு முன்பு தலைவராக இருந்தவர் சிறுபிள்ளையாக இருந்த அவதார் பாபாவை அடுத்த தலைவராக தேர்ந்தெடுத்தார். அதுவரை ஜோஷி சர்மாவின் மகனாக இருந்ததேஜஸ்வி சர்மா மடத்திற்குள் அடுத்த சன்னிதானமாக நுழைந்தான்.அங்கே அவனது பெயர் அவதார் பாபா என்று மாற்றப்பட்டது. நான்கு வேதங்கள் அவனுக்கு கற்பிக்கப்பட்டன. தீட்சை வழங்கி கஷாயம் தரப்பட்டது. அவனுக்கும் வீட்டிற்குமானதொடர்பு முற்றாக அறுந்தது

வயதான தலைவரின் மரணத்திற்கு பின்பு அவதார் பாபா மடத்தின் அடுத்த தலைவரானான்.அதன்பின் மடத்தின் வளர்ச்சிஅதிகரிக்க ஆரம்பித்தது.மடத்தின் பாரம்பரிய வழக்கத்தின்படி பட்டியல் இன மக்கள் மீதான மறைமுக தீண்டாமை நீடித்தது -அவதார் பாபாவே அதை ரசிக்க ஆரம்பித்தான். பிராமணன் உயர் பிறவி என்ற கற்பிதத்தில் அவன் மூழ்கி கிடந்தான்.

அந்த கற்பிதமும் ஒருநாள் உடைந்து சிதறியது. அவனது தந்தை ஜோஷி சர்மா மரணப் படுக்கையில் கிடந்தபோது அவனைப் பார்க்க விரும்புவதாக தகவல் வந்தது. ஞானிக்கு நாளென்ன கோளென்ன? தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற சில எதிர்ப்புகளை தாண்டிபாபா பயணப்பட்டான்.

மரண தறுவாயில் இருந்த தந்தையை காண அவன் தன்னுடைய பூர்வாசிர வீட்டிற்கு சென்றபோது அனைவரும் அங்கிருந்து வெளியேறினார்கள்.

அப்பாவும் மகனும் மட்டும் தனிமையில் இருந்தபோது பாபா" பாபுஜி .நான் தேஜஸ்வி வந்திருக்கேன். என்னை பாருங்கள்" என்றான்

சன்னியாசியான போதே தேஜஸ்வி சாஸ்திரப்படி இறந்துவிட்டான்.அவன் பெயரைக்கூட உச்சரிக்க கூடாது. ஆனால் அது அவன் தகப்பன் வைத்த பெயரல்லவா? எத்துணை கனவுகள், லட்சியங்களுடன் இப்படி ஒரு பெயரை வைத்திருப்பான்? உலகிற்கு இன்று அவதார் பாபா. அவனது தகப்பன் கண்களுக்குசிறுவன் தேஜஸ்விதான்.

சர்மா கண்களை சிரமப்பட்டு திறந்தார்

" வந்துட்டியா பேட்டா ?"

" வந்துட்டேன். நிறைவேறாத ஆசை எதாவது இருந்தால் சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். நீங்கள் இல்லாவிட்டால் நான் இல்லை."

"உன்னிடம் ஒரு உண்மையை சொல்லனும். அது தான் வரச்சொன்னேன்."

"சொல்லுங்கள்"

"நீ என்னோட மகன் இல்லை."

"அப்பா. என்ன சொல்றீங்க?"

"ஆமாம்பா. உண்மையைத்தான் சொல்றேன். நான் உன்னை வளர்த்தவன். அதுவும் மடத்தலைவர் வற்புறுத்தி சொன்னதால். உன்னோட உண்மையான அப்பா அம்மா வேறு "

அவதார் பாபாவிற்கு இது புது தகவலாக இருந்தது.கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது



"நான் யார்? என்னோட அப்பா அம்மா யார்?"

"உன்னோட பேரு அருணாசலம். நீ ஒரு தமிழ்ஆத்மி. உன்னோட ஊர் கிருஷ்ணபுரம்."

" அது எந்த மாவட்டம்?"

அவன் கேள்வியை முடிக்கும் முன்பாக அவரது உயிர் பிரிந்தது. பாபா மவுனமாக எழுந்து கொண்டுவிட்டான். சர்மாவின் கடைசி காரியங்களை அவரது சொந்த மகனை பார்க்க சொல்லிவிட்டு வளர்த்தகடமைக்கு நிறைய பணமும் கொடுத்துவிட்டு பாபா மடத்திற்கு திரும்பிவிட்டான்

அன்றிலிருந்து அவனது இரவு தூக்கம் பறிபோனது. தன் பால்யகால நினைவுகளில் கிருஷ்ணாபுரத்தை பற்றிய நினைவுகள் ஏதாவது இருக்கிறதா என்று தேடத்துவங்கினான். துண்டாக ஒரு காட்சி மட்டும் அவன் நினைவடுக்கிலிருந்து மீண்டது. அவனும் இன்னொரு சிறுவனும் ஒரு ஆலமரத்தின் விழுதுகளை பற்றி விளையாடுவது போலவும் அதன் அருகே ஒரு சுமைதாங்கி கல் இருப்பதுபோலவும் ஒரு காட்சி மட்டும் அவனுக்கு கிடைத்தது.

அன்றிலிருந்து தமிழகத்திலிருந்து வரும் பக்தர்களிடம் அவன் கிருஷ்ணாபுரத்தை பற்றியும் அந்த ஆலமரத்தை பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தான். ஓய்வு நேரங்களில் கூகுளில் தமிழ்நாட்டில் எத்தனை கிருஷ்ணாபுரங்கள் இருக்கிறைன என்று கணக்கெடுத்து சலித்தான். தமிழ்நாட்டிலிருந்துதான் எப்படி காசிக்கு அதுவும் சர்மாவின் வீட்டிற்கு வந்துசேர்ந்திருப்போம்? இரண்டு நகரங்களுக்கும் தொடர்புள்ள ஒரு ஆள் இருந்திருக்கவேண்டும். யார் அந்த ஆள்? இல்லை மடத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று நினைத்த பாபா எல்லா பழைய டாக்குமெண்டுகளையும் தேட ஆரம்பித்தான்.

அவனது மூளை பழைய தலைவர் எப்போது தமிழகத்திற்கு ஆன்மீக பயணம் சென்றார் என்று கண்டுபிடி என்றது. தலைவர் அப்படியான பயணத்தில்தான் தன்னை பார்த்திருக்கவேண்டும் அடுத்த தலைவராக்க நினைத்திருக்கவேண்டும் என்று அவனுக்கு தோன்றியது.

அவன் பழைய மட தலைவரின் ஆன்மிக சுற்றுலா பட்டியலை தேடிக் கண்டுபிடித்தான். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு மடத்தின் பழைய தலைவர் தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது பழைய கோப்பு ஒன்றிலிருந்து அவனுக்கு கிடைத்தது. அதன்பிறகு அவர் ஆன்மீக பயணத்தை தமிழகத்தில் மேற்கொள்ள வே இல்லை.

அவர் பயணம் செய்த ரூட் மேப் மட்டும் அவனுக்கு கிடைக்கவேயில்லை. ஆசிரமத்தில் இருக்கும் அனைவருமே வடஇந்தியர்கள் என்பதால் அவர்களுக்கு தொலைதூரத்தில் இருக்கும் தமிழகத்தின் ஊர்களை பற்றி எப்படி தெரியும்? இந்த தென்னக விஜயத்தை ஏற்பாடு செய்தது தமிழகத்தை சேர்ந்த யாரோ ஒரு பக்தராக இருக்கலாம் என்றுஅவனுக்கு தோன்றியது.. 

தன்னுடைய எல்லா முயற்சியிலும் தோற்றுபோய் நின்றான் அவதார் பாபா. அவனது முன்னாள் ஞானகுரு அடிக்கடி சொல்வார் நீ எதை நினைக்கிறாயோ அதை பிரபஞ்சமும் இயற்கையும் உனக்காக கொண்டுவந்து தரும் என்று. அந்த வாக்கு அனுபவபூர்வமாக பல முறை பலித்திருப்பதை அவன் உணர்ந்திருக்கிறான்.அவன் இயற்கையின்அழைப்பிற்காக காத்திருக்க துவங்கினான்.

இரண்டு நாட்களுக்கு பிறகு இயற்கையின் அழைப்பு அவனுக்கு விஜய்மல்ஹோத்ரா வடிவில் வந்துசேர்ந்தது.

ஆசிரமத்தின் முகப்பில் உட்கார்ந்திருந்த விஜய் மல்ஹோத்ராவும் நந்தகுமார் குல்கர்ணியும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.

"இதுவரை கேன்சர்னுதான் பிரச்சனை செய்தார்கள். இப்போது புதிதாக வால் முளைத்த குழந்தைகள்"

"இந்த குழந்தை பிறப்புடன் உன் கம்பெனிய சம்மந்தப்படுத்தி முதல்ல பத்திரிக்கைல நியூஸ் போட்டவன் யாரு?"

" மணின்னு பெய்டு ரிப்போர்டர் ஒருத்தன்.பணத்துக்காக என்ன வேணா செய்வான்."

"அவனை விலைக்கு வாங்கிவிடுவது?'

" முடியலை பணத்துக்கு மசியமாட்டேங்கிறான்.அவனுக்கு பின்னாடி பெரிய கை எதுனா இருக்கும் போல "

"கவலைப்படாதே! எல்லாத்தையும் பாபா பாத்துக்கு வாரு"

அறைமுழுக்க திண்டு போட்டு அதில் நடுநாயகமாக உட்கார்ந்திருந்தஅவதார் பாபா" அடுத்தது யாரு? என்றான்.

" விஜய் மல்ஹோத்ரா"

"பத்து நிமிசம் கழிச்சு அவனை உள்ளே வரச்சொல். அதற்குள் அவனைப் பற்றி கூகிளில் விசாரித்து தெரிந்துகொள்கிறேன்"

அவதார் பாபா தன் முன்னால் இருந்த லேப்டாப்பில் விஜய் மல்ஹோத்ராவை பற்றி சர்ச் பண்ண ஆரம்பித்தான்.

விஜய் மல்ஹோத்ராவின் பிறப்பு, பெற்றோர், தொழில், படிப்பு என்று தேடிக்கொண்டிருந்தான் பாபா. அவனது கவனத்தை கலைத்தது விஜயின் பெர்லைட் பேக்டரி.

ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கும் அவனது பேக்டரியை பற்றிய ஒரு லிங்கை செய்தான்

யூடியூப்பில் வீடியோ ஓட ஆரம்பித்தது டாக்குமெண்டரியின் துவக்கத்தில் தொகுப்பாளர் ஒரு ஆலமரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்தான்." இது தான் கிருஷணாபுரத்தின் பஸ்ஸ்டாப். பக்கத்துலேயே சுமைதாங்கி கல் ஒன்னு இருக்கிறதை பாக்குறீங்க. இது வயித்துல குழந்தையோட இறந்துபோகிற கர்ப்பிணி பெண்கள் நினைவாக வைக்கப்படும் ஒன்று. பதினெட்டு கிராமங்களுக்கு நடுவேதான் இந்த ஸ்பெர்லைட் இருக்கு"

பாபா தேடிக்கொண்டிருந்த கிருஷ்ணாபுரம் அவனுக்கு அகப்பட்டுவிட்டது. இது தான் இது தான் அவன் பிறந்த ஊர்.

"அவனை உடனே உள்ளே வரச்சொல் " என்றான் அவதார் பாபா பரபரப்புடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக