அஷ்டவக்கிரன் 15
டாக்டர் சம்பத்குமார் ஆள் அரவமற்ற காட்டு பகுதியில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.அவனுக்கு பதட்டமாகவும் பயமாகவும் இருந்தது. அமெரிக்காவில் இருக்கும் ஜான் குரோவரின் ஆப்ரேசன் அஷ்டவக்கிரன் திட்டத்தை இந்தியாவில் இருக்கும் எவனோ ஒருவன் மோப்பம் பிடித்துவிட்டிருப்பதை அவனால் நம்பமுடியவில்லை. இந்த புது அவதார ரகசியம் ஜானுக்கும் தனக்கும் மட்டும்தான் தெரியும் என்று இதுவரை அவன் நினைத்து கொண்டிருந்தான். இப்போது முகம் தெரியாத மூன்றாவது நபர் ஒருவனுக்கும் அந்த ரகசியம் தெரிந்திருக்கிறது. அவன் அதை வைத்துக்கொண்டு இப்போது சம்பத்குமாரையே மிரட்ட தொடங்கிவிட்டான்.
சம்பத் தனது செல்போனை எடுத்து ஜான் குரோவரிடம் இந்த மிரட்டல் விவகாரத்தை சொல்லலாமா? என்று ஒரு நிமிடம் யோசித்தான். இந்த விசயம் தெரிந்தால் அவன் தன்னை கண்டபடி திட்டுவான். தன் மீதான அவனது நம்பகத்தன்மை குறைந்துவிடும். ஜான் இப்போது தன்னுடைய கவனத்தை பயோ வெப்பன் என்கிற உயிரியல் ஆயுதங்களின் பக்கம் திருப்பி இருக்கிறான். அதற்கு ஏராளமான பரிசோதனை எலிகள் தேவை. அவற்றை அவனால் அவனது நாட்டில் செய்ய முடியாது. அவ்வளவு கெடுபிடிகள், விதிகள் அவனது ஆய்வுக்கு தடையாக இருப்பதால் அவன் இந்தியாவை தேர்ந்தெடுத்து வைத்திருந்து சம்பத்தை தனது பிரதிநிதியாக வைத்து கொண்டு ஏராளமான பணத்தை அள்ளி இறைத்து கொண்டிருந்தான்.
கோடிகளில் நனைந்து கொண்டிருக்கும் ஜானை இந்த பிரச்சனையில் இழுத்து விடாமல்தானே இந்த விவகாரத்தை கவனித்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு சம்பத் வந்துவிட்டிருந்தான்.அந்த பிளாக்மெயில் ஆசாமியின் குறிகண்டிப்பாக பணமாகத்தான் இருக்க வேண்டும் அதற்காக அவன் மீண்டும் தன்னை அழைப்பான் என்று சம்பத் எதிர்பார்த்தான்.
அவனது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. டாக்டரிடம் தப்பாக ஏதோ ஒரு விசயம் இருப்பதை தெரிந்துகொண்ட மணிகண்டன் அடுத்த முறை போன் செய்தபோது சம்பத் நேராக விசயத்திற்கு வந்துவிட்டான்.
"உன்னோட வாயை மூட எவ்வளவு பணம் வேண்டும்?" என்றான் சம்பத்.
மணிகண்டனுக்கு அவனது பேச்சு ஆச்சரியமாக இருந்தது. என்ன விசயம் என்று அவனுக்கு சரியாக தெரியவில்லை. குத்து மதிப்பாக எதையோ கண்டுபிடித்து வைத்திருந்தான். அதற்கே இந்த டாக்டர் பதறி கொண்டு பணம் தர முன்வருகிறான் என்றால் விசயம் தான் நினைப்பதைவிட பெரிதாக இருந்திருக்கவேண்டும் என்று யூகித்தான்.
"நான் பணம் கேட்கவேயில்லையே ?" என்று இன்னொரு கொக்கியை வீசினான் அவன்.
சம்பத்குமாருக்கு ஒன்றும் புரியவில்லை..இவன் பணம் கேட்டு மிரட்டுவான் என்று பார்த்தால் இவன் பணமே வேண்டாம் என்று குழப்புகிறானே என்று அவனுக்கு தோன்றியது.
"பணம் வேணாம்னா வேறு என்னதான் வேணும்?"
"நேர்ல பார்க்கும்போது சொல்றேன். இன்னைக்கு சாயந்தரம் அஞ்சுமணிக்கு நான் சொல்கிற இடத்துக்கு வாங்க"
"எந்த இடம்னு சொல்லு, வர்ரேன்"
மணிகண்டன் இடத்தை சொன்னான்." இந்த இடத்துக்கு நீங்க மட்டும் தனியா வாங்க. வேறு மாதிரி யோசிச்சா நல்லா இருக்காது,"
"வேறுமாதிரின்னா?"
"நான் உங்களப்பாத்துட்டு ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வரலைன்னா என்னோட ப்ரண்ட் இந்த விவகாரத்த போலீஸ்சுக்கு கொண்டுபோயிருவான்"
"முட்டாள். அவனுக்கும் இந்த விசயம் தெரியுமா?"
" தெரியாது. ஆனால் சீல் வைச்ச கவரை அவனிடம் கொடுத்துட்டு வந்துருக்கேன். நான் வீட்டுக்கு போகலைன்னா அவன் போலீசுக்கு போயிருவான்"
"நீ நினைப்பதுபோல் எதுவும் நடக்காது. சீக்கிரமாக வா" என்றான் சம்பத்.
இப்போது அந்த முகம் தெரியாத மணிகண்டனுக்காகத்தான் அவன் காத்திருந்தான்
சம்பத் மணியை பார்த்தான். மணி 5.10.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் வருகிற அறிகுறி தென்படவில்லை.சம்பத் கால்களை உதைத்துகொண்டான்.அவன் தன்னை ஆழம் பார்க்கிறானோவென்ற சந்தேகம் சம்பத்திற்கு வந்துவிட்டது.இன்னும் பத்து நிமிடம் பார்த்துவிட்டு கிளம்பிவிடலாம் என்ற முடிவிற்கு சம்பத் வந்துவிட்டிருந்தான்.
பத்து நிமிடமும் முழுதாக கழிந்தது. நம்மிடம் விளையாடுகிறான் போலும் என்று நினைத்த சம்பத் தன்னுடைய காரை கிளப்பினான்.
அவன் தன்னுடைய காரை மெயின்ரோட்டை நோக்கி விரட்டியபோது அவனது போன் அடித்தது.
யார் என்று பார்த்தான் அவன்.அவன் தான் அந்த பிளாக்மெயிலர்.
"ஹலோ '
"ஸாரி டாக்டர். என்னோட வண்டி பஞ்சராகிவிட்டது. நான் சொன்ன இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் முன்னாடி வாங்க"
" ஏன் இப்படி அலைகழிக்கிறாய்?"
"எச்சரிக்கையாக இருக்கிறேன். உசுரு பணத்தைவிட பெருசு. காத்துகிட்டு இருக்கேன். சீக்கிரமா வாங்க"
செல்லை அணைத்து சீட்டில் போட்ட சம்பத் ஆக்சிலேட்டரை அழுத்தினான்.
ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே நின்றிருந்த மணிகண்டன் கைகளை நீட்டி தன்னை அடையாளப்படுத்தினான்.
மணிகண்டனைப் பற்றி சம்பத் நிறையவே கேள்விப்பட்டிருந்தான்
"நீயா?" என்றான் அதிர்ச்சியோடு.
" என்னைத் தவிர வேறு யார் இதையெல்லாம் செய்வாங்க" என்று சிரித்தான் மணிகண்டன்.
காரைவிட்டு கீழே இறங்கினான் சம்பத்.
"நான் என்ன கண்டுபிடிச்சிருக்கேன்னு நீங்க கேக்கவேயில்லையே?"
"அது அனாவசியம். உனக்கு என்ன வேணும் ? பணம் வேணாம்னா வேற என்ன வேணும்?"
"அது சும்மா சொன்னது. எலும்பு வேண்டாம்னு எந்த நாயாவது சொல்லுமா?"
"சரி. எவ்வளவு வேணும்?"
"பத்து லட்சம்"
"காலைல ஹாஸ்பிடல் வந்து வாங்கிக்க. முதல்ல உன் பைக்கோட டயரை மாத்து"
"நாளைக்கு பணம் வந்தவுடன் பைக்கையே மாத்திடறேன்"
"நான் கிளம்புறேன்" என்ற சம்பத் அங்கிருந்து கிளம்பினான். இவன் இத்தோடு இதை நிறுத்தபபோவதில்லை என்று அவனுக்கு தோன்றியது. அவனுக்கு பணத்தேவை ஏற்படும்போதெல்லாம் நம்மிடம்தான் வந்து நிற்க போகிறான். இதை இப்போதே தடுத்து நிறுத்தியாக வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான் அவன்.
அவனுக்கு ஸ்டில்லடோ ரவியின் நினைவு வந்தது. ஸ்டில்ல டோஜெர்மன் மேக்கத்தி.
பளபளவென்றுமின்னும் அந்த கத்தியால்தான் அவன் பல பேரின் பிரச்சனைகளை தீர்த்து வைத்திருக்கிறான்.
செல்போனில் இருந்த அவனது நெம்பருக்கு அழைத்தான் சம்பத்.
"உண்மையை சொல்லாதவரை தினமும் ஒரு விரலை கட் பண்ணுவேன். சரியா? இன்னைக்கு சுண்டு விரல் "என்ற ரவி எதிரே இருந்தவனின் சுண்டு விரலை வெட்டினான்.அவன் அலற துவங்கினான்.." இவனை ரூம்ல போட்டு பூட்டு. நாளைக்கு இன்னொரு விரலை வெட்டனும். சாப்பிட பிரியாணி சிக்கன்னு கொடுங்க" என்றான் எதிரே நின்றிருந்ததன் ஆட்களிடம்.
அடித்த போனை அப்போதுதான் கவனித்தவன்" சொல்லுங்க டாக்டர், "என்றான்.
"ஒரு ஆளை போடனும் ரவி"
"செஞ்சுரலாம். ஆளை பத்தி முழு டீடெய்ல் வாட்ச்அப் பண்ணுங்க"
"அனுப்புறேன். ஆனா இதுல நீயும் மாட்ட கூடாது. நானும் மாட்ட கூடாது. உன்னோட ஸ்டில்ல டோவை இதில் யூஸ் பண்ணாத. அந்தகத்தி உன்னோட சிக்னேச்சர். போலீஸ் ஈசியா உன்னை பிடிச்சுரும்"
"அப்ப வேற என்ன பண்றது?"
"துப்பாக்கி"
"ஓகே. செஞ்சிடலாம்"
என்ற ரவி வாட்ஸ்ப்பில் வந்த தகவல்களை பார்த்தான்.
அவன் யோசிக்க ஆரம்பித்தான்.மணிகண்டனை கடத்தி கொலை செய்தால் போலீஸ் விசாரணை வரும். அதை திசைதிருப்ப என்ன செய்யலாம்?
ஸ்பெர்லைட் கலவரம் அதற்கான ஆட்கள் தேவைப்படுவது அவனது நினைவிற்கு வந்தது.மணிகண்டனின் உடலை ஸ்பெர்லைட் கலவரத்தில் நுழைத்துவிட்டால்தான் மாட்டிகொள்ளமாட்டோம் என்று அவனுக்கு தோன்றியது.
ஸ்டில்ல டோரவி தனக்குள் சிரித்துகொண்டான். பணத்தை வாங்கியதும் எல்லா செலவையும் தானே செய்து ஒரு கல்யாணத்தை செய்துவிட வேண்டும் என்று நினைத்தான் மணிகண்டன்.