திங்கள், 15 ஆகஸ்ட், 2016

பேரம்

"எம் பையன் பெங்களூர்ல சாப்ட்வேர் இன்ஜினியரா இருந்தான்.ஆன்மீகத்துல ஈடுபாடுன்னு ஆசிரமத்துக்கு போனான்.இப்ப வேலய விட்டுட்டு மொட்டைய போட்டுட்டு சன்னியாசி ஆயிட்டான்.எம் பையனை பாக்க விட மாட்டேங்குறாங்க! போதை மருந்து கொடுத்து மயக்கிட்டாங்க! எம் பையனை மீட்டு கொடுங்கன்னு கம்ப்ளைண்ட் பண்ண வந்திருக்கோம்! "கமிசனர் அலுவலகத்திற்கு முன்பாக மீடியாக்களின் மைக்குகளுக்கு முன் அந்த பெரியவர் கதறிக் கொண்டிருந்தார்.

அதை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த மகேஸ் யோகி டிவியை அணைத்தார்."என்னய்யா இது! ஆசிரமத்தோட நல்ல பேரை டேமேஜ் பண்ணிருவீங்க போல! யார்ய்யா அவரோட பையன்?உடனே வீட்டுக்கு அனுப்புங்க! "என்றார் பதட்டமாக!

"அவன் பேரு ஆனந்துங்க! எவ்வளவோ சொல்லியாச்சு சாமி! போக மாட்டேங்குறான்! "என்றார் செக்ரட்டரி!

"அவனை வரச் சொல்லு! நான் பேசரேன்! "

சற்று நேரத்தில் காவி உடையில் மொட்டை தலையுடன் நுழைந்தான் ஆனந்த்!

"என்னப்பா! அப்பா டிவில தாறுமாறா பேட்டி கொடுத்து நம்ம பேரை கெடுக்கிறாரு! இதை உருவாக்க எவ்வளவு கஸ்டப்பட்டேன்னு தெரியுமா? "

"மன்னிச்சிருங்க சாமி! தெரியாம பண்ணியிருப்பாரு! "

"பாரு தம்பி! இல்லாததையெல்லாம் பப்ளிக்ல சொல்லி பேர டேமேஜ் பண்ராரு.போதை மருந்தெல்லாம் கொடுப்பதா சொல்ரதெல்லாம் அபத்தமாயிருக்கு! நீ உடனே கிளம்பி வீட்டுக்கு போப்பா! "என்றார்.

"போலாம் சாமி! ஒரு ஐந்து கோடி ரூபாய் கொடுத்தால் கிளம்பிருவேன் சாமி! "

"என்னப்பா சொல்ர? "என்றார் அதிர்ச்சியாய்.!

"ஆமா சாமி! 500கோடி வைச்சிருக்கீங்க!ஐந்து கோடி தர மாட்டிங்களா? ஆன்மீகம்கிற பேருல மக்களிடம் ஆட்டைய போட்ட பணம்தானே இது! எனக்கு கொஞ்சம் கொடுத்தா என்ன? "என்றான் அலட்சியமாக!

"ப்ளாக்மெயிலா பண்ர? "என்றார் கோபமாக!

"சீக்கிரமா பணம் சம்பாதிக்க வேற வழி தெரியலை சாமி! எங்கப்பா நாளைக்கு ஹேபியஸ் கார்பஸ் மனு போட்ருவாரு.என்னை கோர்ட்ல நிறுத்துவாங்க! நான் சொல்ரதில்தான் உங்க எதிர்காலம் இருக்கு! "

மகேஸ் யோகியின் ஆட்கள் அவனை தாக்க நெருங்கிய போது அவன் புன்னகைத்தான்.
"இப்ப என்னை அடிச்சீங்கன்னா அந்தகாயத்தை கோர்ட்ல காட்டுவேன்.போதை மருந்து கொடுத்தாங்க! பொண்ணுகளை தப்பா யூஸ் பண்ணாங்கன்னு சொல்லுவேன்.!உங்க பிஸ்னஸ் படுத்துரும்! பாத்துக்குங்க! "

மகேஸ் யோகி கண்ணை காட்ட அவர்கள் விலகினார்கள்.

"நீ என்னை கார்னர் பண்ணிட்ட! எனக்கு வேற வழியில்லை! செக்ரட்டரி அவன் கேட்டதை கொடுங்க! "

செக்ரட்டரி நகரும் போது "எல்லாம் ஆயிரம் ரூபாயா வேணும்! "என்றான் ஆனந்து.

"இதை வாங்கி என்ன செய்வாய்? "என்றார் யோகி.

"பெங்களூர்ல மகேஸ் யோகியின் ஆசி பெற்ற ஆனந்த யோகின்னு சொல்லி ஒரு ஆசிரமம் அமைக்க போகிறேன்! "

"அதாவது எனக்கு போட்டியா? "

"ஆமா! கத்துகிட்டவனிடம்தானே வித்தையை காட்ட முடியும்! "

"அங்கேயும் உன்னை மாதிரி ஒருத்தன் வராமலா போவான்? "என்றார் யோகி!

"எல்லோரும் ஆனந்தாகி விட முடியாது குருஜீ! "அவன் பெட்டியோடு கிளம்பி போவதை வெறித்துக் கொண்டிருந்தார் யோகி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக