திங்கள், 15 ஆகஸ்ட், 2016

சுவாமி

“எல்லா கார்பரேட் கம்பெனிகளுக்கும் அவரு டிரைனிங் கொடுக்கிறாருங்க! ரிசல்ட் நல்லாயிருக்குன்னு சொல்ராங்க! நம்ம கம்பெனிக்கும் வரச் சொல்லலாங்களா? “என்ற மேனேஜரை கேலியாக பார்த்தார் ராம நாதன்.

“யோவ்! இதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு! காசை பிடிச்ச தண்டம்யா! “என்றார்.

“இல்லைங்க! அவரு சகாயம் நமக்கு யூஸ்புல்லா இருக்கும்னு தோணுது.நம்ம கம்பெனியோட கேஸ் பிளாண்டுக்கு ரிலையன்ஸ் தடைய மீறி மினிஸ்டர் சைன் பண்ணியதே இவர் சொல்லித்தாங்க! மினிஸ்டர் பி.ஏ சொன்னாருங்க! “

“சாமியாருங்களும் அரசியலுக்குள்ள வந்துட்டாங்களா? இந்த நாட்டை கடவுளால கூட காப்பாத்த முடியாதுய்யா! “

“அப்புறம் இன்னொரு விசயங்க! பதினைந்து வயசுல காணாம போன உங்க பையனை அவரு மூலமா கண்டு பிடிக்ககூட வாய்ப்பு இருக்கு! “

“யாரு அரவிந்தனையா?என்னோட முப்பது வருச உழைப்பு! ஐநூறு கோடி ரூபாய் சொத்து.!இதை கட்டி காப்பாத்த எவ்வளவு கெட்டிக்காரத்தனம் வேணும்.?கொஞ்சம் கூட அவங்கிட்ட திறமை இல்லையே! கோபம் வந்து திட்டுனேன்.வீட்டை விட்டு ஒடிட்டான்.எங்க தேடியும் அகப்படலை.வயசான காலத்துல இத்தனையையும் ஓய்வே இல்லாம வைக்கபோர் நாயா காத்துகிட்டு கிடக்கிறேன்.!”

“அவரு யோகா எக்ஸ்பர்ட்டுங்க! பி.எம்முக்கே அவருதான் சொல்லித்தர்ராரு.ஒரு கிளாஸ் அட்டெண்ட் பண்ணி பாருங்க! மனசு லேசாகிரும்.!”

“மனசு லேசாகுதோ இல்லியோ பர்ஸை லேசாக்கிருவானுக! சரி அவரை வரச் சொல்லு! பார்ப்போம்! “

“நாளைக்கு பத்து மணிக்கு வர்ரேன்னு சொல்லியிருக்காரு! “

“ரைட்டு அந்த சாமியார் பேரு என்ன சொன்ன? “

“மகேஸ் யோகி தீர்த்தங்கரா! “

அவர் வேலையில் ஆழ்ந்தார்.

மறுநாள் காவி உடையில் தலை நிறைய முடியோடு உதட்டில் வசீகர சிரிப்போடு நுழைந்தார் மகேஸ் யோகி!

முப்பது வயதிற்குள் தீர்க்கமான பார்வையோடு சோன்பப்டி விற்பவனை போலிருந்தவனை வியப்பாக பார்த்தார் ராமநாதன்.

“வாங்க சாமி! நான்தான் இந்த கம்பெனி ஒனர்.!மனசுல நிம்மதியே இல்லை சாமி! “

“அது என்னை போன்றவர்களிடம் மட்டுமே இருக்கிறது! “என்றான் வசீகர புன்னகையுடன்.

“உங்களை பத்தி சொல்லுங்க சாமி! “

“எனக்கு ஒய்வே கிடையாது.நிம்மதி தேடும் மக்களுக்கு நிம்மதியை தருவதே என் பணி.உலகத்தின் அத்தனை நாடுகளிலும் நமக்கு கிளைகள் உண்டு! “

“நல்லது சாமி! எம்பையனை காணோம்! ஞான திருஷ்டியில ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க சாமி! “

“உம் பையனிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறாய்! “

“என்னாது? அரவிந்தா நீயா? “என்றார் அதிர்ச்சியாய்.

“ஆமாப்பா! முப்பது வருசமா டென்சனாகி அலைந்து திரிந்து 500 கோடி சம்பாரிச்சிருக்கிறாய்! நான் பதினைந்து வருசத்துல 2500 கோடிய சம்பாரிச்சுட்டேன்.நோ டென்ஷன்.!நோ பரபரப்பு! “

“எப்படிடா இதெல்லாம்? “

“சிம்பிள்பா! நிறைய புக்கு படிச்சு வசீகரமா ஆன்மீகத்தை பேச கத்துகிட்டேன்.ஹிப்னாடிசத்து மூலம் கண் பார்வையை தீர்க்கமாக்கிக்கிட்டேன்.யோகாவை புதுவிதமா சொல்லித்தர்ரேன்னு ஒரு ஆசிரமத்தை ஆரம்பிச்சேன்.நாலைந்து எழுத்தாளர்களுக்கு பணம் கொடுத்து என்னை பத்தி எழுத வைச்சேன்.அவ்வளவுதான்.சர்க்கரையை மொய்க்குர எறும்பா என்னை சுத்திகிட்டாங்க! மக்களுக்கு எதாவது ஒரு மீட்பர் தேவைப்பட்டுகிட்டே இருக்கார்! “

“ஆன்மீகம்பெரிய பிஸ்னஸ் போல தெரியுதே? “

“ஆமாப்பா! வாயும் வசீகரமும்தான் முதல்! இப்ப தீர்த்தங்கரான்னு பிராண்டு பேர்ல சோப்பு, பவுடர் விற்கிறோம்.யோகாவுக்கும், சோப்பு விற்பதற்கும் என்ன சம்மந்தம்னு ஒருத்தனும் கேட்க மாட்டான்! “

“இப்படி சாமியாராயிட்டியே! கல்யாணம் காட்சின்னு எப்படி பண்ரது! “

“கல்யாணத்துக்கு பின்னாடி கிடைக்க வேண்டியதெல்லாம் காவி டிரஸ்லயே கிடைச்சுருதே! “

அவன் விடைபெற்றுக் கிளம்பினான்.அவர் தன் மகனின் புத்திசாலிதனத்தை வியந்து கொண்டிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக