“டாக்டர்! நாம பண்ரது தப்பில்லையா? “என்றான் டாக்டர் கதிர்.
“என்ன பண்ண சொல்ரீங்க? நமக்கு வேற வழியில்லை! “என்றார் டீன்.
“யோசிங்க சார்! பிளாட்பாரத்துல படுத்திருந்த நாலு ஏழைகள் மேல் குடி போதையில் காரை ஏத்தி கொன்னுட்டு நெஞ்சுவலி, சுகர், பிரஷர்னு பொய் சொல்லி இங்கே அட்மிட் ஆயிருக்கிற கிளாமர் ஸ்டார் ரவி கிஷனுக்கு அட்மிட் போட்டது தப்பில்லையா? நம்ம தொழிலுக்கு விரோதமாக அநியாயத்திற்கு துணை போகலாமா? “
“என்ன பண்ணலாம் கதிர்? நாம அட்மிட் பண்ணலைன்னா வேற ஹாஸ்பிடல்ல பண்ணுவாங்க. கோர்டுக்கு போனாலும் பணத்தை வாரி இறைச்சு வெளிய வந்துருவான். சட்டம் அவ்வளவு பலவீனமா இருக்கு! “
“சட்டம்தான் அவனை தண்டிக்க முடியும்னு இல்லை.நாமளும் தண்டிக்க முடியும்.நீங்க ஒத்துழைத்தால்! “
“நாம என்ன பண்ண முடியும்னு நினைக்கிறீங்க? “
“என்ன வேணா! “என்று குரலில் அழுத்தம் கொடுத்தவன் “ரவிக்கு எங்க அடிபட்டிருக்கு? “என்றான்.
“ரெண்டு கையிலும் லைட்டா பிராக்சர்.சுகர், பிரஷர் நார்மலாத்தான் இருக்கு! “
“ரைட்! ஆபரேஷன் தியேட்டரை ரெடி பண்ண சொல்லுங்க! “
“எதுக்கு கதிர்? “
“இன்னும் ஒரு மணி நேரத்தில் தெரியும் “என்று புன்னகைத்தான்.
ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு கண் விழித்த ரவி கிஷன் பெட்டில் ஊன்றி எழ கைகள் இன்றி திடுக்கிட்டான்.
“ஸாரி ரவிகிஷன்! மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.விபத்துல கைல பிராக்சர் ஆகி சுகர், பிரசர் எல்லாம் எக்கச்சக்கமாக ஏறி விட்டது.உங்க உயிரை காப்பாற்ற வேறு வழியில்லாமல் கைகள் இரண்டையும் ரிமூவ் பண்ண வேண்டியதாக போச்சு! இனி இப்படியே வாழப் பழகுவதுதான் பெட்டர்.”
ரவி கிஷன் பெரும் குரலோடு அழத்துவங்கினான்.கதிர் இறுக்கமான முகத்தோடு வெளியே வந்த போது அடித்த காற்றில் மனம் இலேசானது.தூரத்தில் டீன் கட்டை விரலை தூக்கி காட்டினார்.தன் விரலால் தம்ஸ் அப் காட்டியவன் “தண்டிப்பதற்கு தனியாக கடவுள்னு ஒருத்தன் வருவான்னு காத்திருப்பதை விட நாமே தண்டனை கொடுத்து கடவுளாகி விடலாம்! “என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக