திங்கள், 27 ஜூன், 2016

உண்மை.!

அடித்த போனை எடுத்தவன் மறுமுனையில் சக்தியின் "அம்மா போன் பண்ணாங்க.!"என்ற குரலில் எரிச்சலானான்."என்னவாம்.?"
"அப்பாக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்காம்.பாக்கநான் போகனும்.?"

"அப்படியே போயிரு.!திரும்ப வராதே.!உங்கப்பன் உன்னை லவ் பண்ணதுக்கு போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணி ஜட்டியோட உக்கார வைச்சத நான் இன்னும் மறக்கலை.செருப்புல பூந்த கல்லா கசப்பா அந்த நினைவு இருக்கு.!அந்தாளோட ஈகோவை அடக்கத்தான் உன்னை கல்யாணமே பண்ணினேன்.!"

"அப்ப உண்மையா என்னை லவ் பண்ணலையா.?"

"அது ஒரு ஓரமா இருக்கு.!ஆனா மெயின் மேட்டர் இதுதான்.!ஜெயிச்சு காட்டுரேங்கிற வெறி.!"

"இப்ப நான் போறதா வேணாமா.?"

"போ.!ஆனா வராதே.!"

"நான் போயே தீருவேன்.!"

"அவ்வளவு திமிராடி உனக்கு.!"என்ற போது போன் கட்டானது.லேண்ட் லைனை வைத்து விட்டு
எரிச்சலின் உச்சிக்கு போனவன் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த போனை பிடுங்கி ஆன் செய்தான்.

உடனே அடித்த போனை எடுத்தால் அண்ணன்.!
"உனக்கெல்லாம் எதுக்குடா போனு.!தூக்கி குப்பைல போடு.!"

"என்ன ஆச்சு.?ஏன் திட்ர.?"

"நம்ம அப்பாக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சுடா.!அந்த வழியா வந்த உன் மாமனார்தான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்து பிளட் கொடுத்திருக்கார்.மக உன்னை கூட்டிட்டு ஒடி கல்யாணம் பண்ணிய கடுப்புல மனைவி மூலமா சக்திக்கு மெசேஜ் பாஸ் பண்ணியிருக்காரு.உடனே ஹாஸ்பிட்டலுக்கு வா.!"

சக்தி அப்பான்னு சொன்னது மாமனாரையா.?அவன் கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை துப்பினான்.

முகம் பார்க்காமல் திரும்பி நின்ற மாமனாரிடம் "தேங்க்ஸ்.மாமா!"என்றான்.

"யாரா இருந்தாலும் இந்த உதவியை செய்திருப்பேன்.!என்றார் விரைப்பாய்.
"தெரியும்.!இந்த தேங்ஸ் அதுக்கில்லை.!இப்படி ஒரு நல்ல பெண்ணை எனக்காக பெத்து வளர்த்ததுக்கு.!"
அவர் வியப்பாய் பார்த்து கொண்டிருந்த போது வார்டில் நுழைந்தவன் பார்வையாலேயே சக்தியிடம் மன்னிப்பு கேட்க துவங்கியிருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக