புதன், 10 பிப்ரவரி, 2016

அவள் அல்ல இவள்.!

"பாரு அனு.!இப்ப நான் உன்னை கொல்லப் போறேன்.!"என்றவனின் கையில் துப்பாக்கி இருந்தது.
"எதுக்கு கொல்லப் போறேன்னு தெரிஞ்சுக்கலாமா.?"என்றவளிடம் அலட்சியம் இருந்தது.
"உனக்கே தெரியும்.!நடிக்காதே."

"சாவரத்துக்கு சரியான காரணத்தை சொல்லிட்டு சாவடி.!"

"துரோகம்.!ஏன் எனக்கு துரோகம் பண்ண அனு.?உன்னை எப்படில்லாம் விரட்டி  விரட்டி லவ் பண்ணேன்.!எங்கிட்ட என்ன இல்லன்னு இந்த துரோகம்.?"

"நீ எதையோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசற.!"

"உனக்கும்,எனக்குமான சுவாராஸ்யமெல்லாம் முடிஞ்சு அலுத்து தீர்ந்து விட்டதா.?நாலு வருச அலுப்பு இப்படி பண்ண சொல்லுதா.?நான் இன்னும் பழைய காதல குறைய விடாம அப்படியே வைச்சிருக்கேன்.!"

"பாரு மது.!எனக்கும் அது அப்படியே இருக்கு.ஆனால் பரஸ்பரமா வெளிகாட்ட நேரமோ,அவகாசமோ இல்லை.!துரோகம்னு சொல்ரியே விளக்கமா சொல்லு.!"

"பத்து நாள் முன்ன மதியம் தலைவலின்னு வீட்டுக்கு வந்தேன்.அப்பதான் நீயும் இன்னொருத்தனும் நம்ம பெட்ரூம்ல.!உடைஞ்சிட்டேன் அனு.நான் எந்த விதத்துல உனக்கு அலுத்துப் போனேன்.!இந்த பத்து நாளா நெருப்புல நிக்கிற மாதிரி இருக்கேன்.நீ கேசுவலா நாளை தாண்டிப் போற.!உளைச்சல் தாங்கல.!உன்னை கொன்னுட்டு நானும் சாகப் போறேன்.ஏன்னா அந்தளவுக்கு நான் உன்னை துரோகத்தை மீறி லவ் பண்ரேன்.!"

"நான் அப்படியான பொண்ணு இல்லை.!நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்கன்னு அழுவேன்னு நினைச்சியா.?"

"தப்பு பண்ணிட்டு தெனாவட்டா பேசற உன்னை கொன்னா தப்பேயில்லை.!"

"அதுக்கு முன்னாடி நேத்து குடிச்சிட்டு வந்தியே.அப்ப நம்ம வீட்டுக்கு யாரு வந்தான்னு தெரியுமா.?"

"யாரு வந்தா எனக்கென்னடி.!நான் கொல்ல போறேன்.!"

"சாவகாசமா கொல்லலாம்.முதல்ல டீப்பாய் மேல இருக்கிற இன்விடேசன் கார்டை பாரு.!"
அசுவராசியமாய் பார்த்தவன் மணமகளின் போட்டோவை பார்த்து அதிர்ந்தான்.அசலாய் அனுவை போலவே.!
"அனு யாரு இது.?உன்ன மாதிரியே.!"

"சித்தி பொண்ணு.பேரு யாமினி.சிங்கப்பூர்ல இருக்கா.அடுத்த மாசம் மேரேஜ்.போட்டோஷீட்டுக்கு உட்பீயோட வந்தவளுக்கு நான்தான் வீட்டு சாவி கொடுத்து அனுப்பி வைச்சேன்.அந்த மழைநாளில் நீ பார்த்தது அவங்களைத்தான்.!

"ஸாரி அனு.!நான் ஒரு முட்டாள்.!தப்பா புரிஞ்சிகிட்டு."

"நேத்து நைட்டு பத்திரிக்கை கொடுக்க வந்திருந்தா.நீ குடிச்சிட்டு மட்டையாயிட்ட.நேத்து நாங்க எடுத்த செல்பி.!உடம்பு சரியில்லைன்னு சமாளிச்சேன்.!"
அந்த செல்பி செல்லில் டபுள் ஆக்ட் காட்டியது.
"எப்ப அதை பார்த்தவுடன் என்கிட்ட கேட்காம உள்ளுக்குள்ளியே வைச்சிருந்தியோ அப்பவே நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சு.பத்து நாளா என்னை தப்பான பார்வைல பார்த்திருக்கிறாய்.இந்த இன்விடேசன்தான் நாலு வருச நம்பிக்கையை மறுபடியும் ஒட்ட வைக்க போகுது.நீ என்னை நம்பலைதானே.!"
அவள் அழுகையுடன் உள்ளே போய் பெட்டியை தூக்கினாள்."என் நிலமைல நீயிருந்தா என்ன பண்ணியிருப்ப அனு.?"

"இதேதான்.பொட்டிய தூக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிருப்பேன்.!"

"நான் போக யார் வீடும் இல்லையே அனு.!அப்பாஅம்மால்லாம் மேல போயி ரொம்ப நாளாகுது.பத்து நாளா செருப்புல கல் புகுந்த மாதிரியான அவஸ்தையே தண்டனைதானே.!நான் அடிச்சாலும் வாலாட்டும் நாய்தானே அனு..மன்னிச்சிரேன் இந்த ஒரு முறை.!"

"முடிவில் மாற்றமில்லை.!"
நிலைப்படி தாண்டியவளை "ஒரு வேலை செஞ்சிட்டு போயிரேன் அனு.?"என்றான்.

"என்னது.!"

"இந்த துப்பாக்கில என்னை சுட்டுட்டு போயிரேன் அனு.!ஒரேடியா செத்துர்ரேன்.!"
அவளது பெட்டி நழுவிவிழுந்தது.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக