ஞாயிறு, 11 அக்டோபர், 2015

எண்பதுகளின் தமிழ் சினிமா.!

எண்பதுகளின் தமிழ் சினிமாவை ரஜினி,கமல் என்ற வசூலில் உத்தரவாதம் தரக்கூடிய இரண்டு நட்சத்திரங்கள் முழுமையாக ஆட்சி செய்ய துவங்கியிருந்த காலகட்டம்.எம்ஜிஆர் அரசியலில் பிஸியாகி விட சிவாஜியும் வயதாகி ஒதுங்கிவிட,ஜெய்சங்கர் தனக்கான ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரை இழந்து வீட்டில் ஒய்வெடுக்க,புதுமுகங்களும்,புது இயக்குநர்களும் படையெடுத்த இந்த காலகட்டத்தை லாவகமாக பயன்படுத்திக்கொண்டு ரஜினியும்,கமலும் தங்களின் கொடியை பறக்க விடத் தொடங்கினர்.ரஜினி தன் பழிவாங்கும் ஆக்சன் படங்களின் கதையை அமிதாப்பின் படங்களை தழுவி எடுத்து வெற்றியை சுவைக்க தொடங்கினார்.கமல் இன்றைய வித்யாசங்களை மூட்டை கட்டிவைத்துவிட்டு ரஜினியின் டிராக்கில் ஒடிக் கொண்டிருந்த காலகட்டமும் இதுவே.ராஜபார்வை என்ற படத்தை தனது 27வது வயதில் எடுத்து வித்யாச டிராக்கிற்கு பிள்ளையார் சுழி போட்டு ரஜினியிடமிருந்து தன்னை தனித்துக்காட்டியதும் இதே காலகட்டம்தான்.

80களின் இசையை இளையராஜா என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துவிடலாம்.எம்எஸ்வியின் ஆதிக்கம் முடிந்து விட சங்கர்கணேஷ் மட்டுமே பேர் சொல்லும் இசையமைப்பாளர்களாக இருந்தனர்.இளையராஜாவின் பொற்காலம் இதுவென்று தைரியமாக சொல்லலாம்.மைக் மோகனின் பல படங்கள் தறி கெட்டு ஒட இசைராஜா ஒரு காரணமாக இருந்தார்.அப்போது ராசாவிற்கு போட்டியாக களமிறங்கி கலக்கியவர் டி.ராஜேந்தர்.இசையின் லகான் இளையராஜாவின் கையிலிருக்க,தமிழ் சினிமாவின் காமெடி நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.

சுருளிராஜனின் மறைவுக்குப்பிறகு காலியான அந்த இடத்தை ஒய்.ஜி.மகேந்திரன்,பிந்துகோஸ்,தேங்காய் சீனிவாசனின் மொக்கை காமெடிகளால் நிரப்ப வேண்டிய அவல நிலையில் தமிழ் சினிமா தடுமாறியது.வாராது வந்த மாமணியாய் வாய்த்த கவுண்டமணி காமெடியின் கையை பிடித்து நெடும் பயணத்தை துவக்கினார்.உடன் பயணிக்க செந்திலும் வந்த பிறகு இந்த காமெடி வண்டி நான்ஸ்டாப்பாக பட்டையை கிளப்பியது.ஹீரோவின் நான்கு நண்பர்களில் சார்லியும்,சின்னி ஜெயந்தும் இடம்பெற ஆரம்பித்ததும் இதே காலத்தில்தான்.!

இந்த நேரத்தில் அலைகள் ஒய்வதில்லையில் கார்த்திக்கும்,பொன்விலங்கில் முரளியும்,சங்கிலியில் பிரபுவும் அறிமுகமாகி கதாநாயக பஞ்சத்தை தீர்த்தனர்.மோகன் தன் ஸ்டைலில் பாடியே படத்தை ஒட்டத் தொடங்கினார்.சாட்சி,சட்டம் ஒரு இருட்டரை மூலமாக விஜயகாந்த் ஆக்சன் ஹீரோவாக அவதாரமெடுத்ததும் இப்போதுதான்.ஒரு பெண் நாலு சின்னபசங்க என்ற கான்செப்ட் பாய்ஸ்வரை நீடிக்க அலைகள் ஒய்வதில்லை அடித்தளமிட்டது.
ஸ்ரீப்ரியா,அம்பிகா,ராதா,சுலக்சனா,ரதி, ரேவதி மாதவி போன்றவர்கள் தமிழில் பட்டையை கிளப்பத் தொடங்கினார்.இன்று போல் மும்பை பெண்களின் வரவு அன்று அறவே இல்லை.மாறாக ஸ்ரீதேவியும்,ரதியும் இந்தியில் நடிக்கப் போனார்கள்.கதாநாயகிகள் கவர்ச்சி காட்டும் காட்சிகளோ,நடனம் ஆடும் காட்சிகளோ அப்போது இல்லை.அது சில்க்ஸ்மிதா,அனுராதா,ஜெயமாலினிகளின் கோலேச்சும் தனி டிபார்ட்மெண்டாக இருந்தது.அதிலும் சில்கின் நடனத்திற்காகவே மூன்றாம்பிறை படம் விற்பனையாகுமளவிற்கு அவரது ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது.

மகேந்திரன் தனது முள்ளும்மலரும்,ஜானி,உதிரிப்பூக்கள் மூலமாக தமிழ் சினிமாவின் போக்கை மாற்ற முயலும்போதெல்லாம்,எஸ்பிமுத்துராமன்,ராஜசேகர் போன்ற கமர்சியல் இயக்குநர்கள் காக்கிசட்டை,சகலகலா வல்லவன் போன்ற படங்களை எடுத்து பழைய ரூட்டிற்கே தமிழ் சினிமாவை இழுத்துச் சென்றனர்.பாரதிராஜா கிராமத்திற்கு தமிழ் சினிமாவை கூட்டிக்கொண்டு போனார்.அவரது சீடரான பாக்யராஜ் தனியே வந்து பெண்களுக்கு பிடித்த அந்தமாதிரி விசயங்களை படத்தில் சொல்லி தொடர் வெற்றிகளை கொடுக்க ஆரம்பித்தார்.நிழல்கள் படத்தில் கதைவசனம் எழுதிய மணிவண்ணன் கோபுரங்கள் சாய்வதில்லையில் டைரக்டராகிறார்.பாலசந்தர் தனது நாடகபாணியை கை விட்டு சினிமாவிற்கான புது மொழியை தனது அவர்கள்,தாப்புதாளங்களில் பயன்படுத்த ஆரம்பித்தார்.ஆர்.சுந்தர்ராஜன்,டி.ராஜேந்தர், மணிரத்னம்போன்றவர்கள் வெற்றிகரமான இயக்குநர்களாக வலம்வர துவங்குகின்றனர்.

தேங்காய் சீனிவாசன்,விஜயகுமார்,கராத்தே மணி வில்லன்களாக நடிக்கதுவங்கிய சோர்வுற்றபோது சரியான சந்தர்ப்பத்தில் வந்தார் முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்.சத்யராஜ் தனி வில்லனாக தலையெடுக்கும்வரை ஜெய்யின் ஆதிக்கம் தொடர்ந்தது.அடியாளாக இருந்து வில்லனாக பிரமோசன் வாங்கிய சத்யராஜ் தனது பிரத்யேக உடல்மொழியாலும்,கிண்டல் வசனங்களாலும் வில்லன் வேடத்தை கவனிக்கும் வேடமாக மாற்றினார்.கடைசியாக வில்லனாக நடித்த விக்ரம்படம் வரை சத்யராஜின் அதகளம் தொடர்ந்தது.மாறுவேடத்தில் மறு வைத்துக்கொண்டு ஹீரோ ஆடுவது,கடைசி சண்டை பெட்டிகள்,பேரல்கள் அடுக்கப்பட்ட குடோனில் நடப்பது.தண்ணி அடித்து கொண்டு கவர்ச்சி நடனம் பார்ப்பது,வில்லனின் மகள் ஹீரோவையே லவ் பண்ணுவது.கிளைமேக்ஸில் வில்லனை ஹீரோ அடிக்கும்போது மகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு தேமேவென்று நிற்பது,தோளில் பாய்ந்த குண்டை கத்தியால் எடுப்பது,வில்லனை மன்னிக்கும்,சிறைக்கனுப்பும் எம்ஜிஆர் பார்முலா காணாமல் போய்,கொன்றே தீர்வது என்ற புது பார்முலா உருவானது,மாடர்ன்டிரஸ் ஹீரோயின் கல்யாணத்திற்கு பின் சேலையிலேயே இருப்பது,கிளைமேக்ஸில் டூமில் சத்தத்துடன் போலீஸ் வருவது,அசட்டு ஜோக்கிற்கு சிரித்தவுடன் வணக்கம் போடுவது என்று வழக்கமான கிளிஷோக்கள் எண்பதுகளிலும் இருந்தன.
ஊமை விழிகள் மூலமாக திரைப்படக்கல்லூரி மாணவர்கள் தங்களை கவனிக்க வைத்தனர்.அதில் இசையமைத்த மனோஜ்கியான் இசையுலகில் சற்று பரபரப்பை ஏற்படுத்தினர்.சங்கர்லாலின் இயக்குநர் மறைந்ததால் கமலே பாதிபடத்தில் டைரக்டர் ஆனார்.சைன்ஸ்பிக்சன் கதையான விக்ரமில் ப்ளுபேக் முறை முதலில் பயன்படுத்தப்பட்டது.இணைஇசை என்னும் சொல்லை ஆபாவாணண் கொண்டுவந்தார்.எண்பதுகளின் தமிழ் சினிமா தனது பழைய முகத்தை உதறி புதிய அரிதாரம் பூச தயாராகி கொண்டிருந்ததை இப்போது திரும்பிப் பார்க்கும் போது உணர முடிகிறது.தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆயிரம் குறைகள் இருந்தாலும் எண்பதுகளின் சினிமா தன்னால் முடிந்தவரை தமிழ் ரசிகனை திருப்திபடுத்த முயன்று வந்திருக்கிறது.இசையை பொறுத்தவரை இந்த காலகட்டம் இளையராஜாவின் பொற்காலம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சனி, 10 அக்டோபர், 2015

கத்தியின்றி,இரத்தமின்றி ஒரு கொலை.!

கெஸ்ட் ஹவுசில் டிவி பார்த்தபடி காபி குடித்துக் கொண்டிருந்த ராமசந்திரன் தலைகலைந்து,வியர்வையோடு உள்ளே வந்த சரணை ஏறிட்டுப் பார்த்தார்.சரண் அவரது கோடிக்கணக்கான சொத்துகளுக்கு ஒரே வாரிசு.மனைவியின் இறப்புக்கு பின் ராமசந்திரன் பணத்திற்கும்,பெண்களுக்கும் பின்னாடி அலைந்து கொண்டிருந்த போது எப்படியோ வளர்ந்து விட்டவன்.உலகின் அத்தனை கெட்ட பழக்கங்களுடனும் சகவாசம் கொண்டவன்.திடிர்,திடிரென மாறும் இயல்புக்கு சொந்தக்காரன்.ஒரு விசயத்தை தெரிந்து கொள்ள அதன் அடி ஆழம்வரை செல்லும் எக்ஸாண்டிரிக் மனநிலை படைத்தவன்.

"இன்னைக்கு என்னடா பண்ணித் தொலைஞ்ச.?"

"பின்னாடி போலீஸ் வருதுப்பா.!அவங்க சொல்லுவாங்க.!"பிரிட்ஜிலிருந்து பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு மாடிக்கு ஒடியவனை இவன் எனக்குத்தான் பொறந்தானா என்று யோசித்தபடி கல்யாணியின் படத்தை பார்த்தார்.நான் பத்தினி .நம்புங்கள் என்றது இறந்த மனைவியின் புன்னகை.

"சங்கரு.!"என்றார் ராமசந்திரன்.

வந்து நின்ற டெல்லி கணேசின் சாயல் மனிதர் "சொல்லுங்கய்யா.!"என்றார்.ராமசந்திரனின் பி.ஏ.ஆலோசகர்,மாமா இன்னபிறவாகவும் இருப்பவர்.

"இந்த தாயோளி எதையோ பண்ணி வச்சிட்டு வந்துட்டான்.போலீஸ் வேற வருதாம்.என்ன பண்றது.?"

"புல் டீடெய்ல் தெரியட்டுங்கய்யா.!பாத்துட்டு பண்ணிக்கலாம்.!"

தட்டப்பட்ட கதவை திறந்த போது நின்றிருந்த இன்ஸ்பெக்டர் "இங்க சரண்கிறது யாரு.?"

"எம்பையன்தான்.!என்ன விசயம்? "

"அவரு இப்ப எங்கிருக்காரு.?"

"ரெண்டு நாளா சின்னயாக்கு உடம்பு சரியில்லை.பெட் ரெஸ்ட்ல இருக்காரு."

"நீங்க யாரு.?

"அவரு என்னோட பி.ஏ.பேர் சங்கர்.!"

"நான் கேட்கும் போது நீங்க பேசினா போதும்.!

சரி என அமைதியானார் சங்கர்.

"உங்க பையன் பைக் ரேஸ்ல வேகமா வண்டிய ஒட்டி நாலு வயசு புள்ளைய கொன்னுட்டான்.!"

"அவன்தான் வெளிய போகவேயில்லையே.!"

"பொய் சொல்லாதீங்க.!வண்டியோட சைலண்ஸர் இன்னும் சூடு ஆறாமத்தான் இருக்கு."

"சமையல்காரன் இப்பத்தான் வெளில போயிட்டு வந்தான்.ரெண்டாவது இதெல்லாம் கோர்ட்ல நிக்காது."

சங்கர் அதற்குள் கமிசனருக்கு போன் பண்ணி விசயத்தை சொல்ல போன் இன்ஸ்பெக்டருக்கு கை மாறியது.

"யோவ்.!அந்தளு எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா.?பைக் ரெண்டு நாளைக்கு முன்னாடியே திருட்டுப் போயிருச்சுன்னு சொல்லி எப்ஐஆர் போட்டு சிக்குனவனை வைத்து கேஸை முடிய்யா.!"

"சரி சார்.!"என்ற இன்ஸ் பெக்டருக்கு கோபம் வந்தது.வெளிக்காட்டாமல் அடக்கினார்.

மாடியிலிருந்து எட்டிப்பார்த்த சரண் "இன்னோரு குழந்தையை பெத்துக்க சொல்லுங்க இன்ஸ்பெக்டர்.வறுமையிலும்,ஏழ்மையிலிருந்தும் நான் விடுதலை கொடுத்திருக்கிறேன்.!"

"டேய்.!நீ உள்ள போ."!ராமசந்திரன் உறுமினார்.

இன்ஸ்பெக்டர் கிளம்பினார்.அந்த கேஸ் ஒன்றுமில்லாமல் ஆனது.கஞ்சா அடிமை ஒருவன் நான்தான் வண்டியை திருடி ஒட்டி விபத்தை ஏற்படுத்தினேன் என்று சொல்லி சரணடைய இன்ஸ்பெக்டர் நொந்து போனார்."எங்களுக்கெல்லாம் நியாயமே கிடைக்காதா.?"என்று அந்த ஏழைத் தம்பதிகள் கண்ணீரோடு கேட்ட போது அவரிடம் பதிலில்லை.!

மெல்ல சரணைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

இப்போதெல்லாம் ராமசந்திரன்சரணுக்கு பணம் தருவதை நிறுத்தி விட அவன் போதைக்கு வழியின்றி தவித்துக் கொண்டிருந்தான்.தற்செயலாக பாரில் அவனை சந்தித்து பேசினார் இன்ஸ்பெக்டர்.அதன் பிறகு தினமும் இருவரும் சந்திப்பதும் அவர் சரக்கு வாங்க செலவு செய்வதும் தொடர்ந்து கொண்டிருந்தது.இரண்டு வாரங்களுக்கு பிறகு தொழிலதிபரின் மகன் தற்கொலை என சரணிண் புகைபடத்துடன் செய்தி வந்திருந்தது.

இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டார்.எதையும் அடிஆழம்வரை தெரிந்து கொள்ள முனையும் அவனது ஆர்வ கோளாறை தற்கொலை,மரணத்திற்கு பிந்தைய வாழ்வு,மறு ஜென்மம் என்று தினமும் பேசி திசைதிருப்பி அவனை அதில் அதீத ஆர்வம் கொள்ளச் செய்து கடைசியில் தானாகவே தற்கொலை செய்யும்படி தூண்டிய தன் சாமார்த்தியத்தை தானே மெச்சிக் கொண்டார்.இப்போது மனம் இலேசாகியிருந்தது அவருக்கு.!

வியாழன், 8 அக்டோபர், 2015

தீர்ப்பு.!

ஒரு வழக்கு உங்கள் முன் வருகிறது.இரண்டு பேர் பக்கமும் நியாயம் இருப்பது போல் தோன்றுகிறது.என்ன தீர்ப்பு சொல்லப் போகிறீர்கள் என்று ஊரே எதிர்பார்க்கும்போது என்னசெய்வீர்கள்?
அந்த தயாரிப்பாளர் தீர்ப்பே சொல்லாமல் கேஸை தள்ளுபடி செய்தார்.ஆம்.!வஞ்சிக்கோட்டை வாலிபனில் வைஜெயந்திமாலாவுக்கும்,பத்மினிக்கும் போட்டி நடனமும்.,பாட்டும் இடம் பெற்றது.வீரப்பாவின் "சபாஸ்.!சரியான போட்டி.!"என்ற வசனம் உண்மையானது.இரண்டுபேரூமே நாட்டியத்தில் பேர் வாங்கியவர்கள்.தோற்க யாருக்கும் சம்மதமில்லை.போட்டி நடனம் கவுரவ பிரச்சனையாக மாறிவிட்டது.தயாரிப்பாளருக்கோ நெருக்கடி அதிகரித்தது.போட்டி நடனம் என்றதால் ரசிகர்கள் எதிர்பார்பப்பும் அதிகரித்தது.பார்த்தார் வாசன்.பாடலின் இறுதியில் சாண்டலியர் விழுந்து நொறுங்கி நடனம் முடிவடைவதாக காட்சியை முடித்தார்.அமைதிபடையின் "பேச்சு மாறி போச்சுன்னா பழசு மறந்து போயிருமாடா மணியா.?"காட்சி நினைவுக்கு வருகிறதா.?பேச்சுக்கு பதிலாக காட்சியை வைத்து தீர்ப்பை சொல்லாமலே தப்பித்தார் வாசன்.!